காதல் 22

 




காதல் 22


அனைவரும் ஆபரேஷன் தியேட்டர் கதவுக்கு வெளியே கண்களில் கண்ணீருடனும், மனதில் பயத்துடனும் நின்றிருக்க, மிருதுளா மட்டும் ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தவள், "அவர பார்க்கணும்" என்ற வார்த்தைகளை மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.


இரண்டு மணிநேர கழித்து ஆப்ரேஷன் முடித்து வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.


 "ஆப்ரேஷன் முடிஞ்சு போச்சு. ஆனா, அவர் உடம்பு எங்க ட்ரீட்மென்டுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்குது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவருக்கு நினைவு வந்தே ஆகணும். இல்லன்னா அவர் கோமா ஸ்டேஜ்க்கு போக நெறைய வாய்ப்பிருக்கு. அப்டி அவர் கோமாக்கு போய்ட்டா அப்றம் ரொம்ப கஷடமாகிடும். நீங்க எல்லாரும் அவர் கிட்ட பேசுங்க. உங்க குரல் அவருக்கு கேட்டுட்டே இருக்கணும். நீங்க பேசுறதுக்கு அவர் ரியாக்ட் பண்ணியே ஆகணும் இல்லன்னா" என்று தலையை இடவலம் ஆட்டிய டாக்டர் அங்கிருந்து சென்றுவிட,

ஷரவனின் அம்மா அங்கேயே கத்தி அழத்தொடங்கிவிட, பிரதாப் உள்ளுக்குள்ளே உடைந்து நொருங்கினார். 


அனைவரின் முகத்திலும் ஷரவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம்  அப்பட்டமாய் தெரிய, ஊரில் உள்ள அனைத்து கடவுளிடமும் ஷரவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டினர். 


ஷரவன் ஐ.சி.யூ ரூமிற்கு மாற்றப்பட்டான். மிருதுளா இருக்கும் நிலையில் அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று மீதி இருந்த எல்லோரும் ஒவ்வொருவராக ஷரவன் அறைக்கு சென்று அவனிடம் பேச அவனிடம் எந்த அசைவும் இல்லை. 


ஷரவன் அம்மா கயல்விழி பேசும்போது கூட ஷரவனிடன் எந்த மாற்றமும் வரவில்லை. அதுவரை பிரேம் தோளில் உறங்கிக்கொண்டிருந்த முக்தா, உறக்கம் கலைந்து எழுந்தவள் உடனே, "ப்பா? ப்பா? அப்பா எங்கே" என்று கேட்டு அழ ஆரம்பிக்க. முக்தா குரல் கேட்டவது ஷரவனுக்கு நினைவு வருமா என்று நினைத்த நிலவன் முக்தாவை ஷரவன் இருந்த அறைக்கு அழைத்து சென்றான்.


ஷரவன் முகத்தை பார்த்த முக்தா தலையில் பெரிய கட்டு போட்டு, உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் தன் தந்தையை பார்த்த குழந்தை எண்ண நினைத்தாளோ பெருங்குரல் எடுத்து அழுதாள். 


"ப்பா.."


" ப்பா.."


"எந்திரிப்பா,?. ப்பா எந்திரிப்பா?" என்று தான் மழலை குரலில் தன் தந்தையை எழுப்ப, தன் மகளின் குரலும் அவன் செவியை தீண்டவில்லை போலும் அவனிடம் எந்த அசைவும் இல்லை. 


நிலவன் கண்ணீரோடு வெளியே வந்தவன், முக்தாவை கீழே இறக்கி விட, அழுதுகொண்டிருந்த குழந்தை அங்கே இருந்த தன் தாயை கண்டவள் வேகமாக மிருதுளாவிடம் சென்று, அவள் கன்னத்தை தன் பிஞ்சு கரத்தால் தாங்கி, 


"ம்மா.. 


ம்மா..  


ப்பா.?? ப்பா எந்திரிக்கல மா, நீ வாமா, நீ வந்து எழுப்பு மா. நீ சொன்ன அப்பா கேப்பாரும்மா" என்று தன் தாயிடம் கெஞ்சி அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டிருக்க. இத்தனை வருஷம் பிரிந்திருந்த தான் பெற்ற மகளை இத்தனை அருகில் பார்த்தும், குழந்தை குரலை கேட்டும். மிருதுளாவிடம் எந்த மாற்றமும் இல்லை. 


நிலவன், மிருதுளா அருகில் சென்று, அவள் தோளை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்.


 "இங்க பாரு அமுல்பேபி, இப்ப ஷரவன் பொழைக்கிறது உன் கையில தான் இருக்கு, உன்னால மட்டும் தான் அவனை திருப்பி கொண்டு வர முடியும். நீ போய் பேசினா அவன் நிச்சயம் கண்ணு முழிசிடுவான். ப்ளீஸ் மா தயவுசெஞ்சு போ, போய் பேசு மா" என்று அவளை கெஞ்சிக் கொண்டிருக்க, மிருதுளா காதில் எதுவும் விழவில்லை. பிரம்மை பிடித்தவள் போல் அவள் உதடுகள் மட்டும் ஏதோ உளறிக் கொண்டிருக்க, அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்றனர்.


"பளார்" என்று வந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க, அங்கு தனு கொடுத்த அறையில் மிருதுளா தன் உளறலை நிறுத்தியவள் மெதுவாக தன் கண் இமைகளை மூடி திறந்து தனுவை பார்த்தாள். 


தனு மிருதுளாவின் கையை பிடித்து தரதரவென்று ஷரவன் இருந்த அறைக்குள் இழுத்து சென்று, "இங்க பாரு மிருது, இப்ப ஷரவண்ணா உயிர் உன் கையில் தான் இருக்கு. உன் ஒருத்தியால தான் அவரை காப்பாத்த முடியும். தயவுசெஞ்சு அவர் கிட்ட பேசு, உன் மனசுல இத்தனை வருஷம் சேர்த்து வச்சிருந்த எல்லாத்தையும் கொட்டி அழு, உன்னோட குரலுக்கு மட்டும் தான் அவரை பிழைக்க வைக்கும் சக்தி இருக்கு" என்றவள் அந்த அறையை விட்டு வெளியேற, மிருதுளா கண்களில் ஷரவனின் முகம் தெரிய அப்போது தான்

கல்லாய் இறுகி இருந்த அந்த சிலைக்கு உயிர் வந்தது.


மெதுவாக ஷரவன் படுத்திருந்த கட்டில் அருகில் வந்து ஷரவனின் தலையில் போட்டிருந்த கட்டை தன் மென்மையான கரம் கொண்டு தடவினாள், உலர்ந்து இருந்த அவன் காய்ந்த இதழ்களில் தன் இதழை மென்மையாக பதித்து ஈரமாக்கினாள், வைத்த கண் வாங்காமல் ஷரவன் முகத்தையே  பார்த்து கொண்டிருந்தாள்.


ஷரவன் காதருகில் குனிந்து மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், 


"மாமா " 


"மாமா''


"மாமா" என்று  ஒரு குழந்தைக்கு தாயாகியும் இன்னும் குழந்தை போல் இருக்கும் தன் மழலை குரலில், இன்று ஷரவன் இருக்கும் இந்த நிலையை நினைத்து வலியும், புதிதாக அவள் மனதில் அவன் மேல் முளைத்த காதல் உணர்வும் சேர்ந்து வந்த அவள் கனிந்த குரல் ஷரவன் செவியை தீண்டியது.  


எத்தனை முறை அவளை மாமான்னு கூப்பிடுடி, என்று அவன் கெஞ்சி இருப்பான். அப்போதெல்லாம் அப்படி அழைக்காதவள், இன்று தன் அடிமனதில் இருந்து, முழு காதலோடு அழைக்கிறாள். ஆனால், பாவம் அதை அவன் செவிகளுக்கு கேட்கிறதா? என்று தான் அந்த பேதைக்கு தெரியவில்லை.


"ஏன் மாமா? ஏன் என்னை  இவ்ளோ காதலிச்ச? அப்படி என் கிட்ட என்ன இருக்குன்னு என்னை இவ்ளோ" என்றவளுக்கு அடுத்த வார்த்தை வராமல்  நெஞ்சுகுழி விம்மியது. 


கண்களில் கண்ணீரோடு, "உங்க உயிரை விட என்னை அதிகமாக நேசிச்சு இருக்கீங்களே எதுக்கு மாமா? ஏன்... ஏன் இப்படி ஒரு காதல்... உங்க காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என் மேல போய் ஏன் மாமா?? ஏன்?" என்று கதறினாள். 


ஒருத்தரால இவ்வளவு தூரம் ஒரு பொண்ணை காதலிக்க முடியுமா? என்று நினைத்தவள் மனதில் ஷரவனின் அந்த தூய்மையான காதல் தனக்கானது, தனக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கையில் மிருதுளா சற்று கர்வமாகவே உணர்ந்தாள்.


"ரஷ்மி சொன்னா மாமா, நீங்க இந்த உலகத்தில் என்ன தான் அதிகமாக விரும்புறிங்க. என் மேல உங்களுக்கு கோவமே வராதுன்னு. அது உண்மைன்னா? இப்ப ஏன் மாமா?? என்னை தனியா விட்டு போக பாக்குறிங்க? காலேஜில் சொன்னீங்களே, இனி நீ எப்பவும் எனக்கு தான். உன்னை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்னு, அன்னைக்கு அப்படி சொல்லிட்டு இப்ப என்னையும், முக்தாவையும் தனியா விட்டுப்போறது, என்ன நியாயம் மாமா. நானும் , முக்தாவும் பாவம் தான?" என்றவள் அப்படியே அவன் படுத்திருந்த கட்டிலில் அவன்  அருகில் அவனை அணைத்தபடி  படுத்துக் கொண்டாள்.


அவன் நெஞ்சில் தலையை வைத்துக் கொண்டு, "என்னை விட்டு போயிடாதீங்க... இனி என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது. இவ்வளவு நாள் நான் அனாதை மாதிரி வாழ்ந்துட்டேன். இனி அது என்னால முடியாது. எனக்கு உங்க கூடவும், முக்தா கூடவும் சேர்ந்து ஒன்னா வாழணும்னு ஆசையா இருக்கு மாமா. ஒன்னு நீங்க என் கூட, முக்தா கூட சேர்ந்து இருக்கணும். இல்ல... நீங்க போனதும்  உங்க கூடவே நானும் வந்துடுவேன். இருந்தால் முக்தாக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருப்போம். அவளுக்கு அப்பா இல்லன்னா அம்மாவும் இருக்க மாட்டா, இனி நான் உங்களை விட்டு தனியா இருக்க மாட்டேன், உங்க கூட தான் இருப்பேன்" என்றவள் அவனை இன்னும் இறுக்க கட்டிக் கொண்டாள். 


பின் ஏதோ நியாபகம் வந்தது போல் "ஹான்!  மாமா உங்களுக்கு ஒன்னு தெரியுமா அந்த தனு இல்ல தனு, அவ என்ன கன்னத்துல அடிச்சிட்ட மாமா, கன்னம் ரொம்ப வலிக்குது தெரியுமா" என்று அடிவாங்கிய குழந்தை தன் தாயிடம் அடுத்தவரை பற்றி புகார் செய்வது போல் அவன் நெஞ்சில் தலை வைத்தபடி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள். 


இத்தனை வருடம் அவனுடன் பேசாமல் இருந்த அனைத்தையும் இன்று ஒரே நாளில் பேசிவிட நினைத்தாளோ! என்னமோ... அவள் பேச்சு நிற்கவே இல்லை. கொஞ்ச நேரத்திற்கு பின் தான் பிடித்திருந்த ஷரவனின் கையில் இறுக்கம் ஏற்பட சட்டென எழுந்து அமர்ந்த மிருதுளா ஷரவன் கையை பார்க்க. அவன் கைக்குள் இருந்த மிருதுளாவின் கையை ஷரவன் இறுக்கிப் பிடித்திருந்தான். 


அதை பார்த்து ஒரு நிமிடம் மிருதுளா உறைந்து நின்றவள், உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு,


"டாக்டர்" 


"டாக்டர்" என்று சத்தம் போட்டு கத்த வெளியே இருந்த அனைவரும் என்னமோ ஏதோ என்று பதறிக்கொண்டு உள்ளே வர ஷரவன் கண்கள் பாதி திறந்த  நிலையில் கஷ்டப்பட்டு இமைகளை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.


 அவள் இதய துடிப்பு சீராக இருப்பதை அவனுக்கு பொருத்தியிருந்த கருவி உறுதிபடுத்த டாக்டர் ஷரவனை பரிசோதித்து விட்டு, "இனி ஷரவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று சொன்ன பிறகு தான் அங்கிருந்தவர்களுக்கு போன உயிர் திரும்ப வந்தது.


ரெண்டு, மூணு மணிநேரம் கழித்து ஷரவனுக்கு முழுதாக நினைவு திரும்பிவிட, அவன் விழிகள் முதலில் தேடியது தன்னவளின் முகத்தை தான். தன்னருகில் முக்தாவை கையில் ஏந்தியபடி இமை கொட்டாமல் தன் பார்க்கும் அவள் வேல் விழிகளில் அவள் மனதின் காதலை உணர்ந்தவன், உள்ளம் சிறகில்லாமல் காதல் வானில் பறந்தது. 


கண்களால் அவளை வா என்று அருகில் அழைக்க, மிருதுளா குழந்தையை கீழே இறக்கி விட்டு ஷரவன் முகம் நோக்கி குனிய, அவள் கன்னத்தை மெதுவாக வருடியவன், திரும்பி தனுவை  பார்த்து, "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மித்துவை அடிச்சிருப்ப தனும்மா" என்று கேட்டு அவளை செல்லமாக முறைக்க, அங்கிருந்த அனைவர் முகத்திலும் குறுநகை பரவியது.


 மிருதுளா அனைவரும் அவர்களை சுற்றி நிற்பதை கூட பொருட்படுத்தாது ஷரவனை அனைத்து அவன் கன்னத்தில் முத்தமிட, அவர்களுக்கு தனிமை தர நினைத்து அனைவரும் அந்த அறையை விட்டு வெளியேறினர்.