காதல் 21



 காதல் 21


லட்சுமியோடு மிருதுளா ஊட்டி வந்தாள். அந்த வீட்டில் மிருதுளாவுக்கு துணையாக ஒரு பெண்ணையும், காவலுக்கு ஒரு வாட்ச்மேனும் நியமித்து இருந்தான் ஷரவன். 


லட்சுமியும் அங்கிருந்த ஒரு சின்ன மருத்துவமனையில் தற்காலிகமாக வேலைக்கு சேர்த்திருந்தார். நாட்கள் செல்ல செல்ல மிருதுளா வயிற்றில் ஷரவனின் உயிர் வளர தொங்கியது. மிருதுளா இந்த குழந்தை தனக்கு சொந்தம் இல்லை, நாம் வெறும் வாடகை தாய் தான் என்பதை தனக்கு தானே  பலமுறை சொல்லி மனதில் பதிய வைத்துக் கொண்டாலும், தனக்குள் அசையும் அந்த சின்னஞ்சிறு உயிரின் ஸ்பரிசத்தில் அடிக்கடி தன்னை தொலைத்து விடுவாள், அவளை மறந்து வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசிக்கொண்டிருப்பாள். 


வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மேலே படுத்துக் கொண்டு, வேலையும் பார்த்தாள் மிருதுளா. இடைப்பட்ட நாட்களில் ஷரவன் அடிக்கடி மறைந்திருந்து மிருதுளாவின் தாய்மையில் முன்பைவிட அழகாய் மிளிரும் அவள் முகத்தையும், தன் உயிரை சுமந்து மேடிட்ட வயிற்றுடன்

மெதுவாக அவள் நடக்கும் அழகையும் ரசிப்பான். நாட்கள் அதன் போக்கில் அழகாய் நடக்க, மிருதுளாவின் ஒன்பதாவது மாதம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உதவியுடன் அங்கிருந்து சில பெண்களை அழைத்து சின்னதாய் மிருதுளாவுக்கு வளைகாப்பு நடத்தினார் லட்சுமி. 


அங்கே உள்ளவர்களிடம் மிருதுளா தன் உறவுக்கார பெண் என்றும், அவள் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் சொல்லி வைத்திருந்தார் லட்சுமி. வளைகாப்பு அலங்காரத்தில் கை நிறைய வளையல் பூட்டி, அவளின் அழகிய குழி விழும் குண்டு கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமம் நிறைந்து, அழகிய ஓவியம் போல் இருந்த தன் உயிரை சுமக்கும் தன் உயிரானவளை தன் இரு கண்களிலும், நினைவுகளிலும் நினைத்துக் கொண்டான் ஷரவன்.


மலர்களை பணி சூழந்த மாலை வேளையில் மிருதுளாவுக்கு இடுப்பு வலி கண்டு, அவள் துடித்தாளோ இல்லையோ லட்சுமி ஃபோனில் மிருதுளாவுக்கு வலி வந்துச்சுன்னு சொன்ன உடன் ஷரவன் உடலும், உள்ளமும் பயத்தில் துடித்தது. 


ஷரவனுக்கு மிருதுளாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற வேண்டுதல் ஒருபுறமும், தன் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஒருபுறம் இருக்க, ஹாஸ்பிடல் வெளியே வராண்டாவில் தவித்துக் கொண்டிருந்தான். கூடவே ஷரவனின் அம்மா கயல்விழியும், அப்பா பிரதாப்பும் இருந்தனர். ஷரவன் ஏற்கனவே தன் அப்பா, அம்மாவிடம் தன் குழந்தைக்கு  மிருதுளா வாடகைத்தாயாக இருப்பதை சொல்ல, முதலில் ஷரவன் மீது கோபம் கொண்டவர்கள், பின் தன் மகனின் நிலையை எண்ணி அமைதியாகி விட்டனர். இன்று தங்கள் குடும்ப வாரிசை பார்க்கும் ஆசையில் ஹாஸ்பிடல் வந்துவிட்டனர். 


தன் தந்தையை போல் அந்த சின்னஞ்சிறு உயிரும் தன் தாய் எதற்கும் கலங்க கூடாது என்று நினைத்ததோ என்னவோ.‌‌.. மிருதுளாவுக்கு அதிகம் தொல்லை இல்லாமல் தன் பிஞ்சு பாதத்தை இந்த பூமியில் பதித்தாள் அந்த குட்டி தேவதை. 


குழந்தை பிறந்து மிருதுளா மயக்கத்தில் இருக்க, ஷரவன் வெளியே காத்திருப்பது தெரிந்து, அவன் தவிப்பை நீட்டிக்க விரும்பாமல் லட்சுமி அந்த குட்டி தேவதையை, ஷரவனின் செல்ல இளவரசியை அவன் கையில் கொண்டு வந்து கொடுத்தார். மகளை கையில் வாங்கிய ஷரவனுக்கும் ஒன்னும் புரியவில்லை.  ஒரு நிமிடம் தன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிம்மதியும், சந்தோஷமும் தன் கையில் கிடைத்த உணர்வு. சூரியனே தன் அருகில் இருப்பது போல் அப்படி ஒரு வெளிச்சம் அவன் மனதில். உலகத்தையே வென்ற ஒரு கர்வம் அவன் உள்ளத்தில் உதிக்க, அதற்கு நேர்மாறாக அவன் கண்களில் கண்ணீரை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. 


அவன் கண்களில் வழிந்த கண்ணீர் துளி, அவன் இளவரசியின் கன்னத்தில் பட்டு தெறிக்க, தன் தந்தை கண்ணீர் விடுவது  அந்த தளிருக்கு பிடிக்கவில்லை போலும். தன் கைகளை இப்படியும் அப்படியும் ஆட்ட, மகளின் கரம் பட்டு கண்ணீர் துளிகள் மறைந்தது. ஆசை தீர தன் மகளின் கன்னத்தில் முத்தமழை பொழிந்தவன், "மித்து எப்படி இருக்கா ஆன்ட்டி" என்று கேடடான்.


"அவளுக்கு ஒன்னு இல்லடா ஷீஸ் ஓகே. இப்ப மயக்கத்தில் தான் இருக்கா, நீ போய் பாரு" என்று லட்சுமி சொன்னதும் தன் ஆசை மகளை அன்னையிடம் தந்தவன் தன் மித்துவை பார்க்க விரைந்தான். 


மிருதுளா கட்டிலில் கண்கள் மூடி மயக்கத்தில் இருக்க, அவள் அருகில் சென்று மெதுவாக அவள் தலையை கோதி விட்டான் ஷரவன். 


"ரொம்ப தேங்க்ஸ் டி. இதுவரைக்கும் நீ எனக்கு கொடுத்த எல்லா வேதனைக்கும்,  நீயே மருந்து போட்டுட்ட, இன்னைக்கு நீ எனக்கு கொடுத்திருக்க இந்த சந்தோசம் ஒன்னு போதும்டி, இந்த ஆயுசு முழுக்க நான் உயிரோட வாழ, நீ இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு சூனியம் தான். ஆனா, நீ கொடுத்த நம்ம குழந்தை கடல்ல தத்தளிச்சவனுக்கு மரக்கட்டை கிடச்சு அதோடு கையில் முத்தும் கிடச்ச மாதிரிடி. கடலில் மூழ்கி முத்து எடுக்குற மாதிரி, உனக்குள் இருந்து நான் எடுத்த ஆழிமுத்து நம்ம பொண்ணு, சோ, இனி நம்ம பொண்ணு பேரு முக்தா. உனக்கு இந்த பேர் புடிச்சிருக்கு தான மித்து" என்று மயக்கத்தில் இருந்த மிருதுளாவிடம் தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தான் ஷரவன். 


"நான் உயிர்ப்புடன் வாழ உன் நியாபகமும், உயிரோட இருக்க நம்ம குழந்தை போதும் மித்து. நீ என்னோட வாழ்க்கையில் திரும்ப வரியோ இல்லையோ… ஆனா, நான் என்னோட கடைசி நிமிஷம் வரை உனக்காக காத்திருப்பேன்" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு சென்றான்.


குழந்தை பிறந்து மூன்று மாதம் முடிந்து இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மிருதுளா பெங்களூரில் தனக்கு ஒரு வேலையை தேடிக் கொண்டாள். மனமே இல்லாமல் தன்னுள் பூத்த அந்த அழகு மலரை கடைசி முறையாக முத்தமிட்டு லட்சுமியிடம் கொடுத்துவிட்டு மிருதுளா தான் கடமை முடிந்தது என்று அடுத்த நிமிடமே அங்கிருந்து சென்று விட்டாள். 


லட்சுமி குழந்தையை ஷரவனிடம் ஒப்படைத்தர். ஷரவன் கண்களில் நீரோடு குழந்தையை வாங்கியவன், "இனி என்னோட நீயும் உன் அம்மா வரவுக்காக காத்திருடா முக்தா குட்டி" என்று குழந்தைக்கு முத்தமிட்டவன். தன் அறை முழுவதும் மாட்டி இருந்த மித்துவின் போட்டோவை காட்டி, " இது தான் குட்டிமா உன்னோட அம்மா, இனி நம்ம வாழ்க்கை உன் அம்மாவோட நினைவுகளோட தான்" என்று மித்துவின் போட்டோவில் தன் இதழ் பதித்தான். 


லட்சுமி அனைத்தையும் சொல்லி முடித்து மிருதுளாவை பார்க்க, மிருதுளா மெதுவாக எழுந்து லட்சுமி அருகில் வந்தவள், "எனக்கு அவர பாக்கணும் ஆன்ட்டி… அவர் கூட பேசணும், என்ன அவர்கிட்ட கூட்டி போறீங்களா ஆன்ட்டி. ப்ளீஸ் என்ன அவர்கிட்ட கூட்டி போங்க. இப்ப அவரு என் மேல கோவமா இருப்பாரு இல்ல, என்ன பார்க்க கூட அவருக்கு புடிக்காதுன்னு எனக்கு தெரியும். காலையில கோயில்ல வச்சு பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டேன். கண்டிப்பா அவரு என்ன வெறுத்திருப்பாரு. ஆனா. எனக்கு அவரை பார்க்கணும் போல இருக்கு ஆண்ட்டி. ஒரு தடவ ஒரே ஒரு தடவ அவரை பாக்கணும் ஆன்ட்டி. ப்ளீஸ் ஆண்ட்டி கூட்டி போங்க ஆண்ட்டி" என்று லட்சுமியின் காலைக் கட்டிக்கொண்டு கதறியவள் கண்ணில் தாயை பார்க்க ஏங்கும் மழலையின் தவிப்பு இருந்தது. 


அவள் நிலை அனைவருக்கும் கஷ்டத்தை கொடுத்தாலும்,' இப்பவாவது இவ ஷரவனின் உண்மை காதலை புரிஞ்சுகிட்டாளே' என்ற நிம்மதி பெருமூச்சு இருந்தது. 


அவள் தலையை வருடி ஆறுதல் படுத்திய ரஷ்மி. "அழாத மிருது, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. ஷரவன் எப்பவும் உன்னை வெறுக்க மாட்டான். ஷரவனால உன்னை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெறுக்க முடியாது. அவன் அந்த அளவு உன்னை காதலிக்கிறான். இவ்வளவு ஏன் இன்னைக்கு உன்ன பார்க்க கோயிலுக்கு வரும்போது உனக்கு புடிச்ச எல்லாத்தையும் வாங்கணும்னு, நேத்து முழுக்க ஒரே ஷாப்பிங் தான். என்னை உனக்கும் முக்தாக்கும் டிரஸ் எடுக்க சொல்லிட்டு, நொடிக்கு ஒரு தடவ ஃபோன் பண்ணி மித்துக்கு அந்த கலர் பிடிக்கும், மித்துக்கு இந்த கலர் புடிக்கும்னு டார்ச்சர் பண்ணிட்டான். அப்புறம் ஒவ்வொரு டிரஸ்ஸையும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அவனுக்கு அனுப்பி... அவன் ஓகே பண்ணி... என்னை ஒரு வழியாக்கிட்டான். அவனுக்கு நீயின்னா உயிர் மிருது. உன்மேல அவனால் கோபப்பட முடியாது" என்று மிருதுவை ஆறுதல்படுத்த மிருதுளா சற்று ஆறுதல் அடைந்தாள்.


 "ஓகே ஓகே… அதான் எல்லாம் பிளான் போட்ட மாதிரி சரியா நடந்திடுச்சே, அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு முதல்ல மிருதுவை ஷரவண்ணாட்ட  கூட்டி போவோம். அப்புறம் அவர் பாடு இவ பாடு. கட்டிக்கிட்டு கொஞ்சுவாங்களோ, இல்ல அடிச்சிட்டு உருண்டு புரண்டு சண்ட போடுறாங்களோ… அவங்க இஷ்டம்" என்று சொல்ல அதுவரை அங்கிருந்த இறுக்கம் சற்று குறைந்து மிருதுளாவை தவிர அனைவரின் முகத்திலும் சிறு புன்னகை மலர்ந்தது.


லட்சுமி, மிருதுளாவை அழைத்துக் கொண்டு ஷரவனை பார்க்க கிளம்ப, லட்சுமியின்  ஃபோனுக்கு ஷரவன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது


"இங்க பாருங்கப்பா இந்த ஷரவனை, பையனுக்கு கொஞ்சம் நேரம் பொறுக்க முடியல போல, உடனே ஃபோன் பண்ணிட்டான்" என்று லட்சுமி கிண்டலாக சொல்ல,  


"அம்மா ஃபோனை 

ஸ்பீக்கர்ல போடும்மா. மாம்ஸ் இந்த அழுமுஞ்சிய பார்க்க எந்தளவு ஏங்கி புலம்பி  தவிக்கிறாருன்னு இவ கேட்கட்டும், கூடவே நம்மளும் கேட்போம்" என்ற சிந்து, ஃபோனை வாங்கி ஸ்பீக்கரில் போட, அனைவரும் ஷரவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஒரு எதிர்பார்ப்போடு ஃபோனை பார்த்திருக்க, ஃபோனில் வந்த செய்தியை கேட்டு லட்சுமி கையில் இருந்த ஃபோன் கீழே விழுந்து நொறுங்கியது. 


அங்கிருந்த அனைவரும் தலையில் இடி விழுந்தது போல் நிலைகுலைந்து விட்டனர்.


ஷரவன் கோயிலில் மிருதுளா பேசியதில் வெகுவாக மனமுடைந்தவன், வேறு காரை வர வைத்து முக்தாவை அதில் அனுப்பி வைத்துவிட்டு, தன் காரை வேகமாக ஓட்ட ஒரு கட்டத்தில் கார் அவன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி ஷரவனுக்கு தலையில், கை, காலில் பலத்த அடிபட்டு மயங்கிய நிலையில் காருக்குள் இருந்தவனை அங்கே இருந்தவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டனர்.


 ஷரவன் அந்த ஊரில் பெரிய பிஸ்னஸ் மேன் என்பதால் அவனை அடையாளம் கண்டு அவன் தந்தை பிரதாப்புக்கு தகவல் சென்றது. பிரதாப் உடனே ஹாஸ்பிடல் விரைந்தார், ஆக்சிடென்ட் ஆனா இடத்தில் இருந்தவர் ஒருவர் ஷரவன் ஃபோனை எடுக்க அதில் இருந்த லாஸ்ட் டயல் நம்பரில் லட்சுமி எண்ணை பார்த்து லட்சுமிக்கு தகவலை தெரிவித்தார்.


லட்சுமி என்ன செய்வதென்று புரியாமல் திரும்பி பார்க்க அங்கு மிருதுளா இல்லாமல் போக பதறியவர் "ஐயோ சிந்து... மிருதுளா எங்க? எங்க அவ? எங்க போனா?" என்று பயத்தில் கத்த,


அனைவரும் அவளை வீடு முழுக்க தேட, விஷ்வா வீட்டை விட்டு வெளி வந்து பார்க்க மிருதுளா ரோட்டில் நடந்து போய் கொண்டிருந்தாள். அவளை நோக்கி வரும் லாரியை கூட கவனிக்காமல், "அவரை பார்க்கணும்" அவரை பார்க்கணும்' என்ற  வார்த்தைகளை மட்டும் மந்திரம் போல் திரும்ப திரும்ப சொன்னவள். எதையும் கவனிக்காமல் ரோட்டில் நடக்க விஷ்வா ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்.


 உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு "ஏய் மிருது, ஏய் மிருது நில்லுமா" என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓட. விஷ்வாவின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்த நிலவன் நிலமையை உணர்ந்து விஷ்வா பின்னாலேயே ஓட, ஒரு நிமிடம் தவறி இருந்தால் அந்த லாரி மிருதுளாவை  தூக்கி அடித்திருக்கும், அதற்குள் விஷ்வா அவள் கையை பிடித்து தன் புறம் இழுக்க, விஷ்வாவோடு சேர்த்து கீழே விழுந்தாள் மிருதுளா. 


நிலவன் அவர்கள் அருகில் வந்தவன் கைகொடுத்து விஷ்வாவை தூக்கியவன், பின் மிருதுளாவை தூக்கி நிறுத்தி,


 "ஏய் லூசு... அறிவிருக்க‌ உனக்கு? இப்படியா ரோட்டுல போவ? லாரி வர்றது கூட தெரியாம அப்படியே போற? ஒரு நிமிஷம் விஷ்வா வரலைன்னா என்ன ஆயிருக்கும்" என்று கண்டபடி கத்தினான்.


எங்கு மிருதுளாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ" என்ற பயத்தில் இருந்த நிலவன் அவளை சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் பாவம் அந்த பெண் இல்லை.


 ஷரவனுக்கு ஆக்சிடென்ட் என்ற செய்தியை கேட்ட அடுத்த நொடி அவள் மூளை செயல்படுவதை நிறுத்திவிட்டது. என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எழுந்தவள் கால்போன போக்கி நடக்க, அவள் உதடுகள் மட்டும் மந்திரம் போல் அவரை பார்க்கணும், அவரை பார்க்கணும் என்று உச்சரித்துக் கொண்டிருந்தது. 


நிலவன் குழப்பமாக மிருதுளாவை பார்த்தவன், "ஏய் மிருதுளா என்னம்மா ஆச்சு உனக்கு?  ஏய் மிருது" என்று அவள் கன்னத்தை தட்ட, அவளிடம் எந்த அசைவும் இல்லை. சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.


 நிலவன் திரும்பி விஷ்வாவை பார்த்து, "என்னடா இது அவ சொன்னதையே சொல்லிட்டு இருக்கா? என்னாச்சு டா இவளுக்கு ஒரு மாதிரி இருக்காளே" என்று பயத்தில் கேட்க, 


"ஒருவேளை ஷரவன் ஆக்சிடென்ட் நியூஸ் கேட்டு இப்படி ஆகிட்ட போல டா மச்சி. நம்ம பேசாம உடனே இவளை ஷரவன் இருக்க ஹாஸ்பிடல் கூட்டி போவோம்.  அவனை பார்த்த  இவ சரியாகிடுவா, வாடா உடனே ஹாஸ்பிடல் போவோம்" என்றவன் மிருதுளாவை இழுத்துக் கொண்டு சென்றான்.