கன்னத்தில் காதல் முத்தம் 11

 காதல் 11


அக்னி கொடுத்த மருந்தின் தாக்கத்தில் காலை பத்துமணி வரை நல்ல உறக்கத்தில் இருந்த ஆராத்யாவுக்கு லேசாக தூக்கம் தெளிய கண்விழித்தவள், தலையைப் பிடித்துக் கொண்டு எழும்பப் பார்த்தவளால், உடலை இம்மியளவும் அசைய முடியாமல் போக நன்றாக கண்விழித்து பார்த்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது, அவள் மேல் காலைப் போட்டுகொண்டு, அவள் வாயிற்றின் மேல் கைபோட்டு கட்டியணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த அக்னியைப் பார்த்து.


சட்டென அவனைத் தள்ளிவிட்டு எழுந்து கட்டிலின் ஓரம் வந்து நின்றவள், அவள் தள்ளிவிட்டதில் தூக்கம் கலைந்து கண்விழித்த அக்னியை தீயாக முறைத்துக் கொண்டு இருந்தாள்.


அவள் நின்ற கோலத்தை பார்த்து, "பச்ச்… ஏன்டி உனக்கு நார்மலாவே பாக்கத் தெரியாதா? எப்ப பாரு ஹாட் வாட்டர் கெட்டில் மாதிரி கொதிச்சிட்டே இருக்கீயே?" என்றபடி எழுந்து கட்டிலில் அமர்ந்தவனை தலையில், அவள் அங்கிருந்த மேசை விளக்கையெடுத்து அடிக்க பார்க்க, சட்டென சுதாரித்து அங்கிருந்து நகர்ந்து கட்டிலில் இருந்து கீழ இறங்கிய அவள் அருகில் வந்தவன், "ஏய்..." என்ற அதட்டலுடன் அவள் கையில் இருந்த மேசை விளக்கை பறித்துக் கொண்டு அவளை இழுத்துப் பிடித்து தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டு, "இப்ப எதுக்கு என்னை அடிக்கப்பாத்த? ஒரு செகண்ட் மிஸ்ஸாகி இருந்தாலும் எனக்கு கபால மோட்சம் கிடைச்சிருக்கும்." என்று கத்தியவன் கையை அவள் நறுக்கென்று கடித்துவிட, "ஆஆஆஆ…" என்று வலியில் கத்திய நொடி, அவன் பிடியில் இருந்து விலகி வந்தவள் அவனை மேலும் மேலும் முறைத்து வைத்தாள்.


"ஏய் பிசாசு எதுக்குடி இப்டி கடிச்சு வச்ச? திங்க நான்வெஜ் எதுவும் வேணும்னா வாயைத்திறந்து கேட்டு தொலைக்க வேண்டியது தான? சமைச்சு தந்துட்டு போறேன். அதவிட்டு மனுஷனை ஏன்டி இப்டி கடிச்சு வைக்கிற?" என்றவன் அவள் கடித்த இடத்தில் அவள் பல்தடம் அழுத்தமாக பதிந்திருந்ததை பார்த்தபடி அவளை திட்ட, "பொறுக்கி ராஸ்கல்… யார கேட்டுடா என் பக்கத்தில் வந்து படுத்த?" என்றாள் ஆத்திரமாக.


"நான் யாரடி கேக்கணும்… நான் உனக்கு தாலி கட்ன புருஷன்… எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு… உன் பக்கத்தில் படுக்க மட்டும் இல்ல… உன்னை என்ன வேணும்னாலும் பண்ணுவேன்… எவனும் என்னை கேக்கவோ, தடுக்கவோ முடியாது" என்றவன் அறை வாசல் வரை சென்றவன், "அந்த கபோர்டுல டிரஸ் இருக்கு, சீக்கிரம் குளிச்சிட்டு வா" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "நேத்து சாப்ட மாட்டேன் அடம்புடிச்ச மாதிரி, குளிக்கமாட்டேன்னு அடம்புடிக்கிற ஐடியா எதாவது இருக்காடி?" என்று ஒரு மாதிரி குரலில் கேட்டு அவளைப் பார்த்து கண்டிக்க, ஆராத்யாவுக்கு உள்ளுக்குள் பக்கென்றது.


எங்கு எதுவும் சொன்னால் தானே 'குளிப்பாட்டி விடுகிறேன்' என்று வந்துவிடுவானோ? என்று பயந்தவள், வேகமாக அலமாரியை திறந்து, கைக்கு கிடைத்த உடையை எடுத்துக்கொண்டு குளியலறைகுள் புகுந்து கொள்ள, அவள் ஓடுவதை பார்த்து சத்தமாக சிரித்த அக்னி, "மறுபடியும் ஜஸ்ட் மிஸ்டா அக்னி" என்றபடி வேறு அறைக்கு சென்று குளித்து முடித்து காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தான்.


குளித்து முடித்து ஆராத்யா இருந்த அறைக்கு வந்த அக்னி ஒரு நிமிடம் அவளைப் பார்த்து மயங்கி நின்றான். அழகிய வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தவள், ஈரமாக இருந்த தலைமுடியை தன் தோளில் போட்டு டவலால் துடைத்துக் கொண்டிருக்க, அந்த காட்சியை கண்ட அக்னிக்கு உள்ளுக்குள் உணர்வுகள் கடிவாளமின்றி ஓடத்தொடங்கி விட அடுத்த நொடி, தலையை சிலுப்பி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தவன், "ஓய்… டிபன் ரெடி வா சாப்டலாம்" என்றழைக்க ஆரா, தீடிரென கேட்ட அவன் குரலில், "அம்மா!" என்று அலறியபடி நெஞ்சில் கைவைத்துக் கொள்ள அவள் கையில் இருந்த டவல் கீழே விழுந்தது.


அதை குனிந்து எடுத்த அக்னி, மெதுவாக அவள் தலைமுடியை தொட்டு பார்த்து, "ஏன்டி தலைக்கு குளிச்சா ஒழுங்கா துடைக்க மாட்டீயா? பாரு முடியெல்லாம் எப்டி ஈரமா இருக்குன்னு… உனக்கு தான் ஃபீவர் இருக்கில்ல… அப்றம் என்ன வெண்ணைக்கு இப்ப நீ தலைக்கு குளிச்ச?" என்று அவளைத் திட்டியபடி அவள் தலையை மெதுவாக அவள் துவட்டிவிட, ஆராத்யா வெடுக்கென்று அவன் கையை தட்டிவிட்டவள், "டோண்ட் டச் மீ" என்று அடிக்குரலில் சொல்ல, அக்னி அவளை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்தவன், "இனிமே என்கிட்ட மறைக்க உன்கிட்ட ஒன்னும் இல்லடி" என்று குறும்பாக சொல்ல, அவளுக்கு அவன் உடை மாற்றிவிட்டதை தான் சொல்லிகிறான் என்று நினைத்த ஆராத்யா, அவள் காலை ஓங்கி அழுத்தமாக ஒரு மிதி மிதித்து, "பொறுக்கி ராஸ்கல், மயக்கமா இருந்த பொண்ணுகிட்ட அட்வான்டேஜ் எடுத்திட்டு அதை பெருமையா வேற சொல்லிகாட்றீயா?" என்று மீண்டும் அவன் காலை மிதிக்கப் பார்க்க, சட்டென்று நகர்ந்து அவள் காலை அவன் தட்டிவிட, அதில் தடுமாறி விழப்போனவள், பயத்தில் அக்னியின் சட்டையை பிடிக்க, அவள் இழுத்த வேகத்தில் அவனும் தடுமாறி போனவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொள்ள இருவருமே கட்டிலின் மெத்தையில் விழுந்தனர்.


தன் மீது பூக்குவியல் போல் விழுந்திருந்தவளின் கூந்தல் அவன் முகத்தை மறைத்திருக்க, அவள் மேனியில் இருந்து வந்த அவளின் பிரத்யேக வாசம் அவனை மதிமயங்க செய்தது.


அந்த மயக்கத்தில் "தியா" என்று முனங்கியபடி அவனையும் மீறி அவன் கைகள் அவள் உடலின் மேல் அத்துமீறி படர, அதை அவள் உணரும் முன், "டேய் எருமை எந்திரிடா..‌. என்னால மூச்சு விட முடியல" என்றவளின் குரலில் உணர்வுகள் அறுபட்டு சட்டென்று அவளை விட்டு விலகி எழுந்தவன் கண்களில் மோகத்தின் தவிப்பு என்றால், அவனை முறைத்த ஆராவின் கண்களை அனலின் தகிப்பு.


இங்கிருந்து இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்று புரிந்த அக்னி, "உனக்கு டூ மினிட்ஸ் தான் டைம்… சீக்கிரம் டைனிங் டேபிளுக்கு வா" என்றுவிட்டு விறுவிறு என்று அந்த அறையை விட்டு வெளியேறியவனுக்கு, அப்போது தான் சீராக மூச்சே வந்தது.


அவன் அறையை விட்டு சென்றதும் தலையை பிடித்துக்கொண்டு அப்டியே கட்டிலில் அமர்ந்த ஆராவுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அக்னி நடந்துகொள்ளும் விதம் அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை கிளப்ப, "ஆதிமாமா" என்று முணுமுணுத்தவள், "சீக்கிரம் வாங்க மாமா… சீக்கிரம் வந்து என்னை இவன்ட்ட இருந்து காப்பாத்துங்க மாமா. எ… எனக்கு பயமா இருக்கு மாமா" என்று வாய்விட்டு அழுதவள், "இன்னும் உள்ள என்னடி பண்ற?" என்ற அக்னியின் குரல் காதில் விழ, தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து உணவு மேசைக்கு சென்றாள்.


அங்கு அந்த மேசை முழுவதும் அவளுக்கு பிடித்த உணவுகள் அனைத்தும் வரிசைக் கட்டி இருக்க, ஒரு நிமிடம் திகைத்தவள் நிமிர்ந்து அக்னியைப் பார்க்க, அவன் இதழ்களில் அழகிய புன்னகை.


"ம்ம்ம்… உக்காருடி" என்று அவள் தோளைப் பிடித்து நாற்காலியில் அமரவைத்து, அவள் முன்னிருந்த தட்டில் அவளுக்கு பிடித்த உணவுகளை பரிமாறவிட்டு அவள் அருகில் அமரந்தவன், தனக்கும் உணவை எடுத்து வைத்துக் கொண்டு, "சாப்டு" என்று சொல்ல, ஒரு நொடி அவனை ஆழ்ந்து பார்த்தவள், அமைதியாக உணவை உண்ணத் தொடங்கினாள்.


"டிபன் எப்டி இருக்கு?" என்றவனுக்கு அவள் பதில் சொல்லாமல், நீ என்ன கேக்குறது? நான் என்ன பதில் சொல்றது? என்ற ரீதியில் அமைதியாக இருக்க, "சாப்பாடு எப்டி இருக்குன்னு உன்னை தான்டி கேட்டேன்…" என்று அவன் குரல் அழுத்தமாக ஒலிக்க, அந்த சத்தத்தில் அவள் கையில் இருந்த உணவு, தட்டில் விழுந்து விட சட்டென அவனை நிமிர்ந்து பாரத்தவள், "நல்.‌‌.. நல்லா… நல்லாயிருக்கு" என்று படபடக்க, "ம்ம்ம்" என்றவன், "இனிமே நான் எதாவது கேட்டா, பதில் உடனே வரணும் அண்டர்ஸ்டாண்ட்." என்று கர்ஜிக்க, "ஓ… ஓகே" என்று பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியபடியே சொல்ல, "குட்" என்றவன், "இதெல்லாம் உனக்காக நானே செஞ்சேன்" என்று சொல்ல, ஆராவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் வெளியே வந்து விழுந்து விடுமளவு விரிந்து கொண்டது.


"நீ இப்டி கண்ணை விரிச்சு பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்க தியா" என்றவன் வார்த்தைகளை சரியாக கவனிக்காத ஆரா, "நீயா இதெல்லாம் செஞ்ச?" என்று நம்பமுடியாமல் கேட்க, "ம்ம்ம்…. ஆமாம்." என்றான் சாதாரணமாக.


"உனக்கு சமைக்க தெரியுமா?"


"முன்ன தெரியாது… பட் உன்னை காதலிக்க ஆரம்பிச்ச பிறகு பழகிகிட்டேன்." என்றவனை இமைக்காமல் பார்த்தவள், உள்ளுக்குள் என்ன உணர்ந்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை.


சில நொடிகள் அவனையே பார்த்திருந்தவள், "எனக்கு போதும்" என்று எழுந்தவளுக்கு ஏதோ போல் இருக்க, மெல்ல நகர்ந்தவள் அடுத்த நொடி வாயைக் கையால் பொத்திக்கொண்டு ஓடியவள் அங்கிருந்த சிங்கில் சாப்பிட்ட மொத்தத்தையும் வாந்தியெடுக்க, "தியா" என்று கத்தியபடி அவளை நெருங்கியவன், வாந்தி எடுத்துவிட்டு மயங்கிச்சரிய போனவளை, கீழே விழும் முன் தன் கைகளில் தாங்கியிருந்தான்.


அடுத்து வந்த ஒவ்வொரு நொடியும் அக்னிக்கு நரகமாக நகர, அரைமணி நேரம் கழித்து மெல்ல கண்விழித்தாள் ஆராத்யா.


அவள் கண்விழித்த அடுத்த நொடி அவள் அருகில் சென்று, அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் அக்னி.


"என்னாச்சுடி உனக்கு? என்னடி பண்ணுது?" என்றவன் குரலில் அத்தனை நடுக்கம். அவன் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்திருக்க அவளுக்கு என்னவோ? ஏதோ? என்ற பயத்தில் இருந்தவனின் இதயம் தாறுமாறாக துடிக்க, அந்த சத்தம் ஆராவுக்கு தெளிவாக கேட்டது.


அக்னி அவள் கன்னத்தை பிடித்து தன் முகத்தை பார்க்க வைத்தவன், "சொல்லுடி உடம்புக்கு எதாவது செய்யுதா? டாக்டரை கூப்டவா?" என்று பதறியவனை அவள் மெதுவாக இமைகளை சிமிட்டு பார்த்துக்கொண்டிருக்க, "ஏய் நான் கேட்டுட்டு இருக்கேன்…நீ பாட்டுக்கு என் மூஞ்ச பாத்துட்டு இருந்தா என்னடி அர்த்தம்? எதாவது சொல்லுடி." என்றவன் பேச்சு பாதியில் நின்றது, அவள் சொன்ன, "ஐ அம் ப்ரெக்னன்ட்" என்ற வார்த்தையில்.


அவள் சொன்னது தன் காதில் சரியாகத் தான் விழுந்ததா என்று புரியாத அக்னி, "கம் ஆகைன்" என்று இறுக்கமான குரலில் கேட்க, அவனை நிமிர்ந்து பாரத்தவள், "நான் கர்ப்பமா இருக்கேன்." என்று கண்ணீர் வழியும் கண்களோடு அசராமல் ஒரு குண்டைத் தூக்கி அழகாய் அக்னி தலையில் போட, சில நிமிடங்கள் சிலையாக நின்ற அக்னி, அவள் அழுகைச் சத்தத்தில் உணர்வு பெற்றவன், அவளைத் வெற்றுப் பார்வைப் பார்த்து விட்டு விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.


அவனின் மனம் போல், இலக்கு இல்லாமல் பாய்ந்துக் கொண்டிருந்த கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த, அக்னியின் கைபேசி ஒலியை எழுப்ப அதை எடுத்து பார்த்தான்.


கௌதமும், ஷிவானியும் தான் காணொளி அழைப்பில் அவனை அழைத்திருந்தனர். இழுத்து மூச்சு விட்டபடி அழைப்பை ஏற்றவன், "ஹலோ" என்க. அவன் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்த்த கௌதம், "என்னாச்சு அக்னி? ஏன் உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? எனி ப்ராப்ளம்" என்று கேட்க, ஷிவானியும், "என்னாச்சு? ஆராக்கு ஒன்னும் இல்லயே?" அவ ஓகே தானா?" என்று பதட்டமாக கேட்க, கைபேசி திரையில் தெரிந்த அவர்கள் முகத்தை உற்றுப் பார்த்த அக்னி, "ஷீ இஸ் ப்ரெக்னன்ட்." என்று சொல்ல கௌதம், ஷிவானி இருவரும்‍, "வாட்!!!" என்று ஒரே நேரத்தில் கத்தியபடி அதிர்ந்து போயினர்.


"ஸ்டாப் இட் அக்னி… திஸ் இஸ் நாட் ஏ ஜோக்" என்று ஷிவானி சீற, "நான் ஒன்னும் ஜோக் பண்ல… உன் ஃப்ரண்டு தான் அப்டி சொன்னா… மார்னிங் பிரேக் பாஸ்ட் சாப்ட்டவுடனே வாமிட் பண்ணிட்டு மயங்கிட்டா, மயக்கம் தெளிஞ்சு கண்ணுமுழிச்சவ கிட்ட என்னடி ஆச்சுன்னு கேட்டதுக்கு, ஐ அம் ப்ரெக்னன்ட்னு சொல்லிட்டு ஒரே அழுகை." என்று சொல்ல, கௌதமும் ஷிவானியும் கண்களை சுருக்கி அக்னியை ஒருமாதிரி பார்வை பார்க்க, அவர்கள் பார்வையின் அர்த்தம் புரிந்த அக்னி, "ஐ கால் யூ லேட்டர் காய்ஸ்…" என்றவன் ஷிவானி, "அக்னி… அக்னி…" என்று கத்தியதை காதில் வாங்காமல் அழைப்பை துண்டித்து இருக்க, "கடவுளே இனிமே ஆராவை நீதான் காப்பாத்தனும்" என்று மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.


"பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப ரொம்ப நல்லவா மாதிரி கடவுள் கிட்ட காப்பாத்து கடவுளேன்னு ரெக்கமண்டேஷன் பண்றா பாரு… பிசாசு" என்று வாய்க்குள் அவளை திட்ட, அது தெளிவாக ஷிவானி காதில் விழ, "டேய் ஃபோன்ல என்னால ஒன்னும் பண்ணமுடியாதுன்ற தைரியமா?? நேர்ல பார்த்தேன் தூக்கிப் போட்டு சங்குலயே மிதிப்பேன்" என்றவள் அழைப்பை துண்டித்தாள்‌.