கண்ட‌ நாள் முதல் 1



 அத்தியாயம் 1

அழகாய் விடிந்த காலைப்பொழுது. நித்திராதேவியின் மடியில் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த நிலானி அருகில் அன்போடு கையில் டம்ளருடன் வந்த நிலானியின் அம்மா கலைவாணி. உறங்கும் முகத்தை ஒரு நொடி பார்த்து சிறு புன்னகை புரிந்து.. அவள் குழல் வருட போக. "டமார்ர்ர" என்று வந்ததே ஒரு சத்தம். "ஆத்தாடி…" என்று வாரிச்சுருட்டி எழுந்த நிலா தான் மண்டையை தடவிப் பார்க்க, கீழே உருண்டு கொண்டிருந்தது சமையகட்டில் இருந்து கலைவாணி தூக்கியெறிந்து டம்ளர்.


"அடச்சே…! கனவா.! அதான பார்த்தேன். நம்ம அம்மா கையில காப்பி டம்ளரா.? அது கையில எப்பவும் வெளக்கமாறு தானே இருக்கும். ஆனா, பாரு படிக்கிற காலத்ல கல்லுவிட்டு திருட்டுமாங்காய் அடிச்சு பழகுன பழக்கம். இப்பவும் சமையகட்டில் இருந்து டம்ளரை குறிபாத்து நடுமண்டையில வீசுது பாரு. ம்ம்ம்ம் எல்லாம் நம்மநேரம்." என்று இங்கு நிலானி புலம்பிக்கொண்டிருக்க.


"ஏன்டி காலையில மணி என்னாச்சு? இன்னுமென்ன தூக்கம் வேண்டிக்கிடக்குது. எந்திரிடி. எந்திரிச்சு போய் குளிச்சிட்டு ரெடியாகு, பத்துமணிக்கு அவங்க வந்துடுவாங்க"


"ஏம்மா இப்டி காலையிலையே கடுப்புகெளப்புற? அவங்க பத்துமணிக்கு தானே வராங்க... நீ ஏம்மா இப்படி ஏழுமணிக்கே கையில் வேப்பல வச்சிட்டு ஆடுற?"


"ஏன்டி சொல்லமாட்ட. காலையிலிருந்து நான் இங்க தனிய போராட்டீருக்கேன். நீ என்னடான்னா? என்ன பாத்து ஆடுறேங்குற! எல்லாம் உங்கப்பன் குடுக்குற செல்லம். வரட்டும் அந்த மனுஷன்"


"நீ ஏம்மா தனிய கஷ்டப்படுற.? எங்க உன்னோட செல்ல புண்ணு. ச்சே பொண்ணு.?''


"ஏன்டி! அவ ஒருத்தி தான் என் பேச்சைக் கேக்குறது. அது உனக்கு பொறுக்கலய.?"


"ஆமமம்.?! அப்படியே உன் பேச்சைக் கேட்டுட்டாலும். அவ சரியான பிராடு, சும்மா நல்லபுள்ள மாதிரி சீன் போட்டுட்டு இருக்க... நீ அவளை நம்புற… எல்லாம் விதி, என்ன செய்ய? நல்லவங்களுக்கு காலமில்ல" என்ற நிலா மண்டையில் கொட்டிய கலை, "ம்ம்ம்!! காலம் எல்லா அடுத்த வருஷம் காலண்டர்ல வரும்.. இப்ப நீ போய் குளிடி." என்று மகளை விரட்ட...


"வரவர இந்த கலை தொல்ல தாங்க முடியல. வேற வழியே இல்ல கலைக்கு ஒரு பாயசத்தை போட்டுட வேண்டியதுதான்."


"நீ முதல்ல வெந்நீர் ஒழுங்கப்போடுடி. அப்புறம் பாயாசத்தை போடலாம். இப்ப சீக்கிரம் குளிச்சிட்டுவாடி பிசாசே.!


"ச்சே… நம்ம மைண்ட் வாய்ஸ் அவ்ளோ சத்தம வா கேக்குது" என முனங்கிபடியே நிலா குளிக்க போனாள்.


"ஏய் நிலா.! எவ்ளோ நேரம் சீக்கிரம் ரெடியாகு, டைமாச்சிடி எரும" என்ற குரலில் கடுப்பான நிலா...


"அடியேய்! இப்ப நா வெளியவந்தேன். நீ சட்னி தான்டி மகளே. போடி அங்கிட்டு" என்று தங்கை சந்தியாவை திட்டிக்கொண்டே தயாரானாள் நிலானி.


"அம்மாஆஆஅஆ... அந்த எரும இன்னும் ரெடியாகல, நீயே போய்ப்பாரு" என்று அக்காவை போட்டுக் கொடுத்து விட்டு தான் வேலையை பார்க்கச் சென்றாள் சந்தியா.(அப்டி என்ன வேலைன்னு கேக்குறீங்கள? வேற என்ன தின்றது தான்…)


"இவள…" என்று கத்திகொண்டே வந்த கலை, "அடியேய்..?? என்னடி பண்ற உள்ள? சீக்கிரம்டி." என்று கதவை தட்ட. கதவை திறந்த நிலாவை பார்த்து அப்படியே அசந்து நின்று விட்டார்.


அந்த அரக்கு நிற பட்டுப்புடவை தான் மகளின் சிவந்த நிறத்திற்கு அழகாய் பொருந்தியிருக்க. சிரிக்கும் போது அவளுடன் சேர்ந்து சிரிக்கும் கண்களில் மையிட்டு, வெறும் நெற்றிப்பொட்டில் தேவதையாய் ஜொலித்த மகளைக் கண்டு பேச வார்த்தையின்றிபோனது கலைவாணிக்கு...


"என்ன கலை.? என்னை சைட்டு அடிக்கிறீயா? பாத்தும்மா உன் புருஷன் பாத்தால் அவ்ளோதான்."


"அடி செருப்பால.! பேச்சப் பாரு, போடி போய் ஃபிரிட்ஜிலிருந்து பூவயெடுத்து தலையிலவை" என்று மகளை விரட்டிவிட்டு, சிறு புன்னகையுடன் நகர்ந்தார் கலைவாணி.


நிலானி சமையல் அறைக்கு செல்ல, அங்கு இரண்டு கைநிறைய லட்டுகளை வைத்து தின்று கொண்டிருந்த சந்தியாவை பார்த்தவள். அவள் தலையில் நாங்கென்று கொட்டி, "ஏன்டி இப்படி தின்னுட்டே இருக்கியே உனக்கு வாய் வலிக்கவே வலிக்காதாடி." என்ற நிலாவை முறைத்தபடி அவள் கொட்டிய இடத்தை தடவிய சந்தியா, "போடி எரும உனக்கு பொறாமை, உன்னால இப்படி தின்ன முடியலயேன்னு உனக்கு காண்டு."


"ஆமா எங்களுக்கு காண்டு இவ பாத்த... போடி போய் முதல்ல வாய கழுவு, எலி கடிச்சிடப்போகுது. அப்புறம் பாவம் எலி செத்துடும்" என்றதும் சந்தியா "கோவத்தில் போடி பன்னி" என்று கத்த மீண்டும் அவள் தலையில் கொட்டிவிட்டு, பூவையெடுக்க சென்றாள் நிலானி.


நிலானி மல்லிகைப்பூவை ரசித்து பார்த்துக்கொண்டே அதை இரண்டாக வெட்டியவள்.

"சந்து... ஏய்! சந்து இங்க வாடி" என்று கத்திக் கூப்பிட, கொலைவெறியுடன் வந்த சந்தியா...


"ஏன்டி எரும! எத்தன தடவ சொல்லியிருக்கேன். என்னை அப்படி கூப்புடாத, எனக்கு புடிக்கலன்னு. சும்மா சந்து, பொந்துன்னுட்டு... மவளே! இன்னோரு தடவ அப்டி கூப்பிட்ஆஆஆஆ.. நாக்கை புடிச்சு கடிச்சுடுபுடுவேன்... பாத்துக்க…!"


"ஏதுதுது…!! நாக்கை கடிப்பிய..? இதென்ன புதுசா இருக்கு... பயபுள்ள செஞ்சாலும் செய்யும்.... நறுக்குன்னு முறுக்கு மாதிரி கடிச்சாலும் கடிப்பா... தீனிபண்டாரம்" என்று பயந்த நிலா, "ஏன்டி...என்னை எருமனு சொல்லாதனு சொன்ன நீ கேக்குறீயா?. அது மாதிரிதான் இதுவும். சரி சரி திரும்பு" என்றவள், "ஏன்டி தலையில எண்ணெய் வைக்கிறீய, இல்லைய? முடியெல்லாம் இப்டி பிஞ்சு போன டாய்லெட் பிரஷ் மாதிரி இருக்கு?"


"ஓய் என்ன நக்கலா?? எண்ணெய் தேய்க்கிறதெல்லாம் ஓல்ட்பேஷன், உனக்கு என்ன தெரியும் பேஷன்பத்தி... சில்லிகேள்ல்." என்று சந்தியா நிலாவை நக்கலடிக்க...


"ஆமாடி, எனக்கு பேஷன்பத்தி ஒன்னும் தெரியாது தான். ஆனா, இப்படியே போனா என்ன நடக்கும்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்டி." 


"இன்னஆஆஆ... தெரியும் என்று சந்தியா மீண்டும் நக்கல் செய்ய.."


"ம்ம்ம்.. இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் உனக்காக ஷாம்பு வாங்குற செலவு மிச்சம்" என்ற அக்காவை சந்தியா முறைக்க.


"என்னடி முறைப்பு, இப்படியே போனா அதான் நடக்கும் பாரு" என்றவள்.. தங்கையின் தலையில் மல்லிச்சரத்தை வைத்துவிட்டு அவள் கன்னத்தை ஒரு கிள்ளுகிள்ள,


சந்தியா, "ஆஆ" ஏன கத்தி விட்டு திரும்புவதற்குள், நிலா அங்கு இருந்து எஸ்கேப்பாகி இருந்தாள். 


"கலை.. கலை டார்லிங்" என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். 


ராம்குமார் இவர் தான் நம்ம எரும, சந்து‌. ச்சே இல்ல இல்ல நிலானி, சந்தியாவோட அப்பாவி அப்பா. "ஏன் இப்டி வாசல்ல இருந்து ஏலம் போட்டுக்கிட்டு. என்ன விஷயம் சொல்லுங்க.??" என்று கலை சிடுசிடுக்க...


"என்ன காலையிலேயே கலை ரொம்ப சூடா இருக்க போலயே? ரைட்டு... மூத்த பிடாரி ஏதோ பண்ணியிருக்கு... 

இப்ப நம்ம பேசினா சேதாரம் நமக்கு தான், அடக்கி வாசிடா குமாரு. அதான் உன் உயிருக்கு பாதுகாப்பு" என்று முனங்க. கலை

"ஹலோ என்ன அங்க? மைன்ட் வாய்ஸ்ச?" என்றதும் ராம்குமார் திரு திருவென்று முழித்து, "அது… அதுடி… ஆஹான்… மணியாகுதே எல்லாம் ரெடியன்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்."


"அதெல்லாம் ரெடி தான். உங்க செல்ல பொண்ணும் ரெடியாகிட்ட போதும்" என்று கலை சலித்துக்கொள்ள…


"ஏன்டி சலிச்சுக்குற? என்ன ஆச்சு இப்ப.?" என்ற கணவனை முறைத்துக்கொண்டே. "உங்க செல்ல பொண்ணு, அவளை பொண்ணுப்பார்க்க வராங்கண்ணு தெரிஞ்சும். காலையில எழுந்து, கூடமாட வேலைசெய்யாம, ஏழுமணிவரை இழுத்துப்போத்திட்டு தூங்றா. இதுக்கொல்லாம் காரணம் நீங்க கொடுக்கிற செல்லம். எல்லா உங்களால தான்" என்று கலை காலை அர்ச்சனையை தொடங்க...


மனைவியின் திட்டுகளை எல்லாம் தூசு தட்டுவதுபோல் தட்டு விட்டு ராம்குமார், "கலை டார்லிங் ஒரு காப்பி கிடைக்குமா?" என்று கேட்க. கலை பார்த்தரே ஒரு பார்வை… மனுஷன் அப்படியே மாயமாய் மறைந்தேவிட்டார்.


காலை பத்துமணி... வாசலில் கார் வரும் சத்தம் கேட்டு வெளியே வந்த ராம்குமார் வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். 


கலை வந்தவர்களை வரவேற்று உட்காரச் சொல்லி காபி கொடுக்க, மாப்பிள்ளையின் அப்பா, "இருங்கம்மா முதல்ல நா என் குடும்பதை அறிமுகப்படுத்திடுறேன்" என்றவர்.


"இதுதான் என் பொண்டாட்டி லட்சுமி, இது என்னோட ஒரேபையன் அரவிந்த்.. நா ஸ்ரீதர் இதுதாம்மா எங்க குடும்பம்" என்றவர் கலை கொடுத்த காபி குடித்துவிட்டு "உங்க பொண்ணை பார்க்கலாமா?" என்று கேட்க...


நிலானி வெளியே வந்தவள் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அருகிருந்த சேரில் நல்லபிள்ளை போல் உட்கார்ந்தாள்.


ஸ்ரீதரன், அவள் படிப்பு, வேலை பற்றி கேட்க, அனைத்திற்கும் சிரித்த முகமாய் பதில் சொல்லிக்கொண்டிருக்க, அரவிந்த் நிலாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.


ஸ்ரீதரன் அரவிந்த்திடம் நிலாவுடன் தனியாக பேசிவிட்டு அவர்கள் முடிவை சொல்லச் சொல்ல, நிலா அரவிந்த்துடன் மொட்டை மாடிக்கு சென்றாள்.


பத்து நிமிடம் கழித்து கீழே வந்த அரவிந்தின் முகத்தை வைத்து எதையும் சொல்ல முடியவில்லை.


அரவிந்த், "நிலாவை எனக்கு புடிச்சிருக்கு" என்று சொல்ல. அனைவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம். உடனே "ஆனா," என்று அரவிந்த் நிறுத்த... அவன் முகத்தையே ஒரு எதிர்பார்ப்போடு பார்த்திருந்தார் ராம்குமார்.


"அரவிந்த்... என்ன டா?" என்று ஸ்ரீதரன் கேட்க.


"இல்லப்பா.. நிலாவை எனக்கு புடிச்சிருக்கு. ஆனா, அவங்களை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதில்ல… அதான் ஒரு தடவ அவங்களை வெளிய எங்கயாவது மீட் பண்ணி பேசிட்டு, அப்புறம் என் முடிவை சொல்றேனே" என்க.


இருகுடும்பமும் அதற்கு சம்மதிக்க. நிலாவின் செல் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.


வந்தவர்களை வழி அனுப்பி வைக்க எழுந்த ராம்குமாரை நிலா முறைத்துக் கொண்டே நிற்க.


ராம்குமார், "சரிரி... இன்னைக்கு நமக்கு பூசை கன்பார்ம். என்ன செய்ய‌ காத்திருக்காளோ…? காலையில அவ அம்மாகிட்ட தப்பிச்சு, இப்ப மகள்கிட்ட மாட்டிக்கிட்டேன்.! ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா… கோவிந்தா…" என்று மனதில் புலம்பியவர். வந்தவர்களுடன் சென்று

அவர்களை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைய, எதிரே நின்ற இடுப்பில் கைவைத்து நின்ற மகளை பார்த்தவர்.


"அய்யோ! இவ என்ன பத்திரகாளி மாதிரி நிக்கிற? டென்ஷன் உச்சத்துல இருக்காப்போலயே. மாட்டின பயபுள்ள என்னை உரிச்சுடுவ... எஸ் ஆகிடுவோம்" என்று அவர் நழுவப்பார்க்க...


"யோவ் குமாரு.. இங்க வா நீ" என்ற நிலா குரலில் நின்ற ராம்குமார், "அப்பாடி மரியாதையாக தான் கூப்பிடுற. கோவம் கம்மிய தான் இருக்கு போல, அப்ப தைரியமா போலாம் என்று ஈயென்று இளித்துக்கொண்டே, "என்னடாம்மா..?? சாக்லேட், ஐஸ்கிரீம் ஏதும் வேணுமா செல்லம்" என்றவரை கொலைவெறியுன் பார்த்த நிலா, "உன்ன இப்ப நான் கல்யாணம் பண்ணிவைன்னு கேட்டானா?? இல்ல கேட்டான்னு கேக்குறேன். அந்த லூசு மாப்பிள்ளை, புடிச்சு இருக்கு. ஆனா, யோசிச்சி சொல்றேன்னு சொல்றான். என்ன பாத்த எப்டி தெரியுதாம் அவனுக்கு? இதுல தனிய வேற மீட் பண்ணனுமாம் அந்த மைனருக்கு… இதுக்குதான் இந்த கலை காலையில ஏழு மணிக்கே என்ன தலையில டம்ளர் போட்டு எழுப்புச்ச.?"


"ஏய்…? என்னடி கொழுப்ப..?? வாய் ரொம்பதான் நீளுது.. பேர் சொல்லி கூப்பிடுற.? என்னை என்ன உங்கப்பனை மாதிரி சுடு, சொரனை இல்லாத ஜென்மம்னு நெனைச்சிய..? பல்லை உடைச்சிடுவேன் பாத்துக்க!" என்றவரை ராம்குமார் தான் முட்டைக் கண்ணை விரித்து பார்க்க. கலை கழுத்தை திருப்பி அவரைப் பார்த்து ஒரு வெட்டு வெட்டிவிட்டு, "இப்போ என்ன? அந்த பையன் ஒருதடவ உன்னை பார்த்துப்பேசிட்டு தன் முடிவ சொல்றேன்னு தானே சொல்லுச்சு.. அதுல என்னடி தப்பிருக்கு.?"


"அய்யோ அம்மா… உனக்கு இதெல்லாம் புரியாது" என்று கத்தியவள். "சரிவுடு நானே அந்த பையன் கிட்ட பேசிக்கிறேன்."


"அதுக்கு ஏன்டி கத்ற.? போடி, போய் ஆபீஸ் கிளம்புற வழிய பாரு" என்று கலைவாணி நகர.

நிலா புடவையில் இருந்து ஜீன்ஸில் நுழைந்தவள். எதையோ யோசித்துக்கொண்டே தான் வண்டி சாவியை தேடிக்கொண்டிருந்தாள்.


"இவ மூஞ்சியே சரியில்லயே.. எதும் கோக்கு, மாக்கு பண்ண ப்ளான் போடுத..?? ஒன்னும் புரியலயே" என்று கலை குழம்ப. 


சந்தியா, 'ஆமா மம்மி, அங்க பாரு அவ மூஞ்சி சரியில்ல, மேல பேச போனவங்க உடனே கீழ வந்துட்டாங்க. கீழ வரும்போது அந்த மாப்ள முகமே சரியில்ல… இந்த எரும ஏதோ மந்திரிச்சு விட்டிருக்கும் போல? அந்த பையன் சரக்கடிச்ச குரங்கு மாதிரி திருதிருன்னு முழிச்சுக்கிட்டே இறங்கி வந்துது. சம்திங் ஹாப்பன் இன் மொட்டைமாடி மம்மி… இப்ப நா அங்க வந்தேன் நீ டெட் பாடி" என்று நிலாவின் குரல் கேட்ட., அய்யோ நா போறேன் ஓடி என்ற சந்தியா, "எஸ்கேப்" என்று கத்திகொண்டே ஒரே ஓட்டமாய் ஓடி விட்டாள்.


நிலா வண்டி சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.


இங்கு ஆபீஸ் வந்த நிலாவை அவள் தோழி தேவி, பெண்ணு பார்க்க வந்ததை வைத்து கிண்டல் செய்ய. நிலா பார்த்த பார்வையில் வாயின் ஜிப்பை இழுத்து மூடிக்கொண்டாள். பின் அமைதியாக "என்னடி? என்ன ஆச்சு.??" என்று கேட்க. நிலா நடந்ததை சொல்ல, "அய்யோ பாவம். ஆடு வலிய வந்து இவகிட்ட தனிய சிக்குதே" என்று நினைத்த தேவி, "பாவம் அந்த அரவிந்த்" என்று புலம்ப.. நிலா பார்த்த பார்வையில். ஓகே door lock என்றவள் நிலாவை அழைத்துக்கொண்டு அவர்கள் கேபின்க்கு சென்றாள்.