ஆழியின் ஆதவன் 1
ஆழி 1 கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிசைப் போல் ஒலித்த மழலையின் சிணுங்கல் ஒலியில் கண்விழித்தாள் ஆழினி. மலர்ந்த இதழ்களுடன், கண்களைக் கசக்கியபடியே மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து, குழந்தை படுத்திருந்த தொட்டில் அருகில் வந்த ஆழி, தூக்கத்தில் சிணுங்கும் அந்தக் குட்டி தேவதையின் பட்டுக் கன்னத்தை மெதுவாக வருடி, அப்படியே குழந்தையை தன் இரு கைகளில் அள்ளிக்கொள்ள, அவளின் ஸ்பரிசத்திலும், உடல் சூட்டிலும் தன்னைத் தூக்கியது யாரென்று உணர்ந்த குழந்தை சிணுங்களை நிறுத்தி விட்டு, தூக்கத்தில் சிரித்தபடி வழக்கம் போல் மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர, அந்த மழலை சிரிப்பில் மயங்கி மென்மையாகச் சிரித்தாள் ஆழினி. "வர வர உன் குறும்புக்கு அளவே இல்லாம போய்டிருக்கு குட்டிப் பாப்பா. தினமும் இப்படி அழுது என்னை எழுப்பி விட்டு, நான் வந்து உன்னை தூக்கின உடனே அழுகையை ஸ்டாப் பண்ணிட்டு, நீ மறுபடியும் தூங்கிடுற… இதெல்லாம் ரொம்ப வன்முறை பாப்பா, டூ மச்" என்று சிரித்தபடியே தூங்கும் குழந்த