அழகிய தமிழ் மகள் 25

 அழகி 25


ஆதித், யுக்தாவின் ஒவ்வொரு விடியலும் அவர்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லுமா என்று வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு வேவு பார்க்க, இவர்கள் இருவரும் எப்ப சான்ஸ் கிடைக்கும் ஒருவரை ஒருவர் பிறாண்டி வைக்கலாம் என்று, பாம்பை பார்த்த கீரி மாதிரி சுத்திக் கொண்டு இருந்தார்கள்.


"ஏன் பாட்டி ஊர்ல இல்லாத தகடுதத்தோம் செஞ்சு அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்ச இல்ல? இப்ப இதுங்க இரண்டும் இப்படித் தயிர்சாதம், மொளகாப்பொடி மாதிரி பேட் காம்பினேஷனாவே இருக்குதுங்களே… இதயெல்லாம் நீ கண்டுக்க மாட்டியா?” என்று ஜீவா, சிவகாமி காதைக் கடிக்க,


அவனைக் கேவலமாக ஒரு லுக் விட்ட பாட்டி, "டேய் நீ என்ன என்னன்னு நெனச்சே... நான் என்ன இங்க புருஷனையும் பொண்டாட்டியையும் பேட்சிங் செய்து வைக்கப்படும்னு போர்டா போட்டு வச்சிருக்கேன். இல்ல நான் ஆல் இன் ஆல் அழகுராஜாவா எல்லாத்துக்கும் ஐடியா கொடுக்க? இதெல்லாம் சொல்லிக் குடுத்தா வராது டா. தானா உள்ள இருந்து பொங்கி வரணும். அது ஆதிக்கு வந்துடுச்சு. உன் ஆசை தொங்கச்சிக்கு தான் செல் ஃபோன் சிக்னல் மாதிரி விட்டு விட்டு வருது…"


"விட்டு விட்டா? அவ மொகத்த பார்த்தா சிக்னல் வர்ற மாதிரியே தெரியலயே பாட்டி. மொத்தமா சிக்னல் ஜாம்மர் வச்சு ஊத்தி மூடிட்டு உக்காந்திருக்க மாதிரி இல்ல இருக்கு…" என்ற ஜீவா தலையில் கொட்டிய பாட்டி,


"டேய் நீயெல்லாம் எப்படிடா என் பேத்தி ஜானுவ கரெக்ட் பண்ண? எனக்குச் சந்தேகமாவே இருக்கு? ஒரு வேளை அவ கால்ல விழுந்து என்னைக் கட்டிக்கண்ணு கெஞ்சுனீயா என்ன?"


"ஹலோ பாட்டி என்ன குசும்பா? நான் எவ்ளோ பெரிய ரொமாண்டிக் ஹீரோன்னு எம் பொண்டாட்டிய கேட்டுப் பாருங்க… ஒரு ஒன் டெகா பைட் அளவு கதை கதையா சொல்லுவா… என்னப் போய்? என்ன இது சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு…" என்று காலரை தூக்கி விட


"அடச்சீ வாயமூடு… கண்ணு முன்னாடி இருக்கப் பொண்டாட்டிய கரெக்ட் பண்ணி ரொமான்ஸ் பண்ண துப்பில்ல. இதுல இவரு வெவ்வவெவ்வே வெவ்வவெவ்வே ன்னு லவ் பண்ணி கிழிச்சிட்டாராம். டேய் உன் தொங்கச்சி, அந்தப் பேய பத்தி உனக்குத் தெரியும் தான. அவளுக்கு மட்டும் ஆதி மேல கோவமோ, வெறுப்போ இருந்திருந்தா, இந்நேரம் வாடா வெளிய போய்ட்டு வரலாம்னு அவனை நைசா கூட்டிப் போய், வாராய் நீ வாராய்ன்னு சோலிய முடிச்சிருப்ப‌ டா. 


அவளுக்கு ஆதி மேல எந்த எண்ணமும் இல்லாட்டியும், அவன் மேல அவளுக்கு எந்தத் தப்பான எண்ணமும் கெடயாது. அதனால தான் அவளுக்கு விருப்பம் இல்லாம, அவன் தாலி கட்டியும் அவ சும்மா இருக்கா.‌ 


அவ சும்மா இருக்க இன்னொரு காரணம் உங்க எல்லாரையும் மனசுல நெனச்சு தான். முதல்ல அவளுக்கு ஆதி மேல கொலவெறி இருந்தது உண்மை தான். அது இப்பவும் இருக்கு. ஆனா அதை அவ வெளிப்படுத்தும் விதம் இருக்கே, அது தான் டா ஆதி அவ மனசுல கொஞ்சம் கொஞ்சமா நொழஞ்சிட்டு இருக்குறதுக்கு அறிகுறி. அவ அவனை நம்ம எல்லார் முன்னாடியும் திட்றா. முறைக்குறா. ஆனா, ஒரு நாளாச்சும் அவ ஆதியை மரியாதை இல்லாமயோ, இல்ல தப்பாவோ பேசி நீ பார்த்திருக்கியா டா?" என்று கேட்க ஜீவா இல்லை என்று தலையாட்டியவன்,


"நீ சொல்றது உண்மை தான் பாட்டி. அவ கல்யாணம் முடிஞ்ச இவ்ளோ நாள்ல அவ ஆதியை திட்டியும், ஏன் நல்லா மொத்து மொத்துன்னு மொத்தி கூட நான் பாத்துருக்கேன். ஆனா, அவ ஆதிய தப்பா பேசியோ, மரியாதை இல்லாம நடந்தோ நான் பார்த்ததே இல்ல பாட்டி. ஆதி அப்பா, அம்மாகிட்ட கூட ரொம்பப் பிரியமா, மரியாதையா தான் நடந்துக்கிட்டா பாட்டி…"


"அது தான் டா அவ. அவ வளர்ப்பு அப்படி. நல்லது எது கெட்டது எதுன்னு புரிஞ்சு நடக்குற பக்குவம் அவகிட்ட இருக்கு. அவ மனசு பூ மாதிரி டா. ஆதி கூட அவ சண்ட போடும் போது உனக்கு அவங்க சண்டை தெரியுது. எனக்கு அவங்களுக்குள்ள இருக்கச் சின்னப் புள்ளைங்க ஒருத்தரை ஒருத்தர் சீண்டி வெளயாடுற மாதிரி தான் தெரியுது. அந்த டைம்ல நம்ம பழைய துறு துறு சமிய திரும்பப் பாக்க முடியுது டா. அவ ஆதிய புருஷனா ஏத்துக்கிட்டான்னு அவன் கூடச் சண்ட போட்டு நிரூபிக்கிறா டா உன் தங்கச்சி. உரிமை இல்லாத, உறவு இல்லாத இடத்துல சண்ட வருமா சொல்லு?” என்ற பாட்டி கேள்விக்கு ஜீவா சிரித்துக் கொண்டே, "இல்லை" என்று சொல்ல,


"அப்ப போடா… கூடிய சீக்கிரம் உன் தங்கச்சி அவ புருஷனோட சந்தோஷமா அவ வாழ்க்கையைச் சிறப்பா வாழ்வான்ற நம்பிக்கையோட போ…"


அன்று காலையிலேயே, சிவகாமியை வெறுப்பேத்த யுக்தா வேண்டுமென்றே டைனிங் டேபிளில் முத்து தாத்தாவை விழுந்து விழுந்து கவனிக்க, "அடியேய் நீ ஏன் டி எம் புருஷனுக்குச் சாப்பாடு போடுற. தள்ளு டி அந்தாண்ட…" என்று அவளை இழுக்க,


பாட்டி கையை உதறிய யுக்தா, "இங்க பாரு கெழவி நீ தேவை இல்லாம காலங்காத்தால என் கிட்ட வம்புக்கு வர… பேசாம போய்டு…" என்றவள்,


"முத்து டார்லிங் உனக்கு இன்னும் ஒரு நெய் தோசை வைக்கவா?" என்று கேட்க,


"நீ குடுத்தா நான் எதையும் திம்பேன் டா டார்லிங்…" என்று முத்து தாத்தா சொல்ல,


"எது நெய் தோசையா? அப்படியே நெஞ்சுல ஏறி மிதிச்சேன்னா தெரியும் சங்கதி?" என்று முந்தானையை இடுப்பில் சொருகி பாட்டி சண்டைக்குத் தயாராகக், குடும்பம் மொத்தமும் கையில் தட்டோடு இவர்கள் சண்டை ஆர்வமாக வேடிக்கை பார்த்தது.


பாட்டியும், பேத்தியும் களத்தில் இறங்கி ஒரு கலக்கு கலக்க, "கமான் டா சமி டார்லிங்" என்று முத்து தாத்தா குறுக்க வர, சிவகாமி முறைத்த முறையில் வாயை மூடிக்கொண்டார்.


சண்டை பரபரப்பாக நடக்க யுக்தா சத்தம் போட்டு கத்தி பாட்டியிடம் வாய் பேசிக் கொண்டிருந்தவள், கண்ணில் ஆதித் விழ பக்கென வாயை மூடிக்கொண்டாள்.


இவ்வளவு நேரம் வாய் ஓயாமல் கத்திய‌ யுக்தா சட்டென வாய் மூடிக்கொண்டதை பார்த்து வீட்டில் அனைவரும், "என்ன ஆதி வந்ததும் டப்புன்னு வாய் மூடிக்கிச்சு… சம்திங் ராங்!" என்று ஆதியை பார்க்க, அவன் குறும்பாகக் கண்ணடித்தவன்,


இனிமே அப்படித் தான் என்று கட்டை விரலை உயர்த்திக் காட்ட, "ம்ம் நீ நடத்துப்பா நடத்து…" என்று அனைவரும் அமைதியாக,


ஆதித் குறும்பாகச் சிரித்தபடியே டைனிங் டேபிள் அருகில் வந்தவன் "என்ன திமிரழகி? நீ கத்துற சத்தம் நம்ம ரூம் வரை கேக்குது. காலையிலயே மேடம்க்குக் கிஸ் வாங்க ஆச வந்திடுச்சோ?" என்று கண்ணடித்தவன் சிரித்தபடி சாப்பிட உட்கார,


யுக்தா அவனைத் தீயாக முறைத்தவள், அங்கிருந்து நகர, அவள் கையைப் பிடித்து நிறுத்திய பாட்டி, "ஏன்டி எம் புருஷனுக்கு விழுந்து விழுந்து சோறு போட்ட இல்ல. இப்ப உன் புருஷன் வந்து உக்காந்து இருக்கான். நீ பாட்டுக்கு போற. அவனுக்கு டிபன் வை டி." என்ற பாட்டியை டன் கணக்கில் முறைத்த யுக்தா, இட்லியை அணுகுண்டு போல் ஆதித் தட்டில் தூக்கிப் போட,


"அடியேய் சாப்பாடு போடும் போது மூஞ்ச கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைடி. அப்ப தான் உன் புருஷனுக்குத் திங்குறது உடம்புல ஒட்டும்…"


"அதெல்லாம் எனக்குப் பரிமாறும் போது என் சமி டார்லிங் சிரிச்சுட்டு தான் இருந்துது. நீ வந்தனால தான்." என்ற முத்து தாத்தா மனைவி முறைத்தும் கப்சிப் தான்.


"தாத்தா இது உங்களுக்கே ஓவரா தெரியல. எம் பொண்டாட்டி உங்களுக்கு டார்லிங்கா? ஆனாலும், உங்களுக்குக் குசும்பு ஜாஸ்தி தான். உங்க வயசுக்கு இது தேவையா?" எனும் போதே ஆதியை நிறுத்திய முத்து,


"டேய் டேய் இன்னொரு முறை என் வயசு பத்தி பேசுன அப்பறம் பாரு. இப்ப கூட நான் உம்னு சொன்ன என் சமி டார்லிங் எம் பின்னாடியே வந்துடுவா வேணும்னா பாக்குறீயா?" என்றவர்,


"சமி டார்லிங் நா சொன்னது சரிதான? நீ இந்தத் தாத்தா மேல் தான நெறய லவ் வச்சிருக்க?" என்று கேட்க, யுக்தா ஆதியை கடுப்பாக்க,


"இது என்ன கேள்வி டார்லிங்? நீங்க தான என்னோட ஃபர்ஸ்ட் லவ் நீங்க கூப்ட்டா நான் நரகத்துக்குக் கூட ஜாலியா வருவேன்." என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள, ஆதித் வயிறு குமுட்டி அடுப்புப்போல் எரிந்தது.


"தாத்தா மீ பாவம். ஒன்லி ஒன் பொண்டாட்டி. ஐ ஆம் யூவர் பேரன். ப்ளீஸ் என் வாழ்க்கையில கும்மி அடிச்சிட்டு போய்டாதீங்க…" என்று கெஞ்ச,


"சரி சரி அழாத…பொழச்சு போ…" என்று முத்து தாத்தா சொல்ல,


"தெய்வமே நீங்க நல்லா இருக்கணும்!" என்று ஆதி தாத்தா கையைப் பிடித்துக் கண்ணில் ஒத்திக் கொள்ள, யுக்தா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,


"பாட்டி உன் பேரனுக்கு ஸ்பெஷலா ஒரு ஐட்டம் செஞ்சுருக்கேன். சாப்ட்டு பார்க்க சொல்லு…" என்றவள், செக்க செவேல் என்று எதையோ ஆதி தட்டில் வைக்க அனைவரும் ஆதியை பாவமாகப் பார்க்க,


யுக்தா வாய் மூடியபடி நாக்கை கன்னத்தில் உரசி, புருவம் உயர்த்தி எப்படி என்று திமிராகப் பார்க்க, ஆதி தட்டில் அவள் வைத்த அந்தச் சிவப்பு ஆப்பை கையில் எடுத்துக் கொண்டு எழுந்தவன், "இது எம் பொண்டாட்டி பண்ண ஸ்பெஷல் டிஷ். இதை முதல்ல அவ தான் டேஸ்ட் பண்ணும். சோ.." என்றவன் அதை அப்படியே யுக்தா வாயில் வைத்து அடைத்து விட,


அதுவரை சிரிப்போடு அவனைக் கிண்டலாகப் பார்த்துக் கொண்டிருந்த யுக்தா, இப்போது காரம் தங்காமல் குதிக்க ஆரம்பித்தவள் ஆதியை முறைத்துக் கொண்டே, தன் ரூமிற்கு ஓடினாள்.


"டேய் பேரா எம் பேத்தி சிரிச்சிட்டே போறா. நீ போய் அவளைக் கவனி. எனக்கு உங்க தாத்தன் கிட்ட முக்கியமான சோலி இருக்கு. அதை முடிச்சிட்டு வரேன்."


"பாட்டி தாத்தாவை கொன்னுடாத பாட்டி! பாவம் மனுஷன் இன்னும் கொள்ளு பேரன் பேத்திய பாக்க வேண்டி இருக்கு…" என்க அனைவரும் "ஆல் தி பெஸ்ட் தாத்தா" என்று நகர, பாவம் முத்து அவரை நாளை ஹாஸ்பிடலில் சந்திப்போம்.


யுக்தா காரம் தங்காமல் தண்ணீரை, 'மடக் மடக்' என்று குடிப்பதை பார்த்து ஆதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட, "சாரி டி நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி செஞ்சேன். சாரி டி ரொம்பக் காரமா இருக்கா? இந்தா இந்த ஐஸ்கிரீமை சாப்புடு…" என்று ஐஸ்கிரீமை அவளிடம் நீட்ட,


அதைத் தட்டி விட்ட யுக்தா, "நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் போடா. பண்றத பண்ணிட்டு இப்ப வந்து ஐஸ் வைக்கிறான். மூஞ்ச பாரு…" என்று தன் கைகளை ஆட்டி நாக்குக்குக் காத்து வீசிக் கொண்டிருக்க,


ஆதி இழுத்து மூச்சு விட்டவன், "மறுபடியும் சாரி டி" என்றவன், அவளை இழுத்து தன் மார்போடு அணைத்து, அவள் வெந்த இதழுக்கு தன் இதழ்களால் மருந்து போட, அவள் அவனைப் பிடித்து விலக்க முயன்று முடியாமல் அவனுள் அடங்கி விட்டாள்.


யுக்தா ஆதித் இடையில் நெருக்கம் இருந்ததா என்று கேட்டால் பதில் 'இல்லை' தான். ஆனால், இருவருக்கும் இடையே விலகலும் இல்லை தான். தாமரை இலை தண்ணீர் போல் இருவரும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்தனர்.


நாட்கள் அதன் போக்கில் நகர, யார் ஃபோனோ அடிக்கும் ஓசை கேட்டு யுக்தா அந்த ஃபோனை எடுத்து பார்க்க, அது நிஷாவின் மொபைல்.


நிஷா மற்றும் யுக்தாவின் பள்ளித் தோழி அனு தான் கால் செய்திருந்தாள்.


யுக்தா ஃபோனை எடுக்க, அந்தப் பக்கம் "நிஷா… நிஷா…" என்று அனு அழும் சத்தம் தான் கேட்டது.


"ஏய் அனு என்ன டி ஆச்சு? நான் யுக்தா பேசுறேன். நிஷா ஃபோன் வீட்ல இருக்கு. என்னடி ஆச்சு? நீ ஏன் அழுகுற? எதும் ப்ராப்ளமா டி?"


"யுகி… யுகி…" என்று அனு மேலும் அழுக,


"ஏய் வந்தேன்னு வை தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன். மரியாதயா விஷயத்த சொல்லிட்டு அப்பறம் அழுது தொல…" என்று இவள் கத்த,


"யுகி என்னோட தங்கச்சிய உனக்குத் தெரியும் இல்ல?"


"ஆமா தெரியும். அவளுக்கு என்ன?" 


"அவளை ஒரு பையன் ரொம்ப டார்ச்சர் பண்றான் யுகி. அவ பயத்துல கொஞ்ச நாளா காலேஜுக்கு கூடப் போறதில்ல… போலிஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணா அந்தப் பையன் மந்திரியோட‌ பையன்னு கேஸ் எடுக்க மாட்றாங்க. நேத்து அந்தப் பையன் இவகிட்ட மிஸ் பிகேவ் பண்ண டிரை பண்ணி இருக்கான். கடவுள் புண்ணியம் இவ எப்படியோ தப்பிச்சு வந்துட்டா. வந்தவ…" என்று கதறி அழுத அனு,


"அவனுக்குப் பயந்து தூக்க மாத்திர சாப்டா யுகி.‌ எனக்கு என்ன பண்றதுன்னே புரியல… அதான் நிஷாக்கு ஃபோன் பண்ணேன்."


யுக்தா அனு சொன்னதைக் கேட்டுக் கைகள் இறுக, ஃபோனை அழுத்தி பிடித்தவள், "அனு நீ அந்தப் பொறுக்கியோட டீடெய்ஸ் எனக்கு அனுப்பு. இனி அந்த நாயோட தொல்ல உன் தங்கச்சிக்கு இருக்காதுன்னு சொல்லு. அப்படியே அவ கண்ணு முழிச்சதும் என் சார்புல அவ கன்னத்துல நல்லா நாலு அறை விடு. எதிர்த்து போராட தைரியம் இல்லாம சாகுறாலாம். இதுக்கு அவனைக் கத்தி எடுத்து குத்திட்டு செல்ஃப் டிபென்ஸ்னு சொல்றதை விட்டுட்டு, முட்டாள்தனமா உயிரை விடப் போறாலாம். இந்தப் பிரச்சனைய முடிச்சிட்டு வந்து அவளைக் கவனிக்குறேன்…" என்றவள் ஃபோனை வைத்துவிட்டு வழக்கம் போல் வினய் புல்லட் சாவியைச் சுட்டுக் கொண்டு பறந்தாள்.