அழகிய தமிழ் மகள் 26
அழகி 26
யுக்தா அமைதியாகத் தட்டில் இருந்த பூரியை குருமாவில் மிதக்க விட்டு அப்படியே வாயில் கவுத்துக் கொண்டிருக்க, வேகமாய் வீட்டிற்குள் நுழைந்த பரதன், இடுப்பில் கை வைத்து யுக்தாவை முறைத்தபடி நின்றார்.
"கயல் அண்ணி உங்கப்பா செம்ம பசியில வந்திருக்காரு போல. என் பூரியயே குறுகுறுன்னு பாக்குறாரு? பாவம், மீதி இருந்தா அவருக்கு ரெண்டு பூரி குடுங்க. பிச்சி போட்டுக்கட்டும் பாவம்!" என்றவள் தன் தட்டிலேயே கவனமாக இருந்தாள்.
"நீ அடங்கவே மாட்டியா டைகர்? சென்னை வந்து இன்னும் முழுசா ஆறு மாசம் ஆகல… அதுக்குள்ள உன் வேலைய ஆரம்பிச்சிட்ட இல்ல. நீ என்ன செய்றன்னு புரிஞ்சு தான் செய்றியா? இப்ப நீ போலிஸ் இல்ல, அது உனக்கு ஞாபகம் இருக்க இல்லையா?" என்று அர்ச்சனை செய்து கொண்டிருக்க,
ஆதி யுக்தாவையும், பரதனையும் மாறி மாறி பார்த்தவன் எதுவும் பேசாமல், தன் தட்டுக்கும் வாய்க்கும் பாலம் போட்டுக் கொண்டு இருந்தான்.
"என்ன ஆச்சு மாமா? எதுக்கு இப்படிக் காலங்காத்தால அவளுக்கு அர்ச்சனை பண்ணி தீபாராதனை காட்டிட்டு இருக்கீங்க?" என்ற வெற்றியை முறைத்த பரதன்,
"நீ எல்லாம் என்ன ஐ.ஏ.எஸ். ஊர்ல நடக்குறது தான் தெரியல சரி, வீட்ல இந்தச் சில்வண்டு பண்றது கூடவா உன் கண்ணுக்கு தெரியாம போச்சு. உன்னை எல்லாம் நம்பி எம் பொண்ணைக் குடுத்தேனே என்ன சொல்லனும்…" என்று தலையில் அடித்துக் கொண்டார்.
"விடுங்கப்பா அந்தத் துயரமான சம்பவத்தை எதுக்குப்பா மறுபடி நினைவு படுத்துறீங்க?" என்று கயல் அவள் பங்கிற்கு ஒரு பாலை போட்டாள்.
"ஏது? ஏன்டி உங்கப்பனை ஒரு கேள்வி கேட்டது குத்தமா டி? அதுக்கு இந்த வாங்கு வாங்குறாரு இந்த மனுஷன். நீ அதுக்குப் பின் பாட்டு வேற பாடுற… ம்ம் இதுக்கு மேல வாயத் தொறந்தா அடுத்த அர்ச்சனை நமக்குத் தான். இந்தப் பிசாசு ஏதோ பெருசா சம்பவம் செஞ்சிருக்கும் போல. பேசாம எப்பவும் போல ஆடியன்ஸாவே இருந்திடுவோம். டைகரும், ரிங் மாஸ்டரும் அடிச்சிகிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்." என்றவன் வாயின் கதவை இழுத்து மூடிக்கொண்டான்.
"இப்ப எதுக்குப் பரதா அவளைத் திட்டுட்டு இருக்க… புதுசா என்ன பிராடு வேலை செஞ்சா இவ?" என்ற பாட்டியை அவஸ்தையாய் பார்த்தார் பரதன்.
"இரண்டு நாள் முன்னாடி சென்ட்ரல் மினிஸ்டர் ஒருத்தரோட பையனை தூக்கி இருக்காம்மா இவ… அதும் அவங்கப்பா கட்சி மீட்டீங்ல வச்சு. ரெண்டு நாள் அந்த மினிஸ்டர் ஊர் முழுக்கப் பையனை தேடி, எங்க தலையை உருட்டி ரெண்டு நாளா சோறு தண்ணி இல்லாம நாங்க நாய் மாதிரி அலஞ்சு திரிஞ்சோம். நேத்து நைட் தான் அந்தப் பையன் எங்களுக்குக் கெடச்சான். அதுவும் எப்படி? எந்த நிலைமைல தெரியுமா?” என்றவர் யுக்தாவை முறைத்தார்.
"ஏய் என்னடி இதெல்லாம்? மாமா சொல்றது உண்மையா?" என்று முறைத்த வினய்யை அலட்சியமாகப் பார்த்தாள் யுக்தா.
"நம்ம கமிஷனர் எப்படா அண்ணா பொய் சொல்லி இருக்காரு? அவர் சொல்றது உண்மைதான். நான் தான் அவனைத் தூக்குனேன் இப்ப என்னாங்குற?" என்று தோள்களைக் குலுக்கினாள்.
நிஷா, ஜானுவை ஓரக்கண்ணால் பார்த்து, "ஹிஸ்ட்ரி ரிப்பீட்ஸ்" என்று ஹஸ்கி வாய்ஸ்சில் சொல்ல, வினய் பார்த்ததும் தலையைக் குனிந்துக் கொண்டனர்.
"கடத்துனது கூடப் பரவாயில்ல சிவகாமிம்மா. அந்தப் பையனை இவ என்ன செஞ்ச தெரியுமா? அந்தப் பையனால யார் மொகத்தையும் நிமிர்ந்து பாக்க கூட முடியல. அந்த மாதிரி ஒரு வேலைய பண்ணி வச்சிருக்கா…"
"ஆமா நான் தான் செஞ்சேன். அனு தங்கச்சிய அவ விருப்பம் இல்லாம தொடும் போது அவளுக்கு எப்படி இருந்திருக்கும். அது அந்த நாய்க்குப் புரிய வேணாம். பொம்பளை புள்ளைங்கன்னா அவ்வளவு ஈசியா போச்சா இவனுங்களுக்கு? பரதேசி பன்னாடைங்க.உடம்பு சுகத்துக்குத் தான அந்த நாய் அலஞ்சுது. அது பொண்ணா இருந்தா என்ன? ஆம்பளயா இருந்தா என்ன? அவனுக்குத் தேவை ஒரு உடம்பு தான?
அதான் அந்த நாயை அந்த மாதிரி பசங்ககிட்ட விட்டு நல்லா கவனிக்கச் சொன்னேன். மகனே இனி ஜென்மத்துக்கும் அவன் எந்தப் பொண்ணையுமில்ல, அவன் அப்பன், ஆத்தா முகத்தைக் கூட நிமிர்ந்து பாக்க மாட்டான் ராஸ்கல். இனிமே வாழ்க்கை முழுக்கத் தான் ஒரு ஆம்பளைன்ற திமிர்ல எந்தப் பொண்ணையும் தொட தைரியம் அவனுக்கு வராது!" என்றவள் கையை முறுக்க, வீட்டில் அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.
"சபாஷ் டி ராங்கி! சரியான வேலை தான் செஞ்சிருக்க. இவனுங்களை இப்படித் தான் செய்யனும்…" என்று சிவகாமி யுக்தாவை பாராட்ட,
"அய்யோ என்ன அத்த நீங்க? அவ என்ன காரியம் செஞ்சிட்டு வந்திருக்கா? அவளை திட்டாம, நீங்க இப்படி சொல்றீங்க?" என்று சாருமதி புலம்ப,
"எதுக்கு டி திட்டனும்? தப்பு செஞ்ச திட்டலாம். அவ எல்லாத்தையும் சரியா தான செஞ்சிருக்கா அப்பறம் என்ன?"
"என்னம்மா நீங்களே இப்டி சொன்ன எப்படி? இவ இப்ப போலிஸ் இல்லம்மா. அந்தப் பையனோட அப்பாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும்? இவளுக்குத் தப்பை தட்டி கேக்கனும்னா, மறுபடியும் போலிஸ்ல ஜாய்ன் பண்ணிட்டு, இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய வேண்டியது தான? இப்ப அந்த மந்திரி எதாச்சும் பண்ணா நம்ம என்ன பண்றுது?" என்று பரதன் கேட்க,
"ஒரு டாஷ்சும் புடுங்க முடியாது. நேத்து நைட் நான் தான் அந்த மினிஸ்டருக்கு ஃபோன் பண்ணி, அந்த நாயை நான் எங்க தூக்கிப் போட்டு வந்தேன்னு சொன்னேன்." என்றவளை பரதன் திகைப்போடு பார்த்தார்.
அலட்சியமாகச் சிரித்த யுக்தா, "என்ன கமிஷ்னர்? அந்த மினிஸ்டர் இத உங்ககிட்ட சொல்லல இல்ல. சொல்ல மாட்டான். ஏன்னா அந்த ஆள் குடுமி இந்த யுக்தா கையில இருக்கு, மூணு வருஷம் முந்தி ஒரு கேஸ்ல அந்த ஆள் என்கிட்ட வசமாகச் சிக்குனான். ஆனா, அப்ப இருந்த சிட்டிவேஷன்ல அவனை அரஸ்ட் பண்ண முடியாம போச்சு. இன்னும் அந்த எவிடென்ஸ் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு. அது அந்த மந்திரிக்கும் தெரியும். சோ என்னை இல்ல, என் நெழல கூடத் தொட மாட்டான். என்னைத் தொட்டா, அடுத்த நிமிஷம் அவன் பதவிக்கு ஊஊ தான். அப்பறம் இதைச் சாக்கா வச்சு, நீங்க உங்க காரியத்தைச் சாதிக்கப் பாக்காதீங்க சரியா? உங்க இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது. தப்பை கண்டிக்க, இந்தச் சம்யுக்தாக்கு எந்த யூனிபார்மும் தேவையில்ல…" என்று திமிராகச் சொன்னவள் எழுந்து சென்றாள்.
"சரி அந்த மந்திரி ஒன்னும் செய்யமாட்டான். ஆனா, அந்தப் பையனை சேர்ந்த வேற யாராவது எதாவது செஞ்சா?" என்று கேட்க பரதனை திரும்பி பார்த்தவள், அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதித்தை பார்த்து,
"இதுக்குப் பதிலை உங்க அருமை புள்ளை ஆதித் கிட்ட கேளுங்க…" என்றவள், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு போய் விட,
"திருடி கண்டுபுடிச்சிட்டாளே…" என்ற ஆதித் தன்னவள் திறமையை நினைத்துக் கர்வம் கொண்டவன், சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர அங்கு என்ன நடக்கிறதென்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
பரதனோ, "இதுங்களை வச்சிட்டு சப்பா! முடியல டா சாமி. கயல் ரெண்டு பூரியை வைம்மா. வந்ததுக்கு அதையாது தின்னுட்டு போறேன்." என்று சளித்துக் கொண்டார்.
யுக்தா மாடியில் நின்று தன் ஃபோனை நோண்டிக் கொண்டிருக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள், ஆதித் ஒரு மாதிரி கண்ணைச் சுருக்கி அவளைப் பார்க்க,
"என்ன? எதுக்கு இங்க வந்து இப்படி குறுகுறுன்னு பாக்குற?"
"அந்த நாய் செஞ்சது தப்பு தான். ஆனா, அதுக்கு நீ குடுத்த பாரு ஒரு பனிஷ்மென்ட்! நெனச்சு கூடப் பாக்க முடியலடி! ஏன் டி?” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க,
"அவனை அதோட விட்டேனேன்னு சந்தோஷப்படு. அந்த நாய் தொடும் போது அந்தப் பொண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? பிடிக்காத ஒருத்தன் அத்து மீறி தொட வரும் போது ஒரு பொண்ணுக்கு எவ்ளோ அருவெறுப்பா இருக்கும் தெரியுமா? அந்த அருவெறுப்பை, அந்த நாய் உணரனுமில்ல... அதான் அப்படிச் செஞ்சேன்." என்று பல்லைக் கடித்தாள்.
"யுகி…" என்று வந்த ஆதித் குரலில் ஏதோ ஒருவித கலக்கம் தெரிய திரும்பி அவன் முகம் பார்த்த யுக்தாவிற்கு, ஒரு தவிப்போடு நின்ற அவன் முகம் உள்ளுக்குள் ஏதோ செய்தது. அவன் தவித்த முகத்தைப் பார்க்கவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
"யுகி நீயும் இப்ப வரை என்னைப் புடிக்கலன்னு தான் சொல்லிட்டு இருக்க. அப்ப நான் உன்னைக் கட்டிப்புடிக்கும் போது, கிஸ் பண்ணும் போது நீயும்… உனக்கும் அரு… அருவெறுப்பா… தான் ஃபீல் பண்றீயா?" என்றவன் குரலில் அத்தனை கலக்கம்.
எங்கு அவள் ஆமாம் என்று சொல்லிவிடுவளோ என்று அவன் நெஞ்சம் எல்லாம் தீயாய்த் தகித்தது. அவன் கேட்ட கேள்வியில் விழி விரித்து அவனைப் பார்த்த யுக்தா திகைத்து அவனை இமைக்காது பார்த்தவள் அனிச்சை செயலாக இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட, அப்போது தான் ஆதிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
"தேங்க்ஸ் டி! ரொம்பத் தேங்க்ஸ்!" என்றவன், அவளைச் சட்டென இறுக்கி அணைத்து விலக்கி, "தேங்க்ஸ் டி பொண்டாட்டி!" என்று கத்திக் கொண்டே கீழே செல்ல. யுக்தா அப்படியே உறைந்து நின்றாள்.
ஆதித் கேட்ட கேள்வி அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, ‘நானும் தான் ஆதித்த புடிக்கலன்னு சொல்றேன். ஆனா, அவன் என்னைத் தொடும் போதும், கிஸ் பண்ணும் போதும், எனக்குக் கோவம் தான் வருதே தவிர, அருவெறுப்பு வந்ததில்லயே? ஏன்?’ என்று அவளை அவளே கேள்வி கேட்க, அவள் கைகள் அவளையும் அறியாமல் அவள் நெஞ்சில் ஒட்டி உறவாடிய தாலி கொடியை தொட, அவள் கேட்ட கேள்விக்கான பதில் அவளுக்குக் கிடைத்ததோ என்னவோ?
மாடியில் இருந்து இறங்கி வந்த யுக்தா, ஹாலில் ப்ரணவ்வுடன் கட்டிப் புரண்டு விளையாடிக் கொண்டிருந்த ஆதித்தை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.
"ஆதி நல்லவன் டி. அவனுக்கு உன்னை எவ்ளோ புடிக்குமோ, அதே அளவு ப்ரணவ் குட்டியையும் புடிக்கும். ஒரு வகையில ஆதி உன்னைக் கட்டாயக் கல்யாணம் கட்டிக்க ப்ரணவ்வும் ஒரு காரணம் தெரியுமா சமி?" என்ற பாட்டியை யுக்தா கேள்வியாகப் பார்க்க,
"ஆமா சமி… உன்னைக் கட்டிக்கிட்டா ப்ரணவ் எப்பவும் அவன் கூடவே இருப்பான்னு ஆதி ரொம்ப ஆசப்பட்டான். ஆனா நீதான் ஃபாரின் போகப் பார்த்த... நீ ஃபாரின் போய்ட்டா ப்ரணவ்வை பிரிய வேண்டி வரும்னு தான், ஆதி அன்னைக்குச் சட்டுன்னு உனக்குத் தாலி கட்டிட்டான். இல்லாட்டி நீ சம்மதம் சொல்ற வரை வெய்ட் பண்றேன்னு தான் ஆதி சொல்லியிருந்தான். அவன் நல்லவன் டி புரிஞ்சுக்க…" என்றவரை அவள் முறைப்பாள் என்று சிவகாமி பாட்டி எதிர்பார்க்க, அவள் எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்றது பாட்டிக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.
காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த சிவகாமி வந்தவர்களைப் பார்த்து சிலையாகி நின்றுவிட, "யாரு பாட்டி வந்திருக்காங்க?" என்று கேட்டபடி வாசலை பார்த்த யுக்தா, அங்கு நின்றிருந்த உதய்யின் தாய், தந்தையைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தவள், தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "வாங்க மாமா.." என்று தொடங்கியவள், "வாங்க சார், உள்ள வாங்க…" என்று அவர்களை அழைத்து உட்கார வைத்தாள்.
வீட்டின் பெரியவர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்று கையைப் பிசைந்து கொண்டிருக்க, உதய்யின் தந்தை பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றனர்.
"எங்களுக்கு இப்ப யாருமே இல்ல யுக்தா, ப்ரணவ்வை எங்க கிட்ட கொடுத்துடும்மா. எங்க பேரனை நாங்களே வளர்த்துக்குறோம். சட்டபடி அவனைக் கேக்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லன்னு எங்களுக்கு நல்லா தெரியும். இருந்தாலும்…" என்று இழுத்தவர், யுக்தா கழுத்தில் இருந்த தாலிக்கயிறை பார்த்து, "உனக்குத் தான் இப்ப கல்யாணம் ஆகிடுச்சே… இனி நீ எப்படி அவனை? என்ன இருந்தாலும் உன்னோட ஹஸ்பெண்ட்க்கு ப்ரணவ் யாரோ தான..." என்று தொடங்க,
"யுக்தா ஹஸ்பெண்ட் ப்ரணவ்வோட அப்பா…" என்று உறுதியான குரல் வந்த திசையில் ப்ரணவ்வை முதுகில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தான் ஆதித்.
யுக்தா அருகில் நெருங்கி உட்கார்ந்த ஆதி, ப்ரணவ்வை தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ப்ரணவ்வை ஒரு கையால் அணைத்துக் கொண்டவன், இன்னொரு கையை யுக்தா தோளில் போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தபடி பேசினான்.
"உங்களுக்கு யாரும் இல்ல தான், இவன் உங்க பேரன் தான்.இது ரெண்டையும் நா மறுக்கல, இவன் கூட நீங்க பேசலாம், பழகலாம், எப்ப வேணும்னாலும் இங்க வந்து இவனைப் பாக்கலாம். ஏன்? ஒரு இரண்டு நாள் உங்க வீட்டுக்கு கூடக் கூட்டிப் போய் வச்சிக்கோங்க... பட்…" என்று அழுத்தி சொன்னவன்,
"ப்ரணவ் எங்க பையன் ப்ரணவ் சன் ஆஃப் சம்யுக்தா அண்ட் ஆதித்தன். அதை மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சிக்கோங்க!" என்று அழுத்தமாகச் சொல்ல, ப்ரண்வ்வை பார்க்க அனுமதி கிடைத்தே போதும் என்று உதய்யின் தாய், தந்தை நன்றி சொல்ல, யுக்தா ஆதித்தை ஒரு கர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.