அழகிய தமிழ் மகள் 23

 அழகி 23


அந்தப் பெரிய வீடு புயல் அடித்து ஓய்ந்தது போல் அமைதியாக இருந்தது. சற்று முன் தான் யுக்தா ருத்ர தாண்டவம் ஆடி சுனாமி வந்தது போல் வீட்டை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டு தன் அறைக்குச் சென்று, கதவை அடைத்துச் சாத்திய சத்தம் கீழிருந்த அனைவர் காதையும் கிழித்தது.


நடந்ததைக் கிரகிக்க அவளுக்கு இப்போது தனிமையும், யோசிக்க நேரமும் தேவை என்பதால் யாரும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.


அந்தப் பெரிய ஹாலில் குடும்பம் மொத்தமும் கூடி ஆதித்தை குறுக்கு விசாரணை செய்யக் காத்திருந்தது. என்ன தான் ஆதித் நல்லவனாக, யுக்தாவிற்குப் பொருத்தமானவனாக இருந்தாலும், யுக்தாவின் விருப்பம் இல்லாமல் ஆதி அவளுக்குத் தாலி கட்டியது அங்கு யாருக்கும் பிடிக்கவில்லை, பாட்டியை தவிர.


குறிப்பாக வினய்க்கு ஆதிமேல் கொலை வெறியே வந்தது. அவன் செல்ல தங்கையின் விருப்பத்தைக் கேட்காமல் ஆதித் செய்த காரியம் வினய்யைக் கோபப்படுத்த, ஆதித்தை அடிக்கும் அளவிற்குப் போய்விட்டான்.‌


பாட்டி குறுக்கே புகுந்து வினய்யை தடுத்து இழுத்து பிடிக்க, வினய் கோவம் மொத்தமும் பாட்டி மேல் திரும்பியது.


"இதெல்லாம் உன்னால தான் கெழவி நடந்துச்சு. சாம் அப்பவே சொன்னா, நீ ஏதோ ப்ளான் பண்ற, ப்ளான் பண்றன்னு... நான் தான் நீ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுக்கத் தான் ஏதோ பண்றேன்னு சும்மா அசால்ட்டா இருந்துட்டேன். நீ என்னடான்னா இப்படி ஒரு காரியத்த செஞ்சிருக்கியே கெழவி? வீட்டுக்கு பெரிய மனுஷி தானா நீ? அப்ப நீ என்ன செஞ்சிருக்கணும்? 


ஒழுங்கா அவகிட்ட போய் ஆதி பத்தி சொல்லி, அவளுக்குப் புரிய வச்சு அவள கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருக்கணும். அத விட்டு இப்படிக் கட்டாயத் தாலி கட்ற ப்ளான் போட்டிருக்கியே, உன்ன என்ன செஞ்சா தகும்? அப்ப உனக்கு உண்மையாவே சாம் மேல பாசம் இல்ல, அவ உணர்ச்சிகளைப் பத்தி உனக்குக் கவலையில்ல அப்படி தான?" என்று கத்திய வினய் அடுத்த நிமிடம், வலியில் "அம்மா" என்று அலறியபடி பாட்டி அடித்ததில் சிவந்திருந்த கன்னத்தைத் தடவி கொண்டிருந்தான்.


பாட்டி தீயாகப் பேரனை முறைத்தவர் "யார பாத்து என்ன வார்த்த டா சொன்ன நீ? அவ மேல எனக்குப் பாசமில்லயா? நான் அவ உணர்சிகளுக்கு மரியாதை குடுக்கலயா?‌ இந்த வீட்ல என்ன விட அவளை நல்லா புரிஞ்சவங்க வேற யாரு டா இருக்க முடியும்? அவ உங்களுக்குத் தங்கச்சி மட்டும் தான் டா. ஆனா எனக்கு அவ என்னோட குலதெய்வம், எனக்குக் குடுத்த வரப்பிரசாதம்! அவ இந்த வீட்டு மகாலட்சுமி. என் குலசாமிக்கு பொங்கவச்சு வரம் வாங்கி, அவள பேத்தியா அடைஞ்சேன் டா நான். 


அவ என் மருமக வயித்துல பொறக்காம இருக்கலாம். நீயும், உன் தங்கச்சி மதுராவும் என்னோட சொந்த ரத்தமா கூட இருக்கலாம். ஆனா இந்த வீட்டோட வாரிசுன்னா அது அவ தான் டா. அவ மனசை நான் நோகடிப்பேன்னு நீ எப்படி டா நெனச்ச? ஆமா நா விஷ்ணு, ராஷ்மி கல்யாணத்தை வச்சு அவளை ப்ளாக் மெயில் பண்ண திட்டம் போட்டேன் தான். ஆனா ஆதி கடைசி நேரத்துல இப்படி ஒரு காரியத்தைச் செய்வான்னு நானே நெனைக்கல. ஆனா இப்ப சொல்றேன் டா, அவன் செஞ்சது தான் சரி. ஏன்னா இன்னைக்கு விட்டா, இனி இந்த ஜென்மத்தில் நம்மளால அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கவே முடியாது." என்று பாட்டி ஆவேசமாகக் கத்த, அனைவருக்கும் இருக்கும் குழப்பம் போதாதென்று பாட்டி சொன்னது வேறு இடித்தது.


"ஏன் அத்த? எதுக்கு இப்படி சொல்றீங்க? இன்னைக்கே கல்யாணம் நடக்க வேண்டிய அவசியம் அப்படி என்ன வந்துது?" என்று சாருமதி மாமியாரை கேட்டார்.


சிவகாமி அசட்டையாகச் சிரித்தவர், "இதுக்குத் தான் டி சொன்னேன். என்னை விட அவளா யாராலயும் புரிஞ்சிக்க முடியாதுன்னு… அவளுக்கு நம்ம எப்ப வேணும்னாலும் கல்யாணம் செய்யலாம்; ஆனா அதுக்கு அவ இங்க இருக்கணும் இல்ல. எப்ப நான் ஆதிய அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க நெனக்கிறேன்னு தெரிஞ்சிதோ, அப்பவே அவ ப்ரணவ் கூட இந்த நாட்டை விட்டே போக முடிவெடுத்துட்டா. அவ இங்க இருக்கிறதே விஷ்ணு கல்யாணத்துக்கும், இவங்க எல்லாரையும் புருஷன், பொண்டாட்டியா அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்க வைக்கவும் தான். இதுல விஷ்ணு கல்யாணம் தான் அவளுக்குப் பிரச்சனையே. அவன் கல்யாணம் முடிஞ்சிட்டா, அவ இங்கிருந்து போய்டுவா. உங்களுக்குள்ள இருக்கே, ஒரு வெறித்தனமான பாசம், அது அவளுக்கு மட்டும் இல்ல? உங்களுக்கும் அது தான் டா விக்னஸ். அத வச்சே அவ நெனச்சத சாதிச்சுடுவா. 


அவ வீட்டுக்கு திரும்பி வரணும்னா, நீங்க எல்லாரும் சேந்து வாழணும்; உங்களுக்குக் குழந்தைங்க பொறந்த பிறகு தான் நான் வீட்டுக்கு வருவேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும்; அவ நெனச்சது ஈசியா நடந்திடும்‌‌. அதான் அவ பாரின் போக ப்ளான் பண்ணிட்டா…" என்ற பாட்டி காலையில் யுக்தா தன்னுடைய மற்றும் ப்ரணவ்வின் ஃபிளைட் டிக்கெட் பற்றி டிராவல் ஏஜெண்ட்டிடம் பேசிக் கொண்டிருந்ததைச் சொல்ல, அனைவருக்கும் பேரதிர்ச்சி!


யுக்தா இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, பாட்டி, ஆதித்தை தவிர. யுக்தா பற்றிப் புரிந்து வைத்திருந்த ஆதித் அவளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனிக்க இன்று காலை அவள் ஃபோனில் பேசியதை வைத்து இன்னும் கொஞ்ச நாளில் யுக்தா வெளிநாட்டிற்குச் சென்று விடுவாள் என்று தெரிந்து கொண்டான்.


"இனி அவளுக்கு என்னோட காதலை புரிய வச்சுக் கல்யாணம் பண்ணிக்கறது நடக்காத காரியம். கல்யாணத்தைச் செஞ்சுக்கிட்டு என்னோட காதலை அவளுக்கு உணர்த்தலாம்னு தான் நான் இப்படிச் செஞ்சிட்டேன். அந்த நிமிஷம் என்னோட யுகி என்னை விட்டு போய்ட கூடாது, நான் அவளை இழந்திட கூடாதுன்னு மட்டும் தான் எனக்குத் தோணுச்சு. வேற எதைப் பத்தியும் யோசிக்கிற நிலமைல நான் அப்ப இல்ல. நான் செய்றது பெரிய தப்புன்னு தெரிஞ்சே தான் இப்டி செஞ்சேன்!" என்று தன் நிலையை அனைவருக்கும் ஆதித் விளக்க யாருக்கும் அடுத்து என்ன சொல்வதென்று புரியவில்லை.


அனைவரும் மௌனத்தை மொழியாக்கி, அமைதி என்னும் வழியில் நடக்க, கடைசியில் பரதன் தான் "இன்னைக்கே எல்லாரும் சென்னைக்குக் கிளம்பி போய், ஆதியின் அம்மா, அப்பாவை வர வைத்து நாளை மறுநாளே முறைப்படி யுக்தா, ஆதியின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்…" என்று தன் யோசனையைச் சொல்ல, குடும்பம் மொத்தமும் ஒரு மனதாக அவர் முடிவிற்குச் சம்மதித்து, அன்றே சென்னைக்குக் கிளம்பி வந்து திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.


யுக்தா யாரிடமும் எதுவும் பேசவில்லை. அமைதியாக நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஊரில் இருந்து ஆதியின் அம்மாவும், அப்பாவும் அவர்கள் வழக்கத்து தாலியும், கூரைப்பட்டும் தங்கள் வருங்கால மருமகளுக்குச் சீதனமாகக் கொண்டு வர, குறித்த நேரத்தில் வீட்டிலேயே அன்பு உள்ளங்களின் ஆசிர்வாதமும் மழையாகப் பொழிய, யுக்தா கழுத்தில் மீண்டும் திருமாங்கல்யம் சூட்டி மூன்று முடிச்சிட்டு, தன் உயிரில் பாதியாகத் தன்னவளை இணைத்துக் கொண்டான்.


தாலி கட்டி முடிந்த அடுத்த நிமிடம் கல்யாணத்தைப் பதிவு செய்த கையோடு ப்ரணவ்வையும் தன் மகன் என்று சட்டப்படி ரிஜிஸ்டர் செய்து கொண்ட ஆதித்தை, யுக்தா ஒரு நிமிடம் நிமிர்ந்து ஆழ்ந்து பார்க்க, அவள் கண்களில் அந்தக் கள்ளன் என்ன கண்டானோ‌, ஒரு அழகிய சிரிப்புடன் விழிமூடி திறக்க, அதில், ‘இனி நான் வெறும் ஆதித் அல்ல என் சம்யுக்தாவின் ஆதித்யன்’ என்று சொல்வது போல் இருக்க, அவள் அமைதியாகத் திரும்பிக் கொண்டாள்.


திருமணம் முடிந்த பிறகும் யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எது செய்தாலும் அமைதியாகவே இருக்கும் யுக்தாவின் நடவடிக்கை அனைவர் வயிற்றிலும் புளியை கரைத்தது.


சிவகாமி பாட்டி மட்டும், "அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்ல. அவளுக்குன்னு ஒரு அடி தாங்கிய அவ கையில புடிச்சு குடுத்தாச்சு. இனி அவ பாடு அவ புருஷன் பாடு. அடிச்சிக்கட்டும் புடிச்சிகட்டும் நமக்கென்ன? புருஷன், பொண்டாட்டி வெவகாரத்துல நம்ம தலையிடறது சரியில்ல…" என்று சொன்ன பாட்டியை அதிர்ச்சியாகப் பார்த்தான் ஆதித்.


"நீங்களா பாட்டி? நீங்களா இப்படிச் சொல்றீங்க?" என்று அதிர்ந்த ஆதி,


"இந்தக் கல்யாண விஷயத்தில் என்னோட ஃபுல் சப்போட் உனக்குத் தான்டா பேராண்டினு சொன்னீங்களே பாட்டி… இப்ப என்னை இப்படித் தனியா அவகிட்ட கோத்து விடுறீங்களே?" என்று அவன் கேட்ட மாடுலேஷன், 'நீயா லதா இப்படி சொன்னே?' எனச் சிவாஜி, சரோஜா தேவியைக் கேட்டது போல் இருக்கக், குடும்பம் மொத்தமும் வாய்விட்டுச் சிரித்தது.


பாட்டியோ, "ஆமா டா நான் அப்படிச் சொன்னேன் தான். அதான் கல்யாணம் வரைக்கும் உனக்குச் சப்போட்டா இருந்தேனே. இப்ப தான் கல்யாணம் ஆகிடுச்சே…" என்று அசால்ட்டாகச் சொல்ல,


வினய் விழுந்து விழுந்து சிரித்தவன், "பாத்தீங்களா ஆதி, எப்படிச் சரியான டைம் வந்ததும் உங்களை அம்போன்னு கழட்டி விட்டுருச்சுன்னு… இதுக்குத் தான் சாம் எப்பவும் இந்தக் கெழவிகிட்ட உஷாரா இருப்பா. என்ன இந்தக் கல்யாண மேட்டர்ல மட்டும் தான் சாம் கொஞ்சம் சரிக்கிட்டா… பட் அதுவும் நல்லதுக்குத் தான். பாட்டியால தான் சாம்க்கு உங்களா மாதிரி ஹஸ்பென்ட் கெடச்சிருக்கு. அதுக்காகப் பாட்டிய பாராட்டியே ஆகணும்!" என்று மனநிறைவுடன் சொன்னான்.


"அந்தப் பாராட்ட அப்படியே உன் பொண்டாட்டி நிஷாக்கும் சொல்லு டா. அவ தான் ஆதி ஹாஸ்பிடல்ல இந்த ராங்கிக்காகத் துடிச்சத பார்த்து எனக்கு ஃபோன் பண்ணா… ஆதி நம்ம யுகிக்கு பொருத்தமா இருப்பாருன்னு எனக்குத் தோணுது பாட்டி. நீங்க இங்க வந்து ஒரு தரம் ஆதியை பாருங்கன்னு சொன்னா… அதான் நான் உடனே கெளம்பி இங்க வந்தேன்." என்றவர் எழுந்து செல்ல, அசந்து நின்ற வினய் மனமெங்கும் சந்தோஷ வான வேடிக்கை தான். அவன் கண்கள் உடனே தன் மனைவியைத் தேடியது.


ப்ரணவ், யுவன், சமீராவுடன் விளையாடிக்கக் கொண்டிருந்தவளை காதலாகத் தீண்டிய அவன் விழிகள், அடுத்த நிமிடம் 'இவள் அன்புக்கு நான் தகுதியானவன் தானா?' என்ற குற்ற உணர்வில் இமை தாழ்ந்தது.


வினய், நிஷா திருமணத்திற்கு முந்தைய நாள், அவன் நிஷாவிடம் பேசியது அவன் கண்முன் வந்தது.


"நமக்குக் கல்யாணம் முடிஞ்சாலும், நீயும் நானும் பேருக்கு மட்டும் தான் புருஷன், பொண்டாட்டி. எப்ப சாம் வாழ்க்கை சரியாகுதோ அப்பதான் நான் உன்னை என்னோட பொண்டாட்டியா ஏத்துக்குவேன். அதுவரை நீயும் நானும் தனித்தனி தான். இதுக்கு உனக்கு சம்மதம்னா மட்டும் இந்தக் கல்யாணம் நடக்கும். அப்பறம் கல்யாணம் முடிஞ்ச பிறகு யாருக்காகவோ, ஏன் நான் என் வாழ்க்கையை வாழாம இருக்கணும்? நீங்க என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்க அப்படி இப்படின்னு பொலம்பக் கூடாது…" என்று தன் பாட்டில் பேசிக் கொண்டிருந்தவன் நிஷா முக மற்றத்தை கவனிக்கவில்லை.


அவளும் இதையே தான் வினய்யிடம் சொல்ல வந்தாள். ஆனால் வினய்‌ வழக்கம் போல அவளைப் புரிந்து கொள்ளாமல் திமிராய் பேச, நிஷா கண்களை இறுக்கி மூடி தன் மனதை அடக்கியவள் போதும் என்று கைகாட்ட வினய் அப்போது தான் அவள் முகத்தைப் பார்த்தன். அவள் முகம் வெகுவாகச் சிவந்திருக்கக், கண்டிப்பாக அது வெட்கத்தில் இல்லை என்பது மட்டும் வினய்க்கு நன்றாகப் புரிந்தது.


"நிஷா…" என்று அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, "எனஃப் மிஸ்டர். வினய். ஆக்சுவலி நானும் உங்க கிட்ட இதைத் தான் சொல்ல வந்தேன். யுகி ஆசைக்காகத் தான் நானும் இந்தக் கல்யாணத்துக்கு இப்ப உடனே சம்மதிச்சேன். அவ வாழ்க்கை நல்லபடியா அமையாம, என்னாலயும் என்னைப் பத்தி யோசிக்க முடியாது. சோ உங்க கண்டிஷன் எல்லாம் எனக்கும் ஓகே தான்." என்றவள் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டாள்.


வினய்க்கு ஒரு நிமிடம் யாரோ அவன் இதயத்தைக் கையால் பிடித்துக் கசக்குவது போல் இருந்தது. நிஷா அவனைக் காதலிப்பது தெரியாமல், "அவளுக்கும் அவள் திருமணத்தைப் பற்றி, வருங்கால வாழ்க்கையைப் பற்றிக் கனவிருக்கும், அதெல்லாம் என்னால கெடக் கூடாது. என்னோட தங்கச்சி ஆசைக்காக நிஷாவோட வாழ்க்கையைப் பணயம் வைக்கக் கூடாது, ஒருவேளை அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லன்னா, யுக்தாவிடம் பேசி கல்யாணத்தைக் கொஞ்ச நாள் தள்ளி வைத்து, தன் காதலை அவளுக்குப் புரிய வைத்து நிஷாவின் முழுச் சம்மதத்துடன் அவளைக் கல்யாணம் செய்யலாம்…" என்று அவன் நினைக்க அவளோ, 'யுக்தா சொன்னதிற்காக மட்டும் தான் உன்னை மணக்கிறேன்' என்ற ஒரு வார்த்தையில் வினய் மனதை உடைத்து தூள் தூள் ஆக்கிவிட்டாள்.


"அப்ப அவளுக்கு நான் ஒன்னுமே இல்லயா? அவளுக்கு என்னைப் புடிக்கலயா?" என்று வினய் மனம் வதங்கி தவித்தான்.


மனதால் நேசித்த இருவர் அதை அறியாமலே, ஒரு கட்டாயத்தால் மண வாழ்க்கையில் நுழைந்தனர். இருவருக்கும் திருமணம் முடிந்த பிறகும் இருவரும் மனவிட்டு பேசவில்லை.


நிஷாவுக்கு வினய் தன்னைக் காதலிப்பது தெரியும் தான். இந்த உலகத்தில் நிஷாவுக்கு அவள் யுகியை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று தெரிந்தும், வினய் அன்று அப்படிப் பேசியது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனாலேயே அவனிடம் இருந்து விலகியே இருந்தாள். 


வினய்யும், ‘அவளுக்குத் தான் என் மேல காதலே இல்லயே… சாம்க்காகத் தான என்னைக் கட்டிக்கிட்டா…’ என்ற உணர்வு அவனை அவளிடம் நெருக்க விடாமல் தடுத்தது.


என்ன தான் இருவரும் பேசாமல் இருந்தாலும் கல்யாணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே சொல்லாமலே, ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டனர். ஆனால் இருவருமே அவர்கள் உள்ளத்து உண்மை காதலை மட்டும் வாய் மொழியாக மொழியாமல் இழுத்தடித்தனர்.