அழகிய தமிழ் மகள் 22

 அழகி 22


அனைவரும் பூஜைக்குக் கிளம்பி தயாராகி ஹாலில் வந்து நிற்க, மயில் கழுத்து நிற பட்டுப் புடவையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து, பாட்டி வைத்த குங்குமத்திற்குக் கீழே சின்னதாக மெரூன் நிற பொட்டு வைத்து, கழுத்தில் காசு மாலையுடன், கைகளில் இரண்டு தங்க வளையல் அணிந்து, துளி கூட மேக்கப் இல்லாமல், துடைத்து வைத்த குத்து விளக்கு போல் மாடிப்படிகளில் இறங்கி வந்த யுக்தாவை பார்த்து குடும்பத்தினர் அனைவர் கண்களிலும் கண்ணீரே வந்து விட்டது.


பல நாட்கள் கழித்து யுக்தாவை இப்படிப் பார்க்கவும் யாருக்கும் கண்களை அவளைவிட்டு அகற்ற முடியவில்லை. அனைவர் கண்களும் ஆனந்த கண்ணீரில் மிதந்தது. யுக்தா அம்மா ஆனந்தி சிவகாமி பாட்டியை கட்டிக் கொண்டு அழுதே விட்டார்.


ஆதித் தன்னவளை முதல் முதலில் புடவையில் பார்த்து ஒரு நிமிடம் மலைத்து நின்றவன் மனது, ‘இனி எப்பவும் இவள இப்படியே பார்க்கணும்!’ என்ற ஆசை வர, கொஞ்ச நேரம் முன் பாட்டியும், அவனும் எடுத்த முடிவில் இருந்த தயக்கத்தை விடுத்து, நூறு சதவீதம் முழு மனதுடன் அதை ஏற்றுக் கொண்டது.


யுக்தா ஆதித்தை பட்டு வேட்டி சட்டையில் பார்த்துப் புருவம் சுருக்கி ஏதோ யோசிக்க, சிவகாமி பாட்டி, "டைம் ஆச்சு டி, கெளம்பு கெளம்பு…" என்று விரட்ட, ஆதித்தை பற்றி யோசனையை விடுத்து கோவிலுக்குக் கிளம்பினாள்.


அது சிவகாமி பாட்டியின் கணவர் முத்துவின் குலதெய்வக் கோயில். சிறிய கோவிலாக இருந்தாலும் சுற்றி வயல், வரப்போடு பார்க்க பச்சைப் பசேல் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் அந்தக் கோவிலின் சுற்றுப்புறம், சிறுவயதில் இருந்து யுக்தாவிற்கு மிகவும் பிடித்த இடம் இந்தக் கோவில் தான்.


பூஜை தொடங்கி நடந்து கொண்டிருக்க, யுக்தா பொங்கலைக் கிண்டிக் கொண்டே, நொடிக்கொரு முறை பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள்.


காலையில் இருந்து பாட்டியின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்க விஷ்ணு, ராஷ்மி கல்யாண விஷயத்தில் ஏதாவது கோக்குமாக்கு செய்வாரோ என்ற பயம் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.


புடவையை இடுப்பில் சொருகி, குதி கால்களைத் தரையில் ஊன்றி உட்கார்ந்து கொண்டு, அரிசி வெந்து விட்டதா என்று யுக்தா பொங்கலோடு போராடிக் கொண்டு, நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடி பொங்கல் பானையையே கன்னத்தில் கைவைத்து அவள் பார்த்திருக்க, இயற்கை சுழ்ந்த வரப்பில் எழில் ஓவியமாய் வீரமங்கை வாளேந்துவது போல் கரண்டியை பிடித்துக் கொண்டு அடுப்புடன் போராடும் தன் திமிரழகியை ரசித்துப் பார்த்துக் கொண்டு (ஜொள்ளு விட்டுக் கொண்டு) இருந்தான் ஆதித்.


நல்ல நேரத்தில் பூஜை நல்ல முறையில் முடிந்தது. ராஷ்மி அம்மாவை நோக்கி சிவகாமி பாட்டி கண்ணடித்துச் சிக்னல் கொடுக்க, பாட்டி சொல்லிக் கொடுத்த படி ராஷ்மியின் அம்மா விஷ்ணு, ராஷ்மி கல்யாணப் பேச்சை தொடங்கினார். சிவகாமி பாட்டியும் தன் ப்ளானை ரிப்பன் வெட்டி ஆரம்பித்தார். 


"இந்த ராங்கி கல்யாணத்துக்குச் சம்மதிச்சா தான் விஷ்ணு கல்யாணம் செஞ்சுக்குவேன்னு சொல்லிட்டானேம்மா. ஆனா இவ தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாளே… நாங்க என்ன செய்றது? இவ்வளவு ஏன் நான் இவளுக்கு மாப்ள கூடப் பார்த்துட்டேன்னா பாத்துக்கோயேன்…" என்று பெரிய துண்டாய் தூக்கிப் போட, குடும்பத்தினர் அனைவருக்குமே பாட்டி சொன்ன செய்தியில் பேரதிர்ச்சி!


"என்ன பாட்டி யுக்தாக்கு மாப்ள பார்த்திருக்கியா? எங்க கிட்ட இது பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லலயே நீ… யாரு மாப்ள? என்ன பண்றாரு? எந்த ஊரு? நாங்க அவளோட அண்ணானுங்க… இதுபத்தி நீ ஏன் ஒரு வார்த்த கூட எங்களைக் கேக்க?" என்று ராமும், மற்றவர்களும் பொங்க,


‘ம்க்கும்! ஆமா..‌. இவங்க கிட்ட சொல்லிட்டாலும். அப்படியே அறுத்து தள்ளிடுவானுங்க. அந்த ராங்கி விருப்பத்துக்கு மாறா தான் இந்தக் கல்யாணம் நடக்கும். அத சொன்னா அவ அப்படியே என்ன அண்ணா இதெல்லாம்னு கண்ணக் கசக்குவா… இவனுங்க அய்யோ, என் தங்கச்சி அழறாலே, கண்ணுல தண்ணி எல்லாம் வருதே, அவ பாவம்னு டி.ஆர் மாதிரி பாசத்த பொழிவானுங்க… இவங்களை நம்பி நான் என் பேத்திய விட்டா, அவ கல்யாணம் நடந்த மாதிரி தான்…’ என்று நினைத்தவர் அமைதியாக இருக்க,


வினய் பாட்டி சொன்னதை நினைத்து குழப்பத்தோடு திரும்பி நிஷாவை பார்க்க, அவள் முகத்தில் எந்த வித அதிர்ச்சியும் இல்லாமல் தெளிவாக இருக்க, ஜானு, ராஷ்மியை கவனித்தவனுக்கு இதெல்லாம் இவங்க சேர்ந்து போட்ட ப்ளான் தான் என்பதைக் கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்படவில்லை.


மெதுவாக நிஷா காதருகில் குனிந்தவன், "எல்லாம் உங்க ப்ளான் தானா டி?" என்று அஸ்கி வாய்ஸ்சில் கேட்க, நிஷா திருதிருவென முழிக்க, அவள் தோளில் கை போட்டு லேசாக அணைத்தவன்,


"நீ எது செஞ்சாலும் அது சாம்மோட நல்லதுக்காகத் தான் இருக்கும்னு எனக்குத் தெரியும் டி. நீ முதல்லயே சொல்லி இருந்தா நானும் உங்க டீம்ல சேர்ந்திருப்பேன்." என்று சொல்ல, நிஷா காதலோடு அவனைப் பார்த்தவள், கண்களில் அத்தனை காதல் தன் கணவனுக்காக!


ராமைத் தொடர்ந்து அனைவரும், “யார் மாப்ள? ஏன் முதல்லயே சொல்லல?” என்று பாட்டியை ரவுண்டு கட்ட, 


"எல்லாரும் சும்மா இருங்க… நம்ம விடப் பாட்டிக்கு தான் சாம் மேல பாசம் அதிகம். அது அவளுக்காக ஒரு முடிவெடுத்தா, அது கரெக்டா தான் இருக்கும்." என்ற வினய் ராம், ஜீவா, விஷ்ணுவை பார்த்து கண்மூடி திறக்க, அவர்கள் தங்கள் இணைகளின் முகத்தில் இருந்த தெளிவைப் பார்த்து சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அமைதியாகி விட்டனர்.


ராமின் அப்பா சுந்தரம் மட்டும், "மாப்ள யாருன்னு சொல்லுங்கம்மா…" என்று சிவகாமியை கேட்க,


சிவகாமி ஆதியை நோக்கி கை காட்டினார். ஆதி தான் மாப்பிள்ளை என்று தெரிந்து அனைவருக்கும் சந்தோஷம் என்றால், யுக்தா ஆதித்தை தன் நெருப்பு விழிப் பார்வையில் பொசுக்கி கொண்டிருந்தாள்.


"இதெல்லாம் உங்க குடும்பப் பிரச்சனை. உங்க பிரச்சனையில என் பொண்ணோட வாழ்க்கை வீணாக நான் விட மாட்டேன். ஏற்கனவே நிச்சயம் முடிஞ்சு இரண்டு வருஷம் ஆகிப்போச்சு. இனியும் எங்களால வெய்ட் பண்ண முடியாது. நாங்க பேசாம ராஷ்மிக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக்குறோம்…" என்று ராஷ்மியின் அம்மா பெரிய குண்டை தூக்கிப்போட, யுக்தாவிற்குப் புரிந்து விட்டது இது யாருடைய திட்டமென்று.


பாட்டியை தீயாக முறைத்தவள், "ஏன் கெழவி நீ இப்படித் தேவையில்லாத வேலயெல்லாம் பாக்குற? இதெல்லாம் உன்னோட வேல தானா? ஏன் பாட்டி எனக்காக விஷ்ணு, ராஷ்மி வாழ்க்கையில வெளயாடுற… என்னால இன்னொரு கல்யாணம் செய்துக்க முடியாது பாட்டி. புரிஞ்சுக்க… எனக்கு யாரோட பரிதாபமும் வேண்டாம்.‌ யாரும் பாவப்பட்டு எனக்கு வாழ்க்கை தரவேண்டிய அவசியமும் இல்ல..." என்று ஆதித்தை முறைத்தவள்,


"நான் ஒத்துக்குறேன் உதய் கெட்டவன் தான்; குற்றவாளி தான்; அயோக்கியன் தான். அவனோட காதல் பொய் தான். ஆனா நான் நெஜமாச்சே பாட்டி! நான் அவன் மேல வச்ச பாசம் நிஜம் பாட்டி! அவனோட நான் வாழ்ந்த வாழ்க்கை உண்மையானது‌‌.‌ அந்தப் பாசம் பொய்யாப் போனதையும், நான் ஏமாந்ததையும், நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு மிகப் பெரிய பொய்ன்னு எப்படிப் பாட்டி என்னால மறக்க முடியும். நான் போலிஸ்காரி தான், தைரியசாலி தான், திமிர் புடிச்சவ தான், பிடிவாதக்காரி தான். நான் இல்லேங்கல… ஆனா நானும் எல்லார போலவும் மனசும், உணர்ச்சியும் இருக்க மனுஷி தான் பாட்டி!


எனக்கும் இதயம் இரத்தம், சதையால தான் செஞ்சிருக்கு… இரும்புல இல்ல. உதய் செத்திருக்கலாம்; ஆனா நான் அவனோட, ஒரு குற்றவாளியோட பொண்டாட்டின்ற நெனப்பு என்னோட மனசுல ஆழமா பதிஞ்சிருக்கே, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்? நான் ஒரு போலிசாவும் தோத்துட்டேன்! ஒரு பொண்டாட்டியாவும் தோத்துட்டேன்!" என்று கதறியவள் கண்களில் துளியும் கண்ணீர் இல்லை.


ஆனால் தன்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் பாட்டியே இப்டி ஒரு இக்கட்டில் தன்னை நிறுத்தி இருக்கிறார் என்ற வலி தான் அதிகமாக இருந்தது!


அது சிவகாமிக்கு புரிந்த போதும், இன்று காலையில் யுக்தா ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட பிறகு, 'இப்போ விட்டா மறுபடி இவளை புடிக்க முடியாது' என்ற உண்மை புரிந்து அமைதியாக இருந்தார்.


ஆதித் மெதுவாக யுக்தா அருகில் வந்தவன் "நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கான காரணம் உனக்கே சரின்னு படுதா யுகி? உதய் உன்னோட கடந்த காலம் மட்டுமில்ல, கசப்பான காலமும் கூட. அப்படி இருக்க, உன்னை மாதிரி தைரியசாலியான ஒரு பொண்ணே நடந்ததை நெனச்சு இப்படித் தனிமையை மட்டும் துணையா வச்சிட்டு வாழ்ந்தால்? அப்ப சாதரணப் பொண்ணுங்க எப்படி யுகி தைரியமா அவங்க கடந்தகாலத்தை விட்டு வெளிய வந்து ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவாங்க. நான் புது வாழ்க்கைன்னு சொல்றது கல்யாணத்தை இல்ல.‌ ஒரு கசப்பான கடந்தகாலத்தால் கைவிட்ட தன்னோட லட்சியத்தை அடைய முயற்சி செய்றது.தன்னோட தனித்தன்மையை வெளியுலகுக்குக் காட்றது, வேலைக்குப் போறது, தான் நெனச்சதை சாதிக்கிறது இதை எல்லாம் சேர்த்து தான் சொல்றேன். உன்ன மாதிரி இருக்கப் பொண்ணே இப்படி இருந்தா அவங்களோட நிலைமை எல்லாம் என்னாகும்? நீயே சொல்லு யுகி?" என்று ஆதித் கேட்ட கேள்விக்கு யுக்தாவிடம் பதில் இல்லாமல் போனது.


"நீ என்னைக் கல்யாணம் செஞ்சிக்கனும்னு நான் இதெல்லாம் சொல்லல. நீ அடுத்தவங்களுக்கு முன் உதாரணமா இருக்கிறவ.‌ நீயே இப்படி இருந்தா எப்படின்னு தான் சொல்றேன். எனக்கு உன்னை ரொம்பப் புடிக்கும். இன்ஃபேக்ட் நான் உன்ன மனசால விரும்புகிறேன். உன்னையும், ப்ரணவ்வையும் லைஃப் லாங் என் கண்ணுக்குள்ளயே வச்சி பாத்துக்கணும்னு ஆசப்படுறேன். அதான் பாட்டி கேட்டதும் கல்யாணத்துக்கு ஓ.கே. சொன்னேனே தவிர, உன் மேல பரிதாபப்பட்டு நான் இந்த முடிவெடுக்கல. அட் தி சேம் டைம், யூ டோண்ட் நீட் இட் அல்சோ. யூ ஆர் ஏ டைகர். உனக்கு யாரோட கருணையும், பரிதாபமும் தேவையில்ல. சோ பாவம், பரிதாபமுன்ற பேச்சிக்கே இங்க இடம் இல்ல. வேற எதாவது காரணம் இருந்தா சொல்லு?" என்ற ஆதித்தை தீயாக முறைத்தவள்,


"நீ யாரு டா என்னைக் கேள்வி கேக்க? போனா போகுதுன்னு விட்டா நீ ரொம்ப ஓவரா போற… நீ யாரு டா எனக்கு‌‌? என் மனசுல இருக்க வலி எனக்குத் தான் டா தெரியும். இன்னமும் இந்த உலகம் என்னை மிசஸ். சம்யுக்தா உதய்பிரதாப்பா தான் பாக்குது. அத நெனக்கும் போது எனக்கு என் மேலயே ஆத்திரம் வருது. இதுல நீயும் இந்தக் கெழவியும் சேர்ந்து இன்னும் என்னை டார்ச்சர் பண்றீங்க…" என்று கத்திய யுக்தாவை நிதானமாகப் பார்த்த ஆதித்,


"நீ உதய் வைப்ன்னா, ப்ரணவ் உதய்யோட பையன். அப்ப ப்ரணவ்வையும் உன்னை மாதிரியே தான் இந்தச் சொசைட்டில இருந்து ஒதுக்கி வச்சு வளர்க்க போறீயா?" என்று ஆதித் கேட்டது தான், யுக்தாவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ இருக்கும் இடம், சுற்றி இருப்பவரை மறந்து ஆதித்தின் சட்டை கலரை பிடித்து உலுக்கியவள்,


"இன்னொரு முறை நீ ப்ரணவ்வை உதய்யோட பையன்னு சொன்னா உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது? ப்ரணவ் என்னோட பையன். எப்ப சட்டப்படி நான் அவனைத் தத்தெடுத்தேனோ, அப்ப இருந்து ப்ரணவ் என்னோட புள்ளை. ஹீ இஸ் மை சன். ப்ரணவ் சன் ஆஃப் சம்யுக்தா…" என்று கம்பீரமாய்ச் சொல்ல,


"ஓஓ… அப்ப ப்ரணவ் பின்னாடி உன்னோட பேர் வந்ததால் அவன் மேல இருந்த கறை போய்டுச்சு அப்படி தான?" என்று கேட்ட அவன் பேசில் கடுப்பான யுக்தா,


"ஆமா டா அப்டி தான் வச்சிக்கோ…" என்று திமிராகச் சொல்ல,


ஆதித் ஒரு முறை யுக்தாவை ஆழமாகப் பார்த்தவன், "ம்ம்.. அப்ப உன் பேர் பின்னாடி இருக்க உதய் பிரதாப்பை தூக்கிப் போட்டுட்டு, என்னோட பேரை போட்டுட்டா நீயும் பழைய சம்யுக்தாவா மாறிடுவ இல்ல?" என்று உறுதியான குரல் சொல்ல, அவன் சொல்வதின் அர்த்தம் யுக்தா மண்டையில் ஏறுவதற்கு முன், ஆதித் கட்டிய தாலி அவள் கழுத்தில் ஏறியிருந்தது.


ஆதித்தையே இமைக்காமல் பார்த்த யுக்தாவிற்குச் சற்று முன் நடந்தது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.


ஆதித் பேசி முடிக்க, யுக்தா அவன் பேசியதன் அர்த்தம் என்ன என்று யோசிக்கும் முன், பூஜைக்கு வைத்திருந்த மஞ்சள் துண்டு வைத்து கட்டிய தாலிக் கயிறை கையில் எடுத்த ஆதித், யுக்தா உணரும் முன் தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டிருந்தான்.


"இன்னைக்கு இருந்து நீ மிசஸ்.‌ சம்யுக்தா ஆதித்யன். இந்த ஆதித்தன் பொண்டாட்டி நீ. இத உன் மனசுல நல்லா பதிய வச்சிக்கோ…" என்று அழுத்தி சொல்ல, கண்மூடி திறப்பதற்குள் நடந்த இந்த நிகழ்வை எதிர்பார்க்காத யுக்தா அதிர்ச்சியில் உறைந்து நிற்க பாட்டி, நிஷா, ராஷ்மி, ஜானுவுக்குக் கூட இது பெரிய அதிர்ச்சி தான்!

 

இது தான் யுக்தா வாழ்க்கைக்குச் சரி என்று அனைவருக்கும் புரிந்தாலும் யுக்தாவின் சம்மதமின்றி ஆதித் அவளுக்குத் தாலி கட்டியது அனைவருக்கும் சற்று வருத்தமாகவே இருந்தது.