அழகிய தமிழ் மகள் 2
அழகி 2
ஆதித் கூர்க் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. இந்த ரெண்டு மாதத்தில் ஆதித் யுக்தாவை ஓரளவு புரிந்து வைத்திருந்தான். யுக்தா அமைதியானவள், ப்ரணவுக்கு நல்லா அம்மா, வேலையில் அவளுக்கு நிகர் அவள் தான். வேலையிலும் சரி, அவள் நடவடிக்கையிலும் சரி எப்போதும் ஒரு நேர்த்தியும், ஒழுங்கும் இருக்கும்.
யாரையும் கடிந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள், ஆனால் தன் கண் பார்வையில் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாள். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கையை விரும்புபவள். வேலையைத் தவிர்த்து ஆதித்திடம் ஒரு வார்த்தை அநாவசியமாகப் பேசமாட்டாள். யாரையும் தன்னை நெருங்க விடாது, யாரிடமும் நெருங்கி செல்லாத தனித்தீவு அவள். மொத்தத்தில் அவள் ஒரு அழகான, அமைதியான புரியாத புதிர்! இப்போதெல்லாம் அந்தப் புதிருக்கு விடையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆதித்தின் மனதில், அவனையும் அறியாமல் மேலோங்கி இருந்தது.
காலையில் எஸ்டேட் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்த யுக்தா முன் வந்து நின்ற வேலுவை நிமிர்ந்து பார்த்தவள், அவர் ஏதோ சொல்ல தயங்கி நிற்பது புரிந்து, "என்ன வேலண்ணா? என்ன விஷயம் ஏதோ சொல்ல தயங்குறப்போலத் தெரியுது?" எனக் கேட்டாள்.
"ஆமாம்மா... இங்க புதுசா வேலைக்கு வந்திருக்கே ஆதித்யன் தம்பி அவரு பத்தி தான்..." என்று தலையைச் சொறிந்தார் வேலு.
"அவருக்கு என்ன வேலண்ணா? எதுவும் பிரச்சனையா?"
"இல்லம்மா... கொஞ்ச நாளா நான் அந்தத் தம்பிய கவனிச்சிட்டு தான் இருக்கேன். அது நம்ம எஸ்டேட்டை சுத்தி இருக்க எல்லா இடத்திலும் சுத்தி சுத்தி வருது. யாரையோ தேடுற மாதிரி தெரியுது... ரெண்டு தடவ அவரை எஸ்டேட்க்கு வெளிய, புது ஆளுங்க கூட ரொம்பக் காரசாரமா பேசுறதை கூடப் பாத்தேன். அதோட அந்தத் தம்பி பாதி நாள் வீட்டுல தாங்குறதே இல்லம்மா. அதிலும் இராத்திரி நேரத்துல வீட்டுலயே இருக்குறது இல்ல. எனக்குக் கொஞ்சம் சந்தேகமா இருக்கும்மா... அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லாம்ன்னு வந்தேன்... நீங்க கொஞ்சம் என்ன ஏதுன்னு விசாரிச்சு பாருங்கம்மா..."
யுக்தா வேலு சொன்ன விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் நேரம் யோசித்தவள், "நீங்க சொல்றது எனக்குப் புரியுதுண்ணா. ஆனா அவரு வேலை விஷயத்தில் எதாவது தப்பு பண்ண தான், நான் கேக்க முடியும். இது அவரோட பெர்சனல் விஷயம்; இதுல எல்லாம் என்னால தலையிட முடியாது. ஆனாலும் நீங்க சொன்னதையும் அவ்வளவு ஈசியா விட முடியாது. நான் பிரபு சார் கிட்ட இதைப் பத்தி சொல்லி பாக்குறேன். முடிவு அவர் தான் எடுக்கணும்..."
"சரிம்மா... என் மனசுக்கு ஏதோ தோணுச்சுச் சொல்லிட்டேன். நீங்க முதலாளிகிட்ட பேசி ஒரு முடிவுக்கு வாங்கம்மா..." என்ற வேலு அங்கிருந்து சென்றுவிட, யுக்தா ஆதித் பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள்.
பிரபுவிடம் எஸ்டேட் பற்றிய தகவல்களைச் சொல்லி முடித்தவள், "ஆதித் யாரு பிரபு? எதுக்கு இங்க வந்திருக்காரு?" என்று அழுத்தமான குரலில் கேட்க, பிரபுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவள் வேறுமாதிரி கேட்டிருந்தால் ஏதாவது சொல்லி சமாளித்திருக்கலாம், ஆனால் நேருக்கு நேராகக் கேட்கும் தன் பள்ளி தோழியிடம் எதையும் மறைக்க விரும்பாமல், ஆதித் பற்றியும் அவன் எதற்காக இங்கு வந்திருக்கிறான் என்ற உண்மையையும் முழுதாகச் சொல்லி முடித்தான்.
ஜன்னல் வழியே வெளியே தெரிந்த மரத்தில் பார்வையைப் பதித்திருந்த யுக்தா, திரும்பி பிரபுவை கூர்மையாகப் பார்த்தவள், “ஆதித்க்கு நான் யாருன்னு தெரியுமா பிரபு?" என்று கேட்டாள்.
"இல்ல சாம் (Sam)... ஆதித்க்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது... யூ நீட் நான்ட் வொரி..!"
யுக்தா, 'குட்' என்று தலையாட்டியவள், சற்று பொறுத்து, "அப்ப நான் இங்க தான் இருக்கேன்னு அவங்களுக்கும்?" என்று கேள்வியாகப் பிரபுவை பார்க்க,
பிரபு மெதுவாகத் தலை குனிந்தவன், "ம்ம்ம் ஆமா... எல்லாருக்குமே தெரியும். அவங்ககிட்ட என்னால எதையும் மறைக்க முடியாதுன்னு உனக்கே தெரியுமில்ல... நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி தானே அவங்களும்...” என்றவன், தப்புச் செய்து மாட்டிக் கொண்ட பிள்ளை போல் முழித்தவன்,
“நம்ம ராம் தான் ஆதித்க்கு இங்க வேல போட்டு தர சொன்னான். அன்ட் உன்னைப் பத்தி ஆதித்க்கு எதுவும் தெரியக் கூடாதுன்னும் ஸ்ரிட்டா சொல்லிட்டான்..." என்றதும், யுக்தா முகத்தில் சின்னதாகக் குறுநகை பரவ, "ஓ.கே. பிரபு நான் கெளம்புறேன்..." என்று எழுந்து சென்றவளை நிறுத்தியது, "இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போற சாம்?" என்று பிரபு கேட்ட கேள்வி.
திரும்பி பிரபுவை தீர்க்கமான பார்வை பார்த்த யுக்தா, "எனக்குப் பதில் தெரிஞ்ச கேள்வி எதாவது இருந்தா கேளு பிரபு... நான் பதில் சொல்றேன் அதர்வைஸ் நான் கிளம்புறேன்..." என்ற யுக்தாவை சலிப்பாகப் பிரபு பார்க்க, "ஓ.கே. பிரபு ஐம் லிவிங்" என்றவள் அங்கிருந்து கம்பீரமாக நடந்து செல்ல, பிரபுக்கு அவளைப் பழைய மாதிரி இனி பார்க்க முடியாதா என்ற ஏக்கம் இதயம் முழுவதையும் அடைந்தது.
கூர்க்கின் வளைவு நெளிவுகளில் ஜீப்பில் சென்ற யுக்தாவின் வாழ்க்கையும், இப்படித் தான் வளைவு நெளிவுகளில் சிக்கி கிடக்கிறது. இந்தப் பாதையில் எளிதாகக் கடக்கும் யுக்தா தன் வாழ்க்கை பாதையைக் கடப்பாளா?
அவள் சென்ற வழியில் தூரத்தில் நடந்து வந்து கொண்டிந்த ஆதித், யுக்தா வண்டியை பார்த்தும் அதை நிறுத்தியவன், "மேடம் வீட்டுக்குத் தான போறீங்க? இஃப் யூ டோன்ட் மைண்ட் என்னை வீட்டுல டராப் பண்றீங்களா?" என்று கேட்க, ஒரு நிமிடம் ஏற இறங்க பார்த்தவள் விழிகளுக்கு நன்கு புரிந்தது, அவன் ரொம்பச் சோர்ந்திருக்கிறான் என்பது.
யுக்தா மெதுவாக, ஓ.கே. என்பது போல் தலையை மட்டும் ஆட்ட, ஆதித் ஜீப்பில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிடமே அசதியில் ஜீப்பிலேயே சாய்ந்து உறங்கி விட, யுக்தா ஒரு நிமிடம் கண்மூடி திறந்தவள் கொஞ்சம் மெதுவாகவே ஜீப்பை ஓட்டி சென்றாள்.
நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடக்க, ஆதித் இப்போது அந்த இடத்து மக்களிடம் நன்கு பழகி இருந்தான். ப்ரணவ் ஸ்கூல் நேரம் போக மற்ற நேரத்தை ஆதித்துடன் ஆனந்தமாகக் கழித்தான். ப்ரணவுடன் பழகும் சமயத்தில் ஆதித், யுக்தாவுடனும் நட்பு கொள்ள முயல, அவனால் அவளின் நிழலை கூட நெருங்க முடியவில்லை. முதலில் ஆதித்க்கு இது பெரிதாகத் தெரியவில்லை.
கணவனை இழந்து, பிள்ளையோடு தனியாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு இயல்பிலேயே அந்நிய ஆண்களிடம் தோன்றும் எச்சரிக்கை உணர்வு என்று நினைத்தவன், அவள் மற்றவர்களிடம் பழகுவது போல் இயல்பாகக் கூடத் தன்னிடம் பேசுவதில்லை என்று புரிந்த போது, யுக்தாவின் ஒதுக்கம் அவனின் ஈகோவை சீண்டி பார்த்தது. எப்படியும் அவளைத் தன்னிடம் பேச வைக்க வேண்டும் என்ற பிடிவாதம் அவனுள் எழுந்தது. ஆதித்திற்கே இது சிறு பிள்ளைதனமாகத் தெரிந்தாலும் அதைச் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.
யுக்தாவிற்கு ஆதித்தின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். ஆனால் பிரபு கேட்டுக் கொண்டதால், ஆதித்கு தெரியாமல் அவனின் நடவடிக்கையைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அழகிய மாலை பொழுதை ரசித்துக் கொண்டே நடந்து வந்த யுக்தாவை, வழி மறித்தது ஒரு கார். தீடிரெனத் தன் முன்னே வந்து நின்ற காரை பார்த்த அடுத்த நிமிடமே யுக்தாவிற்குப் புரிந்துவிட்டது வந்தது யாரென்று.
காரில் இருந்து இறங்கிய மருதுவிற்கு நாற்பது வயது இருக்கும். பிரபுவை போல் கூர்க்கில் அவருக்கும் நிறையச் சொத்துக்கள் உண்டு. பிஸ்னஸ் போட்டியில் பிரபு, மருதுக்கு எதிராக நிற்க அவனைச் சிக்கலில் மாட்ட வைக்க மருது சில விஷயங்களைச் செய்திருக்க, அதைக் கண்டுபிடித்த யுக்தா, பிரபுவை காப்பாற்ற சில முன்னேற்பாடுகளைச் செய்திருந்தாள். அதில் கடுப்பான மருது யுக்தாவை பலமுறை மிரட்டி இருக்கிறான். ஆனால் யுக்தா அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாது தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.
நேற்று மருது, பிரபுவின் காபி தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை வைத்துக் கலாட்டா செய்யப் பார்க்க, சரியான நேரத்தில் யுக்தா அதைத் தடுத்து நிறுத்தி, மருதுவின் திட்டத்தில் மண் அள்ளி போட்டிருந்தாள். அதில் எரிச்சல் கொண்ட மருது யுக்தாவை மறுபடியும் மிரட்ட வந்திருக்கிறான்.
"என்ன மேனஜர் மேடம் உங்களுக்கு உயிர் மேல ஆசை இல்ல போலயே? அதான் இந்த மருது விஷத்தில் மூக்க நுழைக்கறீங்க... இன்னைக்கு உன்னால என்னோட எல்லா ப்ளானும் கெட்டு போச்சு... இனி உன்னை விட மாட்டேன். மரியாதையா இன்னைக்கு ஈவ்னிங்குள்ள, நீ இந்த ஊரைவிட்டே போகணும். இல்ல நாளைக்குக் காலையில இந்த உலகத்தை விட்டே போய்டுவ..." என்று மிரட்டியவன் தன் காரில் ஏறி சென்றுவிட,
மருது பேசியதை எல்லாம் தூரத்தில் இருந்து கேட்ட ஆதித், வேகமாக யுக்தா அருகில் வந்தவன், "என்ன ஆச்சு மேடம்? ஏன் அந்த ஆளு உங்கள மிரட்டிட்டுப் போறான்? என்ன ப்ராப்ளம் மேடம்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, ஆதித்தை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், "நத்தீங்..." என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டு நகர,
ஆதித் பல்லை கடித்துக் கொண்டவன், ‘திமிரு... திமிரு... உடம்பு முழுக்கத் திமிரு... அந்த மலமாடு இவள கொன்னுடுவேன்னு மிரட்டிட்டு போறானே, என்னமோ ஏதோன்னு அக்கறையா வந்து கேட்டா, திமிரா நத்தீங்ன்னு ஈசியா சொல்லிட்டுப் போறா பாரு...’ என்று அவளை மனதில் வறுத்தெடுத்தவன் தன் வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த நாள் காலைப் பொழுது அமைதியாக விடிய, ஆதித் குளித்து முடித்து வேலைக்குச் சென்றவனுக்கு வேலை அவனைத் தூக்கி முழுங்கும் அளவு இருக்க, மூச்சு திணற திணற அனைத்து வேலைகளையும் முடித்து வீடு திரும்ப மாலையாகி விட்டது.
'ம்ம்ம்... இந்த ஜீப் வேற இன்னைக்குன்னு பார்த்து ரிப்பேர் ஆகிடுச்சு. மேடம் இருந்திருந்தால் அவங்க கூட ஜீப்பில் போயிருக்கலாம். என் கெட்ட நேரம், அவங்க இன்னைக்குச் சீக்கிரமே கிளம்பிட்டாங்க...” என்று புலம்பியவன் மெதுவாக நடக்க ஆரம்பிக்க, வழியில் யுக்தாவின் ஜீப் தனியாக நிற்பதை பார்த்தவன், ‘ஏன் ஜீப் இங்க தனியா நிக்குது, இந்தத் திமிர் மேடம் எங்க போனாங்க?' என்று சுற்றி பார்க்க, ஒரு இடத்தில் பார்ப்பதற்கு ரவுடி போல் இருந்த நான்கு பேர் யுக்தாவை சுற்றி வளைத்திருக்க, மருது அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
"போனா போகுது புருஷன் இல்லாம, கையில சின்னப் புள்ளையோட இருக்கியே... உயிரோட பொழச்சி போகட்டும்னு ஊரை விட்டுப் போகச் சொன்னா, உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா இன்னும் இங்கயே இருப்ப? உன்னையெல்லாம் போட்டுத் தள்ளுனா தான் டி புத்தி வரும்...” என்றவன் கையில் இருந்த கட்டையை யுக்தாவை நோக்கி ஓங்க, அடுத்த நிமிடம் நெஞ்சில் பலமாக மிதி வாங்கிக் கீழே விழுந்து கிடந்தான்.
யுக்தா ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் மருதுவை பார்த்தவள், பின்னால் திரும்பி பார்க்க, ஆதித் யுக்தாவை சுற்றி வளைத்திருந்த அந்த ரவுடிகளின் ஒவ்வொரு எலும்பையும் நொறுக்கிக் கொண்டிருந்தான். அவன் அடித்த அடியில் வலி தாங்க முடியாமல் அந்த ரவுடிகள் ஓடிவிட, மருதுவிடம் வந்தவன், அவன் வலது கையைப் பிடித்து, தோள்பட்டையில் தன் கால் வைத்து மிதித்தவன், நிமிர்ந்து யுக்தாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, இந்தக் கை தானே டா அவங்கள அடிக்க வந்துது என்று கர்ஜுத்தவன், ஒரு திருப்பில் அவன் கையையும் உடைத்துவிட, மருது கத்திய கதறல் சத்தம் அந்த இடத்தையே அலற வைத்ததது!
யுக்தா அமைதியாக வர, ஜீப்பை ஓட்டி வந்த ஆதித்க்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. 'என்ன இவ? ஜஸ்ட் மிஸ்ல உயிர் பொழச்சிருக்கா அதைப் பத்தி எதுவும் பேசல... நம்ம கரெக்ட் டைம் வந்து இவள காப்பாத்தி இருக்கோம், அதுக்கும் ஜஸ்ட் ஒரே ஒரு தேங்க்ஸ் மட்டும் தான் வேற எதும் பேசல... இவ என்ன கேரெக்டர்னே புரியலயே டா சாமி?’ என்று புலம்பி தவித்தவன் யுக்தா வீட்டு வாசலில் ஜீப்பை நிறுத்தி விட்டு,
“நீங்க இப்படியே இருக்குறது நல்லதில்ல மேடம். நீங்க கொஞ்சம் தைரியமா இருக்கணும். இப்படிப் பிரச்சனையைப் பார்த்து பயந்து ஓடக் கூடாது. அந்த மருது உங்கள நேத்து மிரட்டும் போதே, நீங்க போலிஸ் கிட்ட போயிருந்தா, இன்னைக்கு இந்த மாதிரி நடந்திருக்காது. இப்படி எல்லாத்துக்கும் பயந்து ஓடாதீங்க மேடம்?" என்று படபடவென்று பேசியபடி யுக்தாவை பார்க்க, அவள் பார்த்த பார்வையில் சட்டெனத் தன் பேச்சை நிறுத்தியவன், "நான்... நான் கிளம்புறேன் மேடம்..." என்று விறுவிறு என்று அங்கிருந்து நடந்தான்.
'ஸ்ஸ்ஸப்பா என்ன பார்வை டா அது? மனுஷனை அப்படியே புரட்டி போட்டுடும் போல!' என்று புலம்பிக் கொண்டே செல்ல, யுக்தா போகும் ஆதித்தை நிதானமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
இரவு எட்டு மணி, கூர்க் அடர்ந்த இருட்டில் முழ்கி இருக்க, ஆதித்தின் ஃபோன் அலறியது. ஃபோனை அட்டன் செய்து காதில் வைத்தவன் அடுத்த நிமிடம், "ஐ வில் பி தேர் இன் ஃபைவ் மினிட்ஸ்..." என்றவன் உடனே ஃபோனில் சொன்ன இடத்திற்கு விரைந்தான்.
சுற்றி நான்கு பக்கமும் இருள் கவ்வி இருக்க, ஆதித் கைப்பேசியின் டார்ச் வெளிச்சத்தில் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்க, அவன் அசந்த நேரம் பார்த்து, யாரோ அவன் பின்னந்தலையில் கட்டையால் ஓங்கி அடித்து இருந்தனர். மயங்கி விழுந்த ஆதித்தை ஒரு பழைய குடோனுக்குத் தூக்கி சென்றனர்.