அழகிய தமிழ் மகள் 3


அழகி 3


மறுநாள் மயக்கம் தெளிந்து விழித்த ஆதித்திற்கு இப்போது தான் மருத்துவமனையில் இருப்பது புரிய, நேற்று இரவு நடந்தது நிழல் போல் அவன் நினைவுகளில் வந்து போனது.


தலையில் அடிப்பட்டுக் கிடந்த ஆதித்தை, அந்த மர்ம ஆட்கள் தூக்கிச் செல்லும் போதே, அவனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. அவர்கள் தன்னை எங்கே கொண்டு செல்கிறார்கள், யார் இவர்கள் என்று தெரிந்து கொள்ள ஆதித் மயங்கின மாதிரியே நடிக்க, அந்த ரவுடிகள் அவனை ஒரு பழைய குடோனில் கட்டி வைத்துவிட்டு, யாருக்கோ ஃபோன் செய்து ஆதித்தை தூக்கி வந்த விவரத்தை கூறினார். அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ ரவுடிகளில் ஒருவன், "டேய் பாஸ் இவனைப் போட்டுத்தள்ள சொல்லிட்டாரு...” என்றவன், ஆதித் அருகில் சென்று, தன் கையில் இருந்த துப்பாக்கியின் ட்ரிகரை பிடித்து இழுத்துவிட்டு ஆதித்தை நோக்கி குறி பார்த்து நிற்க, அடுத்த நொடி ஆதித் விட்ட உதையில், அந்த ரவுடி பத்தடி தள்ளிப்போய்க் கீழே விழுந்து கிடந்தான்.


ஆதித் தன் கைகளைத் தரையில் ஊன்றி, கால்களை மேலே தூக்கி குதித்து எழுந்தவன், வேங்கையென நின்றான் அந்த ரவுடிகளின் முன்.


"டேய் இவனுக்கு மயக்கம் தெளிஞ்சு போச்சு போல டா... புடிங்காடா அவனை...” என்று கீழே விழுந்து கிடந்த ரவுடி கத்த, ஆதித் தன்னை நோக்கி வந்த ஒவ்வொருத்தனையும் வெறித்தனமாகப் பந்தாடினான்.


ஆதித் விட்ட உதையில் ஒருவன் வாயில் ரத்தம் சொட்ட வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு கீழே விழுந்து விட, இன்னொருவன் உடைந்த தன் காலை இழுத்துக் கொண்டு, ஓட முடியாமல் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தான்.


அடிபட்டு விழுந்து கிடந்த ஒரு ரவுடியின் அருகில் வந்த ஆதித், "நீங்க எல்லாம் ரவுடிங்க? த்தூ... ரவுடி குலத்துக்கே அசிங்கம் டா! உங்களுக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, ஸ்கூல் பசங்க மாதிரி இருந்துட்டு என்னையே கடத்துவீங்க? ஒரு அடிக்கே இப்படிச் சுருண்டுட்டிங்களே டா... ச்சே சண்ட போடுற மூடே போச்சு. நான் இன்னொரு உதை விட்டு நேரா நீங்க எமலோகத்துக்குப் போறதுக்கு முந்தி, மரியாதையா உங்கள எவன் அனுப்பிச்சானு, உண்மையைச் சொல்லி உயிரை மட்டுமாச்சு காப்பாத்திட்டு ஓடிடுங்க... இல்ல நாங்க எங்க பாஸ்க்குத் துரோகம் பண்ண மாட்டோம், உண்மைய சொல்ல மாட்டோம்னு முதலாளி, விசுவாசம்னு படப் பேரயெல்லாம் ஓட்டி கடுப்பேத்திட்டு இருந்தீங்க... நான் பாட்டுக்கு உங்கள போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன். மரியாதையா சொல்லுங்கடா..." என்றவன், அந்த ரவுடி அருகில் வந்து சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட, தூரத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து கிடந்த இன்னொருவன் அவன் பக்கத்தில் இருந்த பாட்டிலை எடுத்து, ஆதித்தை நோக்கி தூக்கி வீச, அது சரியாக ஆதித்தின் நெற்றியில் பட்டு நொறுங்கியது.


நொடிப்பொழுதில் நடந்த இந்தத் தாக்குதலில் ஆதித் தடுமாற, அதைப் பயன்படுத்திக் கொண்ட ரவுடிகள், அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, துப்பாக்கியை எடுத்து ஆதித்தை சுடப் பார்க்க, எங்கிருந்தோ பறந்து வந்த செங்கல், துப்பாக்கியை வைத்திருந்தவன் மண்டையைப் பதம் பார்த்தது.


அந்த ரவுடிகள் ஆதித்தை விட்டு விட்டு, பின்னால் இருந்து கல் எறிந்த, அந்த நபரை அடிக்கப் போக அரைமயக்கத்தில் சரிந்து விழுந்த ஆதித்தின் கண்களுக்கு, அங்கே யாரோ அந்த ரவுடிகளை அடித்து நொறுக்குவதும், ஒரே திருப்பில் ஒரு ரவுடியின் கழுத்து எலும்பை உடைப்பதும் மங்கலாகத் தெரிந்தது. ஆனால் அடிக்கும் அந்த நபரின் முகம் சரியாகத் தெரியாதபடி கண்கள் இருட்டிக் கொண்டு வர அப்படியே மயங்கி விழுந்தான்.


'ஆமா நேத்து அந்த ரவுடி அடிச்சதுல நான் மயங்கி விழுந்துட்டேன். அப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியலயே? யாரு என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் கூட்டி வந்தது?’ என்று மண்டையைக் குடைந்து, நேற்று நடந்ததை நினைவு படுத்த முயல, பாவம் அவனுக்கு ஒன்றும் நினைவு வரவில்லை. எரிச்சலோடு “டாமிட்...” என்று கத்தியவன் படுத்திருந்த படுக்கையை ஓங்கி குத்தினான்.


"டேய்... டேய் பாத்து டா...” என்று அதட்டும் குரல் கேட்டு, வாசலை திருப்பிப் பார்க்க, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான் பரசுராம்.


"ஹலோ பாஸ் நீங்க எங்க இங்க?? எப்ப வந்தீங்க??" என்றவனை முறைத்த பரசுராம், "நான் நேத்து நைட்டே கூர்க் வந்துட்டேன் டா..." என்றான்.


"ஓஓஓ... அப்ப நீங்க தான் நேந்து நைட்டு என்னைக் காப்பாத்துனீங்களா?" என்றவனுக்குப் பதில் சொல்லாது, “நேத்து என்ன ஆச்சு ஆதி? யாரு உன்னைக் கொல்ல வந்தது? நீ வந்த வேலை என்ன? இப்ப நீ இங்க பண்ணிட்டு இருக்க வேலை என்ன?" என்று முறைக்க,


"இல்ல பாஸ் நேத்து நைட் ஒரு ஃபோன் வந்துது...” என்று ஆரம்பித்து, அதன் பிறகு நடந்த அனைத்தையும் சொன்னவன், கூடவே யுக்தாவை காப்பாற்றிய விவரத்தையும் சொல்லி, “வந்தது ஒன்னு நம்ம தேடிட்டு இருக்கவனோட ஆளா இருக்கணும். இல்ல அந்த மருது கூட என்னைக் கொல்ல அனுப்பி வச்சிருக்கலாம்..." என்க,


ராம் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன், "சரி ஆதி நீ வந்த வேலை எந்த அளவுல இருக்கு?" எனக் கேட்டான்.


"ஆல்மோஸ்ட் முடிஞ்சுது பாஸ். இன்னும் ரெண்டு மூணு நான்ள்ல எல்லாம் முடிஞ்சிடும்...” என்று உறுதியாகச் சொன்ன ஆதித்தை நம்பியவன், "ஓ.கே. ஆதி சீக்கிரம் வேலைய முடி... அதோட நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு!” என்றான்.


"அவங்க என்னைக் கொல்ல வந்ததில் இருந்தே தெரியுது பாஸ், நான் அவங்களை நெருங்கிட்டேனு... சோ இனி என்னோட வேலை ஈசிதான். இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி, நான் இனி இன்னும் கொஞ்சம் அலார்ட்டா இருக்கேன் பாஸ். ஆமா பாஸ் நீங்க ஏன் இங்க வந்தீங்க? அதும் அர்த்த ராத்திரியில... நீங்க கரெக்ட்டா அங்க எப்படி வந்தீங்க?"


"ஐ திங்க் நான் உனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லனு நெனைக்குறேன் ஆதி..." என்று கணீர் குரலில் சொன்னவன், "உனக்குத் தலையில சின்ன அடி தான். நீ ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டிய அவசியம் இல்ல. சீக்கிரம் கெளம்பு... உன்னை வீட்டுல விட்டுட்டு நான் பிரபுவ பார்க்க போகணும்...” என்று சொல்லி விட்டு ராம் நகர,


"தேங்க்யூ பாஸ்... நேத்து என்னைக் காப்பாத்துனதுக்கு..." என்று ஆதித் கத்தி சொல்ல, ராம் சின்னதாகச் சிரித்தவன், "சீக்கிரம் கெளம்பு டா... டைம் ஆச்சு... நான் டாக்டர பாத்துட்டு வரேன்...” என்று அறையை விட்டு வெளியேறினான்.


ஆதித்தை வீட்டு வாசலில் இறக்கி விட்ட ராம், “ஓ.கே. ஆதி நான் பிரபுவை பார்த்துட்டு வந்துடுறேன்..." என்றவன் திரும்பிப் பார்க்க, அவன் பார்க்கும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள் யுக்தா.


யுக்தாவை பார்த்த ஆதித், "குட் மார்னிங் மேடம்" என்று புன்னகைக்க, யுக்தாவிடமிருந்து எப்போதும் வரும் தலையசைப்பு கூட இன்று வராமல் போக, கடுப்பான ஆதித், “திமிரு புடிச்சவ...” என்று முணுமுணுக்க அது சரியாக ராம் காதில் விழுந்து வைக்க, திரும்பி பார்த்து ஆதித்தை முறைத்தான். ஆனால் அதைக் கவனிக்காத ஆதித், "பாஸ் இவங்க தான் பாஸ் இந்த எஸ்டேட் மேனேஜர் சம்யுக்தா. இந்த எஸ்டேட் முழுசும் இவங்க பொறுப்பு தான் பாஸ்..." என்றவன்,


யுக்தாவிடம், "மேடம் இது என்னோட ப்ரண்ட் பரசுராம். என்னைப் பாக்க சென்னையில் இருந்து வந்திருக்காரு..." என்று ராமை, யுக்தாவிற்கு அறிமுகம் செய்து வைக்க யுக்தா, ராமை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"மிஸ்டர்.ஆதித் இன்னைக்கு நீங்க எஸ்டேட்க்கு வர வேண்டாம். ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வந்தா போதும்..." என்றவள் தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்று விட,


"ம்க்கும்... இந்தப் பந்தாக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நேத்து மட்டும் நான் சரியான நேரத்துக்கு வராமல் போயிருந்தா தெரிஞ்சிருக்கும்..." என்றவன், "இந்தப் பொண்ணுக்கு செம்ம அட்டிடியூட் ப்ராப்ளம் பாஸ். பாருங்க உங்களை இன்ரிடியூஸ் பண்ணேன். மரியாதைக்குக் கூட ஒரு ஹாய் சொன்னாலா? திமிரு... திமிரு... மண்ட முழுக்கத் திமிரு...” என்று ஆதித் அவளைக் கரித்துக் கொட்ட,


ராம், ஆதித்தை மேலிருந்து கீழ் வரை ஒரு மாதிரியாகப் பார்க்க, அதில் சுதாரித்தவன், "பாக்கத்தான் பாஸ் ஆளு கெத்தா தெரியுது. ஆனால் சரியான பயந்தாங்கோளி... அந்த மலமாடு மருது ரோட்ல நிக்கவச்சு கொன்னுடுவேனு மிரட்டினதும், இவங்க பயந்துடுட்டாங்க பாஸ். இவங்க அப்பவே தைரியமா போஸிஸ்கிட்ட போய், அந்த மருது பத்தி கம்பளைன் கொடுத்திருந்தா, நேத்து அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்காது பாஸ்..." என்று நேற்று யுக்தாவை அந்த நிலையில் பார்த்த கோவத்தைத் தன் வார்த்தையில் கோர்த்து கொட்ட,


ராம் எதையோ நினைத்து சிரித்தவன், "நீ போய் ரெஸ்ட் எடு ஆதி... நான் பிரபுவை பாத்துட்டு வரேன்..." என்று கிளம்ப, ஆதித் யுக்தாவை திட்டிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்.


பிரபு வீட்டில் அவன் முன்னே ஒரு சேரில் ராம் உட்கார்ந்து இருக்க, அவனுக்கு எதிரில் யுக்தா உட்கார்ந்து இருந்தாள். மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்காத அந்த இடத்தில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.


யுக்தா நிமிர்ந்து ராமை ஒரு தடவை பார்த்தவள், "பிரபு நான் கெளம்புறேன்..." என்று எழுந்து கொள்ள,


"அவளை ஒரு நிமிஷம் நிக்கச் சொல்லு பிரபு..." என்ற ராமின் குரல் கேட்டு யுக்தா நின்ற இடத்தில் அசையாமல் நின்றாள்.


ராம் அவள் அருகில் வந்தவன் ஒரு பெரிய சாக்லேட் பாக்ஸ்ஸை அவள் கையில் வைத்து, "இது ப்ரணவ்க்கு..." என்றவன், அதே போல் இன்னொரு சாக்லேட் பாக்ஸ்சை அவள் கையில் தந்தவன், "இது என்னோட சாம் குட்டிக்கு..." என்று கலங்கிய குரலில் சொல்ல, அவன் குரலில் தெரிந்த கலக்கம் யுக்தா இதயத்தைத் தாக்க, எங்குக் கண்களின் கண்ணீர் முத்துக்கள் தன்னையும் மீறி வெளியே விழுந்துவிடுமோ என்று இமைகளை இறுக்கி மூடி மூச்சிழுத்தவள், அதோடு சேர்த்து கண்ணீரையும் உள்ளிழுத்துக் கொண்டு, வேக வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.


"சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்..." என்று ஆறுதலாக ராம் தோளில் கை வைத்து அழுத்திய பிரபு, கையை இறுக்கி பிடித்தவன், "அந்த நம்பிக்கையில தான் டா, ரெண்டு வருஷம் நம்ம எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்கோம்..." என்றவன், "சரி பிரபு நானும் கெளம்புறேன்... ஆதி வந்த வேலை இன்னும் ரெண்டு, மூணு நாள்ல முடிஞ்சிடும். அதுவரை நானும் ஆதி கூடவே ஸ்டே பண்ணிக்குறேன்..." என்றவன் பிரபு வீட்டை விட்டுக் கிளம்பினான்.


இரண்டு நாட்கள் நொடி பொழுதில் கடந்து ஓடி விட, ராமின் உதவியால் ஆதித் கூர்க் வந்த வேலை 90% முடிந்து விட்டது. மீதி வேலையைச் சென்னை சென்று தான் முடிக்க வேண்டும் என்பதால் நாளையே அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தனர் இருவரும். என்ன தான் ராமும், ஆதித்தும் செல்ல முடிவெடுத்து விட்டாலும் இருவருக்கும் அங்கிருந்து செல்ல விருப்பமே இல்லை.


ராமிற்கு யுக்தாவிடம் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்க ஆதித்க்கு ப்ரணவை விட்டு பிரிவதோடு, தான் நினைத்தபடி அந்தத் திமிர் மேடமை தன்னிடம் பேச வைக்காமலே செல்கிறோம், முக்கியமாக அவளை விட்டுச் செல்கிறோம் என்ற உணர்வு இதயத்தில் லேசாக வலித்தது.


ஆதித் தன் ராஜினாமா கடிதத்தைப் பிரபுவிடம் தந்தவன், "ரொம்பத் தேங்க்ஸ் பிரபு. உங்க ஹெல்ப்பால தான் நான் வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது. ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ்..." என்றவன் கிளம்ப, ராம், பிரபு அருகில் சென்றவன், "சாம்மும், ப்ரணவ்வும் உன் பொறுப்பு டா பிரபு... கேர்புல்!" என்று விட்டு ஆதித்துடன் சென்றான்.


ஆதித் காரை ஓட்ட, ராம் எண்ணம் முழுவதும் யுக்தாவே நிறைந்திருந்தாள். ஆள் ஆரவம் இல்லாத இடத்தில் கார் பயணிக்க, தீடிரென எங்கிருந்தோ வந்த புல்லட், அவர்களின் காரின் முன்பக்க கண்ணாடியை சில்லு சில்லாக உடைக்க, நிலைதடுமாறிய ஆதித் காரை கஷ்டப்பட்டுத் திருப்பி, பாதையின் குறுக்கே காரை நிறுத்தினான்.


ஆதித்தும், ராமும் காரில் இருந்து இறங்கி வெளியே வர, முகத்தை மறைத்து துணி கட்டி இருந்த ஐந்தாறு பேர் கையில் வாள் போன்று நீண்ட கத்தி, துப்பாக்கியுடன் நின்றவர்கள், “என்ன ஏ.சி.பி பரசுராம் கடைசியில எங்க பாஸை தேடி இங்கயே வந்துட்டிங்க போல...? ம்ம்ம் பரவாயில்ல... சூப்பர் போலிஸ் தான் நீங்க!" என்று நக்கலடித்தவன் ஆதித்திடம், "டேய் ஐ.பி.எஸ். மரியாதையா எங்க பாஸ்க்கு எதிரா நீ கலெக்ட் பண்ணி இருக்க ஏவிடன்ஸ் எல்லாம் எங்ககிட்ட தந்துட்டு ரெண்டு பேரும் உயிரோட ஊர் போய்ச் சேருங்க... இல்ல உங்க ரெண்டு பேரையும் இங்கயே கொன்னு புதைச்சிட்டு, நாங்களே அந்த எவிடன்ஸ்சை எடுத்துக்குவோம். அன்னைக்கு நைட் குடோன்ல இருந்து நீ தப்பிச்சிட்ட... ஆனால் இன்னைக்குத் தப்பிக்க முடியாது" என்று மிரட்ட, ஆதித்துக்குப் புரிந்து விட்டது அன்று தன்னைக் கொல்ல வந்தது யாரென்று.


ஆதித் மெதுவாக ராமை திரும்பி பார்த்தவன், "பாஸ் ஆறு பேர் இருக்காங்க... ஆளுக்கு மூணு ஓ.கே. வா?" என்று கேட்க,



"டேய் நான் உன்னோட கெஸ்ட் டா. வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட வேலை வாங்குவியா நீ? வெரி பேட் ஆதி..." என்று நக்கலடித்தான் பரசுராம்.


"அது சரி... பாவம் உங்களுக்குப் போர் அடிக்குமேனு சொன்னா, நீங்க ரொம்பத் தான் பண்றீங்க பாஸ்..."


"ஓஓஓ... நீ அப்படிச் சொல்றீயா? ஓ.கே. மூணு பேர் உனக்கு, மூணு பேர் எனக்கு. முடிஞ்ச வரை உயிரோட பிடிக்கப் பாரு... எப்பவும் போலக் கொன்னுடாத டா...” என்றவன், "டேய் முஞ்சில உல்மா கட்டுன ரவுடிகளா வாங்க டா..." என்று களத்தில் இறங்க,


ஆதித், ராம் கொடுத்த அடிகளைத் தாங்க முடியாமல் வந்த ரவுடிகள் திணறினாலும், ஆதித், ராம் இருவரையும் கொன்று விட்டு அவர்கள் கையில் இருக்கும் எவிடன்ஸை எடுத்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து ராம், ஆதித்தை தாக்கினர்.


ஆதித்தின் பின்னங்காலில் கத்திபட்டு தோல் கிழிந்து ரத்தம் வர, ராமிற்கு வலது தோள்பட்டையில் கத்தி வெட்டியதில், அவன் சட்டையின் கை பகுதி மொத்தமும் ரத்தமானது. இருந்தும் இருவரும் அந்த ரவுடிகளை அனைவரையும் அடித்து நொறுக்கி, அந்த ரவுடிகளின் கத்தியை வைத்தே அவர்களின் உடலை கிழிக்க, அந்த நேரம் பார்த்துப் பைக்கில் வந்த மூன்று பேர் அந்த ரவுடி கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு ஒருவன் ராமின் முதுகுக்குப் பின்னால் கத்தியோடு வர, இதைக் கவனிக்காத ராம் தன் கையில் சிக்கி இருந்த ஒருவன் காலை உடைப்பதில் கவனமாக இருக்க, இதைப் பார்த்த ஆதித், "பாஸ் திரும்பி பாருங்க..." என்று கத்தி கொண்டே ராம் அருகில் வருவதற்குள், கத்திமுனை ராமை நெருங்கி இருந்தது.


கத்தி பிடித்திருந்த ரவுடியின் முறிந்த கை, மணிக்கட்டோடு வெட்டப்பட்டுத் தரையில் விழுந்து கிடக்க, அவன் கத்திய கத்தில் ராமும் ஆதித்தும் அதிர்ந்து திரும்பி பார்க்க, அங்கே கண்கள் சிவக்க, ரத்தம் சொட்டும் கத்தியை கைகளில் பிடித்துக் கொண்டு, கொலை வெறியோடு காளி போல், அவர்கள் முன் நின்ற யுக்தாவை பார்த்து ரவுடிகளோடு சேர்த்து, ராமும், ஆதித்தும் கூட ஒரு நிமிடம் நடுங்கி விட்டனர்.