அழகிய தமிழ் மகள் 4


 அழகி 4 


ஆதித்தின் விரிந்திருந்த இமைகளைத் தாண்டி கண்கள் வெளியே வந்து விடுமோ என்று நினைக்கும் அளவு ஆவென வாயைப் பிளந்து யுக்தாவை பார்த்திருக்க, ராமின் விழிகளோ மகிழ்ச்சியில் கலங்கியிருந்தது.


யுக்தா தன் கையில் இருந்த கத்தியை சுழற்றி கீழே விழுந்து கிடந்தவன் வயிற்றில் இறக்கியவள், "யார் மேலடா கை வைக்குறீங்க?? பொறம்போக்கு நாய்களா..." என்றவள் கண்கள் அக்னியாக ஜொலிக்க, அவன் கன்னத்தில் இடியெனத் தன் கையை இறக்கினாள். அதுவரை தங்களில் ஒருவன் குத்துப்பட்ட கிடந்ததைப் பார்த்துப் பயத்தில் இருந்த ரவுடிகள், யுக்தாவின் பார்வையில் முழுவதும் நடுநடுங்கி நின்றனர்.


யுக்தா நிமிர்ந்து ராமை பார்க்க, அவன் கண்களிலேயே ஐம் ஓகே என்று இமைமூடி திறந்து அவளுக்குப் பதில் சொல்ல, ராமை பார்த்துக் கொண்டே கீழே கிடந்தவன் வயிற்றில் செறுகி இருந்த கத்தியில் தான் கால் ஷூவை வைத்து மிதித்து, கத்தியை இன்னும் அவனுள் இறக்கி அவன் உயிரை உடலை விட்டு வெளியேற்றினாள்.


ஒருவன் கத்தியோடு யுக்தாவை நோக்கி ஓடி வருவதைப் பார்த்து, ஆதித் யுக்தாவின் அருகில் செல்லப்போக, ராம் அவன் தோளில் கைவைத்து தடுத்தவன், "நோ ஆதி... ஜஸ்ட் சில் அன்ட் என்ஜாய் தீ பைஃட் மேன்..." என்றவன், கைகட்டி காரில் சாய்ந்து நின்று கொள்ள, ஆதித்குக்கு மண்டை காய்ந்தது. தன்னை நோக்கி வந்த ஒரு ரவுடியை தூக்கி போட்டு அவன் தொண்டையில் மிதித்து, அவன் கோவத்தைக் காட்டியவன், ‘இங்க என்ன தான் டா நடக்குது?’ என்ற ரேஞ்சில் ராமை, யுக்தாவையும் மாறி மாறி பார்த்தான்.


யுக்தாவை நோக்கி கத்தியோடு வந்தவன் அவள் நெஞ்சில் கத்தியை இறக்க பார்க்க, யுக்தா வெகு சாதாரணமாகத் தன் இடது கையால் அவன் வலதுகை மணிக்கட்டை பிடித்துத் திருப்பியவள், தன் வலதுகையை அவன் கழுத்தில் வைத்து மடக்கி அவன் குரல்வளையை நெறிக்க, அவன் வலி தாங்க முடியாமல் கீழே குனிந்த நேரம், யுக்தா தன் வலக்கையை மடக்கி முழங்கையை வைத்து அடித்த அடியில், அவன் கைமுட்டி உடையும் சத்தம் ஆதித்க்கு தெளிவாகக் கேட்டது.


ஒருவன் காரில் சாய்ந்து நின்ற ராமை அடிக்க வருவதைப் பார்த்த யுக்தா ஓடி சென்று அவன் தலைமுடியை கெட்டியாகப் பிடித்தவள், அவன் வலது கால் முட்டியின் பின்பக்கம் ஓங்கி மீதிக்க, தரையில் முட்டிபோட்டு உட்கார்ந்தவனின் கழுத்தை தன் வலதுகாலை வைத்து மடக்கி பிடித்தவள், ஒரு திருப்பில் அவன் கழுத்து எலும்பை உடைத்துவிட, ஆதித்க்கு தான் இதயத்துடிப்பு எகிறியது!


‘அன்னைக்குக் குடோன்ல என்னைக் காப்பத்தின ஆள் கூட இதே ஸ்டைல்ல தான கழுத்தை ஒடச்சான்?’ என்று யோசித்தவன், அடுத்த நொடி, "பாஸ் அப்போ அன்னைக்கு என்னைக் காப்பத்தினது நீங்க இல்லையா??" என்று உச்சகட்ட அதிர்ச்சியில் கேட்க,


ராம் அலட்சியமாகத் தோளை குலுக்கியவன், "நான் எப்ப டா அப்படிச் சொன்னேன்?" என்று நக்கல் குரலில் கேட்க,


ஆதித் கடுப்பானவன், "அப்போ இந்தத் திமிர் மேடம் தான் அன்னைக்கு என்னைக் காப்பாத்திச்சா? ஆனால் இவ ஏன் பாஸ் என் பின்னாடி வரணும்? ஏன் என்னைக் காப்பாத்தனும்?" என்று கேட்க,


ராம் இதழ் பிதுக்கி எனக்குத் தெரியாது ஆதி "ஒருவேலை இது பிரபுவோட வேலையா இருக்கலாம்...??


யுக்தா மிச்சம் மீதி இருந்த அனைவரையும் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிழித்துப் போட்டுவிட்டு, தன் ஜீப்பிற்கு வந்தவள், வாட்டர் பாட்டில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் வாறி அடித்து, கையில் இருந்த ரத்த கறைகளையும் கழுவி விட்டு, தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தையும், தன் கைகளைத் துடைத்தவள், ஜீப்பில் இருந்து ஒரு பெரிய ஆரஞ்ச் பழக்கூடை எடுத்துக் கொண்டு ராம், ஆதித் காரின் அருகில் வந்தவள், இடது புருவம் உயர்த்திக் கார் கதவை காட்ட, ராம் சிரித்துக் கொண்டே கார் கதவை திறந்துவிட ஆரஞ்ச் கூடையைக் காரில் வைத்தவள், "கேஸ்ல வைச்சு வேடிக்கப் பாக்க தான் உங்களுக்கெல்லாம் கவர்மென்ட்ல கன் (gun) தந்தாங்களா? இல்ல புல்லட்டை மறந்து வீட்லயே வச்சிட்டு வந்திட்டிங்களா?" என்று நக்கலான குரலில் கேட்க, ஆதித்க்குப் பயங்கரமாகக் கோவம் பொத்துக் கொண்டு வர,


"மேடம்... ச்சே... ச்சே... இல்ல... இல்ல... நான் தான் வேலையை ரீசைன் பண்ணிட்டேனே... இனி நோ மோர் மேடம். இங்க பாருங்க சம்யுக்தா..." என்று அவள் பெயரை அழுத்தி சொன்னவன், "இந்தச் சப்ப மேட்டருக்கெல்லாம் நாங்க கன் யூஸ் பண்ணி பழக்கம் இல்ல..." என்று கெத்தாகச் சொல்ல,


ஆதித்தின் ரத்தம் வழியும் காலை பார்த்து, "சப்ப மேட்டரு?" என்று நக்கலாகச் சொன்னவள், "ம்ம்... ம்ம்... பாத்தாலே தெரியுது..." என்றவள் பார்வை பின்னால் செல்ல, அங்குத் தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற ரவுடி ஒருவன், ஆதித்தை நோக்கி துப்பாக்கியை குறிப் பார்ப்பது தெரிந்து, “ஏய் ஆதித் நகரு...” என்று கத்திய யுக்தா, ஆதித்தை பிடித்துத் தன்புறம் இழுக்க, ஆதித்தை நோக்கி வந்த புல்லட், யுக்தாவின் வலது தோள்பட்டையைத் துளைத்துச் சென்றது.


தீடிரென நடந்த நிகழ்வில் ஆதித்தும், ராமும் அதிர்ந்து நிற்க, யுக்தா சற்றும் தளராது, கீழே கிடந்த பெரிய கல்லை, தன் இருகாலிற்கு இறுக்கி பிடித்தவள், காலை வேகமாக மடக்கி கல்லை மேலே வீசி வலதுகால் கொண்டு அந்தக் கல்லை உதைக்க, அது சரியாக அவளைச் சுட்டவன் நடுமண்டையில் பட்டு தலை பிளந்தது.


"சாம்..." என்று கத்திக்கொண்டே ராம் யுக்தா அருகில் வர, யுக்தா ராம் தோளிலேயே மயங்கி சரிந்தாள்.


சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் யுக்தா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். ஆதித் தன்னைக் காப்பாற்ற போய்த் தான் யுக்தாவுக்கு இந்த நிலைமை வந்தது என்று ஒரு மனம் கலங்கி துடிக்க, இன்னொரு மனமோ யுக்தாவை ராம், சாம் என்று அழைத்ததை நினைத்து மிகுந்த குழப்பத்தில் இருந்தது.


ப்ரணவ்வை மடியில் வைத்திருந்த ராம் அருகில் வந்த ஆதித், "இங்க என்ன நடக்குது பாஸ்? யாரு பாஸ் இந்தப் பொண்ணு? முதல்ல இது பொண்ணு தானா? என்ன அடி அடிக்குது! உடம்புல புல்லட் பட்டிருக்கு. ஆனால் என்னமோ தூசு பட்ட மாதிரி அத தட்டிவிட்டுட்டு, சுட்ட அந்த ரவுடி மண்டைய உடச்சிட்டு சாவகாசமா மயங்கி விழுது? நீங்க அவங்களுக்கு அடிபட்டதைப் பாத்து அப்படித் துடிக்கிறீங்க? உங்களுக்கு இந்தத் திமிர் மேடத்தை முன்னமே தெரியுமா பாஸ்?


அப்பறம் இந்த வினய்... யுக்தாக்கு அடிபட்டுச்சுன்னு நீங்க சொன்னதும் அந்தப் பதறு பதர்றாரு... உடனே தனிப் பிளேன் வரவச்சு யுக்தாவ இந்த ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கி வர ஏற்பாடு பண்ணிட்டு, இவள பார்க்க உடனே அவ்ளோ தூரத்துல இருந்து கெளம்பி வராரு... இங்க நிஷா, மது அக்கா எல்லாரும் அவளுக்கு என்னமோ ஏதோன்னு பயந்து போய் இருக்காங்க... ஏன் பாஸ்? யாரு பாஸ் இவ? இவ தான் உங்க சாம் ஆஆஆ?" என்று கேட்ட ஆதித்திற்கு, ராம் சொன்ன ஒரு பதில், "அவ எங்க உயிரு ஆதி...!” என்ற வார்த்தைகள் மட்டும் தான்.

ராமை ஆழமாகப் பார்த்த ஆதித்தின் மனதில் அந்த நொடி யுக்தாவை பற்றி ஆயிரம் கேள்விகள் முளைத்தது.


வினய் பதறியடித்து ஹாஸ்பிடல் வந்தவன், ராமின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, "என்ன டா ஆச்சு அவளுக்கு? நீ கூடத் தான இருந்த... அப்புறம் எப்படி டா அவளுக்கு அடிபட்டுச்சு? அவ மேல புல்லட் படுற வரைக்கும் நீ என்ன காலாட்டிட்டு இருந்த? நான் அப்பவே சொன்னேனில்ல, அவ அங்க தனியா இருக்க வேணாம், இங்க கூட்டி வந்துடலான்னு... நீ தான் அவ கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும். அப்ப தான் அவ எல்லாத்தையும் சீக்கிரமா மறப்பா, அப்படி இப்படின்னு என்னை ப்ரைன்வாஷ் பண்ண...


நீ அப்பவே நான் சொன்ன மாதிரி அவள இங்க கூட்டி வந்து நம்ம கூடவே வச்சிருந்திருந்தா, இன்னைக்கு அவளுக்கு இப்படி ஆகி இருக்காதில்ல டா... எல்லாம் உன்னால தான் டா. அவ என் உசுறு டா...! அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு... உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..." என்றவன், ராம் கன்னத்தில் மாறி மாறி அறைய, வினய் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த நிஷாவின் பார்வை, வினய்யிடமே நிலைக்குத்தி இருக்க, மது டாக்டராக இருந்தும் யுக்தாவை அந்த நிலையில் பார்க்கும் சக்தி தனக்கு இல்லை என்று வெளியிலேயே இருந்தவள்.


தன் கணவனை அடிக்கும் தன் அண்ணனை தடுக்கத் தோன்றாது, நிஷா அருகில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளும் யுக்தாவை கூர்கில் இருந்து இங்கு அழைத்து வந்துவிடலாம் என்று பலமுறை ராமிடம் சொல்ல, ராம் அதை மறுத்தவன்,


"சாம்க்கு இப்ப தனிமை தேவைப்படுது. அதனால தான் அவ நம்மளை விட்டுப் போயிருக்கா... அவ மனசு கொஞ்சம் சரியான பிறகு அவளாவே நம்மகிட்ட வந்துடுவா... அவளால மட்டும் நம்ம எல்லாரையும் விட்டு இருக்க முடியுமா மது?” என்று சொல்லி, மதுவின் வாயை அடைத்து விடுவான். அதோடு யாரும் யுக்தாவை சென்று பார்க்க கூடாது என்றும் ஸ்ரிட்டாகச் சொல்லிவிட்டான். அதனால் தான் இப்போது ராம் அடி வாங்குவதைப் பார்த்தும், உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.


கண்ணாடி கதவு வழியே யுக்தாவை பார்த்துக் கொண்டிருந்த ராம், "அவளுக்கு ஒன்னும் ஆகிடாதில்ல வினய்?” என்று சின்னப் பிள்ளை போல் கேட்டவனை முறைத்த வினய், சட்டென ராம்மை இறுக்கி அணைத்து,


"லூசு மாதிரி உளராத டா. அவளுக்கு ஒன்னும்ம் ஆகாது. அவள பத்தி உனக்குத் தெரியாதா? அவ சீக்கிரம் சரியாகிடுவா..." என்று ராம் முதுகை அவன் ஆறுதலாகத் தடவ, ஆதித், வினய் ராமை அடித்ததில், வினய் மேல் சற்றுக் கோபமாக இருந்தவன், இப்போது இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்து, இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலயே என்று ஒரு பெருமூச்சு விட்டவன், ஓரமாகச் சென்று அமர்ந்து விட்டான்.


ஆதித்க்கு பல வருடமாக ராமை தெரியும் என்றாலும், சென்னை வந்த இந்த ஒன்றரை வருடமாகத் தான் ராமின் குடும்பத்தைப் பற்றியும், அவனைச் சேர்ந்தவர்கள் பற்றியும் முழுதும் தெரிந்து கொண்டான். அவர்கள் பேசும் போது சாம் என்ற பெயரை அடிக்கடி ஆதித் கேட்டிருக்கிறான் தான். அவர்கள் அனைவருக்கும் சாம் என்ற நபர் எவ்வளவு முக்கியம் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும், அந்தச் சாம் யாரென்று ஆதிக்க்குத் தெரியாது.


ஒன்றரை வருடத்திற்கு முன்பு மும்பையில் இருந்த ஆதித்தை, இங்கு ஒரு கேஸ்சில் அவன் உதவி தேவை என்று ராம் தன் போலிஸ் கமிஷனரிடம் கேட்டு, அவனைத் தமிழ்நாட்டிற்கு வர வைத்தான். ஒரு கேஸ்சில் எவிடன்ஸ் கலெக்ட் பண்ண ஆதித்தை கூர்க் அனுப்பியது கூட ராம் தான்.


யுக்தா கூர்க்கில் இருப்பது தெரிந்து ராம் பிரபுவிடம் ஆதித்க்கு யுக்தா பற்றி எதுவும் தெரியக்கூடாது என்று உறுதியாகச் சொல்லி விட, பிரபு யுக்தா பற்றி ஆதித்திடம் மூச்சுகூட விடவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் யுக்தாவின் நிம்மதி கெட்டுவிடக் கூடாது என்று தான் ராம் இப்படிச் செய்திருந்தான். கூர்க்கில் சம்யுக்தாவை அனைவரும் யுக்தா என்றழைக்க, அவள் தான் சாம் என்று ஆதிக்கு தெரியாமலே போனது.


ஒருமணி நேரம் ஒரு யுகமாகக் கழிய, ராமின் தம்பி விஷ்ணு, அவன் காதலி ராஷ்மி, வெற்றி செல்வன் அவன் மனைவி கயல்விழி என்று ஒரு கூட்டமே ஹாஸ்பிட்டலில் கூடிவிட்டது.


ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டர், ஜீவாவை அனைவரும் சூழ்ந்து கொள்ள, "ஏய் வெய்ட் வெய்ட்... அந்த எருமைக்கு ஒன்னும் இல்ல... புல்லட்டை எடுத்தாச்சு... அவ நல்லா இரும்பு குண்டாட்டாம் நல்லா தான் இருக்கா...” என்றவன், ராமின் கன்னத்தில் இருந்த விரல் தடத்தைப் பார்த்து விட்டு, வினய்யை முறைத்தவன்


“ஏன் டா இப்படி? உள்ள இருக்க அந்தப் பிசாசுக்கு மட்டும் நீ இவன அடிச்ச விஷயம் தெரிஞ்சுது, உன்ன என்ன பண்ணுவா தெரியுமில்ல?" என்று செல்லமாக மிரட்ட,


"அவ என்ன டா என்னைப் பண்றது? எங்க எல்லாரையும் ரெண்டு வருஷம் தவிக்க விட்டு போனதுக்கு, அவள நான் என்ன பண்றேன்னு பாரு...” என்றவன் வார்த்தையில் கோபமிருந்தாலும், அந்தக் கோவத்திலும், அவன் யுக்தா மீது வைத்திருக்கும் பாசம் தான் அனைவருக்கும் தெரிந்தது.


மயக்கத்தில் இருந்த யுக்தாவை நார்மல் ரூமிற்க்கு மாற்றி விட, வினய் அவளை விட்டு இன்ச் கூட அசையவில்லை. அவன் காலையில் இருந்து எதுவும் உண்ணவில்லை என்று, நிஷா அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, அவன், “எனக்கு எதுவும் வேணாம்... நீ போ...” என்றதும் வாடிய முகத்துடன் திரும்பிய நிஷாவின் கையைப் பிடித்தவன், ஜூஸை வாங்கிப் பாதிக் குடித்துவிட்டு மீதியை அவளிடம் தந்தான். அவளும் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். அவன் சாப்பிடாமல் அவள் எதுவும் சாப்பிடமாட்டாள் என்று ஜூஸை வாங்கிப் பாதிக் குடித்துவிட்டு, மீதியை அவளிடம் கொடுத்தான். யுக்தா இல்லாத இந்த ரெண்டு வருடமும் வினய், நிஷாவின் வாழ்க்கை இந்தப் புரிதலில் தான் போய்க் கொண்டிருக்கிறது.


யுக்தா தனக்கு ஒரு மாற்றம் தேவை என்று ஊரை விட்டு சென்றுவிட, அவளின் அந்தச் செயல், இங்கு அவளுக்காக வாழும் அனைத்து ஜீவன்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றதை ஏற்படுத்தி இருந்தது.


யுக்தாவை பார்த்துவிட்டு வெளியே வந்த ராம் அமைதியாக அமர்ந்துவிட, அவன் அருகில் வந்த ஆதித், மெதுவாக அவன் கையை அழுத்தியவன், "என்னால தான் யுக்தாக்கு..." என்று இழுக்க,


"நோ ஆதி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... அவளுக்கு ஒன்னும் ஆகாது. யூ டோன்ட் வொரி!" என்றான் ராம்.


"உங்களுக்கு யுக்தாவ?”


"தெரியும் ஆதி... அவ பொறந்த நாள்ல இருந்து அவளை எனக்குத் தெரியும். என் ரெண்டு கையால நான் தூக்கி வளர்த்த என்னோட செல்லபிசாசு ஆதி அவ..."