அழகிய தமிழ் மகள் 5
அழகி 5
ராம் யுக்தாவை பற்றி, இல்லை இல்லை, அவனோட சாம் பற்றி சொல்லத் தொடங்கினான்.
"நான், வினய், சாம் எங்க மூணு பேரோட அப்பாவும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ் ஆதி... மதுரையில ஒரு அழகான கிராமம் தான் எங்களுக்கு சொந்த ஊர். அங்க இருந்து சென்னைக்குப் படிக்க வந்தாங்க எங்க மூணு அவபேரோட அப்பாகளும். படிப்பு முடிஞ்சதும் மூணு பேரும் சேர்ந்து இங்கயே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணாங்க. அப்ப பிஸ்னஸ் ரொம்ப நல்லாவே போச்சு... கொஞ்ச நாள் கழிச்சு எங்க அப்பாவும், வினய்யோட அப்பாவும், சொந்தத்திலயே எங்க அம்மாக்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... சாம் அப்பா அவர் கூடப் படிச்ச பொண்ணைக் காதலிச்சு, வீட்டுப் பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு... மூணு குடும்பமும் ஒரு பில்டிங்க்ல, அடுத்தடுத்த மூணு ப்ளாட்சை வாங்கி செட்டிலாகிட்டாங்க...
எங்கப்பா அம்மாக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சு நான்ன் பொறந்தேன். எனக்கடுத்து மூணு மாசம் கழிச்சு வினய்யும், மதுராவும் பொறந்தாங்க... ரெண்டு பேரும் ட்வின்ஸ்... வினய்யோட அம்மாவோட தங்கச்சிக்கு கொழந்த பொறந்து இறந்து போய்டுச்சு... இனி அவங்களுக்குக் கொழந்தையே பொறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க... வினய்யோட அப்பா மதுராவை அவங்களுக்குத் தத்து கொடுத்துட்டாரு... நான் பொறந்த ஒன்ரறை வருஷம் கழிச்சு விஷ்ணு பொறந்தான். ஆனால் சாம்மோட அப்பா பரிதி மாமாக்கும், ஆனந்தி அத்தைக்கும் மட்டும் கல்யாணம் ஆகி, நான்கு வருஷம் வரை குழந்தையே இல்ல. நாங்க மூணுபேரும் தான் அங்களுக்குக் குழந்தைங்க...
கொஞ்ச நாள் கழிச்சு அத்தை கன்சீவ் ஆனாங்க... மூணு வருஷம் கழிச்சு ஒரு குட்டி பாப்பா எங்க வீட்டுக்கு வரப்போகுதுன்னு எனக்கும், வினய்க்கும் செம்ம சந்தோஷம். அதோட அந்தப் பாப்பா பொண்ணா இருக்கணும்னு வினய் தினமும் கடவுள் கிட்ட வேண்டிப்பான். அவனுக்கு அவனோட தங்கச்சி மதுராவ ரொம்பப் பிடிக்கும். அவ லீவ்க்கு இங்க வரும் போதெல்லாம், அவ கூடவே தான் இருப்பான. லீவ் முடிஞ்சு அவ திரும்பி போகும்போது, அழுது ஊரையே கூட்டிடுவான். அவனை சமாதானப்படுத்துறது பயங்கரக் கஷ்டம். எனக்குத் தங்கச்சி பாப்பா வேணும்னு தினமும் அழுவான். அதனால பொறக்கப்போற இந்த புதுப் பாப்பா பொண்ணா இருக்கணும்னு அவன் மட்டும் இல்ல, நாங்க எல்லாரும் ஆசைப்பட்டோம்.
தினமும் அத்தை வயித்துல இருக்க குட்டி பாப்பாகிட்ட, நான்னும் வினய்யும் பேசிட்டு இருப்போம்... அத்தை எங்க கையை எடுத்து அவங்க வயித்துலவச்சு, 'பாருங்க டா இந்தக் குட்டிய... அம்மா நான் பேசுனா ரியாக்ட் பண்ண மாட்டேங்கிறா... ஆனால் நீங்க ரெண்டு பேர் பேசும் போது மட்டும், வயித்துக்குள்ள இந்த உருளு உருளுறான்னு...' சொல்லுவாங்க...
வயித்துல குழந்தை அசைவை நாங்க எங்க கைகளில் பீல் பண்ணும் போது எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் ஆதி! நாங்க ரெண்டு பேரும் பெருமையா, அத்தைகிட்ட, 'குட்டி பாப்பாக்கு உங்களை விட எங்களைத் தான் அத்தை ரொம்ப புடிக்கும். அதான் நாங்க பேசும்போது மட்டும் அவ ரியாக்ட் பண்றான்னு கின்டல் பண்ணுவோம்...'
அத்தை எங்க தலையில் மெதுவாகக் கொட்டிட்டு, 'உண்மை தான் டா... இந்தக் குட்டி பொறந்ததும் உங்ககிட்ட தந்துடுறேன்... நீங்களே வளர்த்துக்கோங்க...' அப்படின்னு சொல்லுவாங்க..." என்று ராம் சொல்ல அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
சம்யுக்தாவின் அம்மா விளையாட்டாக சொல்ல ராம், வினய் மனதில் அது ஆழமாகப் பதிந்துவிட்டது.
பிரசவத்திற்கு ஆனந்தி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருக்க, இங்கு வினய்யும், ராமும் பாப்பா பிறந்ததும் முதல்ல எங்க கையில தான் தரணும் என்று கண்டிப்போடு சொல்லிவிட்டு, அவர்களின் குட்டி தேவதையை எதிர்பார்த்து காத்திருந்தனர். தனக்காகக் காத்திருக்கும் அன்பு உள்ளங்களை அதிகம் காக்கவைக்காமல் தன் பிஞ்சு பாதங்களைப் பூமியில் பதித்தாள் அவர்களின் சம்யுக்தா.
ராம், வினய்யின் ஆசைப்படி குழந்தையை அவர்கள் கையில் தரச் சொன்னார் பரிதி. சம்யுக்தாவை கையில் ஏந்திய அந்த நிமிடம், "இனி உன்னை நாங்க ரெண்டு பேரும் பத்திரமா பார்த்துப்போம் குட்டி பாப்பா..." என்று யுக்தாவின் பிஞ்சு கைகளில் தன் கையை வைத்து "பிராமிஸ்" என்று இருவரும் சொல்ல, அப்போது ராமுக்கும், வினய்க்கும் தெரிந்திருக்காது, அவர்கள் வாழ்வில் ஒருமுறை யுக்தாவிற்கு இவர்கள் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற முடியாமல் போகுமென்றும், அது யுக்தாவின் வாழ்க்கையையே புரட்டி போடுமென்றும்.
கண்களை மூடி இருந்த குழந்தை சம்யுக்தாவின் முகம் அழகாய் மலர்ந்து சிரித்தது. இப்போதும் யுக்தா பிறந்த நாளை நினைக்கும்போது மலரும் ராமின் முகத்தைப் பார்க்க ஆதிக்கே வியப்பாக இருந்தது!
"சாம் எங்க மூணு குடும்பத்துக்கும் இளவரசியாவே மாறிட்டா ஆதி... எனக்கு அவ உலகம்னா, வினய்க்கு அவ தான் உயிர். கண்ணுல வைச்சு அவளைப் பாத்துக்குவான். நானும், வினய்யும் இப்படின்னா, விஷ்ணுவுக்கு அவனை விடச் சின்னவ சாம் தான் அவனுக்கு பாடிகார்ட். யாராவது விஷ்ணுவை அடிச்சோ, திட்டியோ இருந்தா, அவங்க சாம்கிட்ட இருந்து தப்பவே முடியாது. அவனும் அவகிட்ட தான் வந்து அவனை அடிச்சதை சொல்லுவான்.
பல முறை விஷ்ணுவை அடிச்ச அவள விடப் பெரிய பசங்களை ரோட்டில் போட்டு புரட்டி எடுத்த சம்பவமும் உண்டு தெரியுமா ஆதி? நான்னும், வினய்யும் தான் அவளைப் புடிச்சு வீட்டுக்கு இழுத்து வருவோம்... அம்மா ஏன்டி இப்படி பண்றேன்னு கேட்டா, 'அவனுங்க என் விஷ்ணுவை அடிச்சானுங்க... அதான் நான் அவனுங்களை அடிச்சேன்னு...' திமிரா பதில் சொல்லுவா..." என்று சொல்லும் போது ராமிற்க்கு மெலிதாக சிரிப்பு வர, 'ஓஓஓ... அந்தத் திமிரழகி சின்ன வயசுலயே பெரிய ரவுடி தான் போல!!' என்று நினைத்த ஆதிக்கும் கூடச் சிறு புன்னகை தோன்றியது.
அழகாகக் கூட்டில் அன்பில் இணைந்த இவர்கள் வாழ்க்கையில் புதிதாக வந்து சேர்ந்தனர் வெற்றி செல்வன், ஜீவா குடும்பத்தினர்.
"வெற்றியும், ஜீவாவும் எங்க ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டில் குடிவந்தாங்க... வெற்றிக்கும், எனக்கும், வினய்க்கும் ஒரே வயசு. சோ டக்குன்னு ப்ரண்டாகிட்டோம்... விஷ்ணுவும், ஜீவா கூட அப்படி தான். வெற்றி வீட்லயும் பெண் குழந்தை இல்லாமல் போக, அங்கேயும் சாம் ஆட்சி தான். நாங்க படிச்ச ஸ்கூல் தான் சாம்மும் படிச்சா... தினமும் எதாவது சண்டைய இழுத்துட்டு வந்து நிப்பா... எப்பபாரு அவளைவிட பெரிய பசங்ககிட்ட தான் சண்டைக்குப் போவா... இதுல இவ அவனுங்களை அடிச்சுட்டான்னு, எங்ககிட்ட வந்து சொல்லும் போது பயங்கர சிரிப்பு வரும் ஆதி. ஆனா ஒன்னும் அவ சண்ட போட்டான்னா அது கண்டிப்பா நியாயமான விஷயமா தான் இருக்கும். எப்பவும் அவ தப்புக்கோ, தப்பானவங்களுக்கோ சப்போர்ட் பண்ண மாட்டா... அது யாரா இருந்தாலும் சரி, தப்புன்னா தப்பு தான்..."
அவளின் அந்தக் குணம் தான் பின்னாளில், அவள் வாழ்க்கையையே சிதைக்கப்போகிறது என்று யாருக்கு தெரியும்?
"ஸ்கூல் படிப்பை முடிச்சு நான், வினய், வெற்றி ஒரே காலேஜில் ஜாயின் பண்ணோம். ஜீவாவும், விஷ்ணுவும் கூட அவங்க ஸ்கூலிங் முடிச்சுக் காலேஜ் வந்துட்டானுங்க... அதுக்கு அப்புறம் நான் ஐபிஎஸ் படிக்க முடிவெடுக்க, வெற்றி ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டான். வினய், விஷ்ணு எங்க அப்பாகளோட பிஸ்னஸை எடுத்து நடத்த விரும்பி எம்.பி.ஏ படிச்சாங்க... ஜீவா எம்.பி.பி.எஸ்ன்னு எங்க லைஃ பை ஸ்டார்ட் பண்ணோம்.
சாம்மும் ஸ்கூல் முடிச்சுக் காலேஜ் வந்தா... அங்க அவளுக்கு இன்னொரு அன்பு உறவாக நிஷா கிடைச்சா... கொஞ்ச நாள்லையே நிஷா, சாம் வாழ்க்கையில் ஒரு அசைக்கமுடியாத இடத்தைப் பிடிச்சிட்டா... ஆனால் அதோ நிக்குறானே வினய்..." என்று அழுது கொண்டிருந்த வினய்யை காட்டியவன்,
"அவனுக்கு நிஷா சாம்கிட்ட நெருங்கி பழகுறது சுத்தமா புடிக்கல... அவனுக்கு சாம் மேல பொசசிவ்னெஸ் ரொம்ப ஜாஸ்தி..." எனும் போதே, ஆதி "பார்த்தாலே தெரியுது பாஸ்..." என்று சொல்லி ராமின் கன்னத்தைச் சுட்டிகாட்ட,
ராம் சின்னதாகச் சிரித்தவன், "ஆமா ஆதி... அவன் அப்படி தான். அதனாலயே நிஷாவை காரணம் இல்லாமல் வெறுக்க ஆரம்பிச்சிட்டான். சாம் கூட வீட்டுக்கு வரும் நிஷாவோட நாங்க அன்பாகப் பழகுவோம். அவளை எங்க எல்லாருக்கும் ரொம்பப் புடிக்கும். ஆனால் இந்த வினய் மட்டும் தேவையில்லாமல் அவளை முறைச்சிட்டும், திட்டிட்டும் இருப்பான்.
நாளாக நாளாக நிஷாவுக்கு வினய்க்கு அவள புடிக்கலன்னு தெரிஞ்சது. அதற்கான காரணத்தையும், அவ புரிஞ்சுகிட்டா... அதனால எங்க எல்லார்கிட்டையும் நல்லா பேசி பழகுறவ, வினய்கிட்ட மட்டும் தள்ளியே இருப்பா... அது இன்னும் அவனுக்குக் கடுப்பாகி போச்சு...
நாளுக்கு நாள் சாம், நிஷா நட்பு வளர, வினய்க்கு நிஷா மேல வெறுப்பும் வளர்ந்துடுச்சு. அப்போ தான் ஆனந்தி அத்தையோட அப்பா இறந்து, அவங்க அப்பாவோட பிஸ்னஸ்சை பாத்துக்க வேண்டிய பொறுப்பு பரிதி மாமா கைக்கு வந்துச்சு... அதனால அவர் அத்தையையும், சாம்மையும் அவர் கூட மும்பை கூட்டிப்போக முடிவு பண்ணிட்டாரு...
அந்த நேரம் பார்த்து நான்னும் வெற்றியும் வெளியூர்ல டிரெய்னிங்ல இருந்தோம்.. வினய் பிஸ்னஸ் விஷயமா வெளியூர் போயிருந்தால் சாம்மால ஒன்னும்ம் பண்ண முடியல... எங்க அம்மா, அப்பா அவ படிப்பை காரணம் காட்டி அவளை இங்க விட்டுட்டுப்போக சொன்னாங்க... ஆனால் மாமா மும்பை போய்ப் படிப்ப கன்டின்யூ பண்ணிக்கலாம், சமியை விட்டு எங்களால இருக்க முடியாதுனு சொல்லி அவளைக் கூட்டிட்டு போய்ட்டாரு...
ஊருக்கு வந்த வினய் சாம் மும்பை போய்டான்னு தெரிஞ்சு ஒரு ஆடு ஆடி தித்துட்டான். அப்புறம் நாங்க எல்லாரும் பேசி அவனை சமாதானம் பண்ணி, மும்பை போய் ஒரு முறை சாம்மை பார்த்துட்டு வந்த பிறகு தான் அடங்குனான். சாம் போன கொஞ்ச நாள்லையே நிஷாவும் மும்பை போய்ட்டா...
தினமும் ஃபோன்ல கேக்குற சாம் வாய்ஸ் தான் எங்களுக்குச் சந்தோஷமே! வீட்டுல நடக்குற எந்தப் பங்ஷனும் சாம், நிஷா இல்லாம நடக்காது... அப்படி ஒரு முறை ஒரு பங்ஷனுக்கு இங்க வந்த இந்த ரெண்டு பிசாசும் நான் எழுதுன மாதிரி லவ் லெட்டர் எழுதி மதுரா கிட்ட தந்திட்டு, அவ எனக்கு எழுதுன மாதிரி ஒரு லெட்டர் எழுதி, அதுல உங்களுக்கு என்னைப் புடிச்சிருந்தா நைட் எட்டு மணிக்கு மாடிக்கு வாங்க, நம்மள பத்தி பேசணும் எழுதி என்கிட்ட தந்துடுச்சுங்க..." என்று அந்த நாளின் நிகழ்வில் முழ்கினான் ராம்.
மறுநாள் தீபாவளி என்பதால் யுக்தாவும், நிஷாவும் மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தனர்.
ராம் கையில் இருந்த கடிதத்தை படித்தவன் முகத்தில் தவுசன் வாட்ஸ் பல்ப் எரிய, இரவு எட்டு மணிக்காக காத்திருக்க, மதுரா கையில் இருந்த கடிதத்தை பத்தாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தாள். ராம் கடிகாரத்தையே பார்த்திருந்தவன் இதற்கு மேல் முடியாது என்று, ஏழு மணிக்கே மாடிக்கு போய் மதுராவிற்காகக் காத்திருக்க, சரியாக எட்டு மணிக்கு மதுரா தயங்கி தயங்கி மாடிக்கு வந்தாள்.
ராம் அருகில் மதுரா வந்து நிற்க, அவளை பார்த்த ராமின் கண்களில் அவள் மீதான காதல் ஜொலிக்க, அதைப் பார்த்த மதுராவிற்கு அவன் காதல் அப்பட்டமாகப் புரிய, லேசாக இதழ் வளைத்தவள் வெட்கத்தில் தலை குனிய, அவள் நாடியில் கைவைத்து நிமிர்த்திய ராம், "ஏன் மது என் முகத்தை பார்க்க பிடிக்கலயா?" என்று கேட்க, மதுரா அவன் கோபத்தில் கேட்கிறனோ என்று பயந்து இல்லை என்று வேகவேகமாகத் தலையாட்டியவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, குறும்பாகச் சிரித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கோபம் கொண்டவள்,
"ஏய்... என்னை ஏமாத்துறீங்களா... உங்கள..." என்று அவன் மார்பில் இருகைகளால் மாறி மாறி குத்த, சிரித்துக் கொண்டே அதை ரசித்தவன், அவள் கைகளைப் பிடித்து இழுத்து மார்போடு அணைத்துக் கொள்ள, அந்த அணைப்பில் மயங்கி மது அவள் பங்கிற்கு ராம்மை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தனர் என்று அவர்களுக்கே தெரியவில்லை. எங்கேயோ வானத்தில் வெடித்த ராக்கெட்டின் ஒசை இவர்கள் மோன நிலையைக் கலைத்தது.
மதுரா ராம் முகம் பார்க்க வெட்கப்பட்டுத் திரும்பி கொள்ள, ராம் அவளைப் பின்னால் இருந்து அணைத்தவன், "நானும் உன்னை விரும்புறேன் மது. ஆனால் அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியாம தான் தவிச்சிட்டு இருந்தேன். நல்லவேளை நீயே லெட்டர் எழுதி, உனக்கும் என்னைப் புடிக்கும்னு சொல்லிட்ட..." என்று குஷியாகச் சொல்ல,
மதுவோ, "நான் எங்க ராம் லெட்டர் எழுதினேன்? நீங்க தான் எனக்கு எழுதுன லெட்டர்ல, நீங்க என்னை விரும்புறீகன்னும், நீயும் என்னை விரும்புனா இன்னைக்கு எட்டு மணிக்கு மாடிக்கு வான்னு எழுதி இருந்தீங்க..." என்று சொல்லி அவன் முகம் பார்க்க இருவருக்கும் செம்ம ஷாக்!
"அப்ப நீங்க லெட்டர் எழுதலயா?"
"அப்ப அந்த லெட்டர் நீ எழுதலயா மது?"
"இல்ல ராம். நான் இல்ல" என்று இருவரும் பேந்த பேந்த முழிக்க, "அந்த லெட்டர் யார் எழுதினாங்கன்னு நாங்க சொல்றோம்..." என்று குரல் வர திரும்பி பார்த்த ராம், மதுராவிற்கு அங்கே நின்ற தங்கள் மொத்த குடும்பத்தையும் பார்த்து மீண்டும் பயங்கர ஷாக்!
மொத்த குடும்பமும் ஹாலில் கூடி குற்றத்தை விசாரிக்க ரெடியாக இருக்க, ராமும், மதுராவும் கை கட்டி ஒரு பக்கம் நின்றிருக்க, இந்த பக்கம் யுக்தாவும், நிஷாவும் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்தனர்.
"என்ன ராம் இது? மது உன்னையும் தான் என்ன இதெல்லாம்?" என்று ராமின் அப்பா சுந்தரம் ஹைடெசிபலில் கேட்க,
"நாங்க இல்லப்பா... இதோ நிக்குதுங்களே, இந்த ரெண்டு வானரமும் தான்ப்பா, எங்க கிட்ட லெட்டர் கொடுத்து குழப்பி விட்டுட்ச்சுங்க..." என்று ராம் பாவமாகச் சொல்ல,
"டேய் அண்ணா, என்ன எங்களை மாட்டிவிடுற?? நாங்க சும்மா விளையாட்டுக்கு அப்படிச் செஞ்சோம். ஆனால் நீங்க என்னடான்னா ஏழு மணிக்கே மாடிக்குப் போய் தேவுடு காத்துட்டு இருக்கீங்க... மது அண்ணி டான்னு எட்டு மணிக்கு மாடிக்கு ஓடி வர்றாங்க... ப்பா என்ன இதுன்னு கேளுங்கப்பா? நல்லா கேளுங்கப்பா..." என்று சுந்தரதிற்கு எடுத்து கொடுக்க,
"ஆமா அவங்க லெட்டர் தந்தாங்க சரி, நீங்க ரெண்டு பேரும் எதுக்கு அதுல சொன்ன நேரத்துக்கு மாடிக்கு போனீங்க??" என்று குறுக்கு கேள்வி கேட்டார் சுந்தரம்.
"அது... அது... அது வந்துப்பா..." என்று ராம் இழுக்க,
சுந்தரம், "சமி, நிஷா நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்படி பண்ணீங்க? நீங்க என்ன சின்ன குழந்தைகளா? என்ன இதெல்லாம்?" என்று கத்த,
ராம் குறுக்கே வந்தவன், "அப்பா அவ ஏதோ சும்மா தமாஷ்க்கு பண்ணிட்டா விடுங்க... தப்பு எங்கமேல தான். எதுவா இருந்தாலும் எங்களை சொல்லுங்க, அவளை ஒன்னும் சொல்லாதீங்க..." என்று யுக்தாக்கு வக்காலத்து வாங்கிய ராம் அருகில் வந்த சுந்தரம்,
"அப்பாவி மகனே, இந்த மொத்த ட்ராமாக்கும் டைரக்டரே அவ தான் டா... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி எங்ககிட்ட கேட்டா... அதுக்கு நாங்க அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புடிச்சிருந்தா எங்களுக்கு ஓகேன்னு சொன்னோம். அதுக்குத் தான் டா இதுங்க ரெண்டும் இந்த வேலையைப் பார்த்து இருக்குங்க... எங்க எல்லாரையும் மாடிக்கு வர வச்சு உங்களைப் போட்டுக் கொடுத்ததும் இதுங்க தான்..." என்று சொல்ல,
மது “ஆ”வென வாய் பிளந்தவள், "ஏய் பிசாசுங்களா ஏன் டி இப்படி பண்ணீங்க? ஒரு நிமிஷம் எங்களுக்கு உயிரே போய்டுச்சு!" என்று யுக்தா, நிஷா காதைபிடித்துத் திருக,
"ஆஆஆ அண்ணி... வலிக்குது வலிக்குது..." என்று கத்தியவர்கள், "நாங்க வேற என்ன பண்றது அண்ணி? இந்தப் பெருசுங்க எந்த ஸ்டெப்பும் எடுக்குற மாதிரி தெரியல... உங்க ரெண்டு பேரையும் சொல்லவே வேண்டாம், வேஸ்ட் பீஸ். அதான் நாங்க களத்துல நேரடியா இறங்கிட்டோம். இனி எப்பவும் நீங்க இங்க தான் இருப்பீங்க... பாவம் வினு இத்தனை வருஷமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணான். நீங்க ராம் அண்ணாவை கல்யாணம் பண்ணிகிட்டா இங்கயே வினய் கூட இருப்பீங்க... இனி உங்களை அவன் மிஸ் பண்ண மாட்டான் இல்ல..." என்று யுக்தா கெத்தாகச் சொல்ல, மது அவளைக் கண்கலங்க பார்க்க, வினய் ஓடி வந்தவன் யுக்தாவை இறுக்கி அணைத்துக் கொண்டு, திரும்பி ஓரக்கண்ணால் நிஷாவை பார்த்தவனுக்கு வார்த்தைகள் வராமல் போனது.
ராமை திருமணம் செய்து கொண்டால் மதுரா இங்கேயே வினய்யோடு இருப்பாள், அதோடு ராமும், மதுராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதிலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் என்று புரிந்து கொண்டு தான் யுக்தா இந்த ப்ளானை போட்டாள். அது நல்லவிதமாக நடக்க, அடுத்து வந்த நல்ல முகூர்த்தத்தில் பரசுராம், மதுராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து, மதுரா தன் மருத்துவப் படிப்பை தொடங்க, ராம் ஐ.பி.எஸ். டிரெய்னிங் முடித்து ஏசிபியாக திருநெல்வேலியில் வேலைக்குச் சேர்ந்தான். வெற்றியும் வடக்கில் கலெக்டராக பதவியேற்றான்.