அழகிய தமிழ் மகள் 6

 


அழகி 6


ராம், யுக்தா பற்றிச் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஆதித்க்கு வியப்பாக இருந்தது! அவனையும் அறியாமல் அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுள் பிறந்தது. அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவனுள் ஏதோ ஒரு இனம்புரியாத குறுகுறுப்பு வருவதை ஏனோ அவனால் தடுக்க முடியவில்லை. ராம் யுக்தா பற்றி அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்ற ஆர்வம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, ராம் ஒரு நிமிடம் ஆதித்தை ஆழமாகப் பார்த்தவன் தன் பேச்சை தொடர்ந்தான்.


"நான் கூடப் பரவாயில்லை ஆதி... ஆனால் இந்த வாலு, வெற்றி வாழ்க்கையில வச்சாளே ஒரு ஆப்பு! வெற்றி மட்டுமில்ல, மொத்த குடும்பமும் அடியோட ஆடிப்போச்சு... சாம்க்குக் காலேஜ் முடிஞ்சிருச்சு... மேல படிக்கிறேன், நெறய வேலை இருக்கு டைமில்லன்னு சொல்லி சென்னைக்கு வர்றத ரொம்பக் குறைச்சுக்கிட்டா...


மதுராவும் சென்னையில டாக்டரா வேலை பார்த்துட்டே எம்.எஸ் படிச்சிட்டிருந்தா... வீட்டுல சாம் லீவ்ல சென்னை வரும்போதே எனக்கும் மதுக்கும் கல்யாணம் தேதி வைக்க முடிவு பண்ணாங்க..." என்றவன் மீண்டும் பின்நாட்களுக்குள் இழுக்கப்பட்டான்.


சுந்தரம், யுக்தாவிற்கு அழைத்து விசயத்தைச் சொல்ல, "ஏன்ப்பா வெற்றிண்ணாக்கும், வினய்க்கும் ராமண்ணா வயசு தான? பேசாம அவங்களுக்கும் பொண்ணைப் பாத்துட்டா மூணு கல்யாணத்தையும் சேர்த்து வச்சிடலாம்மில்ல..." என்றாள்.


சுந்தரம், "நீ சொல்றதும் சரிதான் குட்டிம்மா... நான் பசங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்..." என்றதும்,


யுக்தா, "அப்பா நீங்க வினுகிட்ட கேளுங்க... நான் சென்னைக்கு வரும் முன்ன வெற்றிண்ணாவை பாக்க போவேன். நானே கேட்டுக்குறேன்..." என்றவள், வெற்றி இருக்கும் இடம் மும்பைக்குச் சற்றுத் தொலைவில் என்பதால், நிஷாவோடு அவன் இருக்கும் ஊருக்கு சென்று வெற்றியை பார்த்தவர்கள்.


அடுத்தநாள் ஃப்ளைட் பிடித்து விடியற்காலை ஐந்து மணிக்கு வினய் வீட்டிற்கு வந்து இறங்கினர்.


"ஏய் பிசாசு வெற்றிய பாக்கப்போறேன்னு சொன்ன? இப்ப தீடிர்னு சென்னைக்கு வந்திருக்கீங்க என்ன ஆச்சு? அவனைப் பாக்க போகலயா?" என்று கேள்வி கேட்ட வினய்யை கோபமாகப் பார்த்தவள்,


"ஏன் வினு இப்படிக் கேள்வி மேல கேள்வி கேட்டு கொல்லற? என் வீட்டுக்கு நான் வரதுக்குப் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டு தான் வரணுமா? உன்னோட நின்னு வெட்டியா பேசிட்டிருக்க எனக்கு டைமில்ல... ஒரு முக்கியமான ஆளைப் பார்க்க போகணும் நகரு நகரு..." என்றவள், நிஷாவோடே மேலே சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் தயாராகி வர, வேக வேகமாகக் கீழே வந்தவர்களை, "சமிகுட்டி நீ எப்ப டா வந்த?" என்ற வினய் அம்மா சாருமதியின் குரல் நிறுத்தியது.


"அம்மா ப்ளீஸ் ம்மா... இப்ப நின்னு பேச நேரமில்ல. நாங்க ரொம்ப முக்கியமான வேலையா வெளிய போறோம். நான் திரும்பி வந்து, உங்க கேள்விக்கெல்லாம் ஐஞ்சு பக்கத்துக்கு விளக்கம் தரேன்... இப்போ பை ம்மா..." என்றவள், வினய் அசந்த நேரம் அவன் பைக் கீயை எடுத்துக் கொண்டு ஓடியே விட்டாள்.


"ஏய் ஏய் எரும பைக் கீ யை கொடு..." என்று கத்திய வினய் குரல் அவள் காதில் விழாத தூரம் பைக்கில் பறந்திருந்தாள் யுக்தா.


ராம் வீட்டிற்கு வந்தவன், "டேய் வினய் சாம்மும், நிஷாவும் எங்க டா? காலைலயே வீட்டுக்கு வந்துட்டாங்கன்னு சொன்ன... ஆளயே காணும் எங்க டா அவங்க?" எனக் கேட்டான்.


"ம்ம்ம் மேல தான் தூங்கிட்டு இருக்குதுங்க... காலை ஐஞ்சு மணிக்கு ஜங்குன்னு வந்து குதிச்சிதுங்க... என்ன எதுன்னு கேட்டா, உன்கிட்ட வெட்டியா பேச டைமில்ல, எங்களுக்கு ரொம்ப முக்கியமா கழட்டுற வேல இருக்குன்னு என் பைக் கீயை ஆட்டையபோட்டு வெளி போனதுங்க, மதியம் மூணு மணிக்கு தான் வீட்டுக்கு வந்ததுங்க...


அம்மா செஞ்ச பிரியாணிய ஒரு பிடி பிடிச்சிடு ரெண்டும் நல்லா தூங்கிட்டு இருக்குங்க..." என்றவன், "ஆனா ஒன்னும் மச்சி... இதுங்க ரெண்டோட முழியே சரியில்ல. திருட்டுமுழி முழிச்சுட்டே, தின்னுட்டு மேல ஓடி போச்சுங்க... இந்தச் சாம், வெற்றிய பாக்க போய்ட்டு உடனே கிளம்பி இங்க வந்திருக்கு... எனக்கென்னமோ இவ ஏதோ பெருசா செய்யப் போறான்னு என் அந்தர் ஆத்மா சொல்லுது மச்சி..." என்று யுக்தாவை சரியாகக் கணித்துச் சொன்னான்.


"டேய் அவ குழந்த டா... சும்மா எதாவது உளராத..."


"ஆமா டா... இந்தப் பச்ச குழந்த தான் உன்னையும் மதுவை வச்சு செஞ்சா... மறந்து போச்சா?"


"ம்ம்ம்... நீ சொல்றதும் சரிதான்.. சரி அவ கீழே வரட்டும் நான் என்னன்னு கேட்க்குறேன்..." என்றவன், வாசலை பார்க்க அங்கு வெற்றி வேகமாக வந்து கொண்டிருந்தான்.


"டேய் வினய் அங்க பாரு வெற்றி வரான்..."


'இவன் எங்க இங்க? வரேன்னு ஒரு ஃபோன் கூடப் பண்ணலயே?' என்று நினைத்த வினய், "அம்மா, அப்பா இங்க பாருங்க நம்ம வெற்றி வந்திருக்கான்..." என்று குரல் கொடுக்க, ரொம்ப நாள் கழித்து வந்த வெற்றியை மொத்த குடும்பமும் சூழ்ந்து கொள்ள, வெற்றி எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.


"சாம், நிஷா எங்க இருக்கீங்க?" என்று உச்ச ஸ்தாயில் கத்தினான்.


"டேய் வெற்றி என்ன டா ஆச்சு உனக்கு? ஏன் இப்படிக் கத்துற? தீடிர்னு சென்னை வந்திருக்க... என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பதட்டாம இருக்க? என்ன ஆச்சு?" என்று கேட்ட, தன் தம்பி ஜீவாவின் குரல் கூட அவன் காதில் விழவில்லை.


"சாம்... சாம்..." என்று மேலே பார்த்தவன், "எங்க இருக்க நீ? கீழ ஏறங்கி வா..." என்று கத்த,


தூக்கக் கலக்கத்தில் கீழே வந்த யுக்தாவை கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியவன் அவள் கன்னத்தில் 'பளார்' என்று அறைய, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி! இதுவரை யுக்தாவை திட்டி கூட ஒரு சொல் சொல்லாதவன் இன்று அவளை அடித்ததைப் பார்த்தது அதிர்ச்சி என்றால், அதே அறை நிஷாவுக்கும் விழுந்ததில் அனைவருக்கும் பேரதிர்ச்சி!


வெற்றியின் கோபத்தில் இருந்தே 'இதுங்க ரெண்டும் ஏதோ பெருசா செஞ்சிருக்கு...' என்று புரிந்து கொண்ட பெரியவர்கள்,


"டேய் வெற்றி என்ன இது? சின்னபுள்ளங்களைப் போய் அடிச்சிட்டு... இது என்ன டா புதுப் பழக்கம்? எதுவா இருந்தாலும் வாயால சொல்லு.. அதவிட்டு இது என்ன கொழந்தைங்க கிட்ட கை நீட்ற..." என்று வெற்றியின் தாய் கோதை அவனை முறைக்க, வெற்றிக்குக் கோவம் தலைக்கேறியது.


"அம்மா..." என்று பல்லை கடித்தவன், "யாரு இதுங்க குழந்தைகளா? இதுங்க என்ன வேலை பாத்திருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? என்ன நடந்துச்சுன்னு தெரியாம இதுங்களுக்குச் சப்போட் பண்ணாதீங்க.." என்கறு கோபத்தில் இரைந்தான்.


"ஏய் நான் இவ்ளோ பேசுறேனே ரெண்டு பேரும் வாயத் தொறக்குறீங்களா... செய்யுறத செஞ்சிட்டு நெஞ்ச நிமித்திட்டு நிக்குறீங்களா?"


"நாங்க என்ன தப்பு செஞ்சோம் தலை குனிஞ்சு நிக்க? நாங்க செஞ்சது கரெக்ட் தான்." என்று யுக்தா பதிலுக்குப் பதில் பேச,


"ஏய் உன்ன?" என்று வெற்றி மீண்டும் அவளை அடிக்கப் போக,


"டேய் வெற்றி அடிக்கிற அளவு அவ அப்படி என்ன டா செஞ்சா?"


"அம்மா இவ..." என்று வெற்றி ஆரம்பிக்கும்போதே, காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அனைவரும் வாசலை பார்க்க, ஐம்பது வயது மதிக்கதக்க கம்பீரமான ஒரு ஆண் அவர்கள் வீட்டிற்குள் வர, ராம் வருவது யாரென்று தெரிந்து, நிமிர்ந்து நின்று சல்யூட் வைத்தவன், "வாங்க சார்..." என்று அவரை வரவேற்று, "இவர் தான் சென்னை சிட்டி போலிஸ் கமிஷனர் பரதன்..." என்று சொல்ல, அனைவருக்கும் பயங்கரக் குழப்பம்.


'இவர் ஏன் நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு...' என்று ராமும் குழப்பி இருக்க, பரதன் யுக்தாவை நோக்கி செல்வதைப் பார்த்த வெற்றி, யுக்தா, நிஷாவுக்கு முன் போய் அவர்களை மறைப்பது போல் நின்றவன், "சார் அவங்க சின்னப் பசங்க... ஏதோ ஒரு எக்ஸ்சைட்மென்ல இப்படிப் பண்ணிட்டாங்க... அவங்க பண்ணது தப்பு தான் அதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன்.." என்று ஆரம்பிக்கும் போதே அவனைத் தடுத்த யுக்தா,


"நீ ஏன்ண்ணா சாரி கேக்குற... நாங்க என்ன தப்பு செஞ்சோம்? நாங்க பண்ணது கரெக்ட் தான். நீ ஒன்னும் சாரி கேக்க வேணாம்..." என்று தலை நிமிர்ந்து அழுத்தமாய்ச் சொல்ல,


"ஷட் ஆப் சாம். நீ கொஞ்சம் பேசாம இருக்கியா?" என்று வெற்றி அவளை அதட்ட, அவளை ஒரு நிமிடம் முறைத்து பார்த்த பரதன், "அப்ப நீ எந்தத் தப்பும் செய்யல அப்படித் தான?" என்று விறைப்பாகக் கேட்க, யுக்தாவும் அதே விறைப்போடு "இல்லை" என்று தைரியமாகத் தலையை நிமிர்ந்து சொன்னாள்.


"நான் யாருன்னு நல்ல தெரிஞ்சும், எவ்வளவு தைரியம் இருந்தா நேரடியா என்கிட்டையே வந்து உங்க பொண்ணைக் கொடுங்கன்னு கேட்டிருப்ப?" என்று பரதன் கடுமையான குரலில் கேட்க,


"நீங்க யாருன்னு எனக்கு நல்லா தெரியும் கமிஷனர் சார். அதை விடுங்க... அடுத்தது இந்தக் கல்யாணம்... உங்க பொண்ணு வேணும்னு உங்ககிட்ட தானே கேக்க முடியும்? இல்ல வீட்டுல உங்களை விடப் பெரியவங்க இருந்தா சொல்லுங்க அவங்ககிட்ட பேசுறேன்..." என்றவளை பரதன் இமைக்காமல் முறைத்து பார்த்தார்.


ராம், "ஐய்யோ இங்க என்ன நடக்குது? டேய் வெற்றி என்ன டா ஆச்சு? கமிஷனர் சார் ஏன் இங்க வந்திருக்காரு? இவ அப்படி என்ன தான் செஞ்சா? சொல்லி தொலையேன் டா..." என்க,


"இந்தப் பொண்ணும், அவ பக்கத்துல இருக்கப் பொண்ணும் காலையில் கமிஷனர் ஆஃபீஸ்க்கு என்னைப் பாக்க வந்திருந்தாங்க... மிஸ்டர். வெற்றி செல்வனும், என் பொண்ணு கயல்விழியும் லவ் பண்றாங்க... வெற்றிண்ணாக்கு வீட்டுல கல்யாணம் செய்ய முடிவு பண்ணிட்டாங்க... அதான் உங்க பொண்ணை எங்க அண்ணாக்கு கேட்டு வந்திருக்கோம்... அதோட வீட்டுல ராம்ண்ணா கல்யாணத்தோட வெற்றிண்ணா கல்யாணத்தையும் சேர்த்து நடத்தப்போறோம்... சோ நீங்க சீக்கிரம் எங்க வீட்டுக்கு வந்து பேசுங்கன்னு சொன்னாங்க இந்த ரெண்டு பெரிய மனுஷிகளும்..." என்றவர் யுக்தாவை முறைத்தபடி அங்கிருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டார். அவர் சொன்னதைக் கேட்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றது!


"ஏய்... என்ன டி இதெல்லாம்? யார கேட்டு நீ இப்படிச் செஞ்ச? ஏன் இப்படிப் பண்ண?" என்று கோதை அவளை உலுக்க,


"நான் என்னம்மா பண்றது... நேத்து வெற்றி அண்ணாவை பாத்து அவர் கல்யாணம் பத்தி கேக்க போனேன். அண்ணா இப்ப கல்யாணம் வேணாம்னு பிடிவாதமா சொல்லிட்டாரு... அவர் முகத்தைப் பாத்து எனக்குச் சந்தேகமா இருந்துச்சு... நோண்டி நோண்டி கேட்ட பிறகு தான் அவரும், இதோ இவரு பொண்ணு கயல்விழி அண்ணியும், நாலு வருஷமா லவ் பண்றாங்கன்னு சொன்னாரு... அதான் அடுத்த ப்ளைட் புடிச்சு இங்க வந்து காலையிலையே கமிஷனர் ஆஃபீஸ் போய் இவர்கிட்ட பேசுனோம். இதுல என்னம்மா தப்பிருக்கு?" என்று திமிராகக் கைகட்டி நின்றவளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்த கோதை, தவிப்பாகப் பரதனை பார்த்தவர்,


"சாரி சார்... அவளுக்கு வெற்றி மேல பாசம் ஜாஸ்தி! அதான் இப்படி... நீங்க அவளை ஒன்னும்..." என்று வார்த்தை வராமல் தவிக்க,


பரதன் தொண்டையைச் செரும்மிக்கொண்டு எழுந்து யுக்தா அருகில் வந்தவர், "ஏய் டைகர்... கல்யாணம் தேதியை பையனோட அப்பா, அம்மாகிட்ட பேசணுமா? இல்ல அதையும் வீட்டுக்கு பெரிய மனிஷி உன்கிட்ட தான் பேசணுமா?" என்று கிண்டலாகக் கேட்க, மற்றவர்கள் அவர் சொன்னது புரியாமல் அவரைப் பார்க்க, யுக்தா நிமிர்ந்து அவரைப் பார்த்தவள்.


"இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் அங்கிள்... நீங்க மாப்பிள்ளையோட அப்பா, அம்மாகிட்ட பேசுங்க..." என்று பவ்யமாகச் சொல்ல, பரதன் அடக்க மாட்டாமல் சத்தமாகச் சிரித்தார்.


அனைவரையும் பார்த்து, "எனக்கு இந்தக் கல்யாணத்துல முழுச் சம்மதம். வீட்டுல என்னோட மிஸஸ் கிட்ட பேசிட்டு..." என்று ஆரம்பிக்கும் போதே,


"ஆன்ட்டிக்கும் இதுல சம்மதம் தான்..." என்று யுக்தாவும், நிஷாவும் கோரஸாகச் சொல்ல, மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சி! இப்போது அந்த லிஸ்டில் பரதனும் சேர்ந்திருந்தார்.


"இது எப்ப நடந்தது?"


"கமிஷனர் ஆஃபீஸ்ல இருந்து நேரா உங்க வீட்டுக்கு போய்ட்டோம் அங்கிள்..."


பரதன் மீண்டும் சத்தமாகச் சிரித்தவர், "சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் பாருங்க..." என்று விட்டு சென்றார்.


வெற்றிக்கு நடப்பது கனவா நிஜமா என்று புரியாமல் ஆஆஆவென வாய்பிளந்து நின்றிருந்தான். வெற்றியிடம் இருந்து கயல்விழியின் நம்பரை வாங்கிருந்த யுக்தா, காலையில் கயலுக்கு ஃபோன் செய்து, அவள் அப்பாவை பார்க்க போவதாகச் சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட, கயல்விழி டென்ஷன் தாங்காமல் வெற்றிக்கு ஃபோன் பண்ணி அனைத்தையும் கொட்ட, வெற்றி யுக்தாவுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று பதறியவன், அடித்துப் பிடித்து அடுத்த ப்ளைட்டில் இங்கு வந்தால், இங்கோ அவன் லவ்வுக்குக் கிரீன் சிக்னல் கிடைத்து இருக்கிறது. 20-20 மேட்ச்போல் ஒரே நாளில் அவன் லவ் ரிசல்ட் தெரிந்து, கல்யாண தேதி குறிக்கும் அளவிற்கு வந்துவிட்டது. எல்லாம் சம்யுக்தாதேவியின் மகிமை!


வினய் இப்போது கல்யாணம் வேணாம் என்று முடிவாகச் சொல்லிவிட, ராம், மதுரா மற்றும் வெற்றி, கயல்விழி இரு ஜோடிகளுக்கும் மொத்த குடும்பத்தின் ஆசிகளோடு திருமணம் இனிதே நடந்து முடிந்தது.


ராம் சொன்னதைக் கேட்ட ஆதித் மனதில் அப்போது தோன்றியது ஒன்றே ஒன்று தான். இவங்க எல்லாரும் இவளை இந்த அளவு நேசிக்கிறதுல எந்த அதிசயமும் இல்லை என்பது தான்.


"யூ டீசர்வ் இட் டி திமிரழகி!" என்று சிரிப்போடு அவன் உதடுகள் முணுமுணுக்க, அது ராம் காதிலும் விழுந்தது.