அழகிய தமிழ் மகள் 7
அழகி 7
"எல்லாம் நல்லா தான் போய்ட்டிருந்தது ஆதி... சாம்கும், நிஷாவுக்கும் சென்னையில ஒரு நீயூஸ் சேனல்ல வேலை கிடச்சதால, பரிதி மாமா மும்பையில இருந்த பிஸ்னஸை, மேனேஜர் பொறுப்புல விட்டுட்டு, அதை வினய், விஷ்ணுவை பார்த்துக்கச் சொல்லிட்டு குடும்பத்தோட மறுபடியும் சென்னைக்கே வந்துடுறதா முடிவு பண்ணிட்டாரு... எங்க எல்லாருக்கும் இதுல ரொம்பச் சந்தோஷம். சாம் திரும்ப வரப்போற நாளை எதிர்பார்த்து காத்திருந்தோம்..."
"அப்ப தான் என்னோட கன்ட்ரோல்ல இருந்த போலிஸ் ஸ்டேஷன்ல ரெண்டு சென்சீடிவ்வான கேஸ் பைஃல் ஆச்சு. அடுத்தடுத்து சென்னையில பத்துல இருந்து பனிரெண்டு வயசு பெண் குழந்தைங்க மூணு பேர் காணாம போனாங்க... அவங்க காணாம போய் நாலு மாசம் வரை எவ்வளவு தேடியும் அவங்களைப் பத்தி ஒரு சின்ன இன்பர்மேஷன் கூடக் கிடைக்கல. அதோட லாஸ்ட் ரெண்டு வருஷமா சென்னையில அடிக்கடி ரோட்டோரம் இருக்க ஆதரவில்லாத, ஊர் பேர் தெரியாத ஜனங்க நிறையபேர் காணாமல் போறதாகவும், அதைப் பத்தி போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலைனு, ஒரு சோஷியல் ஆக்டிவிஸ்ட் கோர்ட்ல ரிட் போட்டு சிபிஐக்கு அந்தக் கேஸ்ச மாத்த சொல்லி கேட்டு. அந்தக் கேஸ் சிபிஐ கைக்குப் போச்சு...
இந்தக் கேஸ்சுக்காக டெல்லில இருந்து ஒரு ஸ்பெஷல் ஆஃபீசர் கேஸ் பத்தி இன்வஸ்டிகேட் பண்ண வர்ரத இன்பர்மேஷன் வந்துது. என்ன தான் சிபிஐ கிட்ட கேஸ் போனாலும் எனக்கு இந்தக் கேஸ்ச அப்படியே விட விருப்பமில்ல... அந்த மூணு குழந்தைங்க கேஸ்சோட சேர்த்து, இந்தக் கேஸ்சயும் நான் இன்வஸ்டிகேட் பண்ணிட்டு தான் இருந்தேன்.
சென்னை அவுட்டர்ல வீடு கட்ட ஒருத்தர் பூமிய தோண்டும் போது, டீகம்போஸ்ட் ஆன ஸ்டேஜ்ல மூணு சின்னப் பொண்ணுங்க டெட் பாடி கிடைச்சிருக்குன்னு ஃபோன் வந்தது... விசாரணையில அந்த மூணு பாடியும் காணாம போன, அந்தச் சின்னப் பொண்ணுங்க தான்னு தெரிஞ்சிது. அந்தக் கேஸ்ச ஹான்டில் பண்ண அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், ஒரு சாமியார் குழந்தைகளை நரபலி கொடுத்து நெறய சக்தி கிடைக்கும்ன்னு இந்தக் குழந்தைகளைக் கடத்தி பலி கொடுத்தாகச் சொல்லி, ஒரு சாமியார அரஸ்ட் பண்ணி கேஸ் பைல் பண்ணான்.
எனக்கு மட்டும் அந்தக் கேஸ்ல ஒரு நெருடல் இருந்துட்டே இருந்தது. அதனால தனியா நானே இந்தக் கேஸ் பத்தி இன்வஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சேன். அப்பதான் காணாம போன குழந்தைகள் கேஸ்ல சில பெரியாளுங்க சம்மந்தப்பட்டிருக்கிறது தெரிஞ்சுது. அதை மூடி மறைக்கத் தான் நரபலின்னு பொய் சொல்லி அவசர அவசரமா கேஸ்ச குளோஸ் பண்ணி இருக்காங்கன்னும் தெரிஞ்சிது. ஆனால் மை பேட்லக் அந்தக் கேஸ்ல அவனுங்களுக்கு அகென்ஸ்ட்டா எனக்கு ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் எதுவும் கிடைக்கல...
நம்ம டிப்பார்ட்மென்ட் சேர்ந்த சில ஆஃபீசர் பணம் வாங்கிட்டு நான் எடுத்து வைக்குற ஒவ்வொரு ஸ்டெப்பையும் அந்தப் பணக்கார பரதேசிங்களுக்குப் போட்டு கொடுத்துட்டானுங்க... அப்பறம் என்ன ஒரு சின்ன லூப் ஓஃல் கூட இல்லாம ரொம்பக் கிளவரா எல்லா எவிடென்ஸயும் அழிச்சிட்டானுங்க... அடுத்து என்ன செய்யுறதுன்னு யோசிச்சு, கமிஷனர் பரதன் சார்கிட்ட இத பத்தி சொன்னேன். அவருக்கும் இதபத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் போல... இதை நம்ம கொஞ்சம் பொறுமையா ஹான்டில் பண்ணலாம்... நீ அமைதியா இரு ராம்னு சொல்லிட்டாரு.. ஆனால் அவரு சொன்ன மாடுலேஷன்லயே எனக்குத் தெரிஞ்சு போச்சு, அவர் இந்தக் கேஸ்ல வேற ஏதோ ப்ளான் பண்ணிட்டார்னு... அதே நேரம் தான் சாம்மும், நிஷாவும் சென்னைக்கு வந்து சேர்ந்தாங்க..."
அன்று சாம் வந்த சந்தோஷத்தில் மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து அன்றைய மதிய உணவை உண்ண,
"ஏன் டா அண்ணா இப்போல்லாம் ரொம்பச் சின்சியரா வேலை பாக்குறீயாமே? டே அன்ட் நைட் வீட்டுக்கு கூட வராம சுத்திட்டு இருக்கீயாம். மது அண்ணி சொன்னங்க... என்ன விஷயம்? ரொம்பக் கஷ்டமான கேஸ்ஸா?" என்று வாயில் சிக்கன் லெக்பீஸை அதக்கியபடி கேட்ட யுக்தாவை பார்த்து, சின்னதாகச் சிரித்தவன்,
"ஆமா டா... நீயும் கேள்விபட்டிருப்பியே காணாம போன அந்தக் குழந்தைகளை நரபலி கொடுத்த கேஸ் பத்தி?" எனக் கேட்டான்.
"ம்ம்ம் ஆமா டா அண்ணா... நாளைக்கு நானும் நிஷாவும் டிவி சேனல்ல வேலையில ஜாய்ன் பண்ண உடனே, ஹான்டில் பண்ண போற முதல் ரிப்போர்டே இந்தக் கேஸ் பத்தி தான். எம்.டி முதல்லயே சொல்லிட்டாரு..." என்றதும் ராம் ஒரு நிமிடம் யுக்தாவை பார்த்தவன்,
"கேர்புல்லா இரு சாம்! இந்தக் கேஸ் நீ நெனக்குற மாதிரி இல்ல... இதுல பெரிய பெரிய ஆளுங்க கனெக்ட் ஆகி இருக்காங்க... நீயும் நிஷாவும் எது செய்யுறதுக்கு முன்னயும் நல்லா யோசிச்சு செய்ங்க..." என்றவன் எழுந்து விட,
"ஏன்ணா அந்தக் குழந்தைகளைக் கடிச்ச அந்த வெறிநாய்ங்களை உன்னால ஒன்னும் பண்ண முடியாதா?" என்ற யுக்தாவின் வார்த்தையில் அதிர்ந்தவன், சட்டெனத் திரும்பி அதிர்ச்சியாக யுக்தாவை பார்த்து,
"நீ இப்ப என்ன கேட்ட சாம்?" என்றவனை நிமிர்ந்து பார்த்த யுக்தா,
"அந்த மூணு அப்பாவி குழந்தைங்களை அநியாயமா கொன்னுட்டு, அந்தக் கேஸ்சை நரபலின்ற பேர்ல குளோஸ் பண்ணி இருக்காங்களே, அந்த வெறி நாய்ங்கள உன்னால ஒன்னும் பண்ண முடியாதன்னு கேட்டேன் மிஸ்டர். ஏசிபி. பரசுராம்..." என்றவள் குரலில் கோபம் அனலாய் தெறிக்க, அவள் விழிகளில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்து ஒரு நிமிடம் மொத்த குடும்பத்திற்கும் நெஞ்சு பதறிவிட்டது.
"உ... உன... உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும இந்த மேட்டர் எங்க டிபார்ட்மென்ட்லயே கமிஷனர் சாருக்கும் இன்னும் ஒரு ஹையர் ஆஃபீசர்க்கு மட்டும் தான் தெரியும். உனக்கு எப்படி?"
ராம்மை பார்த்து அலட்சியமாகச் சிரித்து விட்டு, தட்டிலேயே கைகழுவிட்டு எழுந்தவள், "என்னோட வேலையே இது தான் டா அண்ணா... ரிப்போட்டர்னா சும்மான்னு நெனச்சியா? இங்க என்ன நடக்குதுன்னு ஒன்னுமே தெரியாமயா மும்பையில இருந்து இங்க வந்திருப்பேன்..." என்றவளிடம், ராம் எதையோ கேட்க வர, யுக்தா வினய்யிடம் திரும்பியவள்,
"வினு, நிஷா ப்ரண்ட் ஒருத்திய பாக்க அடையார் வரைக்கும் போய்யிருக்கா... நான் வந்து அவளைப் பிக் பண்ணிக்குறேன்னு சொல்லி இருந்தேன்... இப்ப எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு..., தூக்கம் வேற வருது... ப்ளீஸ் நீ கொஞ்சம் போய் அவளைப் பிக் பண்ணிட்டு வந்துடேன்..." என்றவள், வினய்யின் பதிலை கூட எதிர்பார்க்காமல், "ஆல் பேம்லி மெம்பர்ஸ் நைட் டின்னர்ல உங்களை மீட் பண்றேன்..." என்றுவிட்டு அவள் ரூமிற்குச் சென்றுவிட, ராமிற்கு நன்கு புரிந்தது அவள் எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்று; ஆனால், ‘டிபார்ட்மென்ட்டுக்கே தெரியாத இந்தக் கேஸ் பத்தின டீடெய்ல்ஸ் இவளுக்கு எப்படித் தெரிஞ்சது?’ என்று யோசித்த ராமிற்க்கு, அப்போது தான் யுக்தா கமிஷனர் பரதனின் செல்ல டைகர் என்பது நினைவுக்கு வந்தது.. ஆனால் பரதன் யுக்தாவிடம் ஏன் கேஸ் பத்தி சொல்ல வேண்டும்? அதுக்கு என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை..
இங்கு வினய்யோ "இவளுக்கு இதே வேலையா போச்சு... அந்த நிஷாவ பிக் பண்ண நான் போகணுமாம். ஏன் அந்த மகாராணிக்கு வீட்டுக்கு வர வழி தெரியாதா? நான் என்ன அவளுக்கு டிரைவரா?" என்று கருவி கொண்டே ராமின் காரை எடுத்துக்கொண்டு நிஷாவை அழைத்து வர கிளம்பினான்..
தூரத்தில் ராம் காரை பார்த்த நிஷா, மலர்ந்த முகத்துடன் காரின் அருகில் வந்தவளின் முகம், வினய்யை பார்த்தும் சட்டெனச் சிரிப்பை தொலைத்து விட, அதைப் பார்த்த வினய்க்கு இன்னும் கடுப்பு அதிகமானது.
நிஷா காரில் ஏறாமல் அமைதியாக நிற்க, "ஏய் எனக்கு நெறய வேல இருக்கு... அந்தச் சாம் கொரங்கு உன்ன கூட்டிட்டு வர சொல்லுச்சேன்னு, என் வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன். உனக்காக வேஸ்ட் பண்ண என் கிட்ட டைம் இல்ல... சீக்கிரம் வந்து தொலை..." என்று கத்தியவனை நிதானமாகப் பார்த்த நிஷா,
"உங்க முக்கியமான வேலையை டிஸ்டர்ப் பண்ணதுக்குச் சாரி சார். நானே வந்துடுறேன்னு யுகி கிட்ட சொன்னேன். அவ தான் கேட்கல... நீங்க போங்க சார் நான் பாத்துக்குறேன்..." என்றவள் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.
காரை விட்டு இறங்கிய வினய் வேகமாகப் போய் நிஷா கையைப் பிடித்து நிறுத்தியவன், "ஏய் நில்லு டி... இங்க ஒருத்தன் உனக்காக வந்து நின்னுட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு அப்படியே போற... என்ன திமிரு டி உனக்கு?!" என்றவன் அவள் கையை இறுக்கி பிடித்து முறுக்கினான்.
"சார்... என்ன பண்றீங்க?? கைய விடுங்க சார் முதல்ல?" என்றவள் தன் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயல, அவளின் 'சார்' என்ற அழைப்பில் இன்னும் வெறியான வினய், தன் பிடியை இன்னும் இறுக்க, வினய்யின் இரும்பு பிடியில் இருந்து அவளால் தப்பிக்க இயலவில்லை.
வினய், நிஷா கையைப் பிடித்துச் சத்தமாகப் பேசுவதைப் பார்த்த சில பேர், "ஹலோ சார்? ஏன் சார் அந்தப் பொண்ணுகிட்ட வம்பு பண்றீங்க? யார் சார் நீங்க.? முதல்ல அந்தப் பொண்ணு கைய விடுங்க..." என்று வினய்யை சூழந்து கொள்ள, வினய் திரும்பி நிஷாவை முறைத்தவன், ‘இதெல்லாம் உன்னால தான்டி...’ என்று மனதிற்குள் திட்டி விட்டு, அவளை இழுத்து தோளோடு சேர்த்து அணைத்தவன்,
"ஹலோ இது எங்க குடும்ப விஷயம். நாங்க பாத்துக்குறோம்... நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க..." என்றவன் நிஷாவை இன்னும் அவனோடு இறுக்கி கொண்டான்.
நிஷா அவன் அணைப்பில் உடல் நெளிந்து அவனை விட்டு விலகப் பார்க்க, வினய் அவளைத் தீயாக முறைத்தவன், "ஏன்டி பொம்பளகிட்ட வம்பு பண்றேன்னு சொல்லி, இந்தக் கூட்டதுல எனக்கு அடி வாங்க கொடுக்க ப்ளான் எதுவும் பண்றீயா?" என்று வன்மமாகக் கேட்க, நிஷா ஒரு நிமிடம் அவனை நிமிர்ந்து பார்த்தவள், அங்கிருந்தவர்களிடம்,
"சார் ப்ளீஸ் இது எங்க பர்ஸனல் விஷயம். ப்ளீஸ் நீங்கெல்லாம் போங்க..." என்று சொல்ல,
அங்கிருந்தவர்கள், "உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் வீட்டுல போய் வச்சிக்கக் கூடாதா... நடு ரோடு தான் கெடச்சிதா?" என்று திட்டி விட்டு சென்றனர்.
நிஷா வினய்யின் கையை வேகமாக உதறியவள், அங்கிருந்து நகர, வினய் மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்தான். நிஷா கோபமாக முறைப்பதை பார்த்தவன், "சாம் உன்னைக் கூட்டி வர சொன்னா... அவ பேச்ச நான் மீற மாட்டேன்... அது உனக்கே நல்லா தெரியும்னு நெனக்குறேன்... மரியாதையா வந்து வண்டில உட்காரு. உன்ன வீட்டுல கொண்டு தள்ளிடுறேன். அப்புறம் நீ எங்கயாவது போய்த் தொல..." என்றவனை விரக்தியாகப் பார்த்த நிஷா,
"என்னோட யுகிய விட்டு என்னால எங்கயும் போக முடியாது சார்..." என்றாள்.
"ஏய் அவ உன்னோட யுகி இல்ல... எங்க சாம்... அவ எங்களுக்கு மட்டும் தான் சொந்தம்". என்றவன், கொஞ்ச நேரம் முன் நிஷாவை இழுத்து அணைத்து, “இது எங்க குடும்ப விஷயம்” என்று சொல்லி, நிஷாவை தன் குடும்பத்தில் ஒருத்தியாக்கியதை மறந்து விட்டான் பாவம்.
நிஷா ஒரு நிமிடம் வினய்யை ஆழமாகப் பார்த்தவள், "நீங்க எங்களுக்குன்னு சொல்ற அளவுக்கு உங்களுக்கு எல்லாரும் இருக்காங்க சார்... ஆனால் எனக்கு அவளை விட்டா வேற யாருமில்லையே சார்..." என்றவள் இதழ் விரக்தியில் சிரிக்க, அவள் சொன்னதைக் கேட்ட வினய்க்கு உள்ளுக்குள் ஏதோ போல் ஆகிவிட்டது..
"ஏன்? உன்னோட அப்பா, அம்மா எங்க?" என்று இழுத்தவன், கேட்க வந்ததை முழுதாகக் கேட்க முடியாமல், அவளைச் சங்கடமாகப் பார்த்தான் வினய்.
"எனக்கு யாரும் இல்ல சார்... பத்து வருஷம் முந்தியே என்னோட அப்பா, அம்மா செத்துட்டாங்க... யுகி என்னோட வாழ்க்கையில வர்றதுக்கு முந்தி எனக்குன்னு யாருமில்ல... இப்ப அவளைத் தவிர எனக்கு யாருமே இல்ல..." என்று ஒரு நிமிர்வோடு சொன்னவள், "டைம் ஆச்சு சார்... யுகி எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா... போலாம் சார்..." என்றவள் அமைதியாகச் சென்று காரில் உட்கார்ந்து விட்டாள்.
கார் மிதமான வேகத்தில் செல்ல, வினய் மனமோ வேக வேகமாக அவனைத் திட்டிக் கொண்டிருந்தது. ‘என்ன மனுஷன் டா நீ..? இவமேல இருந்த வெறுப்புல அவளைப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்காமயே இருந்துட்டியே டா... அவளைப் பத்தி எதுவும் தெரியாம, தேவை இல்லாம பாவம் அந்தப் பொண்ணை எவ்வளவு காயப்படுத்திட்ட டா அறிவு கெட்டவனே...! இந்தச் சாம் எரும கூட ஒரு வார்த்தை சொல்லல... வீட்டுல இருக்க மத்தவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?’ என்று பலவிதமாக யோசித்துக் கொண்டே வினய் கார் வீடு வந்து சேர்ந்தது.
இருவரும் வீட்டிற்குள் போகும் போது, "ஒரு நிமிஷம் சார்..." என்ற நிஷாவின் 'சார்' என்ற அழைப்பு, ஏனோ இப்போது வினய்யை வெகுவாக வாட்டியது..
"உங்களுக்கு என்னைப் புடிக்கலன்னு எனக்கு நல்லா தெரியும். அது ஏன்னும் எனக்குத் தெரியும். ஆனால் சாரி சார்... என்னால என்னோட யுகிய எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. விட்டு போகவும் முடியாது. ஐ ஆம் சாரி..." என்றவள் அவனைத் திரும்பி கூடப் பார்க்காமல் சென்றுவிட, போகும் அவளையே வெறித்தது வினய் கண்கள்.
யுக்தா அப்பா பரிதி மூலம் நிஷா பற்றித் தெரிந்து கொண்ட வினய், அவளைப் பற்றி யுக்தா மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியும் என்றும், அவளுக்காக யாரும் பாவம் பார்ப்பதையோ, அனுதாபம் காட்டுவதையோ அவள் துளியும் விரும்புவதில்லை என்பதையும் பரிதி மூலம் அறிந்தவன், அதுவரை நிஷா மேல் அவன் மனதில் இருந்த கோபம் எனும் பொய் நாடகத்தை முடித்துக் கொண்டான்.