அழகிய தமிழ் மகள் 17

அழகி 17


யுக்தாவும், நிஷாவும் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கையில் கேஸ் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றது. லாப்டாப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கேஸ்கள் பதிவாகியது. அதைக் கொலையென்று நிரூபிக்க ஒரு சின்ன ஆதாரம் கூடப் போலிஸ்க்கு கிடைக்கவில்லை என்று அந்தந்த ஏரியா இன்ஸ்பெக்டர்கள் கமிஷனர் பரதன் மற்றும் ராமிடம் சொல்ல,


"எப்படிக் கிடைக்கும்.இத செஞ்சவ லேசுபட்ட ஆளா என்ன? இன்னும் ஒரு வருஷம் உக்காந்து பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்காது…" என்று தனக்குள்லேயே சொன்னவர்,


"நீங்க இந்த எல்லாக் கேஸையும் சூசைட்ன்னு போட்டு க்ளோஸ் பண்ணுங்க. ஒரு எவிடன்சும் இல்ல, அதோட செத்துப் போனவங்க ஃபேமிலியும் கம்ப்ளைன்ட் தர விருப்பம் இல்லன்னு சொல்லீட்டாங்க. நம்ம வேற என்ன பண்ண முடியும்?" என்று அந்தப் பிரச்சனைக்கு அன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் பரதன்.

யுக்தா அந்த லாப்டாப்பில் லாக் செய்யப்பட்டிருந்த போல்டரின் பாஸ்வோர்டை கிராக் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.


ராஷ்மி அனைவருக்கும் கேக் செய்து எடுத்து வந்தவள் யுக்தாவிடம் ஒரு கேக்கை கொடுக்கப் போக, "ஏய் ராஷ்மி இன்னைக்கு வரலட்சுமி விரதம் டி. மறந்திட்டியா? யுகி ஈவினிங் பூஜை முடியும் வரை ஒன்னும் சாப்பிடமாட்டா…" என்றாள் நிஷா.


"ஸ்ஸ்…" என்று நாக்கை கடித்துக் கொண்ட ராஷ்மி, "நான் மறந்தே போய்ட்டேன். சாரி டி யுகி…" என்றாள்.


"ஏய் என்ன டி, இதுக்கெல்லாம் எதுக்குச் சாரி? விடு…"


"வேலைன்னு வந்துட்டா நீ பசி, தூக்கம் பாக்கமாட்ட… மத்தபடி சாதரணமா நீ பசி தாங்க மாட்டீயே யுகி… இந்த விரதம் அன்னைக்கு மட்டும் எப்படிக் காலையில் இருந்து பட்னியா இருக்க?"


"வேற வழி இல்ல ராஷ்மி. நான் மட்டும் இந்த விரதம் ஒழுங்கா இருக்கலன்னு அந்தக் கெழவி சிவகாமி தேவிக்குத் தெரிஞ்சிது, அங்க கிராமத்தில இருந்து அது உதைக்கிற உதை, இங்க சென்னையில் என் முதுகுல வந்து விழும். அந்த கெழவி இந்த விரதம் விஷயத்தில் ரொம்ப ஸ்ரிக்ட்டு!" என்று சோகமாகச் சொல்ல,


"ஆமா டி இவ ஐபிஎஸ் டிரெய்னிங்ல இருந்தப்பா கூட, யாருக்கும் தெரியாம இந்த விரதம் இருப்பா தெரியுமா? பாட்டி மேல அவ்ளோ பயம். அந்த விரதம் இருந்தால் நல்ல புருஷன் கெடக்கும்னு பாட்டி சொல்வாங்க. இவ இதுவரை ஒரு வருஷம் கூட இந்தப் பூஜைய மிஸ் பண்ணதே இல்ல. இவ வெளிய பாக்க தான் மார்டன். ஆனா நம்ம கலாச்சாரம் மேல அவளுக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு. இப்ப கல்யாணம் வேற ஆகிடுச்சு. கேக்கவா வேணும்… அம்மாக்கு வேற உதய் மேல பாசம் பொங்கி வழியுது. அப்படி இருக்கப் பசியாவது மண்ணாவது இல்ல யுகி?" என்று நிஷா யுக்தாவை பார்த்துக் கண்ணடித்துச் சிரிக்க,


யுக்தா அவளை முறைத்தவள், "ஆமாடி ஆமா. நான் என் புருஷனுக்காக விரதம் இருக்கேன் சரி. ஆனா மேடம் காலையில இருந்து எதுவும் திங்காம, தண்ணி கூடக் குடிக்காம இருக்கீங்களே அது யாருக்காம்?" என்று புருவம் உயர்த்தி அவளை முறைக்க,


"அது... அது வந்து…" என்று நிஷா இழுக்க, "எது… எது? எது வந்து மேடம்?" என்று யுக்தாவும் விடாமல் அவளை வம்பிளுக்க,


"ஏன்டி என்ன மட்டும் கேக்குற? இதோ ஜானுவும், ராஷ்மியும் கூடத் தான் காலையில் இருந்து இப்ப வரை ஒன்னும் சாப்புடல... இதோ கேக் கூடச் சாப்பிடாம அப்படியே தான் இருக்கு பாரு…" என்று தோழிகளையும் சேர்த்து போட்டுக் கொடுக்க, யுக்தா மூவரையும் பார்த்து முறைக்க ராஷ்மியும், ஜானவியும் அசடு வழிய சிரிக்க,


யுக்தா, "அடி கூட்டு களவாணிகளா?" என்று மூவரையும் விரட்ட, அந்த இடமே சிரிப்பில் நிறைந்தது.


அந்தச் சிரிப்பு தான் யுக்தாவின் கடைசிச் சிரிப்பாக இருக்கப் போகிறதென்று யார் இவர்களுக்குச் சொல்வது?


மதியம் போல் மூவரும் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட யுக்தா மட்டும் ஆபிசில் இருந்தாள். இரு கண்கள் விரிய லாப்டாபையே வெறித்துப் பார்த்தபடி இருந்த யுக்தாவை கலைத்தது அவள் ஃபோன். யுகியின் அம்மா ஆனந்தி தான் அழைத்திருந்தார்.


"ஏய் சமி எங்க டி இருக்க? மணி ஐஞ்சரை ஆகுது. ஆறு மணிக்குப் பூஜை. சீக்கிரம் கெளம்பி வாடி…" என்றவர் ஃபோனை வைத்துவிட, யுக்தா இருக்கையில் இருந்து எழுந்தவள் மீண்டும் ஒரு முறை லாப்டாப்பை பார்த்துவிட்டு, அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு கிளம்பினாள்.


கல்யாண பட்டுச்சேலையைக் கட்டிக் கொண்டு யுக்தா பூஜை அறைக்கு வர, அங்கு ஏற்கனவே மது, கயல்விழி, நிஷா, ராஷ்மி, ஜானவி பூஜை ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க யுக்தா அவர்களுடன் இணைந்து கொண்டாள்.


பூஜையெல்லாம் நல்லபடி முடிய ஆனந்தி, சாருமதி, கோதை மூவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பெண்களின் நெற்றியிலும், வகிட்டிலும் மூத்த சுமங்கலிகள் குங்குமம் வைத்து ஆசிர்வதிக்க, கோதை யுக்தா நெற்றியில் குங்குமம் வைக்க போகும் நேரம், "அய்யோ அத்தை நெருப்பு!" என்று கயல்விழி அலற, யுக்தாவின் புடவை குத்துவிளக்கில் பட்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. என்ன எதென்று புரியும் முன் அனைத்தும் நடந்து விட்டது.


கல்யாண புடவை எரிந்ததை நினைத்துப் பெரியவர்கள் மனம் கலங்கிய நிற்க, யுக்தா எரிந்த புடவையையும், கீழே கொட்டிக் கிடந்த குங்குமத்தையும், வெறித்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஃபோனில் இங்கு நடந்ததை எல்லாம் கேட்ட சிவகாமி, உடனே கோவிலில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி ஊருக்கு வருவதாகச் சொன்னவர் அப்படியே மதுவிற்கும், கயல்விழிக்கும் இது ஒன்பதாவது மாதம் என்பதால் அவர்களின் வளைகாப்பையும், அதோடு சேர்ந்து யுக்தாவிற்கும் தாலி பிரித்துக் கோர்த்து விடலாம் என்று உத்தரவிட அடுத்த வாரம் மது, கயல் வளைகாப்பும், அடுத்து யுக்தாவிற்குத் தாலி பிரித்துக் கோர்ப்பதென்று முடிவானது.


அடுத்த இரண்டு நாட்களில் யுக்தா யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அவள் முகத்தில் ஒருவித கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அன்று இரவு வெற்றி அவள் அருகில் அமர்ந்தவன், மெதுவாக அவள் தலைகோத யுக்தா ஒரு நிமிடம் வெற்றியை நிமிர்ந்து பார்த்தவள் அமைதியாக அவன் மடியில் தலை வைத்து படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.


அப்போது அங்கு வந்த கயல் வெற்றியையும், அவன் மடியில் உறங்கும் யுக்தாவையும் முறைத்து விட்டு, அவன் அருகில் வந்தவள் "உனக்குக் கொஞ்சமாச்சு அறிவிருக்கா வெற்றி? அங்க உதய் இவ இன்னும் வீட்டுக்கு வரலன்னு வாசலயே பாத்துட்டு இருக்காரு... நீ இங்க இவளுக்கு லாலிபாடி தூங்க வச்சிட்டு இருக்க... உனக்கெல்லாம் எப்ப தான் அறிவு வரப்போகுதோ?" என்று திட்டியவள் தூங்கும் யுக்தாவின் தலையை மெதுவாக வருடி விட்டவள்,


"பாவம் டா வெற்றி இவ… நானும் ரெண்டு நாளா பாக்குறேன் இவ முகமே சரியில்ல.புடவை எரிஞ்சதுல இருந்து ஒரு மாதிரி இருக்கா… ரொம்பப் பயந்துட்ட போல.சரியா சாப்பிடறது கூட இல்ல டா. இவள இப்படிப் பாக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. ம்ம் சரி சரி அவ ரொம்ப நேரம் சோபால படுத்திருந்தா அவளுக்குக் கழுத்து வலிக்கும். நீ மெதுவா அவள துக்கிட்டு போய் நம்ம ரூம்ல படுக்க வை. நான் உதய் கிட்ட இவ இங்க இருக்கான்னு சொல்லிட்டு வரேன்…"


அடுத்த நாள் அடையாறு பாலம் அருகில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு பெண்ணைப் போலிஸ் கண்டுபிடிக்க, அந்தப் பெண் டாக்டர் வினோத்தின் கடத்தப்பட்ட லிஸ்டில் இருந்த பெண் என்று தெரிந்தவுடன், யுக்தாவும் நிஷாவும் அங்கு விரைந்தனர்.


"மூணு நாள் முந்தி நிஷா மேடம் இந்த லிஸ்ட் அனுப்பி, இதுல இருக்கவங்க பத்தி தகவல் கெடச்சா சொல்ல சொன்னாங்க மேடம். நேத்து நைட் ரவுன்ட்ஸ் போகும் போது தற்செயலா இந்தப் பொண்ணைப் பாத்தோம். உடனே ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டோம். அந்தப் பொண்ணைப் பத்தி எந்தத் தகவலும் தெரியல. அப்போ தான் நிஷா மேடம் கொடுத்த லிஸ்ட்ல இருந்த ஃபோட்டோவும் இந்தப் பொண்ணு ஃபோட்டோவும் ஒரே மாதிரி இருக்கேன்னு பாத்து நிஷா மேடம்க்கு ஃபோன் பண்ணேன்." என்று நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் இன்ஸ்பெக்டர் மஹா.


"குட் ஜாப் மஹா. ரொம்ப ஃபாஸ்ட்டா மூவ் பண்ணி ஆக்சன் எடுத்து இருக்கீங்க. குட்! இப்ப அந்தப் பொண்ணு எங்க?"


"அவ ஹாஸ்பிடல்ல தான் மேடம் இருக்கா. நீங்க வாங்க மேடம் போலாம்…"


"போலாம் மஹா. அதுக்கு முன்ன, என் பேரு சம்யுக்தா. யூ கேன் கால் மீ சாம். இவ நிஷா. நீங்க எங்களைப் பேர் சொல்லியே கூப்பிடலாம். மேடம் எல்லாம் வேணாம்…" என்க,


மஹா மெதுவாகத் தலையை மேலும் கீழும் ஆட்டியவள், "நம்ம இப்ப போலாமா சாம் அன்ட் நிஷா…" என்க யுக்தாவும், நிஷாவும் சின்னதாகச் சிரித்தார்கள் மஹாவின் பின்னே சென்றனர்.


யுக்தா, மதுவை அழைத்து ஹாஸ்பிடலில் இருந்த பெண்ணைப் பரிசோதிக்கச் சொல்ல, அந்தப் பொண்ணைப் பரிசோதித்துப் பார்த்த மது தடுமாறி அப்படியே உட்கார்ந்து விட, "அண்ணி… அண்ணி…" என்று யுக்தா மதுவை உலக்கியவள், "ஐம் சாரி அண்ணி நெறமாசமா இருக்க உங்களை இங்க கூப்பிட்டது என் தப்பு தான். சாரி அண்ணி ரொம்ப சாரி. இந்தாங்க இந்தத் தண்ணிய குடிங்க…" என்க,


"எனக்கு ஒன்னு இல்ல டி….. நீ பயப்படாத. அந்தப் பொண்ணு ரிப்போர்ட் பார்த்து எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சி சமி! எப்படி சமி, எப்படி? எப்படி இவங்களால் இப்படி ஒரு பாவத்தைச் செய்ய முடிஞ்சிது. அவங்க அந்தப் பொண்ணு உடம்புல டெஸ்ட் பண்ணி இருக்க மருந்தெல்லாம் ரொம்பப் பவர்ஃபுல் மருந்து சமி. பல உலக நாடுகள் இந்த மருந்துகளைத் தடை செஞ்சு இருக்கு. அப்படி இருக்க இது எப்படி இங்க வந்துது? பாவம் சமி அந்தப் பொண்ணு உடம்புல இருக்க எல்லா உடல் உறுப்புகளும் அழுகி போயிருக்கு. அந்த மருந்து அந்தப் பொண்ணு உடம்பை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னுட்டு இருக்கு. மிஞ்சி போன இன்னும் ஒரு ஒரு வாரம், பத்துநாள் தான் அந்தப் பொண்ணு உயிரோட இருக்கும்…" என்ற மது அந்தப் பொண்ணை நினைத்து கண் கலங்கியவள்,


"இத செஞ்சவங்களை உயிரோட விட்டுடாத சமி. இந்த மாதிரி ஆளுங்க இந்தப் பூமில இருந்தா, இனி வர நம்ம சந்ததிகளுக்கும் பெரிய ஆபத்து!" என்றவள் தன் நிறைமாத வயிற்றைக் கவலையோடு தடவி விட,


மது தோளில் கைவைத்து அழுத்திய யுக்தா, "நீங்க சொன்னது நடக்கும் அண்ணி. எது என்ன ஆனாலும் இதுல சம்மந்தப்பட்ட ஒருத்தரையும் விட மாட்டேன் அண்ணி." என்று அழுத்தி சொன்னவள்,


"நீங்க இப்ப வீட்டுக்கு போங்க…" என்று மதுவை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.


"உங்க அண்ணி சொல்றத பார்த்தா, இந்தப் பொண்ணு உடம்பு ரொம்ப மோசமா இருக்கும் போல… இவ எப்படி அந்தப் பாலத்துக்கு வந்தா? இவ இருக்க நிலைமையைப் பாத்தா இவ கடத்துனவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வர வாய்ப்பே இல்லையே… அப்பறம் எப்படி இவ அங்க வந்திருப்பா?" என்று மஹா தன் சந்தேகத்தைக் கேட்க,


"இட்ஸ் ஏ டிரப்!" என்று யுக்தா, நிஷா இருவரின் குரலும் ஒரே நேரத்தில் ஒலிக்க, மஹா புரியாமல் அவர்களைப் பார்த்தாள்.


"இது அந்தக் கடத்தல்காரன் எங்களைப் பயமுறுத்த செஞ்ச டிரிக் மஹா. ம்ஹும் பாவம் அவனுக்குத் தெரியல, இது அவனுக்கு அவனே தோண்டிக்கிட்ட படுகுழின்னு. மஹா இந்தப் பொண்ணுக்கு செக்யூரிட்டி ஒரு பார்மாலிட்டிக்கு இருந்தா போதும். இங்க என்ன நடந்தாலும் யாரையும் கண்டுக்க வேணாம்னு சொல்லிடுங்க…" என்றவளை விசித்திரமாகப் பார்த்த மஹா,


"அப்ப அந்தப் பொண்ணோட நெலமை மேடம்?" என்று கேட்டாள்.


"அத நான் பாத்துக்குறேன்…" என்று அலட்சியமாகச் சொன்னவள் அங்கிருந்து சென்றாள்.


மறுநாள் அனைவரும் கூடியிருக்க வீட்டிலேயே மதுரா, கயல்விழி வளைகாப்பு சிறப்பாக நடந்தது.


"நாங்க தான் அத்தை, எங்களுக்குத் தான் முதல் மரியாதை!" என்று யுக்தா, நிஷா, ராஷ்மி, ஜானவி நால்வரும் மது, கயல்விழியையும் ஒரு வழியாக்க சிரிப்பும், சந்தோஷமுமாக வளைபூட்டு நல்லபடியாக முடிந்தது.


இரண்டு நாள் கழித்து யுக்தாவிற்குத் தாலி பிரித்துக் கோர்க்க முடிவு செய்தனர்.


மறுநாள் காலை கண்விழித்ததில் இருந்து யுக்தாவிற்கு ஒரு மாதிரி இருக்க, கண்களை மூடி அமைதியாகப் படுத்திருந்தவள் தலையை ஒரு கை மெதுவாகப் பிடித்துவிட, யுக்தா கண்விழித்துப் பார்க்க உதய் அவள் அருகில் அமர்ந்திருந்தான்.


"என்ன ஆச்சு டா? ஏன்டா ஒருமாதிரி இருக்க? உடம்பு எதும் சரியில்லையா" என்று வாஞ்சையாகக் கேட்க,


மெதுவாக எழுந்து அமர்ந்தவள், "இல்ல உதய் உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. கேஸ் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்…" என்று சமாளிக்க உதய் அவளை நம்பாத பார்வை பார்த்தான்.


அந்த நேரம் பார்த்து யுக்தா ஃபோன் அலறியது. "வாட்? என்ன சொல்றீங்க? ஹாஸ்பிடல்ல போலிஸ் கஸ்டடில இருந்த பொண்ணு எப்படி காணாம போகும்?" என்று கொதித்த யுக்தா அடுத்த நொடி, உதய் பேச பேச எதையும் காதில் வாங்காமல், குளித்து உடையை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டாள்.