அழகிய தமிழ் மகள் 16

அழகி 16


யுக்தா, உதய் கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் காற்று போல் வேகமாகக் கடந்து விட்டது. யுக்தா முகத்தில் தெரிந்த வெட்கமும், சிரிப்புமே அவளின் திருமண வாழ்க்கையின் நிறைவை சொல்லாமல் சொல்ல, குடும்பம் முழுவதும் நிம்மதி கொண்டது.


யுக்தா என்ன தான் வேலை வேலையென்று அலைந்தாலும், ஒரு நல்ல மனைவியாக உதய்க்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் குறையில்லாமல் செய்தாள். உதய்யும் அவளின் குணம் அறிந்து அன்பாக நடந்தான். இரண்டே மாதத்தில் உதய், யுக்தா வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டான்.


அவள் வேலையின் சூழல் புரிந்து அவளுக்குக் கணவனாக மட்டும்மில்லாது, நல்ல நண்பனாகவும் இருந்தவன், யுக்தா மனதை முழுதாக ஆட்கொண்டான். அவனின் ஒவ்வொரு செயலும் யுக்தா மேல் அவனுக்கு இருக்கும் காதலை அப்பட்டமாக வெளிப்பட்டது.


அவள் கேஸ்களைப் பற்றி உதய்யிடம் பகிர்ந்து கொள்ளும் அளவு உதய், யுக்தா மனதில் இடம் பிடித்திருந்தான். ஆனாலும் யுக்தா உதய்க்காகச் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஒரு நல்ல மனைவிக்குக் கணவன் மேல் இருக்கும் அன்பும், இயல்பான உரிமையும் தான் வெளிப்பட்டதே தவிரக் காதல் இருந்ததா என்றால் அது கேள்விக்குறி தான்.


ஒருமுறை தோழிகள் இது பற்றி யுக்தாவிடம் கேட்க, "யுகி நீ உதய்க்கு ஒரு நல்ல பொண்டாட்டிய இருக்க… அவர் மேல உனக்கு நெறைய அன்பிருக்கு… அது உன்னோட முகத்தைப் பாத்தாலே நல்ல தெரியுது. ஆனா..." என்று ராஷ்மி இழுக்க,


"ம்ம்ம் கேளு ராஷ்மி… என் கிட்ட என்ன தயக்கம் கேளு…" என்றவள் கேஸ் ஃபைல் மேல் ஒரு கண்ணை வைத்தபடியே பேச,


"இல்ல டி… உதய் மேல உனக்குக் காதல் இருக்க மாதிரியே தெரியல… உன் கண்ணுல காதல் இல்ல. அவருக்குப் பொண்டாட்டின்ற கடமையும், மரியாதை, அன்பு, பாசம் தான் தெரியுதே தவிர, துளி கூடக் காதல் தெரியல. ஒரு வேளை உனக்கு இந்தக் கல்யாணம் புடிக்கலயா யுகி? வீட்டுல சொன்னதுக்காகக் கட்டாயத்தில் தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டியா?" என்று கேட்டாள்.


யுக்தா ஃபைலை மூடி வைத்துவிட்டு ராஷ்மியை பார்க்க, அருகில் இருந்த நிஷா, ஜானவி முகத்தை வைத்தே அவர்கள் மனதிலும் அதே கேள்வி தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டவள், மென்மையாகச் சிரித்து விட்டு, "இங்க பாருங்கப்பா நீங்க சொல்றது உண்மை தான். எனக்கு இப்ப வரை உதய் மேல் காதல் வரல…" என்று பெரிய குண்டை தூக்கி போட தோழிகள் மூவரும் அதிர்ச்சியாக,



"ஏய் சமி என்ன சொல்ற நீ? அப்பறம் ஏன்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட? இப்ப என்ன டி பண்றது? உன்னோட லைஃப் என்னடி ஆகும்?" என்று மூவரும் பதற,


"ஏய் ஏய் ரிலக்ஸ்! நான் சொல்றதை முழுசும் கேளுங்க… எஸ் எனக்கு இப்ப வரை உதய் மேல காதல் இல்ல. ஆனா காதல் வரவே வராதுன்னு நான் சொல்லவே இல்லையே… ஏன் கல்யாணம் முடிஞ்ச உடனே புருஷனை லவ் பண்ணிடனுமா என்ன? கல்யாணத்துக்கு அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு காதல் வந்தா நீங்களெல்லாம் ஒத்துக்கமாட்டிங்களா என்ன?" என்று கண்ணடிக்க, அப்போது தான் தோழிகள் மூவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.


"ஆமா நான் வீட்டுல சொன்னாங்கன்னு தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அதுனால எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. எனக்கு உதய்ய ரொம்பப் பிடிச்சிருக்கு. அதான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். நான் சின்ன வயசுல இருந்து அப்பா, அண்ணா, ஃப்ரண்ட்ஸ்னு சுத்தி நெறய ஆண்களுக்கு நடுவுல வளர்ந்தவ… சோ இதுவரை எந்த ஆம்பிளைகிட்ட பேசும் போதும், பழகும் போதும் எனக்குத் தயக்கமோ, பயமோ, எந்த ஸ்பெஷல் ஃபீலிங்கும் வந்ததே இல்ல. அதனால தானோ என்னமோ உதய்கிட்ட கூட எனக்கு எந்த ஸ்பெஷல் ஃபீல்லும் வர மாட்டிங்குது. 


உதய் என்னோட சின்ன வயசு ஃப்ரண்ட். சோ அவன்கிட்ட என்னால கம்ஃபர்டபுல்லா ஃபீல் பண்ண முடியுது. நெருங்கி பழக முடியுது. கூடவே மஞ்சள் கயிறு மேஜிக் வேற. சோ வீ லைக் ஈச் அதர். இப்ப வரை அவ்ளோதான். இனி பழகப் பழக உதய் மேல எனக்குக் காதல் வரலாம். எனக்கா அவன் மேல் காதல் வராட்டி கூட என் புருஷன், அந்தப் பிராடு பய பண்ற சேட்டையில், என் மேல காட்ற லவ்வுல எனக்குள்ள சீக்கிரம் காதலை வரவச்சிடுவான் போல…" என்றவள் முகம் முழுவதும், உதய்யின் காதலை நினைத்துப் பெருமையில் மிளிர்ந்தது.


அழகாக யுக்தாவின் இல்லறம் நடக்க, அவள் எந்தக் கேஸ்க்காக சென்னை வந்தாளோ அதுவும் ஒரு முடிவுக்கு வர காத்திருந்தது.


யுக்தாவும், நிஷாவும் கேஸ் பற்றி விசாரிக்க விசாரிக்க அவர்களுக்குக் கிடைத்த தகவல்கள் அவர்கள் இருவரையும் மிரள வைத்தது.


யுக்தா தான் ஆபிசில் மாட்டியிருந்த போர்ட்டையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரை அவள் இந்தக் கேஸ் பற்றிச் சேகரித்த தகவல்கள், ஃபோட்டோக்களையே பார்த்தபடி நின்றிருந்தாள்.


"இந்தக் கேஸ் தோண்ட தோண்ட ரொம்பப் பெருசா போய்ட்டு இருக்கு இல்ல யுகி…" என்ற நிஷாவின் வார்த்தைகளில் உணர்வு வந்தவள்,


"ம்ம்ம் ஆமா நிஷா. காணாமல் போன எல்லாரும் வெளியூரில் இருந்து சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்தவங்க. பெருசா எந்தப் பேக்ரவுன்டும் இல்லாத சாதரணமான ஜனங்க… சுமார் இருபது பேர்க்கு மேல காணாம போயிருக்காங்க… ஆனா யாரும் அதபத்தி ரிப்போர்ட் பண்ணல. அந்த ஆக்டிவிஸ்ட் மட்டும் கம்ப்ளைன்ட் பண்ணாம இருந்திருந்தால் இதெல்லாம் வெளிய தெரியாமலே போயிருக்கும். டாக்டர். வினோத் நமக்கு ஹெல் பண்றதா சொன்னவர், இப்ப உயிரோடவே இல்ல பாவம். இந்த கேஸ்ல நம்ம ஏதோ ஒரு முக்கியமான பாய்ண்ட்டை மிஸ் பண்றோம் நிஷா. அது என்னன்னு தான் புரியல… அது மட்டும் தெரிஞ்சிட்டா போதும். அது புரியமா அடுத்து ஒன்னும் பண்ண முடியாது போல…" என்று தலையில் ஒரு கையும் இடுப்பில் ஒரு கையும் வைத்து சீரியஸாக யோசித்தவள்,



சட்டென ஏதோ தோன்ற, டாக்டர். வினோத்தின் மகள் ராஜீயை அழைத்துப் பேசியவள், பின் இன்னும் சிலபேருக்கு ஃபோன் செய்து பேசிவிட்டு, அடுத்த நொடி "நிஷா கெளம்பு" என்க,


"எங்க யுகி?" என்று கேட்டாள் நிஷா.


"உனக்கு நியாபகம் இருக்கா? நம்ம ராஜீய கொல்ல வந்தவனுங்க, அவகிட்ட அவ அப்பாவோட லாப்டாப் பத்தி கேட்டாத அவ சொல்லி இருந்தா…"


"ம்ம் ஆமா ஞாபகம் இருக்கு. நாம தான் அவர் வீடு, கிளினிக், பேங்க் லாக்கர்னு ஒரு இடம் விடாம தேடினோமே, ஒன்னும் கிடைக்கலயே?"


"எஸ் அங்க தான் நம்ம மிஸ் பண்ணிட்டோம். டாக்டர் பத்தி விசாரிச்ச நாம, அவர் ஃபேம்லி பத்தி யோசிக்காம விட்டுட்டோம். அது தான் நம்ம பண்ண பெரிய தப்ப…"


"ஃபேம்லியா… நீ ராஜீயவா சொல்ற? அவகிட்ட லாப்டாப் இருந்திருந்தா தான் நம்மகிட்ட தந்திருப்பாளே…"


"ஏய் டாக்டருக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு… அதோட அவர் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சு தான், அவர் நம்மையே கன்ட்டாக்ட் பண்ணாரு. அப்படி இருக்க அந்த லாப்டாப்பை அவர் எப்படி அவர்கிட்டயோ இல்ல ராஜீகிட்டயோ கொடுத்திருப்பாரு. நீயே சொல்லு?"


"ஆமா யுகி நீ சொல்றதும் சரிதான். அந்த லாப்டாப் அவர்கிட்ட இல்லை. சோ அடுத்த ஆப்ஷன் ராஜீ தான். பட் அந்த லாப்டாப் அவகிட்ட இருந்தா ராஜீ உயிருக்கும் ஆபத்து. சோ டாக்டர் அத ராஜீ கிட்ட கொடுத்திருக்க மாட்டாரு… ஆனா ராஜீய வச்சு தான் நம்ம அந்த லாப்டாப்பை நெருங்க முடியும். ஆம் ஐ ரைட் யுகி?”


"100 பர்செண்ட் கரெக்ட். டாக்டர், ராஜீ உயிருக்கு ஆபத்து வர கூடாதுன்னு நெனச்சு, அவ அத்தை நர்ஸ் ஒருத்தங்க இருக்காங்களே அவங்க பேர்ல பெங்களூர்ல ஒரு பேங்க் லாக்கர் ஓபன் பண்ணி இருக்காரு... நான் நெனக்கிறது சரின்னா அந்த லாப்டாப் அந்த லாக்கர்ல தான் இருக்கணும். டாக்டருக்குத் தங்கச்சி ஒருத்தங்க இருக்க விஷயமே இங்க யாருக்கும் தெரியாது. நமக்கே ராஜீ சொன்ன அப்பறம் தான் தெரியும். சோ லாப்டாப் அங்க தான் இருக்கனும். நம்ம உடனே அங்க போகணும்…" என்றவள் நிஷாவோடு பெங்களூர் விரைந்தாள்.


அவர்கள் நினைத்தது போல் லாப்டாப் அந்த லாக்கரில் தான் இருந்தது. அதில் காணாமல் போன அனைவரின் புகைப்படங்களும் மற்ற அனைத்து விவரங்களும் இருந்தது. யுக்தா கண்கள் கோபத்தில் அக்னியாக ஜொலித்தது.நிஷாவோடு, ஜானவி, ராஷ்மி கூடக் கோபத்தின் உச்சியில் தான் இருந்தனர்.


"இவனுங்க எல்லாம் மனுஷங்க தானா? ச்சே கொஞ்சம் கூட இரக்கமில்லாம இத்தனை பேரை இவனுங்க சுயநலத்துக்கும், சுயலாபத்துக்கும் யூஸ் பண்ணி இருக்காங்களே… இவனுங்களை எல்லாம் என்ன பண்றது?" என்று கொதித்துக் கொண்டிருந்தாள் யுக்தா.


நிஷா, "இவனுங்க ஒருத்தரையும் விடக் கூடாது யுகி… ஒவ்வொருத்தனையும் ஓட ஓட வெரட்டி வெரட்டி கொல்லனும். ஒருத்தனையும் விடக் கூடாது…" என்றாள் ஆவேசமாக.


"ஆமா யுகி மொத்த பேரையும் போட்டுத்தள்ளனும்" என்று ராஷ்மியும் ஆமோதித்தாள்.


"நோ ராஷ்மி.‌ இந்த விஷயத்தில் நீயும், ஜானுவும் கொஞ்சம் ஒதுங்கியே இருங்க… இது சிபிஐ சம்பந்தப்பட்ட கேஸ். இதுல உங்க ரெண்டு பேர் பேரும் வரது உங்க ப்ராப்பஷனுக்கு நல்லதில்ல. அதோட ஏற்கனவே நிஷாவுக்கு நடந்த கார் ஆக்சிடென்ட்டே உண்மையா? இல்ல பிரீப்பிளான் அட்டாக்கான்னு சந்தேகமா இருக்கு. பிகாஸ் அன்னைக்கு அங்க போக வேண்டியது நான் தான். பட் எனக்கு வேற வேலை இருந்ததால் நிஷாவை போகச் சொன்னேன். இப்ப யோசிச்சா எனக்குச் சந்தேகமா இருக்கு. நாங்க இங்க வந்ததுல இருந்து யாரோ எங்களை வாட்ச் பண்றாங்களோன்னு தோணுது. சோ இந்த மேட்டர் கிளியர்ராகும் வரை நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் விலகி இருங்க…"


ராஷ்மியும் ஜானுவும் சரி என்று தலையாட்டியவர்கள், "ஓ.கே. யுகி… ஆனா பரதன் அங்கிள் காதுக்கு விஷயம் போறதுக்கு முந்தி, நீ ஸ்கெட்ச் போட்டு மொத்தமா எல்லாரையும் முடிச்சாகணும்…" என்றனர்.


"ம்ம் அதுவும் கரெக்ட் தான். அவருக்குத் தெரிஞ்சா கண்டிப்பா அவங்களை அரஸ்ட் பண்ண தான் சொல்வாரு... இந்தக் கேஸ்ல அரஸ்ட் எல்லாம் சரிபட்டு வராது. இதுக்கு நம்ம வழி தான் சரிபட்டு வரும். இந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்ட மொத்த நாய்ங்களோட ஒட்டு மொத்த ஜாதகமும் டாக்டரோட லாப்டாப்ல இருக்கு. எல்லாருமே சொசைட்டில பெரிய ஆளுங்க, பெரிய டாக்டர்ஸ், இவனுங்களை அரஸ்ட் பண்ண அடுத்த நாளே வெளிய வந்துடுவானுங்க... நம்மகிட்ட இருக்க ஆதாரத்த வச்சு, அவனுங்க தலைமுடியைக் கூடப் புடுங்க முடியாது. சோ இன்னையில இருந்து பத்து நாள்ல மொத்த பேரையும் முடிக்கிறோம்…" என்று உறுமினாள் யுக்தா.


"அதோட இந்த லாப்டாப்ல டாக்டர்ஸ் லிஸ்ட், இந்த ஆராய்ச்சியில பணம் இன்வஸ்ட் பண்ண பிஸ்னஸ்மேன்ஸ் டீடெயில்ஸ் தான் இருக்கு. இன்னொரு போல்டர் இருக்கு, ஆனா அதுக்குப் பாஸ்வேர்டு லாக் போட்டிருக்கு, தப்பான பாஸ்வேர்ட் போட்டா மொத்த டேட்டாவும் அழுஞ்சிடும். அதைக் கிராக் பண்ண எனக்கு அட்லீஸ்ட் ரெண்டு நாளாவது தேவைப்படும். இதையெல்லாம் செய்ற அந்த மெயின் கிரிமினல் பத்தி அந்தப் போல்டரில் எதாவது இம்பார்மேஷன் இருக்கான்னு பார்க்கனும்…"


"ஆமா யுகி சீக்கிரம் நம்ம வேலைய ஸ்டார்ட் பண்ணனும்…" என்ற நிஷா சற்று யோசித்து, "யுகி கடத்தப்பட்ட அந்த விக்டிம்ஸ்ல யாராவது உயிரோட இருக்க வாய்ப்பிருக்கா?" என தன் சந்தேகத்தை கேட்டாள்.


"உறுதியா சொல்ல முடியாது நிஷா. ஆனா வாய்ப்பிருக்கு. ஆனா அவங்க உயிரோட இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்ல. நவ் தே ஆர் ஜஸ்ட் லைக் ஏ வெஜிடபிள்ஸ்!" என்று கண்கள் கலங்கியவள்,


"நிஷா நீ எல்லா லோக்கல் போலிஸ் ஸ்டேஷன்லயும் இருக்க எல்லா மிஸ்ஸிங் கேஸ் டீடெயில்ஸையும் இதுல இருக்கக் கடத்தப்பட்டவங்க லிஸ்ட்டோட மேட்ச் பண்ணி பாரு. இந்த லிஸ்ட்ல இருக்கவங்களைப் பத்தி எந்த டீடெயில் கெடச்சாலும் நமக்கு ஃபார்வேர்ட் பண்ண சொல்லு. அவங்க ஒருத்தனையும் விடக்கூடாது…" என்று கலங்கிய கண்களை அழுத்தி துடைத்தவள், தோழிகளுடன் மனித உருவில் இருக்கும் மிருகங்களை வேட்டையாட கிளம்பினாள்.


பெங்களூர் சென்று டாக்டரின் லாப்டாப்பை கைப்பற்றினார் யுக்தாவும், நிஷாவும். தோழிகள் நால்வரும் அந்த லாப்டாபில் இருந்த தகவல்களைப் பார்த்தவர்கள் இதயம் ஒருநிமிடம் நின்று துடித்தது.


வெளிநாட்டில் தடைசெய்யப்பட்ட புதுப்புது மருந்துகளை அங்கிருக்கும் மக்கள் மீது பரிசோதிக்க முடியாமல் போக, தவறான வழியில் அந்த மருந்துகளைச் சென்னைக்கு வர வைத்து, இங்கு இருக்கும் சில டாக்டர்சை கைக்குள் போட்டுக் கொண்டு, நோயாளிகளின் மீது அந்த மருந்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.


அதில் அந்த நோயாளிகள் மோசமான முறையில் இறந்து விட அந்த நோயாளிகளின் குடும்பத்தினர் போலிஸ், கேஸ் என்று போய்விட, பணம் கொடுத்து ஒரு வழியாக அந்தக் கேஸ்சை முடிவுக்குக் கொண்டு வந்து, அதன் பின் ஊர்பேர் தெரியாத, ரோட்டோரம் ஆதரவு இல்லாமல் இருக்கும் ஆட்களைக் குறி வைத்து கடத்தி, அவர்கள் மேல் அந்த மருந்துகளைப் பரிசோதித்துள்ளனர்.


இதில் சில பிரபலமான டாக்டர்கள், தொழிலதிபர்களும் கூட்டு. இந்த விஷயங்கள் எப்படியோ டாக்டர் வினோத்துக்குத் தெரிந்து விட, அந்த கூட்டத்தில் ஒருவராகச் சேர்ந்து ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டு அனைத்து விவரங்களையும் சேகரித்து அதைத் தன் லாப்டாப்பில் பத்திரமாக வைத்துவிட்டு, தன் நண்பர் சோஷியல் ஆக்டிவிஸ்ட் ஒருவர் மூலமாகக் கோர்ட்டில் கேஸ் போட வைக்க, அந்த கேஸ் சிபிஐ கைக்கு வந்தது.


இதை அறிந்த டாக்டர், கமிஷனர் பரதன் மூலம் யுக்தாவை பற்றித் தெரிந்து கொண்டு அவளைச் சந்தித்துப் பேச இருக்கும் போது தான், அந்தக் கூட்டத்திற்கு அவரைப் பற்றித் தெரிந்து அவரைக் கொன்று விட்டனர்.


சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து டாக்டர்ஸ், தொழிலதிபர் என்று சிலர் எந்தக் காரணமுமின்றித் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது. அதுவும் எந்த விஷத்தை வைத்து டாக்டர் வினோத் கொலை செய்யப்பட்டாரோ, அதே விஷத்தால் தான் இவர்கள் மரணமும் நிகழ்ந்திருந்தது. இதுவே போலிஸ்க்கு பெரிய மண்டை இடியாகப் போனது.


பரதனும், ராமும் இது ஒருவேளை யுக்தா வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் வர, அவளிடம் இது பற்றிக் கேட்க, "அது நான் இல்லீங்கோ…" என்று தலையாட்டியவள் மெல்லிய சிரிப்போடு அவர்களைக் கடந்து சென்றுவிட, அவள் சிரிப்பே ராம், பரதனுக்கு உண்மையைச் சொல்லிவிட்டது.