அழகிய தமிழ் மகள் 11

 


அழகி 11


யுக்தா அந்தப் பெண்களின் கேஸில் செய்ததை ராம் சொல்லக் கேட்ட ஆதித், ஒரு மிரட்சியோடு யுக்தா இருந்த அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஐபிஎஸ் முடித்துப் பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூடக் குற்றவாளியை உயிரோடு பிடித்ததே இல்லை. ‘தப்பு செஞ்ச நாய்களுக்கு ஜெயில் தண்டனை பத்தாது... அவனுங்களைப் புடிச்ச உடனே சுட்டு தள்ளணும்…’ என்ற கொள்கை கொண்டவன் ஆதித். அவன் துப்பாக்கியால் எமலோக பதவி அடைந்தவர்கள் பல பேர். அவனின் இந்தப் பழக்கத்தை ராமே பல முறை கண்டித்திருக்கிறான். ஆனால் ஆதித் மாறவே இல்லை. 


கூர்க் அனுப்பும் போது கூட அநாவசியமாக யார் மீதும் கை வைக்கக் கூடாது, முக்கியமாக யாரையும் கொல்லக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி தான் ராம் ஆதித்தை கூர்க்கிற்கு அனுப்பி வைத்தான். ஆதித்திற்குத் தப்புச் செய்தவர்களைக் கொல்வதென்பது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் இந்தக் கேஸ்சில் யுக்தாவின் செயல் முறை ஆதித்தையே சற்று வியக்க வைத்தது உண்மை தான்.


இதுவரை ராம், யுக்தா பற்றிச் சொல்ல சொல்ல ஆசையோடும், ஆர்வத்தோடும் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்திற்கு, ஏனோ யுக்தாவின் கல்யாணம் செய்தி மட்டும் அவ்வளவு தித்திப்பாக இல்லை. அவளை வேறு ஒருவனோடு இணைத்து யோசிக்கக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏன் அப்படி யோசிக்கிறான் என்று கேட்டால் அது அவனுக்கே தெரியாது. ஆனால் ராம் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை. அது ஆதித் முகத்திலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ராமும் ஆதித்தின் முக மாறுதலை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.


"யுகி நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு சத்தியமா என்னால நம்ப முடியல டி!!" என்று ராஷ்மி வியந்து பார்க்க,


"ஏய் ராஷ்மி… உனக்குத் தான் தெரியுமில்ல?? அவளுக்கு அவ குடும்பம் தான் பர்ஸ்ட் மத்ததெல்லாம் அப்புறம் தான். அவங்க சந்தோஷத்துக்காக அவ எதை வேணும்னாலும் செய்வா... அதோட ராம் அண்ணாவும், வினய்யும் ஒரு முடிவெடுத்தா அதை யுகி மீறவே மாட்டா... அவ எவ்வளவுக்கு எவ்வளவு ஸ்ட்ராங்கோ அவ்வளவுக்கு அவ்வளவு ரொம்ப எமோஷ்னலும் கூட. அதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா…" என்று நிஷா சொன்னதற்கு ஆமாம் என்று தலையாட்டினாள் யுக்தா.


"ஆமா ராஷ்மி… எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல சுத்தமா இஷ்டமே இல்ல தான். ஆனால் அதுதான் என் குடும்பத்துக்குச் சந்தோஷம்னா, அவங்களுக்காக நான் கண்டிப்பா அதைச் செய்வேன். இந்த உலகத்துலயே எனக்கு முக்கியமானது என் குடும்பமும் நீங்களும் தான்! அதுக்குப் பிறகு தான் என்னோட வேலை, மத்தது எல்லாமே. உதய் வினு, ராமண்ணாவோட கிளாஸ்மேட். எனக்கும் சின்ன வயசில் இருந்து அவனை நல்லா தெரியும். அவனை வேண்டாம்ன்னு சொல்ல என் கிட்ட எந்த ரீசனும் இல்லை… அதான் ஓ.கே. சொல்லிட்டேன். நானும் நெறய தகிடுதத்தோம் செஞ்சு அப்பா பார்த்த சில பசங்களை ஓட விட்டேன் தான். ஆனால் உதய் கிட்ட என்னோட பச்சா பலிக்கல... அவனுக்கு என்னோட ப்ராடு வேலை எல்லாம் நல்லாவே தெரியும். அதான் வேற வழி இல்லாம மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டேன்…" என்று சிரித்துக்கொண்டே சொல்ல,


"ம்ம்ம் எப்படியோ நீ நல்லா இருந்தா, அதுவே எங்களுக்குப் போது யுகி…" என்ற ஜானவியைக் கோபமாகப் பார்த்த யுக்தா, "உனக்கு மட்டும் தான் அப்படி இருக்குமா ஜானு? எங்களுக்கு அந்த எண்ணம் இருக்காதா?? நீ மேரேஜ் பண்ணிகிட்டா நாங்க சந்தோஷபட மாட்டோமா சொல்லு?? ஜீவா உனக்குப் பரப்போஸ் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு… அவனுக்குப் பதில் சொன்னியாடி நீயி? நீ அவனுக்கு ஓ.கே. சொல்லணும்னு நான் சொல்லல… ஆனால் அவன் நல்ல பையன் ஒரு முறை ஜீவா பத்தி கன்சிடர் பண்ணுன்னு தானே சொல்றேன்…" என்று யுக்தா பேச பேச ஜானவியின் கண்கள் கலங்கிவிட்டது.


"ஏன் யுகி என்னை பத்தி தெரிஞ்சும், நீ இப்படிப் பேசுறது எனக்குக் கஷ்டமா இருக்கு டி… எனக்கு நடந்த கொடுமைல இருந்து நான் வெளிய வந்துட்டேன் தான். இன்னைக்குச் சொசைட்டில நான் பெரிய லாயர் தான். இரு… இருந்தாலும்…" எனும் போதே அவள் குரல் கம்மிவிட,


"இருந்தாலும்…" என்ற கேட்ட மூன்று தோழிகளின் குரலிலும் கடுமை இருந்தது.


"ஏய்… ப்ளீஸ் டி என்னைப் புரிஞ்சுக்கோங்க… இப்பவரை சில நைட்ல அந்த இன்சிடன்ட் நினைச்சு நான் பயந்து நடுங்குறது உங்களுக்கே தெரியுமில்ல… எனக்கு ஆம்பளைங்கள நெனச்சாலே பயமா இருக்கு டி. நான் எப்படி டி மேரேஜ் பண்ணிக்க முடியும்? எனக்கு ஜீவாவை புடிக்கும். யுகியோட அண்ணா ஜீவாவை ரொம்பப் புடிக்கும். அவ்ளோ தான் அதைத் தாண்டி வேற ஒன்னும் இல்ல. அவரு ரொம்ப நல்லவரு யுகி. அவருக்கு நான் வேணா... வேற நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணி அவர் சந்தோஷமா இருக்கட்டும்…" என்றவள் குரலில் வலியும், ஏமாற்றமும் வெகுவாக நிறைந்திருந்தது!


யுக்தா ஏதோ பேச வர, அவளைக் கை காட்டி நிறுத்திய ஜானு, "ப்ளீஸ் யுகி இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க…" என்று முடிவாகச் சொல்லிவிட, நிஷா யுக்தாவிற்கும், ராஷ்மிக்கும் கண்ணை காட்ட அதற்குப் பின் யாரும் ஜீவா பற்றி அவளிடம் பேசவில்லை. ஆனால் யுக்தா வீட்டிற்க்கு வரும் ஜானவியின் பார்வை ஏக்கமாக ஒரு தவிப்போடு, ஜீவா மேல் விழுவதைத் தோழிகள் மூவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.


"ஏன் டி எரும நீ ஜானு ஃப்ரண்டு தானே... அவகிட்ட என்னைப் பத்தி ஆஹா ஓஹோன்னு கொஞ்சம் பீல்டப் பண்ணி என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஓ.கே. சொல்ல வையேன் டி…" என்று ஜீவா யுக்தாவை மரியாதையாகக் கெஞ்சி கேட்க,


"டேய் என்னை என்னன்னு நெனச்ச நீ? நான் என்ன லவ் ப்ரோக்கரா டா… விட்டா தொழிலையே மாத்திருவீங்க போல..." என்று எகிறினாள்.


"ஏன் ஏன்?? ராம், வெற்றி தொடங்கி, இப்ப வினய் லவ்வுக்கெல்லாம் நீ குஜா தூக்கல?? எனக்குன்னா செய்யமாட்டியா? அப்ப நான் பாசமில்லையா? அன்பில்லையா? அய்யோ கடவுளே... அன்பு ஒன்னும் தான் அநாதையா??"


"டேய் டேய்… நிறுத்து டா… ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது… எமோஷன கொற… நீயெல்லாம் டாக்டருன்னு வெளிய சொல்லிடாத வெக்ககேடு. நான் ஆல்ரெடி ஜானுகிட்ட உன்னைப் பத்தி பேசிட்டேன். ஆனால் அவ…" என்று அவள் யோசிக்க,


"ஏய் சாம் ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு டி.. ஜானு… ஜானுக்கு என்னைப் புடிக்கலயா?? அவ வேற யாரையாச்சும் காதல் எதாவது??"


"இல்ல ஜீவா... அப்படி ஒன்னும் இல்ல. அவளுக்கு உன்னைப் புடிக்கும். இன்பேக்ட் அவ அவளுக்கே தெரியாம உன்ன விரும்புறா… ஆனால் அவ அவளோட பாஸ்ட் லைஃ பத்தி நெனச்சு பயப்படுறா ஜீவா..." என்று ஆரம்பித்து ஜானவியின் மனநிலையை யுக்தா ஜீவாவிடம் தெளிவாக எடுத்து சொல்ல, ஜீவா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன், "இப்ப ஜானு எங்க இருப்பா சாம்?" என்று தான் கேட்டான். அடுத்த அரைமணி நேரத்தில் ஜானவி வீட்டு காலீங் பெல்லை அடித்துக் கொண்டிருந்தான் ஜீவா.


ஜீவாவை பார்த்து முதலில் ஒன்றும் புரியாமல் தடுமாறிய ஜானவி, பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, அவனை உள்ளே அழைத்தவள் அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து தந்துவிட்டு, "எ… எதுக்கு இங்க வந்தீங்க? யுகி எதாவது சொல்ல சொன்னாளா?" என்ற நான்கு வார்த்தையை மென்று முழுங்கி கடித்துக் கடைசியில் துப்பிவிட்டாள்.


"இல்ல ஜானு… சாம்மோட அண்ணா ஜீவா ஜானவியைப் பாக்க இப்ப இங்க வர்ல… நான் என்னோட ஜானுவை பாக்க வந்திருக்கேன்…" என்று அழுத்தி சொல்ல, ஜானவி தன் பெரிய கண்களை விரிந்து அவனைப் பார்த்தவள், "என்ன உளர்றீங்க…? நீங்க ஏன் என்னைப் பாக்கணும்? நம்ம ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? நீ… நீங்க கிளம்புங்க முதல்ல…" என்று பதட்டத்தில் கத்தினாள்.


ஜீவா ஒரு நிமிடம் ஜானவியையே கூர்ந்து பார்த்தவன், ஜூஸ் இருந்த கிளாஸை கைகளில் இறுக்கி பிடிக்க, அந்தக் கண்ணாடி கிளாஸ் உடைந்து ஜீவா கையைப் பதம் பார்த்தது.


"அய்யோ என்ன இது?? ஏன் இப்படிச் செஞ்சீங்க ஜீவா? அய்யோ ரத்தம் நிறையா வருதே…” என்று பதறிய ஜானவி அடி பட்ட அவன் கையைத் தன் உள்ளங்கையில் ஏந்தியவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய, தன் சுடிதார் துப்பட்டா வை எடுத்து அவன் கைகளில் இறுக்கக் கட்டிவிட்டு தன் செவ்விதழ் குவித்து அவன் காயத்தின் மேல் மென்மையாக ஊதியவள், "ரொம்ப வலிக்குதா ஜீவா?" என்று கேட்டவள்.


கண்ணில் இருந்த கண்ணீரையும், அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும் பார்த்து ரசித்த ஜீவா, "இப்ப உனக்கு நான் ஆம்பளன்றது மறந்து போச்சா ஜானு??" என்று அழுத்தமாகக் கேட்டான்.


ஜானு இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் அவள் தலை குனிந்து நின்றாள்.


"சொல்லு டி… இப்ப உனக்கு உடம்பு நடுங்கலயா?? சாம்கிட்ட என்ன சொன்ன?? உனக்கு ஆம்பளைங்கன்னா பயமா இருக்குன்னு தான சொன்ன.?? ஆனா இப்ப எனக்குச் சின்ன அடிபட்டதும் இப்படிப் பக்கத்துல வந்து உக்காந்து என் கைய புடிச்சிட்டிருக்கியே… இதுக்கு என்ன டி அர்த்தம்??" என்ற ஜீவாவின் கேள்வி ஜானவி அடிமனதை சென்று அலைக்கழிக்க, பதில் சொல்ல முடியாமல் கலங்கி தலை குனிந்து நின்றாள்.


அவள் நாடியில் கை வைத்து தூக்கி அவன் முகம் பார்க்க செய்தவன், “காரணத்தை நான் சொல்லட்டுமா ஜானு... நீ என்னை வேற ஒரு ஆளா பாக்கல… உன்னில் பாதியா, உனக்கானவனா பாக்கற… அதனால தான் உனக்கு என் பக்கத்துல வர பயமோ, தயக்கமோ இல்ல. உன் அம்மாகிட்ட, சாம், நிஷா, ராஷ்மிகிட்ட நீ எப்படி ப்ரீயா ஃபீல் பண்ணுவியோ, அதே போலத் தான் என்னையும் நினைக்கிற… இன்னும் சொல்லப் போனா… அவங்க மேல உனக்கிருக்குறது நட்பு என் மேல உனக்கிருக்கிறது காதல்! அது உன்னோட கண்ணுலயே தெரியுது. முதல்ல நீ உன்னையும், உன் மனசையும் புரிஞ்சுக்கோ… எனக்கு நல்லது பண்றதா நினைச்சு, சும்மா அது இதுன்னு வேஷம் போட்டு நடிக்காத... புரியுதா? 


நான் இப்ப வீட்டுக்கு போய் அந்தச் சாம் எருமகிட்டையும், நிஷாகிட்டையும் நீயும் என்னை லவ் பண்றேன்னு சொல்லப் போறேன். அதுங்க என்னை நம்பாது… கண்டிப்பா உனக்கு ஃபோன் பண்ணி கேட்கும். நீ ஆமான்னு சொல்லணும். சொல்ற… ம்ம்ம் என்ன புரியுதா?" என்று மிரட்டியவன், அவள் முகத்திற்கு அருகில் ஆள்காட்டி விரல் நீட்டியபடி, 


"மகளே அதுங்ககிட்ட இல்லகில்லன்னு எதாவது சொன்னேன்னு வையேன், இப்ப வரை நான் மேரேஜ்க்கு பிறகு ரெண்டு பாப்பா தான் பெத்துக்கணும்னு ப்ளான் பண்ணி இருக்கேன். நீ மட்டும் எதாவது மாத்தி சொன்னேன்னு வச்சிகோ… வருஷத்துக்கு ஒன்னுன்னு மேரேஜ் முடிஞ்ச ஐஞ்சு வருஷத்துல ஐஞ்சு புள்ள பெத்துக்க வச்சிடுவேன். ஜாக்கிரதை!!" என்ற அவன் கொஞ்சல் மிரட்டலில் ஜானவி கன்னம் செவ்வானமாகச் சிவந்து விட்டது. 


அந்த அழகிய கன்னத்தில் செல்லமாகத் தட்டியவன், "இன்னைக்கு இது போதும். மிச்சத்தை நாளைக்குப் பாத்துக்குறேன் டார்லிங்… பை டி செல்லம் நாளைக்கு மீட் பண்ணலாம்…" என்று அவன் நகர,


"ஐஞ்செல்லாம் என்னால முடியாது. ரெண்டு புள்ளைங்க தான். முதல் கொழந்த பொறந்து மூணு வருஷம் கழிச்சு தான் அடுத்தது. இந்த டீல் உங்களுக்கு ஓ.கே.ன்னா கல்யாணம் பண்ணிக்கலாம்…" என்ற ஜானவி அதைச் சொல்லி முடித்த அடுத்த நிமிடம், அவள் ஜீவாவின் அணைப்பில் தன்னைத் தொலைத்து நின்றிருந்தாள்.


நான்கு குடும்பத்திற்கும் யுக்தா ஒரே பெண் என்பதால் அவள் கல்யாணத்தை விமர்சையாக நடத்த விரும்பி, சிம்பிளாக நிச்சயம் மட்டும் முடித்து விட்டுக் கல்யாணத்தை மூன்று மாதம் கழித்து நடத்த முடிவு செய்தனர்.


கல்யாண நாளை எதிர்பார்த்து அனைவரின் நாட்களும் நகர.. அவர்களின் அன்பு யுக்தாவின் வாழ்க்கை அவளின் இருண்ட பக்கத்தின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்தது.


அன்று யுக்தாவிற்கு வந்த அவள் தோழி ராஜீயின் அழைப்பு, அவள் வாழ்க்கையையே அடியோடு புரட்டி போட போகிறதென்று யாருக்கும் தெரியவில்லை, பாவம் அதை யுக்தாவும் அறியவில்லை.