அழகிய தமிழ் மகள் 10
அழகி 10
"யுகி அவங்க எல்லாம் நம்மல பாக்கணும்னு வெய்ட் பண்றாங்க..."
"ம்ம்ம் ஜானுவும், ராஷ்மியும் வந்தாச்சா?"
"ஹான் வந்துட்டாங்க... நம்ம போலாமா யுகி?"
"ம்ம் கெளம்பு..."
ஊருக்கு வெளியே அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்தது அந்த வீடு. இறந்து போன அந்த மூன்று சிறுமிகளின் பெற்றோரும், அண்ணன், தம்பி என்று இன்னும் ஒரு ஏழேட்டு பேர் அங்கு இருந்தனர்.
"உங்க நான்கு பேருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல மா... எங்க பொண்ணுங்களை அநியாயமாகக் கொன்னுட்டு, வாய் கூசாம நரபலின்னு அந்தக் கேஸ்ச மூடிட்டாங்கம்மா அந்தப் பாவிங்க... நீங்க நான்கு பேர் தான் அது நரபலி இல்ல, அந்தப் பரதேசி நாய்ங்க தான் எங்க புள்ளைகளைக் கடிச்சு கொன்னுச்சுன்னு கண்டுபுடிச்சீங்க... அதோட எங்க புள்ளைகளைக் கொன்ன அந்தப் பாவிகளை, எங்க கையாலயே அடிச்சி கொல்ற வாய்ப்பையும் தந்தீங்க... ரொம்ப நன்றி ம்மா... நீங்க நான்கு பேரும் எப்பவும் நல்லா இருக்கணும்மா!" என்று கண்கலங்க நின்ற அந்தப் பெண்களின் குடும்பத்தைப் பார்க்கும் போது தோழிகள் மனதில் நாம் செய்தது சரி தான் என்ற நிம்மதி வந்தது.
"ஆமாக்கா... என் தங்கச்சி சின்னப் பொண்ணுக்கா... விளையாட போன புள்ளைய காணும்னு நாங்க எங்கெல்லாம் தேடி திரிஞ்சோம் தெரியுமா க்கா? கடைசியில பொணமா தான்க்கா என் தங்கச்சிய பாத்தேன்..." என்ற அந்தச் சிறுமிகளின் அண்ணனில் ஒருவன் கண்கலங்க,
"இதோ பாருங்க அந்தப் பரதேசிங்க பண்ண தப்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனை கிடைச்சிடுச்சு... அதுவும் உங்க கையால அவனுங்க உயிர் போகணும்ன்னு நாங்க நெனச்சோம்; அதனால தான் அவனுங்களை உங்ககிட்ட ஒப்படைச்சோம். இல்லாட்டி நாங்களே அவனுங்க ஒவ்வொரு நரம்பையும் பிச்சு போட்டிருப்போம். அதோட உங்க தங்கச்சிங்க கேஸ்ல பணம் வாங்கிட்டு உண்மைய மறச்ச எல்லாப் பரதேசிகளும், பணம் கொடுத்த அந்த நாதரிங்களோட அப்பனுங்களையும் மொத்தமா புடிச்சி உள்ள போட்டாச்சு..." என்றாள் நிஷா.
அந்தப் பெண்களின் அண்ணன்களைப் பார்த்து "உங்களை மாதிரி பசங்க தான் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கணும். இன்னைக்கு உங்க தங்கச்சிக்கு நடந்த இந்த மாதிரி கொடுமை, இனி எந்த ஒரு பொண்ணுக்கும் நடக்காம பாரத்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு. உங்க கண்ணு முன்னாடி தப்பு நடந்தா தைரியமா தட்டி கேளுங்க... தப்பு பண்றவனே தைரியமா இருக்கும் போது, அதைத் தட்டி கேக்குற நாம பயப்படக் கூடாது புரியுதா...?"
"புரியுதுக்கா... நாங்க இனி முடிஞ்ச அளவு எங்க கண்ணுமுன் நடக்குற தப்புகளைத் தட்டி கேட்போம்கா... இது செத்துபோன எங்க தங்கச்சிங்களுக்கு நாங்க செய்ற ஆத்மசாந்திக்கா..."
"இங்க பாருங்க இதுல அறுவது லட்சம் பணமிருக்கு.... இது உங்க பொண்ணுங்க உயிருக்கு விலை இல்ல. உங்க வாழ்க்கைக்கு ஒரு ஆதாரம். அவ்ளோதான். இது தான் நீங்க எங்களைப் பாக்குறது கடைசி. இனி உங்களுக்கு எங்க நான்கு பேரையும் யாருன்னே தெரியாது. புரிஞ்சுதா? இந்தப் பணத்தை எடுத்திட்டு கெளம்புங்க..." என்ற ராஷ்மி ஆளுக்கு இருபது லட்சம் பணத்தைத் தந்து அவர்களை அனுப்பி வைத்தாள்.
இங்கு யுக்தா வீட்டிலோ வீட்டு பெண்களின் நடவடிக்கையில் குடும்பத்துப் பெரியவர்கள் சற்றுக் கலங்கிதான் போயிருந்தனர். உடனே யுக்தா, நிஷா கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று கோதையும், சாருமதியும், யுக்தா அப்பா பரிதியை கட்டாயப்படுத்திச் சம்மதிக்க வைத்தனர். அவரும் உடனே ஆனந்தியுடன் மும்பையில் இருந்து சென்னை வந்துவிட்டார். யுக்தா எவ்வளவு சொல்லியும் பரிதி கேட்பதாக இல்லை.
"இதுவரை உங்க ரெண்டு பேர் இஷ்டத்துக்குத் தான் நான் தலையாட்டி இருக்கேன். எல்லா விஷயத்திலும்..." என்று அழுத்தி சொன்னவர், "இந்தக் கல்யாண விஷயத்துல மட்டும் அப்பா பேச்சை கேளுங்க..." என்று ஒரே வரியில் இருவரையும் மடக்கி விட்டார்.
"இப்ப என்ன பண்றது யுகி?? அப்பா இதுவரை நம்ம இஷ்டத்துக்கு மாறா எதுவும் பண்ணது இல்ல. அவர் ஆசைப்படுறது நம்ம கல்யாணம் உடனே நடக்கணும். அது மட்டும் தான். அதைக் கூட நாம செய்யாட்டி எப்படி யுகி?" என்ற நிஷாவை ஆழமாகப் பார்த்தாள் யுக்தா.
"நீ வினுவ பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க நிஷா??"
நிஷா ஒரு நிமிடம் அதிர்ந்தவள், "அவரைப் பத்தி என்ன சொல்றது யுகி? அவருக்கு என்னைப் புடிக்காதுனு தான் இதுவரை நினைச்சிட்டு இருந்தேன்; ஆனால் அன்னைக்குப் பப்ல என்ன அடிச்சி இழுத்துட்டு வந்தப்போ தான் அவர் என்னையும் இந்தக் குடும்பத்துல ஒருத்தியா நினைக்கிறார்னு புரிஞ்சிது. உண்மையா அப்ப எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருந்துது. மனசுல ரொம்ப நாளா இருந்த பாரம் இறங்குன மாதிரி ஒரு உணர்வு. பட் அத வச்சு நான் வேற எதுவும் கற்பனை பண்ண விரும்பல யுகி. அவர் மனசுல என்ன இருக்கோ, அதோட என்னைப் பத்தி உண்மை அவருக்குத் தெரிஞ்சா என்ன சொல்வாரோ?" என்றவள் வானத்தை வெறித்தாள்..
"கம் ஆன் நிஷா... உன்னைபத்தி உண்மை தெரிஞ்சாலும் ஒன்னும் பிரச்சனை வராது. வீ போத் ஆர் பார்ட்னர் இன் க்ரைம்... சோ அது ப்ராப்ளம் இல்ல. நீ என்ன நினைக்கிற? அத சொல்லு முதல்ல... உன் மனசுல வினு இருக்கானா?" என்ற கேள்வியில் சற்று அதிர்ந்த நிஷா, யுக்தாவிடம் எதையும் மறைக்க முடியாது என்று புரிந்து மெதுவாக ஆமாம் என்று தலையாட்ட, யுக்தா மென்மையாகச் சிரித்தாள்.
"அவனுக்கும் உன்னைப் புடிக்கும் டி... இன்பேக்ட் ரொம்பப் புடிக்கும். அன்னைக்கு வினு உன்ன அடிச்சது நீ பப்புக்கு போனதுக்கு இல்ல... அந்தக் குடிகாரபக்கி உன்னைத் தொட்டதை, அவனால பொறுத்துக்க முடியல... அதான் அவசரப்பட்டு உன்னை அடிச்சிட்டான்."
"ம்ம்ம் தெரியும் தெரியும்... அவர் என்னை அடிச்சு உன்னை ஒன்னும் பண்ணாம விட்டப்பவே எனக்குப் புரிஞ்சிடுச்சு..." என்றவளை முறைத்த யுக்தா, "அடி திருடி... இவ்வளவும் தெரிஞ்சிட்டு தான் அமைதியா இருக்கீயா நீ?" என்றாள்.
"என்னை வேற என்ன பண்ண சொல்ற? அவரா வாயத்தொறந்து சொல்லாம என்னால என்ன பண்ண முடியும்?"
"நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்... அவனை நான் பாத்துக்குறேன். நீ நான் சொன்ன வேலையைப் பாரு..."
"சரி யுகி... நான் ராஷ்மி வீட்டுக்கு போறேன். நீ ஒரு டூ அவர்ஸ் கழிச்சு வந்து, என்னைப் பிக் பண்ணிக்கோ... என்னோட பைக் ரிப்பேர், ஷெட்ல விட்டுப்போறேன்..." என்றவள் அங்கிருந்து செல்ல, யுக்தா வினய் அறைக்குச் சென்றாள்.
"ஏய் எரும... என்ன மூஞ்சி வோடபோன் நாய் மாதிரி சுறுக்கி இருக்கு? பரிதி மாமா நல்ல ரீவிட் அடிச்சராக்கும்?" என்று வினய் நக்கலாகக் கேட்க,
‘இரு டி இப்ப உனக்கு நான் ரீவிட் அடிக்கிறேன்...’ என்று மனதில் வினய்யை கறுவிய யுக்தா, "ஆமா வினு அப்பா உடனே எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு குதிக்கிறாரு..." என்றதும் வினய்,
"ஹய் என் சாம் குட்டிக்கு கல்யாணம்...” என்று துள்ளி குதித்தவன், “மீ செம்ம ஹாப்பி டி எரும!" என்ற வினய் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
"ம்ம்ம்..." என்று பெருமூச்சு விட்ட யுக்தா, "ஆமா வினு என்னோட சேர்த்து நிஷாக்கும் கல்யாணத்த முடிக்க அப்பா முடிவு செஞ்சுட்டாரு... அவளும் ஓகே சொல்லிட்டா..." என்றபடியே ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, வினய் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு மொத்தமும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போனது. வினய் முகம் போன போக்கை பார்த்து யுக்தாவிற்குச் சிரிப்புப் பெத்துக் கொண்டு வர, கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள்.
"அவ... நீஷ்... நிஷா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா சாம்??" என்ற வினய்யின் குரல் லேசாகக் கரகரத்தது.
"ஆமா வினு... நீங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்குறேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டா..." என்றதும் வினய் முகத்தில் அத்தனை கோபம்.
"இப்ப அவ எங்க??" என்று கேட்டவன் குரலில் அனல் தெறித்தது.
"ராஷ்மி வீட்டுக்குப் போயிருக்கா... இப்ப நான் அவள பிக் பண்ண தான் கிளம்பிட்டு இருக்கேன்..."
"நீ ஒன்னும் போக வேணா... நான் அந்தப் பக்கமா தான் போறேன் நானே அவள இழுத்துட்டு வரேன்..." என்று வார்த்தையைக் கடித்துத் துப்பியவன், ‘அவளுக்கு எவ்ளோ திமிர் இருந்தா கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லி இருப்பா? வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிடுவாளா அவ? அத பாத்துட்டு நான் சும்மா இருப்பேன்னு நெனச்சிட்டாளா? இன்னைக்கு அவள ஒரு வழி பண்ணல நான் வினய் இல்ல...’ என்று தனக்குள்ளேயே பேசியவன் வேகமாகச் சென்றான்.
"போடி போ என்னையவா வெறுப்பேத்துற? மகனே அனுபவி..." என்றவள் விசில் அடித்துக் கொண்டே தன் ஃபோனை எடுத்து நிஷாவுக்குக் ஃபோன் போட்டு நடந்ததைச் சொல்லிவிட்டு, "ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க..." என்று விட்டு ஃபோனை வைத்து விட்டாள்.
ராஷ்மி வீட்டிற்கு அருகில் இருந்த காப்பி ஷாப்பில் நிஷா காத்திருக்க, வினய் காரில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்து, ஆவலாக அவனை நோக்கி வந்தவளை, அவளுக்கு எதிரில் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இடித்துத் தள்ளியது. கடைசி நிமிடம் நிஷா கார் இடிக்க வருவதைப் பார்த்து சுதாரித்து ஒதுங்கியதால், அதிகமாக அடி ஒன்றும் இல்லையென்றலும், கீழே விழுந்ததில் தலையில் காயம்பட்டு மயங்கிவிட, தூரத்திலேயே நிஷா காரில் அடிபடுவதைப் பார்த்த வினய், "நிஷா..." என்று கத்திக்கொண்டே அவள் அருகில் வந்தவன், கீழே கிடந்தவளை தூக்கி தன் மடி மீது வைத்து,
"நிஷா... நிஷா கண்ணைத் தொற டி... கண்ணைத் தொறந்து என்னைப் பாரு டி... வினய் வந்திருக்கேன் டி... எதாவது பேசு டி..." என்று அவள் ரெண்டு கன்னத்திலும் மாறிமாறி தட்ட, அவளிடம் எந்த அசைவும் இல்லை.
"ஏய் நிஷா எந்திரி டி... எனக்குப் பயமா இருக்கு டி! ப்ளீஸ் எந்திரி டி... எந்திரிச்சு என் கிட்ட பேசு டி... என்ன விட்டு போய்டாத டி. ஏய் நிஷா... நீ... நீ இல்லாம என்னால... என்னால இருக்க முடியாது நிஷாம்மா. ப்ளீஸ் ம்மா என்கிட்ட வந்துடு... என்னைத் தனியாவிட்டு போய்டாத டா..." என்றவன் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிய, அவளை அப்படி நெஞ்சோடு சேர்த்து அனைத்து தூக்கியவன், காரில் போட்டுக் கொண்டு மதுவின் ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.
போகும் வழியெல்லாம், "நிஷா நான் பேசுறது கேக்குது தானா? கொஞ்ச பொறுத்துக்கோ... ஹாஸ்பிடல் பக்கத்துல வந்துட்டோம். உனக்கு ஒன்னும் ஆகாது..." என்று அவளுக்குச் சொல்வதாக நினைத்துத் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
மது, நிஷாவுக்குத் தேவையான மருத்துவ உதவியைச் செய்தவள், "அவளுக்கு ஒன்னும் இல்ல வினய்... தலையில அடிபட்டதால தான் மயங்கி இருக்கா... இன்னைக்கு ஒரு நைட் இங்க இருக்கட்டும். நாளைக்கு வீட்டுக்குப் போய்டலாம்..." என்றதும் தான் செத்துப் போய்யிருந்த வினய் முகத்தில் உயிரே வந்தது.
"அவளுக்கு ஒன்னும் இல்லயில்ல மது?? அவ நல்லா தான இருக்கா??" என்று திரும்பத் திரும்பச் சின்னக் குழந்தை போல் கேட்ட தன் சகோதரனை அதிசயமாகப் பார்த்த மது,
"அவளுக்கு ஒன்னும் இல்ல... யூ டோன்ட் வொரி. எனக்கு நைட் டியூட்டி இருக்கு. நான் சாம்க்கு ஃபோன் பண்ணி அவளை வந்து நைட் நிஷா கூட இருக்கச் சொல்றேன்..." என்றவளை தடுத்த வினய்,
"வேணாம் வேணாம்... நானே அவளைப் பாத்துக்குறேன். வேற யாரும் வேணாம்..." என்றவன் நிஷா இருந்த அறைக்குப் போக, மது சிறு புன்னகையோடு ஹாஸ்பிடல் ரவுன்ஸ் முடித்துவிட்டு தன்னறைக்கு வந்தாள்.
"அண்ணி நிஷாக்கு ஒன்னும் இல்லயே... அவ நல்லா இருக்கா இல்ல?" என்று யுக்தா ஒருபக்கம் பதற, "ஏய் எதாவது சொல்லு டி... நிஷாக்கு ஒன்னும் இல்லயில்ல..." என்று ராம் ஒரு பக்கம் குதித்தான்.
"இல்லங்க நிஷாக்கு ஒன்னும் இல்ல. தலையில சின்ன அடி தான். நாளைக்குச் சரியாகிடும். பெரிய இஷ்யூ எதும் இல்ல..." என்றதும் தான் யுக்தா, ராமிற்கு மூச்சே வந்தது.
"நாங்க அவளைப் பாக்கலாமா அண்ணி?"
"இப்ப வேணா சாம். வினய் நிஷா கூட இருக்கான். இன்னைக்கு நைட் நிஷா கூட இருக்க உன்னை வர சொல்றேன்னு சொன்னேன். உடனே அதெல்லாம் வேணா நானே அவளைப் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டான்... நீ சொன்ன மாதிரி அவங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க, இது கடவுளோட திட்டம் மாதிரி ஆயிடுச்சு... சோ இப்ப நீங்க நிஷா ரூம்க்கு போக வேணா… ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க… நான் நிஷாவ பாத்துக்குறேன்…"
"ம்ம்ம் அதுவும் கரெக்ட் தான் அண்ணி. நாங்க கெளம்புறோம்… நீங்க நிஷாவ பாத்துக்கோங்க.. அப்பறம் அந்த வினு எருமைக்குச் சாப்பிட எதாவது குடுங்க... அவ முஞ்சயே பார்த்துட்டு, அப்படியே உக்காந்திருப்பான். நாங்க கெளம்புறோம் அண்ணி… எதாவதுன்னா ஃபோன் பண்ணுங்க..."
வினய், நிஷாவின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு மயக்கத்தில் இருக்கும் நிஷாவையே இமைக்காமல் பார்த்தவன், "நான் ரொம்பப் பயந்துட்டேன் டி... எங்க நீ… நீ என்னை விட்டு போய்டுவியோன்னு…" என்று சொல்லும் போதே அவன் குரல் அத்தனை பயம்.
"இவ்ளோ நாள் உன் மேல எனக்கிருந்த உணர்வுக்குப் பேர் என்னன்னு எனக்குத் தெரியல நிஷா. ஆனா இன்னைக்கு உனக்கு அடிபட்டதைப் பாத்தப்போ எனக்கு ஒரு நிமிஷம் உசுரே போய்டுச்சு தெரியுமா?! அப்படியே உலகமே நின்னு போன மாதிரி ஆகிடுச்சு!! இனிமே நீ இல்லாம என்னால வாழ முடியாது டி…! நீ எனக்கு வேணும். நா சாகுறவர நீ என் கூடவே இருக்கணும். தினமும் உன்கூடச் சண்ட போடணும், உன்னை வெறுப்பேத்தி ரசிக்கணும்…" என்று என்னென்னவோ புலம்பிக் கொண்டு இருந்தவன், அப்படியே நிஷா படுத்திருந்த கட்டிலில் அவள் தோளில் தலை வைத்தபடியே தூங்கி விட்டான்.
இரவு போல் நிஷா மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு, தன் அருகில் அழுது வடிந்த முகத்தோடு உறங்கும் வினய்யின் முகம் தான் முதலில் பார்த்தாள். மெதுவாக அவன் தலையை வருடியவள், கண்ணில் அவளையும் அறியாமல் கண்ணீர் பொங்கியது. அடிபட்டு மயகத்தில் இருந்த நிஷாவிற்கு வினய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகக் கேட்டது. அவன் தன்னை எந்த அளவு விரும்புகிறான் என்று தெரிந்து கொண்டவள் மனது, இறக்கையில்லாமல் வானில் பறந்தது.
"இனி நான் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன் வினய். நான் சாகுற வர உன் கூடத் தான் இருப்பேன். இது சத்தியம்!" என்று அவன் தலையைக் கோதியவள், நிம்மதியாகக் கண்ணயர்ந்தாள்.
நாட்கள் வேகமாக நகர்ந்தது, பரிதி யுக்தாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வரை.
யுக்தா, ராமிடம் பேசவேண்டும் என்று சொல்ல, அவளை ஒரு காப்பி ஷாப்புக்கு வர சொல்லி இருந்தான் ராம். அங்கு வினய், விஷ்ணு, ஜீவா கூட இருந்தனர்.
"டேய் அண்ணாஸ்… அப்பா நா சொன்ன கேக்க மாட்டேங்குறரு டா… ப்ளீஸ் டா எனக்கு இப்ப கல்யாணம் வேணாம். அப்பா ஏதோ ஒரு பக்கிய எனக்கு மாப்புள்ளையா பிக்ஸ் பண்ணிட்டராம். நாளைக்கு அந்தப் பக்கி என்னை மீட் பண்ண வீட்டுக்கு வருதாம். எனக்கு இப்ப மேரேஜ் வேணாம் டா அண்ணா. எனக்கு மேரேஜ் எல்லாம் செட் ஆகாது. நீங்க அப்பாகிட்ட கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்…" என்று கெஞ்ச, அப்போது தான் ராம் அருகே புதிதாக ஒருவன் இருந்ததைக் கவனித்தாள் யுக்தா.
"டேய் அண்ணா யாரு டா இந்தப் பால்வாடி பாப்பா? உங்க ப்ரண்ட்டா??" என்று கேக்கை வாயில் போட்டு மென்றபடியே கேட்க,
"ம்ம்ம்ம் எல்லா உனக்குத் தெரிஞ்ச ஆளுதான். எங்க ஸ்கூல் ப்ரண்ட் உதய்."
"உதய்யா? யாரு?" என்று கன்னத்தில் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டி தட்டி யோசித்தவள், “ஏய்… உதய் நீயா? எப்பபாரு என் கிட்ட உதை வாங்கிட்டே இருப்பீயே, அந்த உதய்யா நீயி??" என்று சத்தமாகச் சிரிக்க, உதய் சிரிக்கும் யுக்தாவை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
வினய், "ம்ம்ம் ஆமா ஆமா அதே உதய் தான். இப்ப இவன் பெரிய பிஸ்னஸ்மேன் தெரியுமா??" என்று கேட்டான்.
"ஓஓஓஓ பெரிய வியாபார காந்தமா சாரு... அது சரி இந்தக் காந்தம் இப்ப இங்க என்ன பண்ணுது? அதுவும் நம்ம சீக்ரெட் மீட்டிங்ள, இதுக்கு என்ன வேல??"
"இப்ப நடக்குற இந்த மீட்டிங்கே இவனைப் பத்தி தான். இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருந்தியே, நாளைக்கு ஒரு பக்கி உன்னைப் பாக்க வருதுன்னு… அந்தப் பக்கி வேற யாரு இல்ல, இவன் தான்…" என்று விஷ்ணு சொன்னது தான், கண்களை அகல விரித்து உதய்யை பார்த்தவள் வாய்க்கும், தொண்டைக்கும் நடுவே கேக் சிக்கிக் கொண்டது.
அதிகமாக யாரும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த ரெஸ்டாரென்ட்.
உதய் யுக்தாவை இமைக்காமல் பார்த்திருக்க, "சாரி உதய் நீ யாருன்னு தெரியாம நான் கொஞ்ச ஓவரா பேசிட்டேன். ஐம் சாரி…" என்றாள்.
"இட்ஸ் ஓ.கே. சமி... எனக்கு உன்னைப் பத்தி தெரியாத என்ன? ஸ்கூல்ல இருந்து உன்னைப் பாத்துட்டு தானே இருக்கேன்."
"இல்ல உதய் உனக்கு என்னைப் பத்தி முழுசும் தெரியாது… நா... நா வந்து…" என்று அவள் ஏதோ சொல்ல தொடங்கும் போது அவளை நிறுத்தியவன்,
"பரிதி மாமா எல்லாத்தையும் சொல்லிட்டாரு சமி… எனக்கு நோ ப்ராப்ளம். எங்க வீட்டுல கல்யாணம் பத்தி பேசும் போது எனக்கு உன் முகம் தான் மனசுல வந்துது. உடனே உங்க அப்பா, அம்மாகிட்ட பேசினேன். அவங்க ராம், வினய்க்கு ஓ.கே.ன்னா எங்களுக்கும் ஓ.கே.ன்னு சொல்லிடாங்க… உடனே இவனுங்களைக் கான்டாக்ட் பண்ணி, அவனுங்ககிட்ட கெஞ்சி கூத்தாடி சம்மதம் வங்குனேன். அவனுங்களும் என்னைப் பத்தி விசாரிச்சு, என்னைப் பத்தி தெரிஞ்ச பிறகு உன்னை எனக்குக் கட்டி தர ஒத்துக்கிட்டனுங்க... உனக்கு என்னைப் புடிச்சிருக்கா சமி??" என்ற உதய்யின் கேள்விக்கு யுக்தாவின் பதில், ஆமாம் என்று தலையசைப்பாக வந்தது.