அழகிய தமிழ் மகள் 12

 

அழகி 12


ராஜீயிடம் இருந்து ஃபோன் வந்த அடுத்த நொடி யுக்தாவும், நிஷாவும் ராஜீ வீட்டிற்கு விரைந்தனர்.


புல்லட்டில் இருந்து இறங்கிய யுக்தாவை தாவி வந்து அணைத்துக் கொண்ட ராஜீ, "யுகி… யுகி... அப்பா… அப்பா…" என்று கதறி அழுக, யுக்தா ராஜீயை தோளோடு சேர்த்து அணைக்க, நிஷா ராஜீ முதுகை ஆதரவாகத் தடவிக் கொண்டிருந்தாள்.


"அப்பாக்கு தீடிர்னு என்ன ஆச்சு ராஜீ??" என்ற யுக்தாவை இன்னும் இறுக்கி அணைத்தவள், "அப்பா சூசைட் பண்ணிக்கிட்டாரு யுகி… என்னைவிட்டு போய்டாரு யுகி… எனக்கு இனி யார் இருக்கா?" என்று மீண்டும் கதறி அழ, தந்தையை இழந்து தவிக்கும் மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று புரியாமல் தோழிகள் இருவரும் தவித்து நின்றனர்.


யுக்தா மெதுவாக ராஜீயை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அங்கிருந்த போலிஸ் கான்ஸ்டேபிளுக்கு யுக்தா, ராமின் தங்கை என்று தெரிந்ததால் அவளும், நிஷாவும் ராஜீயுடன் உள்ளே செல்வதைத் அவர் தடுக்கவில்லை.


வீட்டிற்கு உள்ளே சென்ற நிஷாவும், யுக்தாவும் ஹாலின் ஒரு ஓரம் தரையில், வாயில் ரத்தம் வடிய, உடல் முழுவதும் நீலம் பாய்ந்து, கண்கள் வெளியே வந்து கொடூரமாக இறந்து கிடந்த டாக்டர்.வினோத்தின் உடலை தான் கண்டனர்.


ராஜீ தந்தையின் இறந்த உடலை பார்த்து அழுது கொண்டிருக்க, நிஷா அவளைத் தண்ணீர் கொடுத்துச் சமாதானம் செய்ய, யுக்தாவோ இறந்து கிடந்த உடலையும், வீட்டையும் ஒரு இடம் விடாமல் தன் கண்களால் அளந்து கொண்டிருந்தாள்.


அந்த ஏரியாவின் எஸ்.ஐ கோபால், ராஜீயிடம், "உங்க அப்பா ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு உனக்குத் தெரியுமா??" என்று கேட்க,


ராஜீ, "எனக்கு எதும் தெரியாது சார்… நான் பெங்களூர்ல வேலை பாக்குறேன். இன்னைக்குக் காலையில தான் இங்க வந்தேன். வந்து பாத்தா…" என்றவள் வாய்பொத்தி கதறி அழ,


"அதெப்படி உனக்குத் தெரியாம இருக்கும்? அவர் உன்னோட அப்பா தானே? இல்ல அதும் உனக்குத் தெரியாதா?" என்றவர் வரம்பு மீறி வார்த்தைகளை விட, அதில் பயந்த ராஜீ யுக்தா பின்னால் ஒளிந்து கொண்டாள்.


"சார் கொஞ்சம் பாத்து பேசுங்க... ஒரு பொண்ணுகிட்ட பேசுற பேச்சா இது? கொஞ்ச மரியாதை கொடுத்து பேசுங்க…” என்று யுக்தா எச்சரிக்க,


"ஏய்… நீ யாரு முதல்ல?? உன்னை யார் உள்ள விட்டது? யோவ் கான்ஸ்டேபிள் ஏன்ய்யா இதுங்களை எல்லாம் உள்ள விட்ட?" என்று தன் கட்டை குரலில் கத்த, யுக்தா கோவமாக அவனை நெருங்க, நிஷா அவள் கையைப் பிடித்து இழுத்தவள், வேண்டாம் என்று கண்ணைக் காட்ட, யுக்தா கண்களை மூடி கையை மடிக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினாள்.


"சார் இவங்க நம்ம ஏசிபி பரசுராம் சாரோட தங்கச்சி சார். அதோட இதோ இந்தப் பொண்ணோட ஃப்ரண்டும் கூட அதான் சார்…" என்று கான்ஸ்டபிள் தலையைச் சொறிய,


"யோவ் யாரா இருந்தா என்னைய்யா?? இங்க நான் வச்சது தான் சட்டம். முதல்ல அவங்களை வெளிய போகச் சொல்லு…" என்றவனைத் தீயாக முறைத்த யுக்தா நிஷா, ராஜீயோடு வெளியேறினாள்.


யுக்தா, ராமிடம் தனிப்பட்ட முறையில் இந்தக் கேஸ்சை பற்றி விசாரிக்கச் சொல்லி கேட்டவள், ராஜீயை நர்ஸாக இருக்கும் அவள் அத்தை வீட்டில் பாதுகாப்பாகத் தங்க வைத்தாள். அங்கு ராஜீயும், அவள் அத்தை இருவர் மட்டும் தான் இருந்தனர்.


மூன்று நாட்கள் அமைதியாகச் சென்றது. ராஜீயின் அத்தை அன்று நைட் டியூட்டி சென்றிருக்க, இரவு எட்டு மணி போல் எல்லாக் கதவு, ஜன்னலையும் மூடிவிட்டு மேலே இருக்கும் தன் ரூமிற்க்கு ராஜீ திரும்பிய போது, திடீரென கரண்ட் கட்டாகிவிட, ராஜீக்குப் பயத்தில் உடம்பு உதற ஆரம்பித்து. அந்த நேரம் பார்த்து திடீரென்று ஹாலில் ஏதோ சத்தம் கேட்க ஒரு நிமிடம் அவளுக்கு உயிரே போய் விட்டது. 


தைரியத்தை வரவைத்துக் கொண்டு தன் ஃபோன் டார்ச்சை உயிர்பித்தவள், மெதுவாகப் பூனை நடை நடந்து ஹாலுக்குப் போய்ப் பார்க்க, அங்கு யாரும் இல்லாமல் போக, நிம்மதி பெருமூச்சு விட்டவள் திரும்பி நடக்க, பின்னால் இருந்து ஒரு கை ராஜீயை இழுத்து அவள் கழுத்தை பிடித்து நெறிக்க, ராஜீ பயந்து ஃபோனை கீழே போட்டுவிட்டு, "விடு… விடு… விடு என்னை… விடு…" என்றவள் குரல் வெளியே வராமல் போக, அவள் கழுத்தை இறுக்கியிருந்த கையை அவள் கழுத்தில் இருந்து எடுக்கப் பார்க்க, அவளால் முடியவில்லை.


முகத்தில் கறுப்பு துணி கட்டியிருந்த இன்னொருவன், அவள் கழுத்தில் கத்தியை வைக்க, ஃபோன் டார்ச் வெளிச்சத்தில் பளபளத்த அந்த ஒரு அடி நீள கத்தியை பார்த்த ராஜீக்கு மயக்கம் வராத குறை தான்.


"யா… யார் நீங்க?? என்ன வேணும் உங்களுக்கு?? என்னை ஒன்னும் செஞ்சிடாதீங்க…" என்று பயத்த குரலில் கேட்டாள்.


"நாங்க உன்னை ஒன்னும் பண்ணமாட்டோம். மரியாதையா உங்கப்பனோட லாப்டாப் எடுத்து எங்கிட்ட தந்திடு… நாங்க போய்டுறோம். இல்ல…" என்று ராஜீ கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியவன், அடுத்த நொடி வாயில் ரத்தம் ஒழுக, வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்தான். அவன் முன்னால் தன் சட்டையின் கையை ஏற்றி முழங்கை வரை மடித்து வைத்தபடி முகத்தில் கொலை வெறியோடு நடந்து வந்தாள் யுக்தா.


இன்னொருவனின் கால் முட்டியின் பின்புறம் நிஷா மிதித்த மிதியில் கீழே மண்டியிட்டு உட்கார்ந்து இருக்க, அவன் முகத்தில் நிஷாவிட்ட உதையில் மூன்று, நான்கு பல் உடைந்து ரத்தம் சொட்ட கீழே விழுந்து கிடந்தான். (அய்யோ நான் இந்த நிஷாவை அமைதியான பொண்ணுன்னு இல்ல நினைச்சேன்… இவ யுக்தாவைவிட மோசமா இருப்பா போலயே! வினய் இவகிட்ட மாட்டி என்ன ஆகப்போறனோ கடவுளே…!)


யுக்தாவும், நிஷாவும் ராஜீயை அழைத்துக் கொண்டு, பாதி உயிராகக் கிடந்த அந்த இரண்டு முகமூடி பக்கிகளையும் காரில் அள்ளி போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தனர்.


போலிஸ் ஸ்டேஷனில் நுழைந்த யுக்தாவை முறைத்த கோபால், அவள் பின்னால் வந்த ராஜீயை கொல்ல வந்தவர்களைப் பார்த்து அப்படியே நின்று விட்டான். அதிர்ந்த அவன் முகமே சொன்னது அவனுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை.


ராஜீ அழுது கொண்டே நடந்ததை விளக்க.. கோபால் அவள் சொல்லியதை காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.


"சார் என்ன சார் இது? மூணு நாள் முன்னாடி அவ அப்பா செத்திருக்காரு… இன்னைக்கு இவள கொலை செய்யப் பார்த்திருக்காங்க… நீங்க என்னடான்னா ஏதோ கதை கேட்க்குற மாதிரி கேட்டுட்டிருக்கீங்க…" என்று கோபத்தில் கோபாலை சத்தம் போட்டாள்.


"ஏய் எங்க வந்து யார மிரட்டுற நீ?? நீ ஏசிபி தங்கச்சின்னா நான் பயந்துடுவேன்னு நெனச்சியா? இது என் ஏரியா… இங்க எனக்கு என்ன தோணுதோ அத தான் செய்வேன். அதான் கம்பளைன்ட் கொடுத்துட்டிங்க இல்ல, கிளம்புங்க… யோவ் கான்ஸ்டபிள் அவனுங்களைப் புடிச்சு உள்ள தள்ளுய்யா…" என்றவன், "மேல நடக்க வேண்டியத நான் பார்த்துக்குறேன்… நீங்க போங்க…" என்று அலட்சியமாகப் பேசியவனை யுக்தா தீயாக முறைத்தாள். 


நிஷாவோ, ‘அய்யோ இந்தப் பக்கி தேவையில்லாம கரண்ட்ல கை வைக்கிறானே… அய்யோ இவ வேற இப்படி முறைச்சிட்டு நிக்குறாளே…’ என்று நினைத்தவள், “ஏய் யுகி ப்ளீஸ் டி… இங்க எதுவும் வேணாம் டி…" என்று யுக்தா கையைப் பிடித்தவள், 


"ராஜீ ஏற்கனவே பயந்து போயிருக்கா யுகி. இப்ப அவ தான் முக்கியம்! வா போலாம்... ப்ளீஸ் டி வா டி…" என்றவள், வலுக்கட்டாயமாக யுக்தாவை இழுத்து போகத் திரும்பி கோபாலை பார்த்து, "கவுன்ட் யுவர் டேஸ் மேன்…" என்று எச்சரித்து விட்டுச் சென்றாள் யுக்தா.


ராஜீ இனி அவள் அத்தை வீட்டில் இருப்பது பாதுகாப்பில்லை என்றும், அதோடு வேறு சில காரணங்களுக்காக அவளைக் கமிஷனர் பரதன் வீட்டில் தங்க வைத்தாள் யுக்தா.


மறுநாள் ராமோடு போலிஸ் ஸ்டேஷன் சென்ற ராஜீக்குப் பேரதிர்ச்சி! நேற்று இரவு அவளைக் கொல்ல வந்தவர்களுக்குப் பதிலாக வேறு இரண்டு பேர் அங்கிருந்தனர். நேற்று இரவு யுக்தா கூட்டி வந்தது இவங்களைத் தான் என்று இன்ஸ்பெக்டர் கோபால் சாதிக்க, ராஜீ, "இல்ல ராமண்ணா.. நேத்து நைட் என்னைக் கொல்ல வந்தது இவங்க இல்லண்ணா… அவனுங்க வேற… இவர் பொய் சொல்றாரு…" என்று சொல்ல, ராமுக்குப் புரிந்தது கோபால் தான் ஏதோ தகிடுதத்தோம் செய்திருக்கிறான் என்று. 


யுக்தா மெதுவாகக் கோபால் அருகில் சென்றவள், "நேத்து நாங்க அடிச்சு இழுத்துட்டு வந்தவங்க எங்க?? அவங்களை விட எவ்ளோ பணம் வாங்குன?" என்று கோபாலின் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள்.


“சாம்…" என்று உரத்த குரலில் கத்திய ராம், "என்ன செய்ற நீ? முதல்ல அவர் சட்டைல இருந்து கைய எடு… போலிஸ் மேல கை வைக்குற அளவு உனக்குத் திமிராகிடுச்சா? முதல்ல வெளிய போ…" என்று அவளை விரட்டினான்.



கோபாலை எரித்து விடுவது போல் பார்த்த யுக்தா நிஷா, ராஜீயோடு வெளியேறினாள். கோபாலோ ராம் இருந்ததால் யுக்தாவை எதுவும் செய்யாமல் விட்டவன், அடிபட்ட புலியாய் உறுமிக் கொண்டிருந்தான். 


"மிஸ்டர்.கோபால் நீங்க ஏதோ தப்பு பண்றீங்கன்னு எனக்கு நல்லா புரியுது. அது என்ன மட்டும் எனக்குத் தெரியட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு... இன்னொரு முறை சாம் கிட்ட வச்சிக்காதீங்க... அவ என்னை மாதிரி பேசிட்டு இருக்கமாட்டா…" என்ற ராம் அங்கிருந்து வெளியேறினான்.


மறுநாள் இறந்து போன டாக்டர் வினோத்தின் கேஸ் பற்றிக் கேட்க கமிஷனர் ஆஃபீஸ் வரச்சொல்லி கோபாலுக்குத் தகவல் வர அங்குச் சென்ற கோபால், அங்கு ராம், இன்னும் சில போலிஸ் ஆபீசர்ஸ் கூடவே, ராஜீயை பார்த்தவன் முகத்தில் பயமும், ஆத்திரமும் எட்டிப் பார்க்க, சட்டெனத் தன்னைச் சரிசெய்து கொண்டவன், பரதனுக்குச் சல்யூட் வைத்து விட்டு, கேஸ் பைலை அவர் முன் வைத்தான்.


"என்ன மிஸ்டர். கோபால் முந்தா நேத்து இந்தப் பொண்ணு ராஜீய கொலை பண்ண வந்தீருக்காங்க… அவங்களை இந்த ராஜீயோட ஃப்ரண்ஸ் ரெண்டு பொண்ணுங்க புடிச்சு உங்ககிட்ட ஒப்படச்சங்கலாம். ஆனால் நேந்து பாத்தா அவங்க ஒப்படைச்ச ஆளுங்களுக்குப் பதிலா வேற யாரோ ரெண்டு பேர் அங்க இருக்காங்கன்னு சொல்றாங்க… என்ன நடக்குது மிஸ்டர். கோபால்?" என்று பரதன் கோபாலை முறைக்க,


"நோ சார்… இவங்க என்கிட்ட ஒப்படைச்ச ரெண்டு பேரையும் அப்பவே FIR போட்டு அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளிட்டேன். ஆனால் ஏன் இவங்க அது அந்த ரெண்டு பேர் இல்லன்னு பொய் சொல்றாங்கன்னு தெரியல சார் இந்தப் பொண்ணு கூட இருந்த இன்னொரு பொண்ணு ஏசிபி பரசுராம் சாரோட சிஸ்டருன்ற தைரியத்துல கிரைம் சீன்னுக்குள்ள வந்துட்டாங்கன்னு நான் அவங்களைத் திட்டிட்டேன். அதை மனசுல வச்சிட்டு தான் சார் இப்படிச் செய்றாங்க… நான் என்னோட வேலைய கரெக்ட்டா தான் சார் செஞ்சேன்." என்க,


"நோ சார்… அன்னைக்கு ராஜீயை கொல்ல வந்தது வேற ரெண்டு பேருன்னு ராஜீயே சொல்றாங்க… அப்படி இருக்க நம்ம எப்படி மிஸ்டர். கோபால் சொல்றத நம்புறது?” என்ற ராமை கையமர்த்திய பரதன்,


"இதுல இனி நம்ம சொல்ல ஒன்னும் இல்ல ராம். இதோ கேக்க வேண்டிய ஆளே வந்தாச்சு…" என்று ரூம் வாசலை காட்ட, ஸ்கை ப்ளூ கலர் ஜீன்ஸ், வெள்ளை கலர் சர்ட்டின் கையை முட்டி வரை மடித்திருக்க, முடி மொத்தமும் ஒரு ரப்பர் பேன்டில் அடங்கி இருந்தது.. கண்ணிற்குக் கருப்புக் கூலர்சை அணிந்து கம்பீரமாக நடந்து வந்தாள் யுக்தா. அவள் பின்னால் கருப்புச் சர்டில், லைட்ப்ளூ ஜீன்ஸ் போட்டு மிடுக்காக வந்தாள் நிஷா.


ராம் புரியாமல் பரதனை பார்க்க, அவர் சின்னச் சிரிப்போடு ராமை பார்த்து கண்ணடித்து, "வெய்ட் மை பாய்" என்று சைகை செய்தார்.


யுக்தா கோபால் அருகில் வந்தவள், "நாங்க அன்னைக்குப் பிடிச்சுக் கொடுத்தவங்களை யாருக்காக டா வெளியவிட்ட??" என்றவள் குரலில் அனல் தெறித்தது.


"ஏய் யார டா போட்டு பேசுற..? சார் என்ன சார் இது? நீங்க இருக்கீங்களேன்னு பாக்குறேன்…" என்று குதித்தவன் கன்னத்தில் இடியென இறங்கியது யுக்தாவின் கை.


அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே யுக்தாவை பார்த்தபடி ஒரு நொடி உறைந்து நிற்க, "சாம் வாட் இஸ் திஸ்? என்ன பண்ற நீ?" என்று கத்திக் கொண்டே ராம் அவள் அருகில் வர,


"ஸ்டே வேர் யூ ஆர் மிஸ்டர்.ஏசிபி…" என்று அதிகாரமாகச் சொன்னவள், திரும்பி நிஷாவை பார்க்க, நிஷா உடனே ஒரு பேப்பரை எடுத்து அவள் கையில் தந்தாள்.


"ஐ ஆம் சம்யுக்தா இளம்பரிதி… சிபிஐ ஸ்பெஷல் ஆஃபிசர் ப்ரம் டெல்லி…" என்று கம்பிரமாகச் சொல்லி பரதனுக்குச் சல்யூட் வைத்தவள், "ஐ டேக் ஓவர் திஸ் கேஸ் பிரம் திஸ் மோமென்ட் சார். திஸ் இஸ் தி ஆர்டர்…" என்று அந்தப் பேப்பரை பரதன் முன் வைத்தவள், "மிஸ். நிஷா" என்று மிடுக்காகக் கூப்பிட,


நிஷா, "எஸ் மேம்..." என்றாள் கம்பீரம் குறையாது.


“இவனை…” என்று கோபாலை கைகாட்டியவள், “நம்ம கஸ்டடியில இருக்கத் தப்பிச்சு போன, அந்த ரெண்டு கிரிமினல்சோட வைங்க…" என்க,


நிஷா, "எஸ் மேம்…" என்றவள், கோபாலை இழுத்து போக, கோபால் திருதிருவென முழித்தவன், வெட்டப் போகும் ஆடுபோல் நிஷாவுடன் சென்றான்.


யுக்தா திரும்பி பரதனை பார்த்தவள், "ஐயம் லீவிங் சார்…" என்று மீண்டும் ஒரு சல்யூட் வைத்தவள், திரும்பி ராமை பார்த்து கண்ணடித்து விட்டு தன் ஜீன்ஸ் பேன்ட் பக்கெட்டில் கைவிட்டபடி கெத்தாக நடந்து போக, ராம் சின்னச் சிரிப்போடு அவளை முறைக்க, பரதன், கர்வமாகப் போகும் அவளைப் பார்த்தவர், "ஷீ இஸ் மை டைகர்" என்று மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார்.


ஆதித்திற்கு ராம் சொன்னதைக் கேட்டுப் பேரதிர்ச்சி! இந்தத் திமிரழகி “சிபிஐஆஆஆஆஆ??” என்று வாய் பிளந்து நின்றான்.