ஆழியின் ஆதவன் 18

 



ஆழி 18


ஆதவ் கோபமாக ஆழி அருகில் வந்தவன், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட, அந்த அடியில் அனைவரும் அதிர்ந்து நிற்க, ஆழி மட்டும் கன்னத்தில் கைவைத்தபடி ஆதவ்வையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.


"அறிவிருக்காடி உனக்கு… மனசுல என்ன உனக்குப் பெரிய வீரமங்கை வேலுநாச்சியார்னு நெனப்பா? யாரைக் கேட்டுடி அந்த நேரத்துல நீ அந்த இடத்துக்குப் போன? எதுக்குடி போன? இவ்ளோ வாய்கிழிய பேச தெரியுது, கொலைக்கு எல்லாம் பிளான் போட தெரியுது இல்ல? அந்த இடத்துல எவ்ளோ ஆபத்து இருக்குன்னு உனக்கு தெரியாது? நீ பாட்டுக்கு தனியா அந்த நேரத்துக்கு அந்த போயிருக்கீயே உனக்கு எவ்ளோ நெஞ்சு தைரியம்டி உனக்கு. அங்க உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் என்னடி பண்றது? சொல்லுடி என்ன பண்றது? ஏற்கனவே ஒருத்திய பறிகொடுத்துட்டு நாங்க தவிக்கிறது போதாதா? உனக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்னடி பண்றது... நீ போய்ட்டா நா…" என்றவனை ஆழி விழி உயர்த்திப் பார்க்க,


"உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நிலா என்னடி செய்யவா? அவள பத்தி ஒரு நிமிஷமாச்சு யோசிச்சியா நீ?" என்றவன் அவள் தலை முடியை கொத்தாகப் பிடித்துக்கொண்டு, அவள் முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன், "இன்னொரு முறை இந்த மாதிரி எதுவும் செஞ்சேன்னு வையேன் " என்றவன் கண்ணில் இருந்தது கோபம் தான் ஆனால், அந்தக் கோவத்தின் உள்ளர்த்தம் ஆழிக்கும் உள்ளே வேறு எதையோ உணர்த்த, அது அவள் உள்ளத்தை உறுத்தியது.


ஆதவ் அங்கிருந்த சேரை எட்டி உதைத்தபடி அங்கிருந்து சென்றுவிட, ஆழியும் அங்கிருந்து அமைதியாகச் செல்ல, முகில் விஷ்ணுவை பார்க்க, அவன் முகம் லேசான வெறுப்பு இருந்தது.


"மீரா உனக்கு ஆதவ் சார் கோபத்துக்குக் காரணம் புரியுதா?" என்ற சைத்ராவை பார்த்து "ஆம்" என்று தலையாட்டிய மீரா,


"இது நடக்க வாய்ப்பே இல்ல தான். பட், இது நடந்தா நான்" என்றவள் திரும்பி சைத்ராவை பார்த்து, "நமக்கு இந்த உலகத்துலேயே அதைவிடப் பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கும்" என்க.


"நீ ஏன் இப்டி சொல்ற மீரா? " என்ற முகிலை பார்த்து,


"இந்த வேலை முடிஞ்சதும் ஆழி இங்கிருந்து போய்டுவா… அதோட ஏற்கனவே ஒரு முறை அவ லைஃப் பத்தி நாங்க அவகிட்ட பேசினோம், ஐ மீன் அவளுக்குனு ஒரு லைஃப் பத்தி. பட், ரத்தக்கறை படிந்த அவ வாழ்க்கையில ஒரு குடும்பத்தில் போய் நல்ல மருமகளா, மனைவியா, தாயா வாழ்ற தகுதி தனக்கு இல்லைன்னு சொல்லிட்டா… அவளுக்கு இப்ப இருக்க ஒரே எண்ணம் ஆஷாவை கொன்னவங்களை முடிச்சிட்டு, எங்க ரெண்டு பேரையும் நல்லபடியா செட்டில் பண்ணிட்டு எங்கயாது போய்டனுங்கறது தான். அவ ஒரு முடிவெடுத்தா அதுல இருந்து எக்காரணம் கொண்டும் மாற‌ மாட்டா… அதான் அப்படி சொன்னேன்." என்ற மீராவும் சைத்ராவும் அவர்கள் காட்டேஜ்க்கு சென்றனர்.


விமல் கதையை முடித்த அடுத்த நாளே அனைவரும் கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது.


அன்றைய சம்பவத்திற்குப் பிறகு ஆழி, ஆதவ் முகத்தைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தாள். அவனை விட்டு தள்ளி இருப்பதென்று அவள் முடிவு செய்திருக்க, ஆதவ் இனி ஒரு நிமிடம் கூட அவளை தன்னை விட்டு தள்ளி இருக்க விடக் கூடாது என்ற முடிவில் இருந்தான்.


அன்றைய இரவுக்கு மறுநாள் சென்னை வந்தவுடன் விஷ்ணுவும் முகிலும் ஆதவ்வை தனியாகச் சந்தித்து ஆழினி பற்றிப் பேச ஆதவ் அமைதியாக அலைகடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


"டேய் நாங்க கேட்டுட்டு இருக்கோம், நீ இப்படிக் கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம் வாயத் திறந்து ஏதாவது பேசுடா… அப்ப தான உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியும்" என்ற விஷ்ணுவை திரும்பிப் பார்த்த ஆதவ், "ஆழி" என்றான் ஒரே வார்த்தையில்.


"புரியல… " என்றான் விஷ்ணு.


"இன்னுமாடா உனக்கு புரியல… நீ உன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டதுக்கு பதிலை அவன் சொல்லிட்டான். அவன் மனசுல ஆழி தான் இருக்கான்னு" என்ற முகில் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.


"டேய் முகில் சொல்றது சரிதானா? நீ ஆழிய விரும்புறீயா?" என்று சற்று காரமாகவே கேட்டான் விஷ்ணு.


"எஸ் விஷ்ணு… நான் அவளை விரும்புறேன்." என்றவனை விஷ்ணு முறைக்க,


"ப்ளீஸ் விஷ்ணு என்ன தப்பா நெனைக்காத… நான் ஆஷாவை மறந்துட்டு இன்னொரு லைஃப்க்கு ரெடியாக்கிட்டேன்னு தயவுசெய்து என்ன தப்பா நினைக்காத… உனக்கே தெரியும் கல்யாணத்துக்கு முந்தி வரை ஆஷாவை நான் வெறும் உன்னோட தங்கச்சியா மட்டும் தான் பாத்தேன். அவளும் அப்படித்தான். பெரியவங்க பேசி எங்களுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிங்க, அதை வேணாம்னு சொல்ல எங்க ரெண்டு பேருக்குமே காரணம் இல்லாம போக, நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டோம். கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரமே நான் கேஸ்காக வெளியூர் போய்ட்டேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க கூட எங்களுக்கு டைம் இல்லாம போயிடுச்சு, அதுக்குள்ள அவளும் என்னை விட்டு ஒரேயடியா போய்ட்டா" என்ற ஆதவ் கண்கள் கலங்கியதை பார்த்து விஷ்ணுவும் முகிலும் கலங்கி நின்றனர்.


"எங்களுக்குள்ள கணவன், மனைவி உறவு இருந்ததே தவிர, காதல் இருந்தது இல்ல, அதுக்கான நேரம் எங்களுக்கு கடைசி வரை அமையவே இல்ல விஷ்ணு."


"ஒஒஒ இப்ப உனக்கு நேரம் இருக்கு, அதோட ஆஷாவும்  இல்ல, சோ நீ ஆழிய ஆஷா இடத்தில் வைக்க நினைக்கிற இல்ல?" என்ற விஷ்ணுவின் பேச்சில் முகிலுக்கு எரிச்சல் வந்தது.


"டேய் என்ன பேசுறேன்னு தெரிஞ்சு பேசு. அவன் ஆஷா மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தான்னு நமக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் இப்படி பேசுறியே? நீ சொல்றத பாத்தா, ஆதவ் காலம் பூராவும் இல்லாத ஆஷாவை நினைச்சிட்டு இப்படி தனியாவே இருக்கணும்னு நினைக்குறியா?" என்று கத்த,


"டேய் என்ன பேசுற நீ… அவ என் தங்கச்சின்னா, இவன் என்னோட ஃப்ரண்ட். அவன் நல்லா இருக்க கூடாதுன்னு நான் நெனைப்பேனா? ஆனா, ஆஷா இருந்த இடத்துக்கு ஆழிய போய்… எப்படிடா இவனுக்கு அவ மேல போய்" என்ற விஷ்ணுவை பார்த்து நக்கலாகச் சிரித்த முகில்,


"ம்ம்ம் அந்த மீரா பொண்ணைப் பார்த்து, ஒருத்தன் ஜொள்ளு விட்டான்னு சொல்லும் போது உனக்கு எதுக்கு அடிவயிறு கருகுச்சோ... அது மாதிரி தான் இவனுக்கு ஆழி மேல லவ் வந்திருக்கும்" என்றதும்  அதற்கு மேல் விஷ்ணுவுக்கு பேச்சு வரவில்லை.


"என்னடா பேச்சையே காணோம்." என்று விஷ்ணுவை கலாய்த்த முகில், 


"இங்க பாரு விஷ்ணு, ஆஷா இருந்த இடத்துக்கு ஆழி தகுதியானவளான்னு எனக்கு தெரியாது. ஆனா, இந்த உலகத்துல நிலாவுக்கு அம்மாவா இருக்க தகுதி ஆழி ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு, அதை நீ புரிஞ்சுக்க" என்றதும் விஷ்ணுவுக்கு முகில் சொல்வது சரி என்றே தோன்றியது.


"ஆமா விஷ்ணு, முதல்ல ஆழி பத்தி தெரிஞ்ச போது நான் கூட அவளை வீட்டை விட்டு அனுப்ப தான் நெனச்சேன். ஆனா, அன்னைக்கு என்னை பயமுறுத்த நிலாவை கடத்த, கூடவே ஆழியும் மாட்டிக்கிட்டா. அவ நினைச்சிருந்தா நிலாவை அவங்க கிட்ட கொடுத்துட்டு இவ தப்பிச்சு போயிருக்கலாம். ஆனா, அவ அத செய்யல. அவ உயிருக்கும் மானத்துக்கும் ஆபத்துனு தெரிஞ்சும், அவ நிலாவை விட்டு போகலடா, போதை மருந்து மயக்கத்துல, அவ முழு உடம்பும் அவ கண்ட்ரோல்ல இல்லாத நிலையில் கூட நிலாவை விடாம நெஞ்சோடு சேர்த்து அணைச்சு புடிச்சிட்டு இருந்தாடா அவ… அதை பாத்த அந்த நிமிஷம், என்னையும் அறியாம அவ எனக்குள்ள வந்துட்டா விஷ்ணு… முகில் சொன்ன மாதிரி நிலாவுக்கு அம்மாவா இருக்க தகுதி இந்த உலகத்துல ஆழிய தவிர வேற யாருக்கும் இல்ல, அதே மாதிரி என் லைஃப்லையும் அவளை தவிர வேற யாரும் வரமுடியாது" என்று உறுதியாகச் சொல்ல, விஷ்ணுவுக்கு ஆதவன் மனது புரிந்தது. அவன் முடிவு சரியென்றே தோன்றியது.


"நீ சொல்றது எனக்கு புரியுது ஆதவ்? உனக்காக இல்லாட்டியும், நிலாவுக்காக நான் ஆழிய அக்சப்ட் பண்ணிக்குறேன். ஆனா, இதுக்கு ஆழி ஒருநாளும் சம்மதிக்க மாட்டாளே, அதுக்கு என்ன பண்ணுவ" என்ற விஷ்ணுவை கேள்வியாக பார்த்தான் ஆதவ்.


"ஏன் விஷ்ணு அப்படி சொல்ற? ஏன் என்னைப் பத்தி அவ எதுவும் சொன்னாளா, என்னை பிடிக்காதுனு உங்க கிட்ட சொன்னாளா?"


"ஆழி எதுவும் சொல்லல டா, அன்னைக்கு நைட் நீ ஆழிய பளார்னு ஒன்னு விட்டுட்டு போனீயே, அப்ப மீரா தான் சொன்னா, ஆழி கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு ஸ்ட்ராங்கா இருக்காம்." என்றவன் அன்று மீரா சொன்ன அனைத்தையும் சொல்லி முடிக்க, ஆதவ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன்,


"அவ தான கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்னா… இட்ஸ் ஓகே… அவ என்னை கல்யாணம் செஞ்சுக்க வேணாம்… நான்  அவளை கல்யாணம் செஞ்சுட்டு போறேன் சிம்பிள்." என்று தோள்களை குலுக்கி முகம் முழுவதும் புன்னகையோடு சொன்னவன், "அவ்ளோ தான் மேட்டர் சால்வ் வுடு" என்றவன் அங்கிருந்து செல்ல, பல நாட்கள் கழித்து ஆதவ் முகத்தில் சிரிப்பை பார்த்த இருவருக்கும் மனது நிறைந்தது.


ஆதவ் அந்தப் பக்கம் சென்றதும், முகில் கையை  முறுக்கி பிடித்த விஷ்ணு, "டேய் நான் பேசிட்டு இருக்கும்போது நீ ஏன்டா, இடையில மீரா பத்தி இழுத்த?"


"அப்படித் தான்டா இழுப்பேன். அவன் ஆழிய விரும்புறது தப்புன்னா, நீ மட்டும் மீராவை பார்த்து ஜொள்ளு விடலாமா? அது மட்டும் நியாயமா? ஆமா‌ அதென்னடா அந்த பொண்ணைப் பாத்து அப்படி வழியிற நீ. ஒரு டெப்டி கமிஷனர் பண்ற‌ வேலையா இது?" என்று எதிர் கேள்வி கேட்க, விஷ்ணு அசடு வழிய சிரித்தான்.


"தச்சீ முகத்தை ஒழுங்கா வை. பாக்க சகிக்கல…" என்ற முகில் கையை மீண்டும் முறுக்கிய விஷ்ணு,


"அதெல்லாம் லவ் ஃபீல்டா, அதெல்லாம் மனுஷங்களுக்கு தான் தெரியும். உன்னை மாதிரி அனிமல்ஸூக்கு புரியாது… பேசாம நீ ஒன்னு பண்ணுடா... ஆதவ்‌வும் ஆழியும், நானும்‌‌ மீராவும், மீதி இருக்குறது அந்த ஓட்ட வாய் சைத்ரா தான்… பேசாம நீ அவளை கரெக்ட் பண்ணு, மூணு பேரும் ஒரே நாள்ல கல்யாணம் முடிச்சு, ஒன்னா ஒரே ஃபேமிலியா, ஹேப்பி ஃபேமிலியா செட்டில் ஆகிடலாம்… என்ன சொல்ற நீ… எப்படி என் ஐடியா?" என்ற விஷ்ணு காலை மிதித்த முகில்,


"ஏன்டா போயும் போயும் அந்தப் பிசாசு கிட்ட என்னை மாட்டிவிட‌ பாக்குற, வாயாடா அது… ஒரு நிமிஷம் கூட மூடாம எப்ப பாரு படபடனு பேசிட்டே இருக்கு, யப்பா… நான் மட்டும் அதுக்கு வாக்கப்பட்டேன் வையேன், கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே ஈ.என்.டி டாக்டரை பாத்து என்ன காது நரம்பை கட் பண்ணி என்னை செவுடு ஆக்கிடுங்கன்னு, டாக்டர் காலை புடிச்சு கெஞ்சுட்டு இருக்கணும்டா. அந்த நிலைமை தேவையா உன் நண்பணுக்கு..‌. ஆள விடுடா சாமி" என்று கையெடுத்துக் கும்பிட இருவரும் சிரித்தபடியே அங்கிருந்து சென்றனர்.


அடுத்து வந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் ஆதவ் ஆழியை நெருங்கிக்கொண்டிருக்க, அவன்‌ அருகாமை ஆழியின் மன உறுதியை ரொம்பவே சோதித்துப் பார்த்தது. அவனை நெருங்கவும் முடியாது, விட்டு விலகவும் முடியாமல் தவித்துப் போனாள் ஆழி.


இந்த லவ் போராட்டத்தின் இடையிலும், தன் ரத்த போராட்டத்தின் வேலைகளை கச்சிதமாக செய்து முடித்திருந்தாள்‌ ஆழி.