ஆழியின் ஆதவன் 7

 







ஆழி 7



ஒரு வருடத்திற்கு முன் ஆழினி, மீரா, சைத்ரா மூன்று பேரும்‌ ஒன்றாக இந்திய மண்ணில், தங்கள் பழைய வாழ்க்கையின் மிச்ச மீதிகளை மொத்தமாக துடைத்தெறிந்து விட்டு புதிய‌ வாழ்க்கையை தேடி அடியெடுத்து வைத்தனர்.


"ஏன் ஆழி இப்டி சொல்ற?" என்ற சைத்ரா முகம் வாடி இருக்க, ஆழி அவள் தலையில் கை வைத்து மெதுவாக வருடியபடி,


"புரிஞ்சிக்கோ சைத்து, என்ன தான் நம்ம நம்மள பத்தின எல்லாத்தையும் விஷயங்களைமும் நம்ம அழிச்சிருந்தாலும், எங்கயாது ஒரு சின்ன விஷயத்தை நம்மையும் அறியாம மிஸ் பண்ணி இருந்தால், அதால நாம மாட்டிக்க நெறைய சான்ஸ் இருக்கு. நாம ஒன்னும் சமூக சேவை செஞ்சிட்டு இங்க வர்ல. நம்ம டார்கெட்ல வந்த யார் ஃபேமிலியாது, நம்ம‌ள விடப் புத்திசாலியா ஒரு ஆள் இருந்து, நம்ம கண்டு புடிச்சு, நம்மள டார்க்கெட் பண்ணா என்ன பண்றது சொல்லு? அதுலயும் நம்ம கொன்னதுங்க ஒன்னும் சாதாரணமான ஆளுங்கள இல்ல‌. அரசியல்வாதி, பெரிய பிஸ்னஸ்மேன், விஐபின்ற பேர்ல இருந்த நம்மள விடப் பெரிய பெரிய கிரிமினல்ஸை, அதுல ஐஞ்சு பேர் அண்டர்வேர்ல்ட் டான் வேற. இப்டி நம்ம கை வச்சது எல்லாம் பெரிய இடம் மட்டுமில்ல மோசமான இடமும் கூடத்தான். சோ, எப்ப இருந்தாலும் நம்ம தலைக்கு மேல ஒரு கத்தி தொங்கிட்டு தான் இருக்கும். சோ வீ ஹேவ் டு பி வெரி சேஃப். அதுக்கு தான் சொல்றேன். கொஞ்ச நாள் நம்ம மூணு பேரும், வேற‌ வேற ஊர்ல தனிய இருக்கலாம். ஆல்ரெடி நம்ம மூணு பேர்க்கும் தனித்தனிய ஐடென்டிட்டி இருக்கு, சோ அதை வச்சு புது லைஃப் ஸ்டார்ட் ‌பண்ணுவோம். அதுல நம்ம நல்லா ஸ்டாண்ட் பண்ண பிறகு மூணு பேரும் கொஞ்ச நாள் ஒன்னா இருக்கலாம். எப்படி இருந்தாலும் எப்பவும், நம்ம மூணு பேரும் ஒன்னாவே இருக்க முடியாது சைத்து. அது நமக்கு நல்லதும் இல்ல. சோ இப்ப நம்ம மூணு பேரும் அவங்க அவங்க வழிய தேடி தனித்தனியா போறோம். சரியா இன்னைக்கு இருந்து ஆறு மாசம் கழிச்சு, ஒரு ஸ்பாட் பிக்ஸ் பண்ணி அங்க நம்ம மீட் பண்ணலாம். அதுக்கு இடையில ரொம்ப முக்கியமான விஷயம் தவிர்த்து நமக்குள்ள எந்த காண்டாக்ட்டும் வேணாம் புரிஞ்சுதா?" என்று ஆழினி கேட்க,


"ம்ம்ம் ம்ம்ம்… எல்லாம் புரிஞ்சுது" என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் சைத்ரா.


"ஏய் என்னடி இது? ஆழி தான் இவ்ளோ சொல்றா இல்ல, அவ சொல்றது கரெக்ட்னு உனக்கும் தெரியும். அப்புறம் ஏன் இப்டி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிருக்க, காலையில செஞ்சு டிபன் பாக்ஸ்ல அடச்சு இறுகிப் போன நூடுல்ஸ் மாதிரி இருக்கு மூஞ்சி" என்று மீரா சிரிக்க, கூடவே ஆழியும் சேர்ந்து சிரிக்க, மூவரும் அடுத்தவர் சிரித்த முகத்தை தங்கள் இதயப்பையில் சேமித்து வைத்துக்கொண்டு தங்கள் புதிய பாதையில், புதிய வாழ்க்கையை தேடி அமைத்துக்கொள்ள கிளம்பினர்.


ஏற்கனவே அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அந்தந்த ஊர்களில் ஏற்பாடு செய்திருந்தனர் பெண்கள். அதன்படி மீரா ஹைதராபாத், சைத்ரா கேரளா, ஆழினி சென்னை என்று மூவரும் புறப்பட்டனர்.


ஆழினி சென்னையில் வந்து இறங்கியவள், நேராக அவளுக்காக சென்னையில் அவள் வாங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாள். இப்போது மீராவும், சைத்ராவும் இருக்கும் அதே ஃப்ளாட் தான் அது.


அங்கு சென்றவள் பாதுகாப்பிற்காக சில ஏற்பாடுகளை செய்து முடித்து, அடுத்து என்னென்ன செய்யவேண்டும் என்று அனைத்தையும் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வைக்க, அவள் விதியோ வேறு மாதிரி அவள் வாழ்க்கையை வடிவமைத்து அதில் வலிக்க வலிக்க ஆழியை திணித்துவிட திட்டம் தீட்டி, அதை செயல்படுத்த நேரம் பார்த்துக் காத்திருந்தது.


ஆழி சென்னையில் தன் இன்டீரியர் டிசைனிங் வேலையை தொடங்கினாள். ஆன்லைன் மூலம் சின்ன சின்ன வேலைகளை ஒத்துக்கொண்டு அதை நேர்த்தியாக, அழகாக, சொன்ன நேரத்தில் முடித்தும் கொடுத்தாள். அதற்காகவே கொஞ்ச நாளில் அவளுக்கு நிறைய சின்ன சின்ன காண்ட்ராக்ட் கிடைத்தது. அவளுக்கு ஏற்கனவே இந்த தொழில் பழக்கம் என்பதால் அதிகம் மெனக்கெடாமல் அந்த வேலையில் தன்னை புகுத்திக்‌ கொண்டாள்.


சைத்ரா, மீரா இருவரும் அவரவர் இடத்துக்குச் சென்ற பிறகு, அரைவ்ட் சேஃப்லி, ஆல் செட் என்று மெசேஜ் செய்ய, ஆழி ஓகே என்று பதில் அனுப்பி வைத்தாள்.


அதற்கு பின் மூவருக்குள்ளும் வெளிப்படையாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அடிக்கடி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்களை மட்டும் அவர்கள் மூவரும் பரிமாறிக் கொண்டனர். யாராவது ஏதாவது பிரச்சனையில் சிக்கினால் மற்றவருக்கு அது தெரிய வேண்டும் என்று இந்த ஏற்பாடு. ஆனால், எக்காரணம் கொண்டும் அழைக்காமல் யாரும் வந்து ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது என்று ஆழி முடிவாகச் சொல்லிவிட, அந்த வார்த்தைகள், ஆழிக்கு ஒரு அவசர தேவை வரும்போது விதியின் சதியால் அவள் தன் தோழிகளை அவளிடம் வரமுடியாமல் செய்துவிட்டது ‌தான் துரதிர்ஷ்டம்.


அன்று வழக்கம் போல் ஆழி தன் வேலைகளை முடித்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். மாலை ஏழு மணிபோல் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்தவள், அவள் புக் செய்த கேப் வருகிறதா என்று சாலையில் பார்வை பதித்திருக்க, சற்று அருகில் கேட்ட பெரும் சத்தத்தில் பதறியவள் சட்டென திரும்பிப் பார்த்தாள்.


அங்கு ஒரு லாரி ஒரு காரை கண் இமைக்கும் நேரத்தில் இடித்து தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட, லாரி மோதியதில் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே வேகமாக திரும்ப, அந்தக் கார் தன்னை நோக்கி தான் வருகிறது என்று உணர்ந்து ஆழி அங்கிருந்து நகரும் முன், அந்தக் கார் ஆழி மீது மோதி விட, ஆழி மேலே தூக்கி வீசப்பட்டு, அப்படியே தரையில் குப்புற வந்து விழுந்தாள்.


என்ன ஏதென்று யோசிக்கும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட, நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்‌ ஆழினி.


விபத்து நடந்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்துக் கண்விழித்தாள் ஆழினி‌.


கண்விழித்த ஆழினிக்கு உடல் முழுவதும் அப்படி ஒரு வலி. நூறு கிலோ இரும்பை தன் நெஞ்சின் மீது வைத்தது போல் அப்படி வலித்தது அவளுக்கு. தலையில் போடப்பட்டிருந்த பெரிய கட்டினால் அவளால் லேசாகக் கூட தலையை அசைக்க முடியாதபடி கனத்தது. கஷ்டப்பட்டு தலையை அசைத்து, பார்வையை சுழற்றி தான் இருந்த இடத்தைப் பார்க்க, அவள் கண்களுக்கு அனைத்தும் மங்கலாக தெரிந்தது. ஏதேதோ மருந்து நெடிகள் அவள் நாசியை தொட்டது. தன்னைச் சுற்றி பீப் பீப் என்ற ஓசை கேட்டு ஏதோ மிஷின்கள் ஓடுவதை உணர்ந்தவள், சுற்றி முற்றி பார்த்தாள்.


ஆழிக்கு தான் எங்கிருக்கிறேன்? என்பதை விட, முதலில் உயிரோடு தான் இருக்கிறேனா? என்ற சந்தேகம் தான் முதலில் வந்தது. மெல்ல கண்களை மூடி மூடி திறந்து, நடந்ததை அமைதியாக யோசிக்க, அவளுக்கு விபத்து நடந்தது அவள் ஞாபகத்தில் வந்தது‌. அதன் பின் தான் அவளுக்கு தான் இப்போது ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்பதை புரிந்துக் கொண்டாள்.


அவள் கண்விழித்தபடி படுத்திருக்க, அவளை பரிசோதிக்க வந்த நர்ஸ் அவள் கண்விழித்திருப்பதைப் பார்த்து டாக்டரை அழைத்தாள்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் டாக்டர் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார்.


"இப்ப உடம்பு எப்டி இருக்குமா? பெயின் எதுவும் இருக்கா?" என்று கேட்க, ஆழினி மெதுவாக கண்களை மூடித் திறந்து "ஆமாம்" என்று சைகை செய்தாள்.


டாக்டர் அவளை முழுதாக பரிசோதித்து பார்த்துவிட்டு, "யூ ஆர் பெர்ஃபெக்ட்லி அல்ரைட், சர்ஜரி நடந்து கொஞ்ச நாள் தான ஆகுது. அதுதான் உனக்கு பெயின் இருக்கு. உன்னோட வில் பவர் தான் நீ இவ்ளோ சீக்கிரம் ரெக்கவர் ஆனதுக்குக் காரணம், கெஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்." என்று அவள் தோளை தொட்டவர், "யூ ஆர் வெரி லக்கி, நடந்த ஆக்சிடென்ட்ல உன்னோட ஹார்ட் ரொம்ப பாதிக்கப்பட்டுடுச்சு, ஹார்ட ட்ரான்ஸ் பிளான்ட் பண்ணா தான், நீ உயிர் பொழைக்க முடியுன்ற நிலைமை, பட் காட்'ஸ் கிரேஸ் சரியான நேரத்துக்கு உனக்கு பொருந்துற மாதிரி ஹார்ட் கெடச்சிது. அந்த ஆஷா சாகுற நேரத்துல, உனக்கு அவ உயிரை உனக்கு குடுத்துட்டு போய்ட்டா, இல்லாட்டி இந்நேரம் ரெண்டு உயிர் போய் இருக்கும். ம்ம்ம் அவ சாவுல தான் உன்னோட மறு ஜென்மம் ஆரம்பிக்கனும்னு எழுதி இருக்குப்போல" என்றவர் கலங்கிய விழிகளுடன் வெளியே செல்ல, ஆழினி என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி இருந்தாள்.


மருந்து மயக்கத்தில் அரைகுறை தூக்கத்தில் இருந்த ஆழினியின் நெஞ்சில் யாரோ வருடுவது போல் இருக்க, ஆழினி மெல்ல கண்விழித்துப் பார்த்தாள்.


அவள் எதிரில் வயதான பெண் ஒருவர் கண்களில் நீர் வடிய அமர்ந்து, ஆழியின் நெஞ்சில் கை வைத்தபடியே அழுதுக் கொண்டிருந்தார்.


ஆழினி கஷ்டப்பட்டு மெதுவாக தன் இதழ்களைப் பிரித்து, "யாரும்மா நீங்க? ஏன் அழுதுட்டு இருக்கீங்க? அதுவும் என்னோட ரூம்ல இருக்கீங்க?" என்று மெதுவாக கேட்க,


"எம் பேரும் லட்சுமி, ஆஷாவோட அம்மா என்று சொல்ல, முதலில் அவர் சொல்வது புரியாமல் குழம்பிய ஆழி, பின் காலையில் டாக்டர் சொன்னது ஞாபகம் வர, தனக்குள் இப்போது துடித்துக்கொண்டிருக்கும் இதயம், தன் எதிரில் இருப்பவரின் மகளின் இதயம் என்று அவளுக்குப் புரிந்தது. அவரிடம் என்ன பேசுவதென்று ஆழினிக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவாக தன் கையை தூக்கி அவருக்கு நன்றி சொல்ல நினைக்க, அது முடியாதபடி அவள் கைகளில் மருந்து ஏறிக்கொண்டிருந்த ஐ.வி தடுத்தது.


லட்சுமியும் அவள் கையை அசைப்பதை பார்த்து பதறியவர், "அய்யோ கைய அசைக்காதம்மா. ஊசி பிச்சிட்டு வந்திடும்" என்று சொன்னவரின் அக்கறையான குரலே சொன்னது அவர் மகளின் மீது எந்தளவு பாசம் வைத்திருந்திருப்பார் என்று. ஒரு நிமிடம் கண்மூடி திறந்த ஆழி, மெதுவாக, "நன்றிம்மா" என்று சொல்ல, லட்சுமி அவள் தோளை மெதுவாக அழுத்தினார்.


"எனக்கு எதுக்குமா நன்றி? எல்லாம் கடவுள் செயல். எம்பொண்ணுக்கு இப்படி நடக்கும்னு எழுதின கடவுள், அவ திரும்பவும் உன் மூலமா திரும்பி இந்த பூமிக்கு வரணும்னு முடிவு பண்ணி இருக்காரு. ம்ம்ம்… ஏதோ ஒருவகையில என் பொண்ணு இந்த உலகத்தில உன் மூலமா வாழ்ந்துட்டு தான் இருக்கான்னு நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் நிம்மதியா தான் இருக்கு. ஆனா, எம் பேத்தி பொறக்கும் போதே பெத்தவள பறிகொடுத்துட்டு அநாதையா நிக்கிறதை நினைக்கும்போது தாம்மா நெஞ்சு தாங்கல" என்றவர் வாய் பொத்தி அழுக, ஆழினிக்கும் உள்ளம் கலங்கியது.


"உங்க பொண்ணுக்கு என்னம்மா ஆச்சு?" என்று ஆழினி கேட்க,


"ம்ம்ம்… எல்லாம் விதிம்மா. கல்யாணம் முடிஞ்சு இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகல, அதுக்குள்ள எம்பொண்ணு" என்று கலக்கியவரை பார்த்து ஆழினியும் கண்கலங்க, 


"ஐய்யோ நீ அழதம்மா. உன் உடம்புக்கு ஆகாது" என்று வாஞ்சையோடு அவள் தலையை வருடியவர், " ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்குக் காலையில தாம்மா எம் பொண்ணுக்கு வளைகாப்பு முடிஞ்சு என் வீட்டுக்கு வந்தா, சாயந்திரம் பக்கத்தில இருக்க கோயிலுக்குப் போய்ட்டு வரேன்னு சொல்ல சொல்ல கேக்காம கார்ல கிளம்பி போனா, கோவிலுக்கு போய்ட்டு திரும்பி வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது, அவ கார் மேல ஒரு லாரி வந்து மோதிடுச்சும்மா" என்று லட்சுமி அம்மா வாய்பொத்தி அழ, அவர் கண்ணீரை துடைக்க கூட முடியாமல் உடைந்து போயிருந்தாள் ஆழினி.


"புள்ளத்தாச்சி பொண்ணும்மா அவ, அவளுக்கு இது ஒன்பதாவது மாசம், இன்னும் கொஞ்ச நாள்ல பேரனோ, பேத்தியோ பொறக்கும்னு நாங்க எல்லாம் ஆசையா காத்திருக்க சமயம், அவ ஒரேயடியா எங்களை விட்டுப் போய்ட்டாளே" என்றவர் கதறி அழுக ஆரம்பிக்க, நர்ஸ் வந்து ஐசியூ வில் யாரும் கத்தக்கூடாது என்று சொல்லி லட்சுமியை வெளியே அனுப்பிவிட்டார்.


ஆழி அடிபட்டு சாலையில் விழுந்து அரை மயக்கத்தில் கிடக்கும் போது, அவள் மேல் மோதிய காரின் அருகில் ஒரு கர்ப்பிணி பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மெதுவாக ஆழியை நோக்கி தவழ்ந்து வந்து அவள் கைகளை இறுக்கிப் பிடித்து, "பயப்படாத, உனக்கு ஒன்னும் ஆகாது" என்று தட்டுத் தடுமாறி சொல்ல, அந்தக் குரலைக் கேட்டபடி, அந்தப் பெண்ணின் கண்ணைப் பார்த்துக் கொண்டே மயங்கிப் போனாள் ஆழினி.


நடந்ததை நினைத்துப் பார்த்த ஆழினிக்கு, அந்தப் பெண் ஆஷா தான் என்று தெளிவாகப் புரிந்தது. இரண்டு உயிராக இருந்தும், உயிருக்கு போராடும் நிலையிலும், தனக்கு ஆறுதல் சொன்ன அந்த நல்ல ஆத்மா இப்போது உயிரோடு இல்லை என்று நினைக்கையில் ஆழினிக்கு மனது வலித்தது. அவள் எத்தனையோ சாலை பார்த்தவள், சில உயிர்களை எடுத்திருக்கிறாள் தான். ஆனால்‍, அவர்கள் எல்லாம் இந்த உலகில் வாழ தகுதி இல்லாத மனித மிருகங்கள். ஆனால், ஆஷா… அவள் இறந்து, தனக்கு மறு ஜென்மம் கொடுத்துச் சென்றிருக்கிறாள். ஆழினிக்கு ஆஷாவைப் பற்றி நினைக்க நினைக்க உள்ளம் கலங்கியது, அதைவிட பிறந்தவுடன் தன் தாயை இழந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் நிலையை யோசித்த ஆழிக்கு வாழ்க்கையில் முதல் முறையாக அழுகை வந்தது.


ஆழினி கண்விழித்த அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவு தேறியிருந்தாள். ஆஷாவின் குழந்தையை பார்த்தே ஆகவேண்டும் என்று அவள் பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி டாக்டர் சொல்ல, நர்ஸ் அவளை ஸ்ட்ரெச்சரில் வைத்து குழந்தை இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.


"நீ எங்கம்மா இங்க வந்த?, இப்ப தான உனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு" என்று லட்சுமி கேட்க,


"எனக்கு அந்தப் பாப்பாவை பாக்கணும், காட்டுங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச, லட்சுமி குழந்தையிடம் ஆழியை அழைத்துச் சென்றார்.


மழலை குரலில் வீல் வீலென்று அழுதுக்கொண்டிருந்த குழந்தையைப் பார்க்க பார்க்க ஆழினிக்கு நெஞ்சமெல்லாம் அடைத்தது. வெண்மதியும் குழந்தையை சமாதானம் செய்யப் பார்க்க, குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. குழந்தையையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்த ஆழினி, 


"பாப்பாவை நான் தொட்டுப் பாக்கலாமா?" என்று பாவமாகக் கேட்க, ஆழினி யாரென்று புரிந்துக் கொண்ட வெண்மதி, குழந்தையை அவள் அருகில் அவள் தொட்டுப் பார்க்க, வசதியாக படுக்க வைத்தார். 


ஆழினி மெதுவாக திரும்பிப் படுத்தபடி குழந்தை கன்னத்தை மெதுவாக தடவிவிட, அவள் ஸ்பரிசத்தில் குழந்தை தன் தாயை உணர்ந்ததோ என்னவோ? சட்டென அழுகையை நிறுத்தியது.


பத்து நாட்களுக்கு மேல் ஓயாமல் அழுதுக்கொண்டிருந்த குழந்தை ஆழி தொட்டவுடன் அழுகையை நிறுத்தியதைப் பார்த்து லட்சுமியும் வெண்மதியும் வாயடைத்து நின்றனர்.