காதல் 15
காதல் 15
கண்களில் கண்ணீர் வழிய ஷரவன் அடித்ததில் சிவந்திருந்த தான் கன்னத்தை கை கொண்டு தடவியபடி ஷரவனை பார்க்க, கோபத்தில் கண்கள் சிவந்து எரிமலை போல் கொதித்துக் கொண்டிருந்தவனை பார்த்த மிருதுளாவுக்கு உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.
"என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? ஹான்... சொல்லுடி எப்படி தெரியுது? நான் உன்னை என் உயிருக்கு மேல விரும்புறேனு உனக்கு தெரியும், நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு நல்லாவே தெரியும். நீ இல்லனா நா இல்லன்னு தெரிஞ்சும், உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு, கல்யாணத்த நிறுத்துன்னு என்கிட்டேயே சொல்லுவ. உன் பின்னாடியே சுத்துறதால என்ன பாத்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதாடி" என்றவன் குரல் உச்சகட்ட கோபத்தில் வெளிவந்தது.
அவனின் கோபத்தை கண்டு பயத்தில் உடல் மொத்தமும் நடுங்கி நின்றவளை பார்த்தும் ஷரவனின் கோபம் சற்றும் குறையவில்லை.
அதே கோபத்தில், "எதுக்குடி இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்தனும், சொல்லுடி கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு இப்ப என்ன ஆயிடுச்சு, நீ ஓகே சொல்லி தான கல்யாண டேட் பிக்ஸ் பண்ணேன். இப்ப என்ன கேடு வந்துடுச்சுன்னு இப்படி பேசிட்டு இருக்க?" என்று அவள் தோளைப் பிடித்து உலுக்க, மிருதுளா அவள் கோபத்தில் பயந்து நடுங்கி விட்டாள்.
"எ... என... எனக்கு… எனக்கு உங்கள பிடிக்கல" என்று தட்டு தடுமாறி சொன்னவள், எங்க மறுபடியும் ஷரவன் அடித்து விடுவானே? என்ற பயத்தில் மிரண்டு நிற்க, ஷரவனோ அவள் உன்ன பிடிக்கல என்று சொன்ன வார்த்தையை கேட்ட மறுநிமிடமே முழுவதும் உடைந்து சிதறி இருந்தான்.
தலையில் இடி விழுந்தது போன்று அசையாமல் நின்றவன் நிலையைக் கண்டு மேகமும் கலங்கியாதே என்னவோ தான் கண்ணீர் துளிகளை மழையாய் சிந்தியது. மழைத்துளி பட்டதும் தன்னிலை அடைந்த ஷரவனின் பார்வை வலியோடு மிருதுளா மீது விழ பயத்திலும், மழையில் நனைந்ததால் அவள் உடல் குளிரில் நடுங்கி நிற்க, அவள் அருகில் சென்றான் ஷரவன்.
"ஏன் டி இப்படி பண்ற? என்ன ஆச்சு உனக்கு? என்ன நடந்ததுன்னு சொல்லுடி, பேசி சரி பண்ணலாம். அத விட்டு கல்யாணத்தை ஏன் நிறுத்த சொல்ற? எதுக்குடி என்ன இப்படி உயிரோட கொல்ற" என்றவன் குரலில் அத்தனை வலி. தன் மனம் கவர்ந்தவளை மனைவியாக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தவன் மனதை, தன்னவளே சுக்குநூறாய் போட்டு உடைத்து விட்ட வலி.
"நான் தான் சொல்றேன்ல, எனக்கு உங்கள பிடிக்கல. ப்ளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க" என்று மிருதுளா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல, ஷரவனின் பொறுமை எல்லை கடந்தது.
"ஏய் என்னடி நெனச்சிட்டு இருக்க? நானும் சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன். நீ மறுபடி மறுபடி நீ சொன்னதையே சொல்லிட்டீருக்க? இங்க பாரு க்ஷடி உனக்கு என்ன புடிக்கணும்னு தான் இத்தனை வருஷம் வெயிட் பண்ணேன். அது நடக்கல, இனி என்னால வெயிட் பண்ண முடியாதுன்னு தான் மேரேஜ் பிக்ஸ் பண்ணேன். உனக்கு பிடிக்குதோ இல்லையோ… இந்த கல்யாணம் நடக்கும், நடந்தே தீரும். நீ என்ன காதலிக்கிறியா இல்லையான்னு எனக்கு கவலை இல்ல. நான் உன்னை காதலிக்கிறேன் அவ்ளோ தான். நீ எனக்கு வேணும். நீ என் கூடவே இருக்கணும். at any cost, i need you in my life" என்று அவன் உறுதியாக சொல்ல, மிருதுளாவுக்கு ஷரவனின் உறுதி பயத்தை கொடுத்தது.
"நான் உங்கள புடிக்கலைன்னு சொல்லியும், என்ன கல்யாணம் பண்ணுக்குவேன்னு சொல்றது உங்களுக்கே தப்பா தெரியலையா?" என்றவள் தான் இயலாமையை நினைத்து அழ,
"இல்லடி எனக்கு தப்பா தெரியல, எனக்கு நீ வேணும் அவ்வளவு தான், அது உனக்கு புடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு கவலை இல்ல, என்னை கல்யாணம் பண்ணிட்டு நீ அழுதாலும் சரி, சிரிச்சாலும் சரி, அது என் கூட தான் இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம்" என்று ஷரவன் தன் நிலையில் பிடிவாதமாய் நின்றான்.
அவன் பேச்சில் மிருதுளா தான் பயத்தை துறந்தவள், "ச்சே நீயெல்லாம் ஒரு மனுஷனா? நா உன்ன பிடிக்கலன்னு சொல்றேன், நீ கொஞ்சம் கூட அத பத்தி யோசிக்காம, கட்டாயப்படுத்தி என்னை உன் கூட வச்சிக்க நினைக்கிற இல்ல" என்றவள் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, "நான் உயிரோட இருந்தா தானே நீ என்ன கல்யாணம் பண்ணுவ? நான் செத்துப்போயிட்டா நீ என்ன பண்ணுவ" என்றவள். சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த பாட்டிலை உடைத்து கையை அழுத்தி கீறிக்கொள்ள. அவள் கைகளில் ரத்தத்தை பார்த்த ஷரவனுக்கு உயிரே போய்விட்டது.
"ஏய் என்னடி பண்ற? ஏன்டி இப்படி" என்று அவள் கைகளில் இருந்து பாட்டிலை பிடுங்க முயல, மிருதுளா உடனே அந்த பாட்டில் துண்டை கழுத்தில் வைக்க, அவள் கண்கள் சொருகி, கால்கள் தடுமாறியது.
"நீ இப்ப வேணும்னா என்ன தடுக்கலாம், ஆனா, நீ மட்டும் என் கழுத்துல தாலி கட்னா.. அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன்" என்றவள் அந்த வார்த்தையை சொல்லி முடிக்கும் முன் மயங்கி ஷரவன் மார் மீதே சரிந்தாள்.
அவளை கீழே விழாமல் தன் கைகளில் ஏந்தியவன், அவளை தன் அறைக்கு தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்தவன். அவள் கைகளில் வழிந்த ரத்தத்தை துடைத்து, மருந்து வைத்து கட்டு போட்டவன், மழையில் நனைந்ததால் முழுவதும் நனைந்திருந்த அவள் உடை பார்த்து, அவன் வாட்ருப்பை திறந்து பார்க்க, ஷரவன் அவளுக்காக தேடி தேடி வாங்கிய உடையும், நகையும், அவளுக்காக வாங்கிய ஒவ்வொரு பொருளும் அவனை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் இருந்தது.
அவளுக்காக வாங்கி உடைகளில் ஒன்றை எடுத்து அவளுக்கு மாற்றி விட்டவன், 'ஏன்டி இப்படி பண்ண? உன் கையில ரத்தத்தை பார்த்த நிமிஷம் எனக்கு உசுரே போயிருச்சுடி. ஏன்டி என்னை இப்படி வதைக்கிற, இன்னும் நான் என்ன செஞ்சா நீ என்ன புரிஞ்சுக்குவ? நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி, எங்க நீ என்ன விட்டு போய்டுவியோன்கிற பயத்துல தான் இவ்வளவு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு செஞ்சேன். ஏன்டி உனக்கு என் காதல் புரிய மாட்டேங்குது' என்று தன் நிலையை நினைத்து மௌனமாக கண்ணீர் விட்டவன், மயக்கத்தில் இருந்த மிருதுளாவையே ஆழமாக பார்த்தான்.
"ஐம் சாரி டி. என்ன மன்னிச்சுடு. இது என்னோட சுயநலம் தான். நா பண்றது தப்புன்னு தெரிஞ்சே தான் நான் செய்யுறேன். ஆனா, நீ இல்லாம என்னால முடியாது. எனக்கு வேற வழி தெரியல, நீ எனக்கு வேணும், ஐம் சாரி டி" என்றவன், குளிரில் நடுங்கிய அவளின் இதழில் தன் இதழை இணைத்து, அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அத்தனை இறுக்கம், எங்கு அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தில் அவளை அப்படியே தன்னுள் புதைத்துக் கொள்ளும் எண்ணத்தில் தன்னோடு சேர்த்து இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டான்.
மறுநாள் நாள் காலையில் சூரியன் வழக்கம் போல தன் நடை பயணத்தை தொடங்கிய பொழுது மிருதுளா மெதுவாக கண்விழித்தாள். முதலில் எதுவும் புரியாமல் குழம்பியவளுக்கு நேற்றைய நிகழ்வு நினைவு வந்ததும், உடனே ஷரவனை தேட, அவன் அங்கு இல்லை. மெதுவாக அந்த அறையை விட்டு வெளிவந்தவள் தடுமாறி விழப்போக, அவளை தாங்கிப் பிடித்தார் அந்த வீட்டில் வேலை செய்யும் கமலா.
மிருதுளாவை அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்தவர். அவள் நெற்றியில் கை வைக்க மிருதுளா உடல் நெருப்பாய் கொதித்தது.
"ஐயோ என்னம்மா இது? உடம்பு இப்புடி நெருப்பா கொதிக்குது. சூடா உனக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரட்டும் மா" என்று வாஞ்சையோடு கேட்க,
"நீங்க, நீங்க யாரும்மா?" என்றாள் மிருதுளா.
நானும் என் வீட்டுக்காரரும் இங்க தான் மா வேல பாக்குறோம். காலையில ஷரவன் தம்பி நீ எந்திரிச்சதும் உனக்கு டிபன் கொடுத்து, உன்னை உன் வீட்டில கொண்டு விட சொல்லுச்சு. நேத்து உன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி நீ அந்த தம்பி கூட வேலை விஷயமா வெளிய வந்திருக்க. நைட்டு நீ வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிடுச்சாம்" என்றவர், "இரு மா நா உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன்" என்றவரை தடுத்த மிருதுளா, "இல்லமா எனக்கு ஒன்னும் வேணாம். ப்ளீஸ் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லுங்களேன்" என்றாள்.
அப்போதும் தன் வீட்டிற்கு போக விருப்பமின்றி கமலாவின் கணவர் வேலுவிடம் தன்யா வீட்டின் அட்ரஸ் கொடுத்து அங்க போக சொன்னாள். அமைதியாக கார் பின் சீட்டில் அப்படியே படுத்து விட்டாள். காய்ச்சலின் கடுமை, மனதின் வலியோடு, கையின் காயத்தின் வலியும் சேர்ந்து அவளை எதையும் யோசிக்க விடாமல் முடங்கிப் போட்டது.
தனு வீட்டிற்குள் நுழைந்த மிருதுளா மயங்கி விழ செல்வகுமாரும், தனுவும் உடனே அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய அங்கே டாக்டர். லட்சுமியை பார்த்த பின் தான் தனுவிற்கு மனதில் நிம்மதி வந்தது.
லட்சுமி ஒரு வாரம் முன்பு தான் அந்த ஹாஸ்பிடலில் டாக்டராக பணியில் சேர்ந்திருந்தார். மிருதுளாவை பார்த்த லட்சுமி அவள் ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட, முதல் நாள் கவிதா ஹாஸ்பிடல் வந்தவர், அதன் பிறகு மிருதுவை பார்க்க வரவில்லை. ஒரு வாரம் கழித்து ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன, மிருதுளாவை செல்வம் அவள் வீட்டிற்கு அழைத்துச் சொல்ல, அங்கு அவளுக்காக காத்திருந்து ஒரு அதிர்ச்சி தகவல்.
மிருதுளா வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி கீழே விழுந்து கிடந்தாள். செல்வம் அவளை பார்த்து பதறியவர், "என்ன மா கவிதா இது? பாவம் அவளே இப்பதான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கா... அவளை போய் அடிக்கிறியே?" என்று தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மிருதுளாவை கை பிடித்து மெதுவாக தூக்கியவர், கவிதாவை முறைந்தார்.
அதை அலட்சியம் செய்த கவிதா மிருதுளாவை இழுத்து தன் முன் நிறுத்தியவள், "ஏன்டி, அந்த ஷரவன் தம்பி கிட்ட என்னடி சொன்ன?" என்று கேட்டவர் மறுபடியும் அவளை அறைய மிருதுளாவுக்கு ஒன்னும் புரியவில்லை.
செல்வத்திற்கு விஷயம் புரிந்ததால் அவர் எதுவும் பேசவில்லை. மிருதுளா முடிவு அவருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், இனி நம் கையில் எதுவும் இல்லை என்று அமைதியாகி விட்டார்.
மிருதுளா அமைதியாக இருப்பதை பார்த்து இன்னும் கோபம் கொண்ட கவிதா, "ஏன்டி நான் கேட்டுட்டே இருக்கேன். நீ கல்லு மாதிரி நிக்கிற? மரியாதையா சொல்லுடி. அந்த ஷரவன் கிட்ட என்ன சொன்ன? ஏதோ பணக்கார வீட்டு பையன் நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அஜய், அனிதா வாழ்க்கை நல்லா இருக்கும். அவங்களுக்கும் பெரிய இடமா பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு நெனச்சிட்டு இருந்தேன், இப்படி என் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டுட்டியேடி, சொல்லுடி நீ அந்த பையன் கிட்ட என்ன சொன்ன... ஏன் அந்த பையன் இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னான்" என்று கவிதா கத்திக் கொண்டே இருக்க, மூர்த்தி அருகில் அமைதியாக நின்றார்.
மிருதுளாவுக்கு முதலில் கவிதா சொன்னது புரியாமல் முழித்தவள், ஷரவன் கல்யாணத்தை நிறுத்தி விட்டான் என்று கேட்டதுமே, அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. அதன் பிறகு கவிதா பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை, கால்கள் தள்ளாட அப்படியே ரூமிற்குள் சென்றவள் கதவை அடைத்துவிட்டு கால் மடக்கி கீழே உட்கார்ந்து கதறி அழ ஆரம்பிக்க, அவள் ஏன் அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் ஏதோ உடைந்து சிதறிய வலி, வேதனை. அவள் மனம் இப்போது எப்படி உணர்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. அவள் நினைத்தது தான் நடந்திருந்தது. அவள் கேட்டதை தான் ஷரவன் செய்திருந்தான்.
ஆனால், அதற்கான சந்தோஷம் அவள் முகத்தில் துளியும் இல்லை. கண்களில் கண்ணீர் தான் நிற்காமல் வந்தது.
மிருதுளா ஹாஸ்பிடலில் இருந்த இந்த ஒரு வாரத்தில் பலரின் வாழ்க்கை சீட்டுக்கட்டில் கட்டிய வீடு, காற்றில் கலைந்து விழுவது போல் நிலை குலைந்திருந்தது.