காதல் 16
காதல் 16
அன்று ஃபார்ம் ஹவுஸில் மிருதுளாவை விட்டு வந்த ஷரவன் காரை எடுத்துக்கொண்டு இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தான். மிருதுளாவின்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஷரவன் இதயத்தை குத்தி கிழித்தது. அவளை அடித்த அவன் கைக்கு கார் ஸ்டியரிங்கில் குத்தி தண்டனை கொடுத்தான்.
"வேரில் தீ பிடித்து என் கிளைகள் வெம்பி எரிகிறதே!
"இதயம் இடி விழுந்து கண்ணீர் மழையாய் பொழிகிறதே!
"உன் வாசம் நாசி தொட்ட என் உள்ளம் எரிந்து கருகியதே...
"ஏன்? ஏன் மித்து இப்படி பண்ண?" என்று புலம்பியவன், தன் கையாலாகாத தனத்தை எண்ணி அவன் அவனையே வெறுத்தான். ஒரு நாள் முழுவதும் எங்கு செல்கிறோம் என்று தெரியாமலே சுத்தி திரிந்தான். ஒரு முடிவோடு மிருதுளா வீட்டிற்கு சென்றான்.
"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, இனி இந்த கல்யாணம் நடக்காது" என்று கவிதா, மூர்த்தியிடம் சொல்லி விட்டு கொஞ்ச தூரம் நகர்ந்தவன், பின் திரும்பி அவர்கள் இருவரையும் அற்பமாக பார்த்தான்.
"அவ என்னோட அன்பை புரிஞ்சுக்க முடியாம போனதுக்கு நீங்க, நீங்க மட்டும் தான் காரணம்" என்று கவிதா, மூர்த்தியையும் கேவலமான பார்வை பார்த்தவன், மேலும் ஒரு வார்த்தை கூட பேசாது அங்கிருந்து கிளம்பி விட்டான்.
நேராக தன் வீட்டிற்கு செல்ல அங்க ஷரவனை ஒரு நாள் முழுவதும் காணவில்லை என்று ஷரவனின் அப்பா, அம்மா பதறி கொண்டிருக்க, நிலவன் அவர்களை சமாதானப்படுத்தி கொண்டிருந்தான். ஷரவன் வேகமாக வீட்டுக்குள் வந்தவன், "எனக்கு மித்துவை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல, இந்த கல்யாணத்தை நிறுத்துங்க" என்றவன் குரல் கடுமையாக ஒலித்தது.
"டேய் என்னடா சொல்ற நீ? என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா" என்ற தன் தந்தைக்கு போதும் என்பது போல் கைகாட்டிய ஷரவன், "நான் உயிரோட இருக்கணும்னு நீங்க ஆசபட்டா இதுக்கு மேல் இத பத்தி எதுவும் பேசாதீங்க" என்றவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
ஷரவன் பேசியதை கேட்ட நிலவனுக்கு குழப்பத்தில் மண்டையே வெடித்து விடும் போல் ஆகிவிட்டது.
"டேய் நிலவா என்னடா இது? திடீர்னு கல்யாணத்த நிறுத்த சொல்லிட்டு போறான். இவனுக்கு என்ன இதெல்லாம் சின்ன புள்ளைங்க விளையாட்ட போச்ச என்ன?" என்றவர் தன் மகனை நினைத்து வேதனை கொள்ள, ஷரவனின் அம்மா கயல்விழி நிலவனை சென்று ஷரவனிடம் பேச சொல்ல நிலவன் ஷரவனின் அறைக்குள் நுழைந்தான்.
ஷரவன் கட்டிலில் உட்கார்ந்து கைகளால் முகத்தை மூடிக் கொண்டிருக்க, அவன் கீழே போட்டு உடைத்து இருந்த பொருட்கள் அங்கங்கு சிதறி கிடந்தது. அந்த பொருட்களே ஷரவனின் கோபத்தின் அளவு நிலவனுக்கு தெளிவாக புரிய வைத்தது.
மெதுவாக அவன் அருகே சென்றவன், "ஏன்டா? என்னச்சு" என்று கேட்டது தான் தாமதம் நிலவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு அவன் வயிற்றில் முகம் புதைத்து கதறி அழ ஆரம்பித்து விட, நிலவன் ஒரு நிமிடம் பதறிவிட்டான்.
இன்று வரை கம்பீரமாக பார்த்த ஷரவனை, இன்று மொத்தமாய் உடைந்து சின்ன பிள்ளை போல் தன்னைக் கட்டிக்கொண்டு அழுபவனை பார்த்து நிலவன் இதயமே வலித்தது.
"டேய் என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி இருக்க, எதுக்கு இப்படி அழுகுற? ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்னே" என்று பதட்டமாக கேட்க,
"அவளுக்கு ஏன்டா என்னை பிடிக்காம போச்சு? கடைசி வர அவ என்னை புரிஞ்சுக்கவே இல்லையே டா" என்று கதற. நிலவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ஷரவனின் இந்த நிலைக்கு காரணம் மிருதுளா தான் என்று.
"டேய் நடந்ததை சொல்லுடா, என்னாச்சு, மிருதுளா எதுவும் சொன்னாளா?" என்று ஷரவனை உலுக்க, ஷரவன் நேற்று மிருதுளா அவனை வந்து பார்த்தது முதல் அனைத்தையும் சொன்னவன் , "ஏன்டா அவளுக்கு என்ன புடிக்கல" என்று மீண்டும் மீண்டும் அழுதவன், அவள் சொன்னதை நினைத்து மறுகினான்.
"டேய் நீ கவலை படாத நான் அவகிட்ட பேசுறேன். அவ ஏதோ குழப்பத்துல அப்படி சொல்லி இருப்பா, நீ விடு நான் பாத்துக்குறேன்" என்றவனை நிறுத்திய ஷரவன்,
"இல்லடா, இதை இத்தோட விட்டுடு, இனி இது விஷயமா யாரும் அவகிட்ட எதுவும் பேச வேண்டாம். நேத்து நான் கூட என்ன ஆனாலும் பரவாயில்லை, அவளை என் கூட வச்சுக்க, என்ன வேணும்னாலும் செய்யலாம்னு தான் நெனச்சேன். ஆனா, அவ குழந்தை முகத்தை பார்த்ததும் மனசு மாறிடுச்சு. எப்போ அவ சாகுற அளவுக்கு போனாளோ? அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு, இனி அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி ஒரு வேலை அவ சொன்னா மாதிரி ஏதாவது செஞ்சுகிட்டா, அப்புறம் நானும் உயிரோட இருக்க மாட்டேன். அவ என் கூட இல்லனாலும் பரவாயில்லை, அவ உயிரோட இருந்தா எனக்கு போதும். அவ நல்லா இருக்கணும்டா" என்றவன் வார்த்தைகள் வலியோடு வர, அவன் நிலையை பார்த்த நிலவனுக்கு ஒரு நிமிடம் மிருதுளா தன் பிரியமான தங்கை என்பது மறந்து அவள் மேல் கடும் வெறுப்பு வந்தது.
மறுநாள் காலை மிருதுளா ஹாஸ்பிடலில் இருப்பது தெரியாமல், வேலு மிருதுளாவை, தனு வீட்டில் விட்டு வந்ததாக சொல்லவும், மிருதுளாவை பார்க்க தனு வீட்டிற்கு நிலவன் வர, வீட்டில் யாரும் இல்லை. தனு மட்டும் மிருதுளாவை பார்க்க ஹாஸ்பிடல் கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென நிலவனை அங்கு பார்த்தவளுக்கு அவன் முகமே சொன்னது ஷரவன், மிருதுளா விஷயம் அவனுக்கு தெரிந்து விட்டது என்று. காலையிலேயே கவிதா, செல்வத்திற்கு ஃபோன் செய்து ஷரவன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டதை சொல்லி ஒரு கலவரத்தையே நடத்தி இருந்தாள்.
"நிலா நீ… நீங்க என்ன இங்க? என்ன விஷயம்?" என்று பதட்டத்தை மறைத்துக் கொண்டு கேட்க,
அவளை கூர்மையான பார்வை பார்த்தவன், "நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு தெரியாதா தன்யா?" என்று அவன் நேரடியாக கேட்க, எப்போதும் வால்டியூப் என்று அழைப்பவன், இன்று தன்யா என்று அவள் பேரை சொல்லி கூப்பிட்ட விதமே சொல்லியது, அவன் கோபத்தின் அளவை, அவள் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள மேலும் நிலவன்.
"உன்னை தான்டி கேக்குறேன்? பதில் சொல்லு?? நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு தெரியுமா, தெரியாதா?" என்று அழுத்தமாக கேட்க, தனு தெரியும் என்று தலையாட்டினாள்.
"கவிதா ஆண்ட்டி காலையிலேயே ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க. நீங்க மிருதுவை தானே பார்க்க வந்தீங்க? மிருது இங்க இல்ல, அவளுக்கு உடம்பு சரியில்லை, கையில் காயம் கொஞ்சம் ஆழமா இருக்குன்னு, ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லிட்டாங்க" என்று நிலவன் கேட்ட கேள்வியுடன், அவன் கேட்க போகும் கேள்விக்கும் சேர்த்து பதில் தந்தாள் தன்யா.
"அங்க ஒருத்தன் மனச ஒடச்சிட்டு அவ நிம்மதியா ஹாஸ்பிடல படுத்திருக்காளா? அப்படியே ஒரேயாடிய போய்ட சொல்லு. எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு அவ மட்டும்உயிரோட இருந்து என்ன கிழிக்க போற?" என்று கத்தியவனுக்கு அப்போது தெரியவில்லை அவனின் அந்த கோபம் அவன் காதலை அவனிடம் இருந்து பறிக்கப் போகிறது என்று .
ஷரவன் மேல் உள்ள பாசம் அவன் கண்ணை மறைக்க என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை நெருப்பாய் கொட்ட, மிருதுளாவை பற்றி பேசியதும் தனுவிற்கு கோபம் வந்துவிட்டது.
"நிறுத்துங்க நிலா? என்ன பேசுறிங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்கள? அங்க ஒருத்தி அடிப்பட்டு படுத்துட்டு இருக்கா?அத எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை கேட்காம, என்ன வார்த்தை பேசுறீங்க. உங்களுக்கு அறிவு கெட்டு போச்சு என்ன?" என்று அவளும் பதிலுக்கு கத்தினாள்.
நிலவன் அவள் தலைமுடியை கொத்தாக பிடித்து தன் முக அருகே கொண்டு வந்தவன், "யாருக்கு டி அறிவு கெட்டு போச்சு? எனக்கா… எனக்காடி அறிவு கெட்டு போச்சு, இல்லடி இல்ல… உன் அருமை ப்ரண்ட்டு அந்த பைத்தியத்துக்கு தான்டி புத்தி கெட்டுப் போச்சு. இல்லன்ன ஷரவனை போய் வேணாம்னு சொல்லுவாளா?" என்று அவன் பிடியை போலும் இறுக்க. தனுவுக்கு தலை வலித்தது, இருந்தும் சற்றும் சளைக்காமல்,
"இப்ப அவ என்ன அவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டா? ஷரவனண்ணாவ காதலிக்குறேனு சொல்லி நம்ப வச்சு ஏமாத்துனாளா என்ன? ஆரம்பத்தில் இருந்தே அவ ஷரவனண்ணா கிட்ட இருந்து தள்ளி தானே இருந்தா? அவர் மேல அவளுக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல. இன்னும் சொல்லப் போனா அவளுக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க இஷ்டமே இல்ல, நம்ம தான் அவளை வற்புறுத்தி சம்மதிக்க வச்சோம். மறந்துட்டீங்களா?" என்று மிருதுளாவின் தோழியாக தன்யா நிலவனிடம் சண்டையிட்டாள்.
"ஆமாடி... அவளை கட்டாயப்படுத்தி தான் நம்ம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சோம். நா இல்லன்னு சொல்லல. ஆனா, நம்ம ஒன்னு அவளுக்கு கெட்டது நினைக்கலயே! ஷரவனை கட்டிக்கிட்ட அவ சந்தோஷமா இருப்பானு தான அப்படி செஞ்சோம். ஷரவன் மாதிரி ஒருத்தன் கிடைக்க அவ புண்ணியம் பண்ணி இருக்கணும்டி. அவனை போய் வேணாம்னு சொல்லிட்டாளே" என்று அவன் கொதிக்க,
"புரியாம பேசாதீங்க? இது அவ வாழ்க்கை. அவளுக்கு என்ன வேணும்னு அவதான் முடிவு பண்ணும். ஷரவன் அண்ணா அவளை நல்ல பார்த்து பாரு அது சரிதான். ஆனா, அது மிருதுவுக்கு புடிக்கலைன்னு போது என்ன பண்ண முடியும். அவ மனசுல என்ன இருக்கே யாருக்கு தெரியும்?"
"ஆமா அவளுக்கு நல்லது எல்லாம் பிடிக்காது. ஏன் அந்த அம்மாவுக்கு ஷரவனா விட இன்னும் பெரிய பணக்காரன் வேணும்மா?" என்று கோபத்தில் வார்த்தையை விட. பொறுமையின் எல்லை தாண்டிய தனு, "அட ச்சீ வாய மூடு" என்று கத்தியவள் கண்கள் கோவத்தில் நெருப்பாக சிவந்திருந்தது.
"நீ எல்லாம் என்ன ஜென்மம்டா? நேத்துவரை அமுல்பேபி, தங்கச்சின்னு அவளை கொஞ்சிட்டு, இன்னைக்கு அதே வாயில அவள என்ன வார்த்தை சொல்லிட்ட நீ. ச்சே உன்ன சொல்லி குத்தமில்ல ஷரவன் ப்ரண்ட்டு தான நீ. மிருதுவுக்கு புடிக்கலன்னு தெரிஞ்சும், கட்டாயப்படுத்தி அவளை கல்யாணம் பண்ண நெனச்சவன் ப்ரண்ட்டு தானே நீ? இப்படி தான் பேசுவ. இப்படி தான் யோச்சிப்ப, நீ எல்லாம் ஒரு ஆளுன்னு உன் போய் நான், ச்சே... என்னை நெனச்சு எனக்கே அசிங்கமா இருக்கு" என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
"ஆமாடி நான் ஷரவன் ப்ரண்ட்டு அவனை மாதிரி இருப்பேன். நீ மட்டும் என்? மிருதுளா ப்ரண்டு தானே… கல்யாணம் நிச்சயமான பிறகும் கூட எதை பத்தியும் கவல படாம அவ ஈசியா ஷரவனை தூக்கி போட்டுட்டா.. நீ இன்னும் என்னை லவ் பண்றேன்னு ஒரு வார்த்தை கூட சொன்னது இல்ல. நாளைக்கே என்னை விட பெட்டரா ஒருத்தன் வந்தால் நீ ஈசியா என்ன தூக்கி போட்டு அவன் கூட போய்டுவ இல்ல" என்று சொல்லி முடித்த அடுத்த நிமிடம் அவன் கன்னத்தில் தனுவின் ஐந்து விரலும் பதிந்திருந்தது.
கண்கள் சிவக்க கோபத்தில் மொத்த உடலும் விறைத்து கல்லாய் நின்றவளை பார்த்து நிலவனுக்கு உள்ளே மொத்தமும் ஆடிவிட்டது. அவளின் கோபத்தை கண்ட பிறகு தான் அவனுக்கு அவன் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது. கோபத்தில் எவ்வளவு பெரிய வார்த்தையை விட்டு விட்டோம்" என்று புரிந்தது. அவனால் தனுவை எதிர்கொள்ள முடியவில்லை.
"தன்யா" என்று அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க நிறுத்து என்பது போல் கைகாட்டியவள், "ரொம்ப நன்றி மிஸ்டர். நிலவன். கண்மூடித்தனமா உங்களை காதலிச்சிட்டு இருந்த எனக்கு, உங்க உண்மையான முகத்தை காட்டி. நீங்க யாருன்னு புரிய வச்சு என் எதிர்காலத்தை காப்பாத்திட்டீங்க. நீங்க கத்து கொடுத்த இந்த லெசனுக்கு ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர். நிலவன். இந்த நிமிஷத்தில் இருந்து உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. என் மனசுல இருந்து உங்களை சுத்தமா அழிச்சுட்டேன். இனி என் லைஃப்ல உங்களுக்கு எந்த இடமும் இல்ல. ப்ளீஸ் கெட் அவுட்" என்று கையெடுத்து கும்பிட்டவள் வாசல் நோக்கி கைகாட்டினாள்.
அதற்கு மேல் அங்கு நிற்க நிலவன் தன்மானம் இடம் தராமல் அங்கிருந்து கிளம்பினான். அவள் வாயில் இருந்து அவன் கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகள்… அவள் அவனை விரும்புகிறாள் என்ற வார்த்தைகள். ஆனால், அதை இந்த மாதிரியான சூழலில் அதுவும் இருவரும் பிரியும் போது கேட்பான் என்று அவன் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டான்.
நாட்கள் ஆமை வேகத்தில் நகர, கவிதாவின் ஆட்டம் அதிகமானது. வசதியான வரன் கிடைத்ததும், அதை வைத்து வசதியான வாழ்க்கை, அஜய், அனிதா படிப்பு, கல்யாணம் என்று பல திட்டம் போட்டிருந்த கவிதாவின் எண்ணத்தில் ஒரு டன் மண் விழ, எந்த நேரமும் மிருதுளாவை திட்டிக்கொண்டே இருந்தவர், பணத்திற்காக வசதியான 45 வயது ஆளுக்கு மிருதுளாவை இரண்டாவதாக கல்யாணம் செய்து வைக்கப் பார்க்க மிருதுளாவுக்கு அதுவரை அவர்கள் மேல் நெஞ்சில் ஒட்டி இருந்த கொஞ்ச நஞ்ச பந்தபாசம் அத்துபோனது. மூடிய அறைக்குள் வெகுநேரம் யோசித்தவள், ஒரு முடிவுக்கு வெளியே வந்தாள்.
ஒரு வாரம் அடிக்கடி எங்கோ வெளியே சென்று வந்தவள், ஒரு நாள் கவிதாவிடம் ஒரு செக்கை நீட்ட, அதில் ஐந்து லட்சம் என்று போட்டிருந்தது.
"எனக்கு வேலை கிடைச்சிருச்சு. ஒரு வருட காண்ட்ராக்ட். அங்கேயே தங்கி வேலை பார்க்கணும். நடுவுல விட்டு வர முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல கிளம்பிடுவேன்" என்று வறண்ட குரலில் சொன்னவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
ரெண்டு மாதம் வெகு சீக்கிரம் ஓடிவிட மிருதுளா தனுவிடமும், தனு அப்பா, அம்மாவிடமும் சொல்லிவிட்டு தன் புது வேலையை நோக்கி சென்றாள்.
நிலவனை பிரிந்த பின், மிருதுளாவும் அருகில் இல்லாமல் போக தனு கொஞ்ச நாள் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தாள்.
ஷரவனின் ஆபீஸ் வேலையை விட்டுவிட்டு தன் தாய், தந்தைக்காக தன்னை மாற்றி கொண்டு வேறு வேலை தேடிக் கொண்டாள். இடையில் மிருதுளா ஃபோன் பண்ணி தனுவிடம் பேசினாள். ஆனால், அவள் எங்கிருக்கிறாள் என்பதை மட்டும் எவ்வளவு கேட்டும் அவள் யாருக்கும் சொல்லவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தனுவுடன் பேச நிலவன் பலமுறை முயன்றும் அவள் பேசவில்லை.
அதில் நிலவனுக்கும் கோபம் வர அவனும் அவளை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டான். பேசினால் முடியும் பிரச்சனையை இருவரும் பேசாமல் இருந்து பெரிதாக்கினார்.
கண்மூடி திறப்பதற்குள் ஒரு வருடம் ஓடி விட, முழுதாய் ஒரு வருடம் கழித்து பார்த்த மிருதுளாவை தனு இறுக்கி கட்டிக் கொண்டாள். மிருதுளா தனக்கு பெங்களூரில் வேலை கிடைத்து இருக்கிறது. மூனு மாசம் அங்கே ட்ரைனிங் அதற்கு பின் யூ.எஸ்ஸில் வேலை என்க. தனுவும் தனக்கு ஒரு மாற்றம் தேவை என்று நினைத்தவள், மிருதுளாவுடன் யூ.எஸ் சென்றுவிட்டாள்.