காதல் 14

 



காதல் 14


ஷரவன் ஆசைப்படி எல்லாம் நடந்தது. இன்று ஷரவன் அவன் அன்பு மித்துவின் பிஞ்சு விரல்களில் S என்று வைரத்தால் பொறிக்கப்பட்ட அழகிய மோதிரத்தை அவளுக்கு போட்டு, அவள் கையால் M என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தை தன் விரலில் அணிந்து அவளை தன் வாழ்வோடு முழுவதும் இணைக்க போகும் நாளுக்கான பிள்ளையார் சுழியை போட்டான். 


மிருதுளா கொஞ்ச நாள் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஷரவன் மிருதுவையும், தனுவையும் தான் ஆஃபீஸிலேயே வேலைக்கு வைத்துக் கொண்டான். கூடவே நிலவனையும் தான் பிஸ்னஸ் பார்ட்னராய் சேர்த்துக்கொள்ள, நிலவன், தனு காதலும் நன்கு வளர்ந்தது யாருக்கும் தெரியாமல், இன்று வரை இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், இருவரும் ஒருவர் மனதை ஒருவர் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.


மிருதுளாவும், தனுவும் ஷரவனிடம் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதம் ஓடிவிட்டது.


மிருதுளா ஒரு வழியாக ஷரவனோடு வாழப்போகும் வாழ்க்கைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள முயன்றாள், அவன் நல்லவன் என்று அவள் மனம் சொன்னாலும் அடிக்கடி அர்ச்சனாவின் வார்த்தைகள் நினைவு வந்து அவளை வாட்டியது. தனு, நிலவன், சிந்து என அனைவரும் அவள் மனதை கரைக்க முயன்று ஒருவழியாக அதில் வெற்றியும் கண்டனர், மிருதுளா முழுமனதுடன் கல்யாணத்திற்கு சம்மதித்தாள்.


இன்னும் ரெண்டு மாதத்தில் கல்யாணம் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகள் நல்ல படி நடக்க, நாட்கள் அதன் போக்கில் நல்லபடியாக செல்ல ஷரவன் தன் மனம் கவர்ந்தவளை மனைவியாக அடையும் நாளை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்க, அவன் வாழ்க்கையில் இருந்து மிருதுளாவை ஒரே அடியாக பிரிக்கப்போகும் அந்த நாளும் வந்தது. 


அன்று முக்கியமான மீட்டிங் இருக்க, ஷரவன் தனக்கு அதைவிட முக்கியமான வேலை இருப்பதால் நிலவனை அந்த மீட்டிங்கை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவசரமாக சென்றுவிட்டான்.


  மிருதுளா அன்று மாலை சீக்கிரமாக கிளம்பியவள், அவள் அப்பா மூர்த்தியின் மெடிக்கல் ரிப்போர்ட் வாங்க அருகில் இருந்த ஹாஸ்பிடல் வந்தவள், அங்கு ஷரவனையும், அவர்கள் ஆஃபீஸின் HR ரஷ்மியையும் பார்த்தாள்.


 'இவங்க எங்க இங்க? ஷரவன் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்றாரு? அதுவும் ரஷ்மி கூட' என்று நினைத்தவள், அவர்கள் இருந்த இடத்திற்கு போக, அதற்குள் ஷரவன் ராஷ்மியை அழைத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் சென்று விட்டான். 


மிருதுளாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இவன் எதுக்கு ரஷ்மி கூட இங்க வந்திருக்கான் என்று யோசித்தவள் காதில் அங்கு பேசிக் கொண்டிருந்த பெண்களின் பேச்சுக் குரல் கேட்டது. அதில் ஷரவனின் பெயர் வரவும், அது என்ன என்று மிருதுளா கவனிக்க. அவர்கள் பேசியதை கேட்ட மிருதுளா மொத்தமும் உடைந்து விட்டாள். ஷரவன் மீதான அவள் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து சிதறியது. உலகமே இருண்டது போல் தோன்ற எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. வீட்டுக்கு வந்தவள் தன் அறைக்கு சென்று கதவை மூடிவிட்டு அப்படியே மண்டியிட்டு அமர்ந்து முகத்தை மூடி கதறி அழ ஆரம்பித்தாள்.


 "ஏன் கடவுளே? ஏன் என்னை இப்படி சோதிக்கிறிங்க... நா அப்படி என்ன தப்பு செஞ்சேன். பெத்தவங்க அன்பு தான் இல்லாம போச்சு. இப்ப கல்யாணமும் பொய்யா போச்சே... நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு இப்படி ஒரு தண்டனை. எனக்கு ஷரவன் மேல காதல் இல்லாட்டியும்  அவர் என்ன உண்மைய விரும்புறாரு. அவரை கல்யாணம் பண்ணிக்கோன்னு எல்லாரும் சொன்னத நம்பி தானே, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா, இப்ப எல்லாம் பொய்யின்னு ஆகிடுச்சே! இப்ப நான் நடந்ததை சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க. எனக்கு ஷரவனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லாம நான் பொய் சொல்றேன்னு தான் நினைப்பாங்க, நான் என்ன செய்யறது? ஏன் எனக்கு மட்டும் எல்லா உறவும் பொய்யா போச்சு" என்று கதறி அழுதாள், சற்றுமுன் தான் கேட்டதை நினைத்து பார்த்தாள்.


ஷரவன் ரஷ்மியை அழைத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் செல்ல, இங்கு வெளியே ரெண்டு நர்ஸ் பேசிக்கொண்டு இருந்தது மிருதுளா காதில் விழுந்தது. 


"ஏய் நம்ம டாக்டரை பாக்க வந்திருக்கிறது யாருன்னு தெரியுமா?" என்று ஒருத்தி கேட்க,


"ஏன் தெரியாம, இந்த ஊர்லயே பெரிய பிசினஸ்மேன் பிரதாப் சார் பையன் ஷரவன் தானே… நல்லா தெரியும். ஆமா... அவ்வளவு பெரிய ஆள் எதுக்கு  இந்த மாதிரி சின்ன ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கான். கூடவே ஒரு பொண்ணு வேற?" என்று அடுத்தவள் கேட்க,


"ஆமா இவன் பண்ண வேலைக்கு பெரிய ஹாஸ்பிடல் போன நியூஸ் டிவி, பேப்பர்னு நாறிடும் இல்ல. அதான் இங்க வந்திருப்பான். அதோட நம்ம டாக்டர் அவனுக்கு ப்ரண்ட்டு வேறயாம் அதான்.''


"ஏன்டி என்ன ஆச்சு? அவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க?" என்று அடுத்தவள் கேட்டாள். 


"அந்த ஷரவனுக்கும் இந்த பொண்ணுக்கும் ஏதோ இருக்கும் போல! அந்த பொண்ணு இப்ப கர்ப்பமா இருக்குடி. குழந்தையை கலைக்க தான் இங்க கூட்டி வந்திருக்கான். இந்த லட்சனத்தில் இன்னும் கொஞ்ச நாள்ல அந்த ஷரவனுக்கு வேற பொண்ணு கூட கல்யாணமாம் கருமம். பாவம் அவனுக்கு பாத்திருக்க பொண்ணு. இதெல்லாம் தெரிஞ்ச என்ன ஆகுமோ?" என்று மிருதுளா காதில் விழும்படி சொல்லிவிட்டு செல்ல, ஏற்கனவே ஆஃபீஸில் சிலர் ஷரவன், ரஷ்மி இணைந்து பேசுவது உண்டு. ஆனால், ஷரவன் எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவான் என்று மிருதுளாவுக்கு தெரியும் என்பதால் அவள் இந்த பேச்சுகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று அவள் தான் கண்ணால் பார்த்து காதால் கேட்டதும் அவளை மொத்தமாக செயலிழக்க செய்து விட்டது. முழுவதும் யோசிக்கும் சக்தியை இழந்து விட்டிருந்தாள் மிருதுளா. தான் கேட்டது உண்மையா, பொய்யா என்று ஆராய கூட அவள் விரும்பவில்லை. ஒருவேளை அவள் காதில் கேட்டது உண்மையா என்று தெரிந்து கொள்ள முயன்றிருந்தால் இதெல்லாம் அர்ச்சனாவின் சூழ்ச்சி என்று அவளுக்கு தெரிந்திருக்குமோ என்னமோ... விதி யாரை விட்டது.


மனமுடைந்த மிருதுளா உணர்வு மொத்தமும் இறுகிய நிலையில் அங்கிருந்து சென்று விட்டிருந்தாள்‌.


இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனா அந்த நர்ஸ்களுக்கு பேசிய பணத்தை கொடுத்து விட்டு இனி ஷரவன் வாழ்க்கையில் மிருதுளா இருக்க மாட்டாள் என்ற ஆனந்தத்தில் வெற்றி புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள்.


ஷரவன், மிருதுளா கல்யாண செய்தி கேள்விப்பட்ட அர்ச்சனா கொதித்து போக... அவர்களின் கல்யாணத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டவள், ஷரவன் ஆபீஸில் இருந்த ஒருவனை பணம் கொடுத்து தான் பக்கம் இழுத்து அவன் மூலம் ஷரவன், மிருதுளா நடவடிக்கையை  தெரிந்து கொண்டாள். மிருதுளாவுக்கும்  ஷரவனுக்கும் இடையே இருந்த சின்ன இடைவெளியை பயன்படுத்த நினைத்து கண்காணிக்க இன்று ஷரவன், ரஷ்மியை அழைத்துக்கொண்டு  ஹாஸ்பிடல் சென்றதை சரியாக பயன்படுத்தி மிருதுளாவின் மனதை கலைத்து, தன் திட்டத்தில் வெற்றியும் கண்டாள். 


தனக்கு கிடைக்காத ஷரவன், தன்னை அவமானப்படுத்திய ஷரவன் காதலை கெடுக்க நினைத்தவள், அதை சரியாக செய்து விட்டாள். இது எதுவும் தெரியாத மிருதுளா ஒரு முடிவோடு ஷரவனை பார்க்க சென்றாள்.


மிருதுளா ஷரவனுக்கு ஃபோன் செய்ய அது சுவிட்ச் ஆஃப் என்று வர, நிலவனுக்கு ஃபோன் செய்தவளுக்கு, ஷரவன் ஃபார்ம் ஹவுஸில் இருப்பது தெரிந்த மிருதுளா ஷரவனை பார்க்க அங்கு சென்றாள்.


ஷரவனுக்கு அவன் ஃபார்ம் ஹவுஸ் ரொம்ப ஸ்பெஷல். மனது உற்சாகமாக இருக்கும் போதும் சரி, கஷ்டமாக இருக்கும் போதும் சரி அங்கு தான் இருப்பான். இன்னும் கொஞ்ச நாளில் தன் மனதிற்கினியவளுடன் தன் மண வாழ்க்கை இங்கு தான் தொடங்க வேண்டும் என்று அதற்கான எல்லாம் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான் ஷரவன்.


 நீச்சல் குளத்தில் காலை விட்டு ஆட்டிய படி மிருதுளா பார்த்தது முதல் அவர்கள் நிச்சயதார்த்தம் வரை நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைத்தவன் அந்த நினைவுகளில் ஆனந்தமாக மூழ்கியிருக்க, ஏதோ காலடி சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் விழியில் விழுந்தாள் அவன் நினைவுகளின் நாயகி.


"ஏய் மித்து... இந்த நேரத்துல நீ இங்க என்னடா பண்ற?" என்று கேட்டுக்கொண்டு அவள் அருகில் வர. அவன் தள்ளாடிய நடையும் குழைந்து வந்த குரலுமே சொல்லியது அவன் குடித்திருக்கிறான் என்று.


முதலில் மிருதுளா இந்த நேரம் நம்ம வந்த விஷயத்தை பேச வேண்டும் என்று நினைத்தவள், பின் இந்த பிரச்சனை இன்றோடு முடிக்க வேண்டும் என்று நினைத்து ஷரவன் அருகில் சென்றாள். 


"நீங்க என்ன உண்மையாவே விரும்புறீங்களா?" என்று அவன் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராக கேட்க, ஷரவன் சற்று ஆடித்தான் போனான். 


இன்று வரை தன்னை நிமிர்ந்து பார்த்து பேசாதவள், இன்று கண்ணைப் பார்த்து நேருக்கு நேர் பேசுவது ஷரவனுக்கே ஆச்சரியம் தான். அவள் கேட்ட கேள்வி, அதை கேட்ட விதம், அதோடு மிருதுளாவின் கலங்கிய கண்களே சொன்னது ஏதோ பிரச்சனை என்று.


"உனக்கு என்னாச்சு மித்து? என்ன கேள்வி இது? நீ என்ன கேக்குறேன்னு புரிஞ்சு தான் கேக்குறியா" என்றவன் மிருதுளாவை கேள்வியாய் பார்க்க,


 "ப்ளீஸ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. அன்னைக்கு நீங்க சொன்னீங்க இல்ல. நான் உன்ன உண்மையா விரும்புறேன். உனக்காக எதையும் செய்வேன்னு சொன்னீங்களே அது உண்மை தானே?" என்று தன் பிடியில் மிருதுளா உறுதியாக நின்றாள்.


 ஷரவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'என்னாச்சு இவளுக்கு நல்ல தானே இருந்தா? கண்டிப்பா  மனசுல எதையோ வச்சிட்டு தான் இப்படி கேக்குற. ஆனா, சத்தியமா அது நல்ல விஷயம் இல்லன்னு மட்டும் புரியுது' என்று நினைத்தவன், "ஏய் என்ன ஆச்சு உனக்கு. திடீர்னு உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்" என்றவன் அவள் அருகில் வந்து தோளைத் தொட, அவன் கையை தட்டிவிட்டாள். 


"இப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவீங்கள, மாட்டீர்கள?" என்று உச்சகட்ட குரலில் கத்த ஷரவன் ஒரு நிமிடம் அவள் போட்ட சத்தத்தில் பயந்துவிட்டான்.


"ஏய் என்னடி உன் பிரச்சனை? இப்ப என்ன நீ கேட்ட கேள்விக்கு பதில் தான வேணும். ஆமாடி நான் உன்ன விரும்புறேன். உயிருக்கு உயிரா உன்ன விரும்புறேன். ஏன் என் உயிருக்கு மேலயே நா உன்னை நேசிக்கிறேன். உனக்காக எதையும் செய்வேன். நீ என் உயிரை கேட்டா கூட தருவேன் போதுமா?" என்று அவனும் அவளை போலவே சத்தம் போட்டு கத்தி சொல்ல. மிருதுளா ஷரவனை நோக்கி உணர்ச்சிகள் துடைத்த பார்வை பார்த்தாள்.


"எனக்காக எதையும் செய்வேன்னு சொன்னீங்க இல்ல, அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நடக்கப்போற இந்த கல்யாணத்தை நிறுத்துங்க" என்று அழுத்தமான குரலில் சொல்ல. ஷரவனுக்கு அவன் காதில் விழுந்த வார்த்தைகள் சரிதானா? இல்லை மிருதுளா சொன்னதை அவன் காதுகள் தான் தவறாக கேட்கிறதா?' என்ற குழப்பம் அப்படியே இமைக்காமல் மிருதுளாவை பார்த்தான்.


 "இப்ப நீ சொன்னத திரும்ப ஒருமுறை சொல்லு" என்று சொல்ல, 


"எனக்கு இந்த கல்யாணம் வேணாம்" என்று சொல்லி முடிக்கும் முன் தரையில் விழுந்து கிடந்தாள் மிருதுளா.