காதல் 13
காதல் 13
ஷரவன், மிருதுளாவுடன் அனைவரின் படிப்பும் முடிந்தது. மூன்று வருடம் மூன்று நிமிடம் போல் ஓடிவிட்டது. சிந்து அவள் வீட்டில் ரெண்டு நாள் வந்து தங்கிவிட்டு தான் ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்ததால் தனுவும், மிருதுவும் தங்களின் பொருட்களை எல்லாம் பேக் செய்து கொண்டு சிந்து வீட்டிற்கு சென்று விட்டனர்.
அன்று பிரியாம்மா வீட்டில் இல்லை.மொத்த வானரங்களும் இரவு 12 மணி வரை ஹாலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, ஷரவன் நிலவன் மற்றும் விஷ்வாவுக்கு ஏதோ சிக்னல் செய்தான்.
உடனே நிலவனும், விஷ்வாவும் தங்கள் மொபைலில் தனு, சிந்துவுக்கு மெசேஜ் அனுப்பினார்.
அந்த மெசேஜை பார்த்த சிந்துவும், தனுவும் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையாட்ட, நிலவனும் விஷ்வாவும், பிரேமையும், பரத்தையும் அங்கிருந்து கூட்டி சென்று கரண்ட்டை ஆஃப் செய்ய, திடீரென அறை இருட்டானதில் மிருதுளா பயந்து விட்டாள்.
"ஐயோ நிலாண்ணா என்னச்சு? தீடிர்னு ஏன் கரண்ட் கட் ஆச்சு? எனக்கு பயமா இருக்குண்ணா. சீக்கிரம் லைட் போடுங்க" என்று கத்த,
"ஏய் அமுல்பேபி கொஞ்ச நேரம் வாய மூடுடி. சும்மா கத்திட்டு. அதான் உன்னை சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்க இல்ல, என்ன பயம் வேண்டி இருக்கு உனக்கு? ஏன்டி சினிமாவுல கடத்திட்டு போறப்ப ஹீரோயின் கத்துற மாதிரி கத்துற எரும, உன் வாயோட ஜிப்பை கொஞ்சம் இழுத்து மூடி வை, நான் போய் கேண்டில் எடுத்துட்டு வரேன்" என்றவள் தனுவின் கையை சுரண்ட, தனுவும் மெதுவாக அங்கிருந்து நழுவினாள், ஷரவன், மிருதுளாவுக்கு தனிமை கொடுக்க விரும்பி.
மிருது இருட்டில் பயந்து போய் உட்கார்ந்து இருக்க, திடீரென தன் அருகில் நெருப்பின் வெளிச்சம் வரவும். அவள் திரும்பி பார்க்க அங்கே முகம் முழுவதும் ஆளை மயக்கும் மந்தகாச புன்னகையுடன் சுண்டி இழுக்கும் தான் காந்தக் கண்களால் மிருதுளாவை காதலாக பார்த்தபடி, இதயவடிவ அழகிய ஐஸ்கிரீம் கேக்கை கையில் ஏந்தியபடி மிருது அருகில் வந்து அழகாக சிரிக்க, அந்த சிரிப்பில் தன்னை மறந்து ஷரவனை பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.
அவள் காதருகே வந்த ஷரவன், "ஹாப்பி பர்த் டே மித்து" என்று சொல்ல, அவள் காதில் உரசிய அவன் மீசை அவள் உணர்ச்சிகளை உரசியதென்றால், வண்டு குடைந்த மூங்கிலில் செல்லும் காற்று தேன் கலந்த மெல்லிசையாய் வெளி வருவது போல் குழைந்து வந்த அவனின் குரல் அவள் உயிரையே சென்று உரசியது. விழி இமைக்கும் நேரம் கூட வீணாக்காமல் அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவன் மித்து.
ஷரவன் கொஞ்ச நேரம் அவளின் ஆளைக் கொல்லும் அழகு கண்களில் தன்னை அவள் பார்ப்பதை பார்த்து ரசித்தவன் மெதுவாக, "ஏய் மித்து? ஏய்... என்னடி ஆச்சு கண்ண தொறந்துட்டு தூங்குறியா நீ? ஐஸ்கிரீம் கேக் கரையுது. சீக்கிரம் கேக் கட் பண்ணு" என்று குறும்பு கலந்த குரலில் அவன் அவளை அழைக்க அதில் உணர்வு பெற்றாள்.
தன்னை மறந்து இத்தனை நேரம் அவனை ரசித்ததை எண்ணி தன்னை திட்டி தீர்த்தவள், கேக்கை வெட்ட அந்த கேக் துண்டை ஷரவன் கையில் எடுத்து மிருதுளாவுக்கு ஊட்டி, ''இந்த பெர்த்டே உனக்கு ரொம்ப ஸ்பெஷல். நீ நீயா செலிபிரேட் பண்ற கடைசி பெர்த்டே இதுதான்" என்று சொல்ல, மிருதுளாவுக்கு அவன் சொல்வது என்ன என்று புரியாமல் அவனை கேள்வியாக பார்க்க, ஷரவன் ஏதோ சொல்ல வர அதற்குள் வானரப்படை அங்கு வந்துவிட்டது.
அதுக்கு அப்புறம் ஒரே கூத்தும், கும்மாளம் தான் அங்கே இரவு ரொம்ப நேரம் ஆட்டம் போட்டு களைப்பில் எல்லோரும் தூங்கப் போய் விட, மிருதுளா மனது ஒரு நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. 'ஏன் இப்ப எல்லாம் ஷரவன் பக்கத்துல வந்த எனக்கு ஒரு மாதிரி ஆகுது. அவன விட்டு தள்ளி இருக்கணும்னு நினைக்க நினைக்க நான் அவன் பக்கம் இன்னும் நெருங்கிப் போறேன். அவன் பணக்காரன். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது' என்று அவள் உள்மனம் அவளை எச்சரிக்க... 'நம்ம படிப்பு முடிஞ்சு போச்சு. இனி ஒரு வேலையை தேடிட்டு நம்ம வாழ்க்கையை பார்க்கணும். முடிஞ்ச வரை ஷரவனை விட்டு தள்ளி இருக்கணும்' என்று நினைத்தவள் மனதில் ஷரவனின் கெட்டநேரமே என்னமோ? ஏற்கனவே அர்ச்சனா ஷரவனை பற்றி சொன்னது வேறு அந்தநேரம் பார்த்து அவளுக்கு ஞாபகம் வந்து தொலய மொத்தமாக ஷரவனைவிட்டு விலக முடிவெடுத்தாள், நாளை நடக்கபோகும் நிகழ்வு தெரியாமல்.
ஷரவன் ஏதோ யோசித்தபடி மாடியில் நிற்பதை பார்த்த நிலவன் அவனிடம் வந்து "ஏன்டா இன்னும் நீ தூங்க போகல? ஏன் இங்க நின்னுட்டு இருக்க?" என்று கேட்டவன் ஷரவன் முகம் பார்க்க அது வெகுவாக குழம்பி இருந்தது.
"டேய் மச்சி என்னடா ஆச்சு? ஏன் உன் முகம் இவ்ளோ குழப்பமா இருக்கு? மிருது கூட எதும் பிரச்சனையா என்ன?"
"ம்க்கும்... போடா டேய், நீ வேற கடுப்பேத்திட்டு, அவ ஏதாவது பேசின தானே பிரச்சனை வர. அவ தான் வாயே தொறக்க மாட்டேங்கறாளே, இந்த மூனு வருஷமா நானும் என்னோட மனச அவளுக்கு பல வழியில் புரிய வச்சுட்டேன். ஆனா, இப்ப வரை அவகிட்ட சின்ன மாற்றம் கூட இல்லடா. முதல்ல என்னை எப்படி பார்த்தாளோ அப்படியே தான் இப்பவும் பாக்குற, என்ன... முன் அவ கண்ணுல ஒரு பயம் தெரியும் இப்ப அது இல்ல. கூடவே இப்ப எல்லாம் எனக்கு அவ கண்ணுல ஏதோ மாற்றம் தெரியுது மச்சி. ஏன் இப்ப கூட நான் கேக்கோட அவ முன்னாடி நிக்கும் போது பார்த்தாலே ஒரு பார்வை. ஸ்ப்பா… எனக்கு அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருந்துச்சு டா. ஆனா, அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு எனக்கும் தெரியல.?? அவளுக்கும் புரியல. அவ ஏன் என்ன விட்டு விலகி போற, அவ என்ன புரிஞ்சிக்கலய? இல்ல அவளுக்கு என்ன நான் சரியா புரிய வைக்கலயான்னு ஒரே குழப்பமா இருக்கு மச்சி. அவளுக்கு என்ன புடிச்சிருக்கு. ஆனா, ஏன்னு தெரியல அவளை என்கிட்ட வரவிடாம ஏதோ ஒன்னு தடுக்குது. அது என்னன்னு தான் எனக்கு புரியல" என்றவன் முகம் சோகத்தில் வாடி விட்டது.
" டேய் என்னடா நீ . அவ சின்ன பொண்ணுடா. நீ தான் பாக்குற இல்ல. அவ இன்னும் குழந்தையாவே தான் இருக்கா. போக போக எல்லாம் சரியாகிடும். சீக்கிரம் அவளுக்கு உன் காதல் புரியும். நீ கவலைப்படாத?"
"இல்லடா இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல. இவ்வளவு நாள் என் மனசு புரிஞ்சு அவளே என்கிட்ட வருவான்னு காத்திருந்தேன். ஆனா, இப்ப அந்த நம்பிக்கை எனக்கு இல்லடா. அவ எதையே மனசுல வச்சிட்டு வேணும்னே என்ன விட்டு விலகி போற, எங்க அவ என்னை விட்டு ஒரேயடியா போய்டுவாளோனு மனசுல ஒரு பயம் வந்துடுச்சு" என்றவன் குரல் உடைந்து விட்டது.
"அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல நிலவா. i can't live without her என்று கத்தியவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, "இனி எதை பத்தியும் எனக்கு கவலை இல்ல. எனக்கு என் மித்து வேணும். அவ என் கூடவே இருக்கணும். அதுக்காக நான் எதையும் செய்வேன்" என்று உறுதியாக சொன்னாவனை பார்த்த நிலவனுக்கே சற்று பயம் வந்தது.
"டேய் என்னடா சொல்ற நீ?? என்ன பண்ண போற" என்று பதற, ஷரவன் தான் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளை சொன்னான்.
ஷரவன் சொன்னதை கேட்ட நிலவனுக்கு உள்ளுக்குள் பெரும் அதிர்ச்சி தான்.
"டேய் எப்படிடா? எப்ப இந்த வேலையை பாத்த நீ. ஒரு வார்த்தை கூட சொல்லல... இதெல்லாம் சரிப்பட்டு வருமா மச்சி? மிருதுக்கு இதெல்லாம் தெரிஞ்சா? அவ இதுக்கு ஒத்துக்குவாளா?"
"எனக்கு வேற வழி தெரியல நிலவா, என்னாமோ இப்பெல்லாம் மனசுல இனம்புரியாத ஒரு பயம். மித்து என்ன விட்டு ரொம்ப தூரம் போற மாதிரி தோணுதுடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சி அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்" என்று ஷரவன் கலங்க, நிலவனுக்கும் அவன் பயம் சரி என்றே பட்டது. அவனும் மிருதுளாவை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.
"சரி விடுடா" என்று அவனை தோளோடு அணைத்தவன், "நீ முடிவு பண்ணிட்ட, சோ நோ மோர் ஆர்க்யூமென்ஸ். எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்ச சரிதான். நீ போய் தூங்கு, காலையில் சீக்கிரம் கிளம்பனுமில்ல" என்று குறும்பாக சொன்னவன் ஷரவனை அழைத்து சென்றான்.
மறுநாள் காலையில் தனுவும், மிருதுவும் கிளம்பி தனு வீட்டிற்கு வந்து விட்டனர். தனு அம்மா தங்கமணி தனுவையும், மிருதுளாவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல, செல்வகுமார் அவர்களை கோவிலில் இருந்து நேராக மிருதுளா வீட்டிற்கு வர சொல்லிவிட்டு சென்றார்.
தங்கமணிக்கு விஷயம் என்னவென்று தெரியும் என்பதால் கோவிலில் இருந்து மிருதுளாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றார்.
மிருதுளா தன் கையில் இருந்த மோதிரத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். நடந்தது அனைத்தும் நிஜமா? இல்லை கனவா? என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.
'இது உண்மைதானா, எனக்கு ஷரவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சா? இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு ஷரவனுக்கும் கல்யாணமா?' என்று நினைத்த போதே அவளுக்கு தலைசுற்றியது.
ஷரவன் மிருது எங்கு தனக்கு கிடைக்காமல் போய்விடுவளோ என்று பயந்தவன், உடனே மிருதுளாவை கல்யாணம் செய்து வைக்கும் படி அவன் அப்பா, அம்மாவிடம் கேட்க, ஏற்கனவே அவன் மிருதுளாவை காதலிக்கும் விஷயம் அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்களும் சம்மதித்து, அடுத்த நாளே செல்வகுமாரை வைத்து மூர்த்தி, கவிதாவிடம் இது பற்றி பேசினர்.
வசதியான இடம் என்பதால் கவிதாவும், மூர்த்தியும் உடனே சம்மதித்து விட்டனர். மிருதுளா ஊருக்கு வரும் நாளே சிம்பிளாக வீட்டில் நிச்சயதார்த்தம் வைத்துவிட்டு, கல்யாணத்தை விமர்சையாக செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதன் படியே எல்லாம் நடக்க, மிருதுளாவை காலையிலேயே தன் வீட்டிற்கு வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ஷரவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிருதுளா வீட்டிற்கு வந்துவிட்டான்.
நிலவன் ஏற்கனவே தனுவிடம் விஷயத்தை சொல்லி விட்டான் தான். ஆனால், மிருதுளாவிடம் எதுவும் சொல்லக்கூடாது என்று கண்டித்து சொல்லிவிட, அருமை காதலி ஆசை காதலன் ஆணைக்கு கட்டுப்பட்டு வாயை மூடிக்கொண்டாள்.