காதல் 12

 காதல் 12



"மேடம்… மேடம்" என்ற குரலில் தனு நிகழ்காலத்திற்கு வர, நர்ஸ் தான் அவளை எழுப்பி இருந்தாள். 


நிலவனை பற்றி யோசித்தவள் அப்படியே உறங்கிவிட, ஹாஸ்பிடல் நர்ஸ் வந்து எழுப்பியதும் எழுந்தவள். நர்ஸை பார்க்க, "அவங்க ரிப்போர்ட் எல்லாம் ஓகே மேடம். டாக்டர் உங்களை  டிஸ்சார்ஜ் பண்ணிட்டாரு. இது அவங்க மெடிசின்ஸ்" என்று மருந்தை கொடுத்து விட்டு நர்ஸ் அங்கிருந்து சென்று விட, இங்கு தனுவின் நினைவு முழுவதும் நிலவன் தான் நிறைந்து இருந்தான்.


 அவள் கண்ணீர் அவள் அனுமதி இல்லாமல் அவள் கண்கள் நனைக்க, நிலவன் கடைசியாய் தன்னிடம் பேசியதை நினைத்தவள், அடுத்த நொடி கண்களை துடைத்தாள்‌. அவன் நினைவுகளையும் சேர்த்து துடைத்தெறிந்து விட்டு  எழுந்து மிருதுளாவிடம் வந்தாள்.


"மிருது உன் ரிப்போர்ட் எல்லாம் ஒகே.  நீ இப்போ ஓகேன்னா நம்ம இன்னைக்கே ஊருக்கு கிளம்பலாம். உன்னால டிராவல் பண்ண முடியுமா?"


"ஐ அம் ஓகே தனு. பெரிய அடியெல்லாம் ஒன்னும்  இல்ல. ஐம் கம்பீட்லி ஆல்ரைட். நாம் இன்னைக்கே கிளம்பலாம்" என்க, ஹாஸ்பிடலில் இருந்து நேராக ஹோட்டலுக்கு சென்றவர்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு அடுத்த கோயம்புத்தூர் ப்ளைட்டில் டிக்கெட் வாங்கிக் கொண்டு பறந்தனர்.


அந்தி மாலைப் பொழுது மிருதுளாவும், தன்யாவும் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கினர். தன்யாவின் அப்பா செல்வகுமார் அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவரை பார்த்த பெண்கள் இருவரும் ஓடி வந்து அவரை அணைத்துக் கொள்ள, மூன்று வருடம் கழித்து மிருதுளாவை பார்த்தவர், அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.


 "எப்படி இருக்க மிருதுமா" என்று வாஞ்சையோடு கேட்க,  மிருதுளாவின் கண்கள் கலங்கிவிட்டது. பெற்ற தந்தையின் அன்பை பார்க்காத மிருதுளாவுக்கு, அந்த குறை தெரியாமல் இருக்க ஒரே காரணம் செல்வகுமார் தான். இன்றுவரை அவரும் சரி அவர் மனைவியும் சரி தன்யாவையும், மிருதுளாவையும் வித்தியாசமாக பார்த்ததில்லை. மிருதுளாவையும் தன் சொந்த மகள் போல் பார்த்தனர். அவர்களை நினைக்கும்போதே மிருதுளா மனம் நிறைந்து விட்டது.


" நா நல்ல இருக்கேன் பா!! நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க?" என்று கேட்க, இங்கு தனு மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டாள். 


செல்வம் அதை பார்த்து சிரித்தவர், "என்ன தன்யா முஞ்சை மூனு முழத்துக்கு தூக்கி வச்சிருக்க என்ன?" என்று சிரிப்போடு கேட்க, ஏற்கனவே மிருதுளா பற்றி பல விஷயங்களை தன்னிடம் தன் தந்தை மறைந்திருப்பதை எண்ணி கோபத்தில் இருந்தவள், இப்போது தன்னைவிட்டு மிருதுளாவை மட்டும் அவர் கொஞ்சுவதை பார்த்து இன்னும் கடுப்பாகி, "போங்க... என் கிட்ட பேசாதீங்க! போய் உங்க செல்ல பொண்ணு மிருதுகிட்டையே கொஞ்சிட்டு இருங்க. நான் உங்க கண்ணுக்கு தெரியல போல" என்று உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டியவள், முகத்தை திருப்பிக் கொள்ள செல்வமும், மிருதுளாவும் அவளை பார்த்து சிரிக்க, அதில் இன்னும் கடுப்பானாள்


 "போங்க நான் திரும்பி யூ.எஸ் கே போறேன்" என்று முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டாள்.


"அப்பா எப்படிடா என் செல்ல பெண்ணை மறப்பேன். நீ என் தங்கக்கட்டி, பட்டுக்குட்டி ஆச்சே! வாடா என் தங்கம்" என்று இரு கை நீட்ட தனு அவரை கட்டிக் கொண்டவள், மிருதுளாவையும் சேர்த்து கட்டிக்கொண்டாள்.


ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த மிருதுளா,


 "அப்பா நீங்க தனுவை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க, நான் வீட்டுக்கு போய் அம்மாவை பார்த்துட்டு வரேன்" என்று சொல்ல, 


 "ஏன் டா மிருது?? இப்ப உடனே எதுக்கு போகணும். நாளைக்கு போகலாமில்ல" என்றார் செல்வம்.


அவருக்கு தெரியும் மிருதுளா அங்கே சென்றால் அவள் மனம் வருந்தும்படி கவிதா ஏதாவது சொல்வார் என்று. வந்த உடனே எதற்கு அவள் கஷ்டப்பட வேண்டும்' என்று தான் அவர் மிருதுளாவை தடுத்தார்.


மிருது அவரை பார்த்த மென்மையாக சிரித்தவள், "இல்லப்பா சில விஷயத்தை முடிக்க வேண்டி இருக்கு. அதை இன்னைக்கு முடிச்சிடுறேன். நா அவங்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமையும் செஞ்சிட்டேன். இதுக்கு மேல செய்ய ஒன்னு இல்ல. இன்னைக்கு தான் நான் அவங்களை பார்க்குறது கடைசி. நான் போய்ட்டு வந்துறேன் ப்பா" என்றவள் தனியாக கேப் பிடித்து சென்று விட. தனுவும், செல்வமும் தங்கள் வீடு வந்து சேர்ந்தனர். 


வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடம் தனு ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விட்டாள்.


" இத்தன நாள்ல ஏன் மிருதுவை பத்தி இவ்வளவு பெரிய விஷயத்தை ஏன் கிட்ட சொல்லல?" என்று கத்தி அவள் சண்டை போட,‌


டாக்டர். லட்சுமி ஏற்கனவே மிருதுளாவை பற்றிய உண்மை தனுவிற்கு தெரிந்துவிட்டது என்று செல்வத்திற்கு சொல்லி இருந்ததால், அவர் தனுவை எதிர்கொள்ள தயாராக இருந்தார். தனு தான் மொத்த கோபத்தையும் கொட்டி தீர்க்கும் வரை பொறுமையாக இருந்தவர், அவள் அமைதியானதும்.


"பேசி முடிச்சிட்டியா தனு?? இப்ப நான் பேசலாமா" என்க. தனு மௌனமாக தலையாட்டினாள். 


செல்வம் பொறுமையாக நடந்த அனைத்தையும் சொன்னவர், "நாங்க இதெல்லாம் செஞ்சது, மிருதுவோட நல்லதுக்கு தான்டா. ஆனா, நாங்களே எதிர்பார்க்காத ஒன்னை மிருதுளா செஞ்சிட்டா! அவ அவ்வளவு பெரிய காரியத்தை செய்யத் துணிவானு சத்தியமா நான் நினைக்கல, விஷயம் எங்களுக்கு தெரியும் போது எல்லாம் எங்க கைமீறி போய்டுச்சு. எங்களால் அப்ப ஒன்னும் செய்ய முடியாத நிலைமை. இதையெல்லாம் உன் கிட்ட மறச்சதுக்கு காரணம் இந்த நிமிஷம் வரை எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்னு மிருதுளாவுக்கு தெரியாது. உனக்கு தெரிஞ்சா நீ அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவியோன்னு தான் நான் உன்கிட்டையும் மறச்சேன்.  இப்போதைக்கு மிருதுளாக்கு நடந்த எதுவும் தெரிய வேண்டாம்" என்றவர் குரலில் நீ அவளிடம் எதுவும் சொல்லக்கூடாது என்ற கட்டளை இருக்க  தனுவும் சரி என்று தலையாட்டினாள்.


இங்கு  மிருதுளா வீட்டில் அவள் ஊரில் இருந்து வருவது தெரிந்து அனிதா, அவள் கணவன். அஜய், அவன் மனைவி என்று அனைவரும் இருந்தனர். ஆனால், அவளை அன்போடு வா என்று அழைக்க தான் அங்கு யாருமில்லை. 


அவள் வேலையை விட்டு விட்டு வந்ததால் கவிதா ஒரு பக்கம் திட்டிக் கொண்டிருக்க, அஜய்யும், அனிதாவும் கவிதாவிற்கு பின்பாட்டு பாடினர். அங்கிருந்த யாரும் மிருதுளா எப்படி இருக்கிறாள் என்றோ, அவளுக்கு தலையிலும், காலிலும் அடிப்பட்டிருப்பதை பற்றியோ ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இதையெல்லாம் எதிர்பார்த்தே அங்கு வந்திருந்ததாள் மிருதுளா. அனைவரும் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், மெதுவாக கவிதா அருகில் வந்து ஒரு செக்கை அவரிடம் தந்தாள். 


இதுவரை அவள் சம்பாதித்த மொத்த பணத்தில் கொஞ்சத்தை மட்டும் தனக்கென வைத்துக் கொண்டு மீதி இருந்த மொத்த தொகைக்கு செக் போட்டு கவிதாவிடம் தந்தவள், கவிதாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.


தனு வீட்டிற்கு வந்த மிருதுளா எதுவும் பேசவில்லை. அங்கு யாரும் அவளை எதுவும் கேட்கவும் இல்லை. மிருதுளா வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் என்பதால் யாரும் எதுவும் பேசவில்லை. இரவு உணவை முடித்து விட்டு அமைதியாக படுக்க சென்று விட்டனர். 


மிருதுளாவுக்கு தான் உறக்கம் வராமல் ஆட்டம் காட்டியது.


 'தன்னை பெற்ற தாய் தன் தலையில் அடிபட்டு இருப்பதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே' என்பது அவள் நெஞ்சில் முள்ளாய் குத்த. அவள் மனது அவளையும் அறியாமல் ஷரவனை நினைத்தது. அவனை விட்டு பிரிந்த இத்தனை ஆண்டுகளில் தனிமையில் இருக்கும் சில நேரம் அவளுக்கு ஷரவன் ஞாபகம் வருவதுண்டு. அதை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்து அடுத்த வேலை பார்க்கும் மிருதுளாவால்  இன்று ஏனோ அவன் நினைவுகளை ஒதுக்க முடியவில்லை. காலையில் தனு அவன் பெயரை சொல்லி கேட்டதில் இருந்து அவளுக்கு ஷரவனுடன் இருந்த நாட்களும், நினைவுகளும் அவனின் ஒவ்வொரு குறும்பு செயல்களும் அவள் கண் முன் வந்தது. தனக்கு ஒரு சின்ன காயம் பட்டதற்கு  அன்று ஷரவன் எப்படி துடித்தான் என்பது அவள் கண் முன் வர உறங்க முடியாமல் தவித்தாள் மிருதுளா.


இன்றோடு மிருதுளாவும், தன்யாவும் கோயம்புத்தூர் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. தனு இந்த  ஒரு வாரத்தில் மிருதுளாவுக்கே தெரியாமல், அவளை சுற்றி ஒரு பெரிய திட்டம் போட்டு, அதை செயல்படுத்தவும் செய்தாள். 


இனி அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் ஏற்படுத்தப்போகும் மாற்றத்தையும், மறைந்திருந்த பல ரகசியங்கள் வெளிவர போகிறது என்று அறியாமல் மிருதுளா தன் புது வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.


"மிருது இன்னைக்கு நீ ஃப்ரீயா. ஈவினிங் ஷாப்பிங் போலாமா?"


" என்னடி  திடீர்னு ஷாப்பிங் என்ன விசேஷம்?"


"ஏய் மறந்துட்டியா? இன்னு ரெண்டு நாள்ல உன் பர்த்டே வருது. அதுக்கு தான் ஷாப்பிங். உன் பேரை சொல்லி நானும் நைசா அப்பாகிட்ட பிட்டு போட்டுக்குவேன்" என்று கண்ணடிக்க, மிருதுளாவுக்கு அப்போது தான் தன் பிறந்த நாள் நினைவே வந்தது.


 பிறந்ததிலிருந்து அவள் பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது. அவளுக்கு அந்த நாள் நினைவு கூட இருப்பதில்லை. தனுவுடன் பழக ஆரம்பித்த பிறகு தான், அவள் ஒவ்வொரு பிறந்த நாளையும் தனுவின் அம்மா நினைவு வைத்து மிருதுளாவுக்கு புது டிரஸ் எடுத்து கொடுத்து கோவிலுக்கு கூட்டி செல்வார். ஆனால், ஷரவன் அவள் வாழ்வில் வந்த பிறகு அவளின் ஒவ்வொரு பிறந்தநாளும் தூள் பறக்கும். ஷரவன், நிலவன், சிந்து , பிரியாம்மா, தனு, பரத், பிரேம் என்று அனைவருடனும் சேர்ந்து தன் பிறந்த நாளை கொண்டாடியதை நினைத்து பார்த்தவள், அந்த நினைவுகளில் மூழ்கினாள். கடைசியாக ஷரவனுடன் இருந்த அவள் பிறந்தநாள் அவள் நினைவில் நிழலாடியது.