அழகிய தமிழ் மகள் 20

 



அழகி 20


ராம் சொன்னதைக் கேட்ட பிறகு சிவகாமி, பரதனுக்கு அழைத்துப் பேச, பரதனும் ஆதித்திற்கு யுக்தாவை கல்யாணம் செய்து வைக்கும் ஆசை தனக்கு இருப்பதையும், ஆதித்தின் தாய், தந்தையும் இதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள்‌.


ஆதித், யுக்தாவிற்கு ஒருவரை ஒருவர் பிடித்தால் மட்டும் போதும் என்று சொல்ல, சிவகாமிக்கு மிக்க மகிழ்ச்சி.


"ரொம்பச் சந்தோஷம் பரதா… ஆதிக்கு நம்ம சமிய புடிச்சிருக்குன்னு தான் எனக்குத் தோணுது. எதுக்கும் நான் ஒரு தரம் அந்தப் பிள்ளைக் கிட்ட பேசிட்டு உனக்குத் தகவல் சொல்றேன்…" என்றவர் ஃபோனை அனைத்து விட்டு, யுக்தாவை எப்படிக் கவுப்பது என்று திட்டம் திட்ட தொடங்கி விட்டார்.


அன்று மாலை பாட்டி, ப்ரணவ்வுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆதித், “பாட்டி நா உங்க கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனக்க மாட்டீங்களே?" என்று கேட்க,


"கேளு பேராண்டி… நீ என் வீட்டு மருமகளோட தம்பி, இந்த வீட்டுக்கு மருமகன் வேற…" என்று சொல்லி நிறுத்த, ஆதித் பாட்டியை பார்த்து திருட்டு முழி முழித்து,


"என்ன? என்ன சொன்னீங்க பாட்டி?"


பாட்டி உள்ளுக்குள் சிரித்தவர், "மருமகன் முறைன்னு சொல்ல வந்தேன் பா. கயல்விழிக்கு தம்பி இல்ல நீ. அதான் அப்படி சொன்னேன்." என்றதும் தான் ஆதிக்கு மூச்சே வந்தது.


"சரி ஆதி நீ ஏதோ கேக்கனும்னு சொன்னியே என்ன அது?"


"அது ஒன்னும் இல்ல பாட்டி…" என்றவன், "ப்ரணவ் குட்டி நீங்க உள்ள போய்ச் சமீரா, யுவன் கூட விளையாடுங்க…" என்று செய்கையில் சொல்ல, ப்ரணவ் சரி என்று தலையாட்டியவன் விளையாட ஓடியதை பார்த்துவிட்டு திரும்பிய ஆதித்,


"நான் இங்க வந்த இந்தக் கொஞ்ச நாள்ல உங்களுக்கு அந்தத் திமிரழகி..." என்று தொடங்கியவன், சட்டென நாக்கை கடித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, "யுக்தா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.


எல்லாரையும் விட நீங்க தான் அவள சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க. அப்படி இருக்கும்போது, அவ வாழ்க்கையை நாசம் பண்ணவனோட பையன்னு தெரிஞ்சும், நீங்க எப்படிப் பாட்டி ப்ரணவ் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க? நீங்க மட்டுமில்ல யுக்தா, ராம், வினய், வீட்டுல இருக்க எல்லாருமே ப்ரணவ்கிட்ட உண்மையான அன்போட இருக்கீங்களே! எப்படி பாட்டி? உங்களால எப்படி முடியுது?"


சிவகாமி தன் சுருங்கிய கன்னத்தை வளைத்து சிரித்தவர், "என்னைப் பொருத்த வரை வெளஞ்ச நெல்லும், அது வெளஞ்ச மண்ணும் தான் முக்கியம். அத வெதச்சவனைப் பத்தி எனக்குக் கவலையில்லை. அவன் அந்தக் கேடு கெட்டவனுக்கு மட்டும் புள்ள இல்ல. அவன் தப்பானவன்னு தெரிஞ்சதும், அப்படி பட்டவனுக்கு ஒரு புள்ளைய பெத்தது அவமானம்னு நெனச்சு, உசுர விட்டாளே அந்த மானஸ்தி ப்ரணவ்வோட அம்மா, அவளுக்கும் புள்ளை தான். அது தான் எனக்கு முக்கியம்! எப்ப எம் பேத்தி அவனைப் புள்ளையா ஏத்துக்கிட்டாளோ, அப்ப இருந்து அவன் இந்த வீட்டு வாரிசு, என்னோட கொள்ளு பேரன்." என்று நெஞ்சை நிமிர்த்தி உறுதியாகச் சொன்னவரை பார்த்த ஆதித்திற்கு ஒன்று தான் சொல்லத் தோன்றியது.


"யுக்தா இப்டி இருக்கிறதுல ஒரு ஆச்சரியமும் இல்ல பாட்டி. ஏன்னா அவ உங்க வளர்ப்பு! அவ அப்படியே உங்களை மாதிரி…" என்று பெருமையாகச் சொல்ல,


சிவகாமி ஆதியை ஒரு நிமிடம் நிதானமாகப் பார்த்தவர், "நீ அவள விரும்புறீயா ஆதி?" என்று நேரடியாகக் கேட்க ஒரு நிமிடம் ஆதித் அதிர்ந்தவன்,


"அது… அது பாட்டி…" என்று அசடு வழிய, பாட்டி அவன் முடியை மென்மையாக வருடியவர்,


"உன் கண்ணைப் பார்க்கும் போதே எனக்கு உன் மனசு புரியுது ஆதி. ஆனா நீயா சொல்லாம என்னால எந்த முடிவும் எடுக்க முடியாது. அதான் கேக்குறேன் சொல்லு ஆதி? நீ என் பேத்திய விரும்புறீயா?" என்று மீண்டும் அழுத்திக் கேட்டார்.


"ஆமா பாட்டி நான் அவள விரும்புறேன். மனசால விரும்புறேன். வெறும் உங்க பேத்தி யுக்தாவை மட்டும் இல்ல பாட்டி, ப்ரணவ் அம்மா யுக்தாவை நான் ரொம்ப விரும்புறேன்." என்றவன் சட்டெனச் சிவகாமி முன் மண்டியிட்டு, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு,


"எனக்கு உங்க பேத்திய கட்டிக் குடுங்க பாட்டி. நான் அவளையும், ப்ரணவ்வையும் என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறேன் பாட்டி. ப்ளீஸ் பாட்டி…" என்று கண்களைச் சுருக்கி கெஞ்சும் குரலில் கேட்க, சிவகாமிக்குச் சிரிப்பு வந்துவிட அதை மறைத்தார்.


"அதெல்லாம் முடியாது என் பேத்திக்கு எனக்குப் புடிச்ச மாதிரி ஒரு பையனை பாத்து தான் கட்டிக் குடுப்பேன்…" என்று முறுக்கிக் கொண்டார்.


"அதான் எனக்குக் கட்டிக் குடுங்கன்னு கேக்குறேன். உங்களுக்குத் தான் என்னைப் புடிக்குமில்ல. அப்பறம் என்னவாம்? அதோட அந்தத் திமிரழகியை என்னால தான் சமாளிக்க முடியும். நீங்க என்ன சாதாரணப் பொண்ணையா பெத்து வச்சிருக்கீங்க? சரியான திமிர் புடிச்சவ… அவளுக்கெல்லாம் நான் தான் சரியான ஆளு. மரியாதையா நீங்களா அவளா எனக்குக் கட்டி வைங்க இல்ல…" என்று இழுக்க,


"இல்லாட்டி என்னடா பண்ணுவ பேராண்டி?" என்று சிவகாமி தெனாவட்டாகக் கேட்க,


ஆதித் பட்டென மூஞ்சை பாவமாக வைத்துக் கொண்டு சிவகாமி கன்னத்தைப் பிடித்து, "ப்ளீஸ் பாட்டி நீங்க நல்லா பாட்டி இல்ல? என் செல்ல பாட்டி இல்ல. உங்க பேத்திய நான் நல்லா பாத்துப்பேன் பாட்டி. என்ன நம்புங்க பாட்டி…" என்று கெஞ்சி, கொஞ்சி கேட்க, சிவகாமி சிரிப்பை அடக்க முடியாமல் பலமாகச் சிரித்தவர்,


"டேய் பேரா நான் அந்த ராங்கிய உனக்குத் தான் கட்டி வைக்கனும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். உன் சித்தப்பாக்கும் ஃபோன் பண்ணி பேசிட்டேன். அவனும் ஓ.கே. சொல்லிட்டான்." என்று சொல்லி சிரிக்க, ஆதித்க்கு தலைகால் புரியவில்லை.


"பாட்டி…" என்று கத்திக் கொண்டே அவரைத் தலைக்கு மேல் தூக்கி சுத்த,


"டேய்… டேய்… என்னைக் கீழ விடுடா. அந்த ராங்கிய கட்டிக்கிட்டு அவள தூக்கிட்டு ஆடு. என்னை விடுடா…" என்று கத்தியவரை மெதுவாக இறக்கிவிட்ட ஆதித், "ரொம்பத் தேங்க்ஸ் பாட்டி!" என்று சந்தோஷமாய்ச் சொன்னான்.


"உன் சந்தோஷத்தை ஒரு பக்கம் வை ஆதி. இனிமே தான் நமக்கு நிறைய வேலை இருக்கு. அந்த ராங்கி கிட்ட கல்யாணம் பத்தி பேசுனா கண்டிப்பா அவ ஒத்துக்கவே மாட்டா…"


"ஆமா பாட்டி நீங்க சொல்றது சரி தான். அவளை எப்படிப் பாட்டி நம்ம வழிக்குக் கொண்டு வர்ரது?"


"நீ ஏன் அதைப் பத்தி கவலைப்படுற… அதெல்லாம் அவளை எப்படி கவுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இனிமே தான பாக்கப் போறா இந்தச் சிவகாமியோட ஆட்டத்தை…" என்று மார்தட்டிக் கொண்டவர் யுக்தா வாழ்க்கை இனி மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு சென்றார்.


அடுத்த நாளே விஷ்ணு, ராஷ்மி கல்யாணத்தைப் பற்றி யுக்தா பேச, அதை வைத்தே அவளை நோக்கி தன் முதல் காயை நகர்த்தினார் சிவகாமி.


ஆதித், சிவகாமி முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, சிவகாமி தீவிரமாக எதையே யோசித்துக் கொண்டிருந்தார்.


"என்ன பாட்டி இவ்ளோ பலமா யோசிக்கிறீங்க? அடுத்த ப்ளான் ரெடி போல… அடுத்து என்ன பண்ண போறீங்க என் வருங்காலப் பொண்டாட்டிய?"


"ம்க்கும்… இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல. அவ உரிமையோட உன் பக்கத்துல பொண்டாட்டியா நிக்கணும்னு தான் நான் இங்க ப்ளான் போட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா என் முகத்தைப் பார்த்திட்டிருக்க… உருப்படியா ஏதாவது யோசனை சொல்றீயா நீ? நீ எல்லாம் என்ன தான் ஐ.பி.எஸ் படிச்சியோ?" என்று அலுத்துக் கொண்டார்.


"நான் என்ன பாட்டி பண்றது? ஐ.பி.எஸ்ல லவ் பண்றது எப்படி, கரெக்ட் பண்றது எப்படின்னு யாரும் சொல்லித் தரலியே… அதோட எனக்குத் தான் என்னோட ஸ்வீட் பாட்டி இருக்காங்களே… அவங்க என்னோட லவ்வை சக்சஸ் பண்ணி, என் திமிரழகிய என் கையில கொடுத்திடுவாங்க… அப்பறம் எனக்கென்ன கவலை?"


"ஆமா டா, அவள பேத்தியாவும், உன்னைப் பேரனாவும் வச்சிட்டு நான் படுற பாடிருக்கே சொல்லி மாளாது. சரி சரி அடுத்த ப்ளான் ரெடி. நாளைக்கு மட்டும் அவளை நம்ம வலையில விழ வச்சிட்டா போதும். உன் வாழ்க்கையை அவளுக்கு அடகு வச்சிடலாம்…" என்று கண்ணடித்தார்.


"அடகு வைக்கிறது என்ன பாட்டி? அவளுக்குத் தான் என் முழு வாழ்க்கையும்னு ஸ்டாம் பேப்பர்ல கையெழுத்து போட்டே தரேன்…"


"ம்ம் விதி யார விட்டுச்சு. உன் தலையெழுத்து!"


"அது சரி பாட்டி உங்க ப்ளான் என்ன? அத சொல்லுங்க முதல்ல?"


சிவகாமி தன் ப்ளானை சொல்லி முடிக்க, ஆதித், "பாட்டி…" என்று அலறியே விட்டான்.


"ஏன் டா இப்படிக் கத்துற?"


"கத்தாமா என்ன செய்ய? நீங்க இப்படி ஒரு ப்ளான் போட்டிருக்கீங்கன்னு மட்டும் ராம், வினய்க்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்!"


"அவனுங்க கெடக்கானுங்க முட்டா பீஸ்சுங்க… சின்னப் பொண்ணு அவள வழிக்கு கொண்டு வர துப்பில்லாம, இரண்டு வருஷம் அவளை அவ இஷ்டத்துக்கு விட்டு வேடிக்கை பாத்தானுங்க… இனி அவனுங்களை நம்பி ஒரு யூஸ்சும் இல்ல. அதான் நா களத்துல இறங்கிட்டேன்."


"அய்யோ பாட்டி.யுகி பத்தி யோசிச்சீங்களா?"


"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் டா பேராண்டி''


"எது அவ என்னைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறதையா?"


"ஆமா… காதல்ன்னா சில அடிகள், மிதிகள் விழத்தான் செய்யும் டா பேராண்டி. சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு சொல்லு?" என்று பாட்டி தோளைக் குளுக்க,


"அதுசரி அடியும், மிதியும் வாங்கப் போறது நானில்ல… உங்களுக்கென்ன? அதுவும் உங்க பேத்திக்கு ஒன்னுக்கு ஐஞ்சு அண்ணங்காரனுங்க வேற. என்னோட கதி என்னாகுறது? நாட்டாமை ப்ளானை மாத்துங்க…"


"மாத்துறேன் டா. ப்ளானை இல்ல. மாப்பிள்ளைய மாத்துறேன். நான் சொல்றத கேக்குற பையனை பாத்துக்கிறேன். நீ இதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்ட…"


"அய்யோ தெய்வமே என்ன பெசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க… நான் எதுக்கும் சரிபட்டு வருவேன். நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் பாட்டி. ப்ளீஸ் பாட்டி… ப்ளீஸ் ஹெல்ப் மீ பாட்டி…"


"அப்படி வாடா வழிக்கு. இனி வர ஒவ்வொரு நாளும் நமக்கு ரொம்ப முக்கியம்! அவளுக்கு ஒரு சின்னச் சந்தேகம் வந்தாலும் அவ்ளோ தான். மொத்த ப்ளானையும் கண்டு புடிச்சி நம்மளை செல்லு செல்லா பிரிச்சுடுவா. ஜாக்கிரதை!" என்று இரண்டடி நகர்ந்த சிவகாமி திரும்பி ஆதியை பார்த்தவர்,


"எம் பேத்தி ரொம்ப நல்ல பொண்ணு ஆதி. ஏதோ கெட்ட நேரம் அவளுக்கு இந்த மாதிரி ஆகிடுச்சு. நீ அவளைப் புரிஞ்சிக்கிட்டு நல்லா பாத்துப்பேன்ற நம்பிக்கையில தான் நான் இவ்வளவும் செய்றேன். எம் பேத்திய நல்லா பாத்துப்ப தான ஆதி?" என்ற சிவகாமி குரல் கரகரக்க,


ஆதித் வேகமாகச் சென்று அவர் கையைப் பிடித்தவன், "என்ன பாட்டி இது? அவ என் உசுரு பாட்டி! அவளும் ப்ரணவும் தான் இனிமே என்னோட உலகம்.‌ அவங்க சந்தோஷத்துக்கு நான் கேரண்டி. நம்பி அவளை எனக்குக் கட்டிக் குடுங்க… அடுத்த வருஷம் உங்கள மாதிரியே அழகான கொள்ளு பேத்தி உங்க கையில இருப்பா போதுமா?" என்று ஆதி சிரித்த முகத்துடன் உறுதியாகச் சொல்ல, சிவகாமி மன நிறைவுடன் யுக்தாவிற்கு அடுத்த ஆப்பை சீவ கிளம்பினார்.