காதல் 7
காதல் 7
மிருதுளா ஒரு வழியாக ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்.
அங்கு தனு இருந்ததை கூட கவனிக்காமல் அடுத்து என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் அழுது கொண்டே கட்டிலில் உட்கார்ந்து விட்டாள்.
தனுவோ சாயந்திரம் நிலவன் கட்டிபிடித்ததையே நினைத்து தன்னை மறந்திருந்தவள். ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கு மிருதுளா அழுது கொண்டிருக்க அதை பார்த்து பதறியவள்,
"ஏய் மிருது என்னடி ஆச்சு எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?" என்று அவள் அருகில் வர, மிருது தாய் பறவையின் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த குஞ்சை போல், தனுவை இறுக்கி கட்டிப்பிடித்து அவள் வயிற்றில் முகம் புதைத்து, விடாது கேவி கேவி அழுக ஆரம்பித்து விட்டாள்.
தனுவுக்கு மிருதுளாவுக்கு என்ன ஆச்சோ என்ற பயம் மனதில் சூழ்ந்து கொள்ள, "மிருது குட்டி என்னமா? என்ன ஆச்சு? ஏன்டா இப்படி அழுகுற? என்னாச்சு உனக்கு ப்ளீஸ்? சொல்லுமா" என்று மிருதுவை அணைத்தபடி தவிப்பாய் கேட்டாள்.
மிருதுளா அழுதுகொண்டே தான் மழலை குரலில் இன்று லைப்ரரியில் ஷரவன் தன்னை காதலிப்பதை சொன்னதையும், அதன் பின் அர்ச்சனா சொன்னதையும் திக்கி தினறி சொல்லி முடிக்க,
"அடச்சே இவ்ளோ தானா... நா கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். இந்த சப்ப மேட்டருக்க இப்படி சீரியல் ஹீரோயின் மாதிரி அழுத. ச்சே ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்" என்ற தனுவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது.
"இப்ப என்ன.?? ஷரவனண்ணா உன்னை லவ் பண்றாங்க. அவ்ளோ தானே!! அதுக்கு ஏன்டி நீ இப்படி அழுகுற" என்று அசால்ட்டாக சொல்ல, மிருது அழுவதை பட்டென நிறுத்தியவள் தனுவை விழி விரிய வியந்து பார்த்தாள்.
"என்னது ஷரவன் அண்ணாஆஆவவவவ... என்னடி சொல்ற நீ? நீ எதுக்குடி அவரை போய் அண்ணான்னு சொல்ற" என்று ஒன்றும் புரியாமல் சிறு எரிச்சலுடன் கேட்க, அதில் கடுப்பான தனு,
"ஏன்... ஏன்…?"
"நீ ஒரு நாள் பார்த்த அந்த நெட்ட குரங்கு நிலவனை அண்ணான்னு சொல்லலாம். நா ஷரவனை அண்ணான்னு சொல்ல கூடாதக்கும். உனக்கொரு சட்டம் எனக்கொரு சட்டமா?' என்று முறுக்கிக்கொண்டாள்.
"ஏய் தனு அதுவேற இதுவேறடி, நிலவன் அண்ணா நல்லவரு. நீயே பாத்த இல்ல. அன்னைக்கு சீனியர் பசங்க நம்ம கிண்டல் பண்ணும் போது அந்த அண்ணா தான் நமக்கு ஹெல்ப் பண்ணாங்க" என்று நிலவனுக்கு வாக்காளத்து வாங்க.
"ம்க்கும் பெரிய ஹெல்லுப்பு, அப்படியே மலைய மல்லாக்க பெரட்டி போட்டு பாரு பாரு உன்ற நொண்ணான்."
"ஏய் தனு வேணாம்டி, என்ன வெறி ஏத்தாத" என்று மிருதுளா தன் பிஞ்சு விரல் நீட்டி தனுவை மிரட்ட,
"ஒகே ஒகே கூல் கூல்... உன் அண்ணா பெரிய அப்பாடக்கர் தான் மா நான் ஒத்துக்குறேன். இப்ப கொஞ்சம் நான் சொல்றதையும் கேளு. அந்த நிலவன் உனக்கு ஹெல்ப் பண்ணுச்சு அதனால நீ அதை அண்ணான்னு கூப்புடுறது எவ்வளவு கரெக்ட்டே... அதே மாதிரி நா ஷரவனை அண்ணான்னு சொல்றதும் அவ்வளவு கரெக்ட் தான்." என்ற தனுவை கொலைவெறியுடன் பார்த்தாள் மிருதுளா.
"ஏய் லூசு... நிலவன் அண்ணா நல்லவர்டி. ஆன, அந்த ஷரவன் சரியில்ல, அவரு ரொம்ப தப்பான ஆளு. நான் தான் ஏற்கனவே அர்ச்சனா சொன்னதை எல்லாம் உன்கிட்ட சொன்னேன் இல்ல. அப்படி இருந்தும் நீ இப்படி பேசுற' என்று மிருது மூஞ்சை திருப்பிக்கொள்ள,
"அடி போடி அந்த அர்ச்சனா எல்லாம் ஒரு ஆளுன்னு நீ அவ சொல்றத கேட்டு ஆடிட்டு இருக்க, அந்த அர்ச்சனா சரியான தில்லாலங்கடி, நீ அர்ச்சனா உன்கிட்ட பேசிய விஷயத்த எனக்கு சொன்ன மறுநாளே நான் அந்த அர்ச்சனா பத்தி காலேஜில் விசாரிச்சேன். அந்த பக்கிய பத்தி ஒருத்தர் கூட நல்லதா ஒரு வார்த்தை சொல்லல. அதோட அந்த பக்கி ஒரு வருஷமா ஷரவன் அண்ணா பின்னாடி ஜொள்ளு விட்டு சுத்தி இருக்கு... ஆன, அந்த அண்ணா இத கண்டுக்காவே இல்லையாம். அதோட அவ உன்ன, என்ன மாதிரி மிடில் கிளாஸ் பசங்க கிட்ட நின்னு பேசறதென்ன பார்க்க கூட மாட்டலாம் அந்த மகாராணி. அப்படி இருக்க, அவளே வலிய வந்து உன்கிட்ட பேசி இருக்கானா, அதுவும் ஷரவன் அண்ணா பத்தி தப்பு தப்பா பேசி இருக்கிறது. எனக்கு என்னவோ அந்த பணக்கார பக்கி ஏதோ ப்ளானோட தான் உன்கிட்ட வந்து பேசி இருக்குன்னு தோணுது" என்ற தனுவிடம், மிருது ஏதோ சொல்ல வாய் எடுக்க, அவள் முன் நிறுத்து என்பது போல் கைகாட்டிய தனு.
"இரு இரு இப்ப நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும். நீ ஏன் இதையெல்லாம் அன்னைக்கே என்கிட்ட சொல்லலனு தான கேக்க போற" என்றதும் மிருது ஆமாம் என்று தலையாட்டினாள்.
"மிருது குட்டி அன்னைக்கு அந்த அர்ச்சனா அடிச்ச வேப்பிலையில, நீ ஏற்கனவே ரொம்ப குழம்பி இருந்த, அந்த நேரத்துல நான் ஷரவன் அண்ணா பத்தி நல்ல விதமான சொல்லி... நீ இன்னும் பெருச குழம்பி… எதுக்கு வம்பு. அதான் நா உன்ன விட்டு அந்த அர்ச்சனா எருமய பத்தி விசாரிச்சேன்.
"ஓகே தனு நீ சொல்றதை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். அர்ச்சனா நல்ல பொண்ணு இல்ல சோ அவ சொல்றத நம்ம நம்ப வேண்டாம். ஆன, நீ அந்த ஷரவனுக்கு ஏன் இவ்ளோ சப்போர்ட் பண்ற? எப்படி அவர இவ்வளவு நம்புற? என்னமோ ரொம்ப நாள் பழகிய பழக்கம் மாதிரி அண்ணான்னு வேற சொல்ற. அது ஏன்?" என்று மிருதுளா கேட்க, தனு, மிருதுளாவை பார்த்து சன்னமாக சிரித்தவள்,
"ஒரு நாள் சீனியர்ஸ் கிட்ட இருந்து காப்பாத்தின நிலவன் உனக்கு நல்லவன்னா, நைட் டைம் தனியா போனா என்ன நாலு பேர் துரத்தும் போது காப்பாத்தின ஷரவன் எனக்கு கடவுள் மாதிரிடி" என்ற தனுவின் வார்த்தையில் மிருதுளா ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டாள்.
"ஏய் தனு என்னடி சொல்ற நீ? என்னாச்சு இதெல்லாம் எப்ப நடந்தது?" என்ன பதட்டமாக கேட்க,
"ஏய் ஏய் மிருது ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்...!! நீ நெனைக்குற மாதிரி எனக்கு ஒன்னும் ஆகல. ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட், உனக்கு நினைவு இருக்க மிருது? நம்ம ஸ்கூல் படிக்கும்போது. நம்ம ஸ்கூல்ல இருந்து டென்னிஸ் காம்படிஷனுக்கு நம்ம வேற ஸ்கூல் போகவேண்டி இருந்தது. நீ உடம்பு சரியில்லன்னு அன்னைக்கு வர்ல. நா தனியா போய் இருந்தேன். போட்டி முடிஞ்சு திரும்பி ஸ்கூலுக்கு வர ரொம்ப லேட் ஆகிடுச்சு. அப்போ அப்பா வேற ஊர்ல இல்ல. அந்த ராத்திரியில நான் சைக்கிள் எடுத்துட்டு தனியா வரும்போது வழியில் இருந்த நாலு பொறுக்கி பசங்க என் பின்னாடி ஃபாலோ பண்ணி வந்துட்டு இருந்தாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அப்ப நான் ரொம்ப பயந்துட்டேன் மிருது. எப்டியாது சீக்கிரம் வீட்டுக்கு போணும்னு, நா அரக்க பரக்க சைக்கிள் ஓட்டிட்டு வந்தேன். ஆனா, அந்த பசங்க பைக்ல எனக்கு முந்தி வந்து நின்னுட்டானுங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னே புரியல கண்ணுல தண்ணி தண்ணிய வந்துச்சு தெரியுமா" என்று அந்த நாளை நினைத்து தனுவின் உடல் இப்போதும் பயத்தில் நடுங்கியது.
மிருது அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள. அதில் தன்னிலை அடைந்த தனு மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானித்தவள், அந்த பசங்க என்ன மறிச்சு நின்னு ரொம்ப அசிங்க அசிங்கமா பேசுனாங்க மிருது. அதுல ஒருத்தன் என்ன தொட வர எனக்கு உயிரே போய்டுச்சு.. கடவுளை வேண்டிட்டு பலமா அவனை தள்ளிவிட்டு வேகமாக ஓட ஆரம்பிச்சேன். அந்த பசங்களும் என் பின்னாடியே துரத்துனாங்க. கண்ணைமூடிட்டு தலைதெறிக்க ஓடிபோய் யார் மேலயே மோதி விழுந்துட்டேன். அப்போ தான் நான் ஷரவன் அண்ணாவை முதல் முதல்ல பார்த்தேன். என்னோட நல்ல நேரம் அவர் வந்த கார் ரிப்பேராகி ரோட்டுல நின்னுட்டு இருந்தாரு, அந்த அண்ணா தான் கீழே விழுந்து கிடந்த என்னை தூக்கி விட்டவரு,
அந்த நாலு பசங்களையும் நல்லா செமத்தியா உத உதன்னு உதச்சி விரட்டி விட்ட ஷரவன், தனுவிடம் திரும்பி, "உனக்கு எதுவும் அடிபட்டுடிருக்காமா" என்று அக்கறையாக கேட்க,
"இல்லண்ணா எனக்கு ஒன்னு இல்ல. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, நல்ல நேரத்துல நீங்க வந்தீங்க" என்று அவள் கண் கலங்கி நின்றாள்.
" ப்ச்ச் இங்க பாருமா, முதல்ல இப்படி அழுறதை நிறுத்து, பொண்ணுங்க எப்பவும் தைரியமா இருக்கணும். இப்படி சும்மா சும்மா அழுதுட்டே இருந்தா இந்த உலகத்துல வாழவே முடியாது. நீ இப்படி அழுகுறதுக்கு பதில் உன்னை அழவச்சவங்களை திருப்பி அடி, அது தான் இப்ப இருக்க உலகத்துக்கு சரிப்பட்டு வரும். எப்ப பிரச்சனை வந்தாலும் யாராவது வந்து நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்கனு பார்த்துட்டு நிக்கக்கூடாது. அந்த பசங்க உன்கிட்ட வம்பு பண்ணும் போதே, நீ அவனுங்களை திருப்பி அடிச்சிருக்கணும். பொண்ணுங்க அடங்கி அடங்கி போன எல்லாரும் உங்களை அடிமைப்படுத்தி ஏறி மிதிச்சிட்டு தான் போவாங்க. உங்க பாதுகாப்பு உங்க கையில தான், இனி என்ன வந்தாலும் அத தைரியமா பேஸ் பண்ணு பயந்து ஓடாத... நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா" என்று தனு பார்க்க, தனுவும் ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.
அதன் பின் ஷரவன், தனு கூடவே வந்து அவள் வீடுவரை வந்து அவளை விட்டு விட்டு சென்றான்.
"அன்னைக்கு அப்புறம் நான் அவரை பார்க்கவே இல்ல மிருது. காலேஜ் முதல் நாள் அன்னைக்கு கூட அந்த நெட்ட குரங்கு பண்ண கலாட்டால நான் அவர கவனிக்கல... அன்னைக்கு சாயந்திரம் என் ஃபோனை மறந்து வச்சுட்டேன்னு உன்னை அனுப்பிச்சுட்டு நான் ஃபோனை எடுக்க போகும் போது தான் நா அந்த அண்ணாவை மறுபடி பார்த்தேன்.
"ஹாய் அண்ணா என்னை ஞாபகம் இருக்க?" என்று ஷரவன் முன்னால் தமுகம் முழுவதும் புன்னகையுடன் நின்றாள் தன்யா.
தனுவை அங்கு பார்த்ததில் ஷரவனுக்கு இன்ப அதிர்ச்சி, "ஏய் நீ எங்க இங்க! நீயும் இங்க தான் படிக்கிறியா?" என்று ஆர்வமாக கேட்டான்.
"ஹய்ய!! அண்ணா உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்கு இல்ல…" என்று சந்தோஷத்தில் குதிக்க,
"ம்ம்ம் அதெப்படி மறக்க முடியும்... என்னை முதன் முதல்ல அண்ணான்னு ஆசைய கூப்பிட்ட குட்டி தங்கச்சி யாச்சே, உன்ன எப்படி மறக்க முடியும்" என்று செல்லமாய் அவள் தலையில் கொட்டினான்.
"குட் அண்ணா... நீங்க என்னை மறந்திருப்பிங்கன்னு நெனச்சேன். சரி அண்ணா உங்க பேர் என்ன?" என்று ஆரம்பித்தவள், ஷரவனை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு, தன்னை பற்றி அனைத்தையும் ஷரவனிடம் ஒப்பித்தாள்.
தனு பேசியதில் இருந்து ஷரவனுக்கு தனுவும், மிருதுளாவும் தோழிகள் என்று புரிந்தது.
ஷரவனுக்கு தனு மீதிருந்த பாசம் ரெண்டு மடங்கு அதிகரித்தது. அங்கு ஒரு அழகிய அன்பு முடிச்சு விழுந்தது. ஆனால், தனுவுக்கு அப்போது தெரிந்திருக்காது எந்த ஷரவனை அன்போடு அண்ணா என்றளோ… இதே ஷரவன் தான் தன்னுடைய காதல் பிரிவதற்கு காரணமாக இருக்க போகிறான் என்று.
"அன்னைக்கு அண்ணாவ பார்த்த சந்தோஷத்தை உன்கிட்ட சொல்ல வந்த... நீ அந்த ஆட்டக்காரி அர்ச்சனா பேச்ச கேட்டு அவரை வண்டவண்டைய திட்டிட்டு இருந்த, இப்ப அவர பத்தி பேசி எந்த யூஸ்சும் இல்லைன்னு நான் கப்புன்னு வாய மூடிக்கிட்டேன்." என்று தனு ஷரவன் பற்றி சொல்லி முடித்தாள்.
தனு சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த மிருதுளா, கணக்கு டெஸ்ட் கொஸ்டின் பேப்பர் பார்த்தது போல் திரு திரு வென முழித்து கொண்டிருந்தாள். அவளால் ஷரவனை பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
மிருதுளா மனம் புரிந்த தனு "இங்க பாரு மிருது... நீ ஷரவனண்ணா பத்தி அர்ச்சனா சொன்னதையே நினைச்சுட்டு இருந்த வேலைக்காகாது. நீ நெனைக்குற மாதிரி அந்த அர்ச்சனா சொல்றது உண்மைய இருந்திருந்தா... அன்னைக்கு துணைக்கு யாரும் இல்லாம தனியா இருந்த என்கிட்ட அவரு தப்பா நடக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் நீயே சொல்லு. ராத்திரி நேரம்... சுத்தி ஈ, காக்கா இல்லாத இடத்துல அவரு என்கிட்ட எவ்வளவு கண்ணியமா நடந்துகிட்டாரு தெரியுமா… அந்த மனுஷனை போய் அந்த மேனாமினிக்கி பொம்பளை பொறுக்கின்னு சொல்லி இருக்கா நீயும் அத நம்பிட்டு அழுதுட்டு இருக்க. அன்னைக்கு நா மட்டும் அங்க இருந்து இருக்கணும், அண்ணா பத்தி தப்ப பேசிய வாயில் ஒரு மூட்டை சுண்ணாம்பு வச்சு தேச்சிருப்பேன். பயபுள்ள எஸ்ஸாகிடுச்சு, ம்ம்ம்... இருக்கட்டும், என் கையில மாட்டமைய போய்டுவா, அப்ப வச்சுக்குறேன். இங்க பாரு மிருது எனக்கு புரியுது அவரு திடீர்னு வந்து லவ்வை சொன்னதும் உனக்கு மனசுல பயம் வந்துடுச்சு. ஓகே ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் . ஆனா, அதுக்காக அவர் பத்தி எதுவுமே தெரியாம நீ இப்படி தப்பு தப்பா நெனைக்குறது சரியில்ல. நான் அன்னைக்கு சொன்னத தான் இன்னைக்கும் சொல்றேன். ஒருத்தவங்களை பத்தி இன்னொருத்தர் சொல்றத வச்சு நம்ம எந்த முடிவும் எடுக்ககூடாது. நீயே அவங்க கூட பழகி பார்த்து அவங்க தப்பா சரியானு முடிவெடு. அடுத்தவங்க கண்ணுல நீ பார்க்க கூடாது. நீ ஷரவன் அண்ணாவ லவ் பண்ணு பண்ணாத தட்ஸ் யுவர் விஷ். உன்னோட தனிப்பட்ட விருப்பம். அதுல நான் தலையிடால. ஆனா, அனாவசியமா அந்த அண்ணாவை தப்பா நெனைக்காத. அவ்வளவு தான் நான் சொல்வேன் என்றவள் தான் பேச்சை முடித்துக் கொண்டாள்.
மிருதுளாவுக்கு ஒரு நிமிடம் உலகமே நிற்காமல் சுற்றியது. தனு சொன்னதை கேட்ட பிறகு அவளால் ஷரவனை பற்றி தவறாக யோசிக்க முடியவில்லை. அதே சமயம் அவனை பற்றி நல்ல விதமாக யோசிக்கவும் தோன்றவில்லை. அவள் மனம் முழுவதும் ஷரவனின் காதலால் தன் படிப்புக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று பயம் மட்டுமே நிறைந்திருந்தது. அதை மறைக்காமல் தனுவிடம் சொன்னாள்.
" ஏன்டி ஏன் இப்படி என்னைய சாகடிக்கிற... நா இவ்ளோ சொல்றேன். நீ மறுபடியும் இப்படி கேட்டா என்னடி அர்த்தம். அந்த அண்ணா ரொம்ப நல்லவருடி. அவரால உனக்கும் சரி உன் படிப்புக்கும் சரி ஒரு பிரச்சனையும் வராது. என்ன நம்புடி" என்று தனு கெஞ்ச,
"நீ சும்மா இருடி. நா ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இத நான் சும்மா விட போறதில்ல. நாளைக்கு காலையில முதல் வேலைய நிலவன் அண்ணாகிட்ட இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லி அந்த ஷரவனை ஒரு வழி பண்றேன... இல்லையான்னு பாரு" என்று மிருது கோவமா சொன்னாள்.
"ம்க்கும் வெளங்கிடும். ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலியா? போயும் போயும் அந்த நெட்டகுரங்க போய் நம்புறீயே. உன்னை எல்லாம் என்ன செய்றதுன்னே தெரியல" என்று தலையில் அடித்துக்கொள்ள,
"ஏய் எதுக்குடி நீ என் அண்ணாவை திட்டுற, உனக்கு உன் அண்ணா பெருசுன்ன, எனக்கு என் அண்ணா பெருசு" என்று மிருது மல்லுக்கு நின்றாள்.
"ம்க்கும் பெரிய நொண்ணன். உன் நொண்ணன் இன்னைக்கு சாயந்திரம் என்ன வேலை பாத்தான்னு தெரிஞ்ச நீ இப்படி பேசிட்டு இருக்க மாட்ட" என்று தன்னை மறந்து உலறிவிட.
"ஏன் என்ன ஆச்சு? அப்படி அவரு என்ன பண்ணாரு?" என்று மிருதுளா கேட்டதும் தான் தனுவுக்கு தான் வாய் தவறி உலறிவிட்டது புரிய,
"அது…"
" அது…"
"அது வந்து மிருது... ஹான் அது ஷரவன் அண்ணாவும், உன் நொண்ணனும் ப்ரண்ட்ஸ் ஆச்சே... அந்த குரங்கு உனக்கு எப்படி சப்போட் பண்ணும்னு, நீ நினைக்கிற" என்று பிளேட்டை மாற்ற,
"அதெல்லாம் என் அண்ணா எனக்கு தான் சப்போட் பண்ணுவாங்க, நீ வேணும்னா பாரு" என்று மிருது சவால் விட,
"ம்ம்ம் பாப்போம் பாப்போம்" என்று தனு பதிலுக்கு மிருதுவை பார்த்து ஒழுங்கு காட்டி விட்டு திரும்பி கொண்டாள்.
ஒரு தெளிவு கிடைத்த மகிழ்ச்சியில் மிருது, தனுவை இழுத்துக்கொண்டு போய் இரவு உணவை உண்டு விட்டு உறங்க சொல்ல, தோழிகள் இருவரையும் உறக்கம் தழுவ மறுத்தது.
மிருதுளாவுக்கு ஷரவனின் காதல் எங்கு தன் படிப்பை பாதிக்குமோ என்ற பயத்தில் தூக்கம் வர மறுக்க, தனுவுக்கு மாலை நடந்த நிகழ்வு மனதில் வந்து நின்றது.
நிலவனை அத்தனை அருகில் பார்த்தும், அவன் தீண்டாலும் நினைவு வர உடலில் அவன் கைபட்ட இடமெல்லாம் குறுகுறுத்தது. தனு முயன்று கண்ணை இறுக்கி மூடி உறங்க முயற்சிக்க, மூடிய கண்களில் விழி பாவையில் வந்து நின்று தொல்லை செய்தான் அந்த மாயகண்ணன்.
இங்கு இவர்கள் இப்படி இருக்க, அங்கு ஷரவன் தன் காதலை சொல்லிவிட்ட நிம்மதியில் தன் உயிரானவள் நினைவுகளின் துணையோடு உறங்கி விட்டான்.
நிலவனுக்கோ மாலை தனுவை அணைத்திருந்த நினைவும், அவளின் நெருக்கமும், அவள் விழியில் விழுந்த நிமிடமும் மனதில் வந்து விழியின் தூக்கத்தை துடைத்து செல்ல, அவளை பார்க்கும் போது மட்டும் தனக்குள் எழும் இந்த தடுமாற்றத்திற்கு, உணர்வுக்கும் என்ன அர்த்தம் என்று புரியாமல் தவித்தான்.