காதல் 18

 





காதல் 18


கிழக்கை கிழித்து சூரியன் வந்து பூமியின் இருள் துடைக்கும் விடியற்காலைப் போல், மிருதுளாவின் இருண்ட பக்கங்களையும் கிழித்து அவள் வாழ்க்கையில் வெளிச்சம் கொண்டு வருமா அவள் வருங்காலம்.

 

காலையிலேயே தனு மிருதுளாவை கட்டாயப்படுத்தி புது புடவை கட்டவைத்து கோயிலுக்கு கிளப்பிக் கொண்டிருந்தாள். 


இருவரும் கிளம்பி ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.


"அப்பா நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்" என்றவள் திரும்பி தன் தந்தைக்கு ஏதோ சிக்னல் காட்டிவிட்டு செல்ல செல்வகுமாரும் அதை புரிந்து கொண்டு ஓகே என்று தலையாட்டினார்.


அன்று பெரிதாக எந்த விசேஷமும் இல்லை என்பதால் கோவிலில் அவ்வளவாக ஆட்கள் இல்லை. மிருதுளா கண்கள் மூடி மனமுருகி தன் இஷ்ட தெய்வம் பிள்ளையாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


 "சாமி உன்ன நம்பி தான் நான் இவ்வளவு பெரிய பிளான் போட்டிருக்கேன். நீதான் இத நல்லபடியா முடிச்சு தரணும். நீ மட்டும் இன்னைக்கு எல்லாத்தையும் நல்லபடி முடிச்சு தந்துட்டா நா உனக்கு 1008… ஐயோ… இல்ல… இல்ல... 108  தேங்காய் உடைக்கிறம் புள்ளையாரே" என்று தனு கடவுளை வேண்டிக் கொண்டாள்.


"வா  தனு கோவில சுத்திட்டு வருவோம்" என்று மிருதுளா தனுவை அழைத்துச் செல்ல, அங்கு மிருதுளாவின் புடவை முந்தானையை யாரோ இழுப்பது போல் இருக்க, திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள், விழியில் தெரிந்தாள் தெய்வத்திற்கு தேவதை வேடமிட்டது போல் அழகிய பெண் குழந்தை.


 தாமரை இதழ் நிறத்தில் மென் பஞ்சு போன்ற தன் இதழில், தன் பிஞ்சு விரலை வைத்து சப்பிக்கொண்டே, களங்கமற்ற சிரிப்போடு மிருதுளா முகத்தையே பார்த்த குழந்தை, என்னை தூக்கிக்கோ என்பதுபோல் தன் கைகளை தூக்கி காட்ட மிருதுளா தன் இரு கைகளால் அப்படியே அந்த தேவதையை அள்ளிக் கொண்டாள்.


அந்த குழந்தையை தூக்கிய நிமிடம் மிருதுளாவுக்கு மனதில் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி. தன் அத்தனை வேதனைகளும் சிறு புள்ளியாக தேய்ந்து போனது போல் ஒரு நிம்மதி. பல வருடம் முன் தெரிந்தே தொலைத்த பொக்கிஷம் மீண்டும் தன் கை சேர்ந்த உணர்வு, மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்க, அந்த குழந்தை முகம் முழுவதும் தன் இதழ்களை பதித்தாள்.


வெகுநாள் கழித்து மிருதுளா முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்த தன்யாவின் மனமும் நிறைந்துவிட, மிருதுளா முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் தனு. 


மிருதுளா ஆசையாய் அந்த குழந்தையை கொஞ்ச, தன் மான் விழி விரிய மிருதுளாவை பார்த்த குழந்தை தன் மழலை மொழியில் அவளை,  "ம்மா"  என்றழைக்க, அப்போது  மிருதுளா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 


அந்த "அம்மா" என்ற ஒற்றை வார்த்தை அவள் முழு உடலையும் உலுக்கியது. உலர்ந்த காய்ந்த அவளின் உயிர் பூ அந்த குழந்தையின் "அம்மா " என்ற அழைப்பில் பல வருடங்களுக்கு பிறகு பூத்து மலர்ந்தது. 


இமைக்க மறந்து அந்த குழந்தையை பார்த்தவள், "இன்னொரு முறை அம்மான்னு சொல்லு" என்று ஆசையோடு கேட்க, அதே மழலை குரலில் "ம்மா" என்ற குழந்தை தன் தேன் வடியும் மலர் இதழை மிருதுளாவின் கன்னத்தில் பதித்தது.


அவள் மொத்த கவலையும் அந்த முத்தம் தந்த ஈரத்தில் கரைந்து மறைந்தது. 


தனு குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள், "குட்டி பாப்பா நீங்க ரொம்ப கியூட்டா அழகா இருக்கீங்க" என்றவள், மிருதுவிடம் திரும்பி, "ஏய் மித்து இந்த பாப்பாவை பார்த்தா, சின்ன வயசு போட்டோல உன்ன பார்த்த மாதிரியே இருக்கு இல்ல?" என்க, மிருதுளாவும் அதை அப்போது தான் கவனித்தாள். 


அந்த குழந்தை அச்சு அசல் மிருதுளாவையே உரித்து வைத்திருந்தது. மிருதுளா குழந்தையில் எப்படி  இருந்தாளோ? அப்படியே இருந்தாள். அந்த குட்டி தேவதை. 


"அவ பெத்த பொண்ணு அவள மாதிரி தான இருப்பா தனும்மா" என்ற கம்பீரமான ஆண் குரலில் மிருதுளா அதிர்ந்து திரும்ப, அங்கு ஷரவனை பார்த்தவள் உயிர் உள்ள சிலையாய் சமைந்து நின்றுவிட்டாள். 


அன்று ஃபார்ம் ஹவுஸ் அவனை கடைசியாக பார்த்தது தான். அதன் பின் இன்று தான் அவனை பார்க்கிறாள். உடலில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவன் பழைய ஷரவன் இல்லை. அனைவரையும் கட்டி இழுக்கும் அந்த காந்த கண்களில் இன்று ஒளி இல்லாமல் சோகம் மட்டுமே குடிகொண்டிருந்தது. எப்போதும் மெல்லிய புன்னகை தவழும் அவன் முகத்தில் இன்று சுத்தமாக ஜீவன் இல்லை. உணர்வுகள் அனைத்து வற்றிப்போய் உயிர் சுமக்கும் வெறும் உடலாக மாறி இருந்தான் ஷரவன்.


மிருதுளாவை  துளைக்கும் பார்வை பார்த்தபடி அவள் அருகில் வந்தான் ஷரவன்.


 "நீ சொன்னது சரிதான் தனு. என் பொண்ணு அப்படியே அவ அம்மா, உன் ப்ரண்ட்டு இதோ இவளை உரிச்சு வச்ச மாதிரி தான் பொறந்திருக்கா" என்றவன் வார்த்தை தனுவிற்காக இருந்தாலும் அவன் பார்வை மொத்தமும் மிருதுளா மேல் தான் இருந்தது. அவ்வளவு நேரம் தீடிரென ஷரவனை பார்த்த அதிர்ச்சியில் இருந்தவளை, ஷரவனின் வார்த்தைகள் நிகழ்விற்கு கொண்டு வர,


"என்ன… என்ன பேசுறீங்க நீங்க..?? புத்திகித்தி கெட்டு போச்ச?? யார் குழந்தைக்கு யார் அம்மா? ஏங்க வாய் கூசாம இப்படி பொய் சொல்றீங்க, அதுவும் குழந்தை முன்னாடி. ஒரு பப்ளிக் பிளேஸ்ல எவ்வளவு தைரியம் இருந்த இப்படி சொல்லுவீங்க.  இத மட்டும் ரஷ்மி கேட்ட என்ன நினைப்பா?" என்று கோபத்தில் கொதிக்க, ஷரவன் அவளை விரக்தியான பார்வை பார்த்துவிட்டு,  "இன்னும் எத்தனை வருஷமானாலும் நீ என்னையும், என் மனசையும் புரிஞ்சுக்க மாட்ட டி" என்றான் சலிப்பாக.


"நான் பொய் சொல்லல… இது நீ பெத்த குழந்தை. உன் குழந்தை... நம்ம குழந்தை" என்று உறுதியாக சொன்னவன், குழந்தையை பார்த்து "நீ வா முக்தா குட்டி, இந்த ஜென்மத்துல உனக்கும், எனக்கும் இவ கூட சேர்ந்திருக்க குடுத்துவைக்கல போல, எல்லாம் நம்ம விதி" என்றவன் குழந்தையை மிருதுளாவிடம் இருந்து வாங்க பார்க்க  குழந்தை மிருதுளா கழுத்தை கட்டிக்கொண்டு, " ம்மா... ம்மா..." என்று தன் இதழை பிதுத்து அழ தொடங்க, மிருதுளாவுக்கு அடி வயிறு கலங்கி துடித்தது.


அந்த துடிப்பே அவளுக்கு உணர்த்தியது அந்த குழந்தை அவள் குழந்தைதான் என்று. அதோடு ஷரவன் குழந்தையை "முக்தா" என்றழைக்க அவளுக்கு தெளிவாக புரிந்தது. அந்த தேவதை அவள் வயிற்றில் பத்துமாதம் சுமந்து அவள் பெற்றபிள்ளை என்பது.


ஷரவன் குழந்தையை இழுக்காத குறையாக மிருதுளாவிடம் இருந்து பிரிந்து தூக்கிக் கொண்டு, அங்கிருந்து செல்ல மிருதுளாவுக்கு அந்த நிமிடம் தன் உயிர் தன் உடலை விட்டு போவது போல் இருந்தது. தன்னை கட்டுப்படுத்த முடியாது கதறி அழுதவள், தலையை தனு ஆறுதலாக தடவ, குழந்தை போல் தனுவை இறுக்கி கட்டிக் கொண்டவள் மிருதுளா.


"தனு" 


"தனு…"


"அது..."


" அது..." 


"என் பாப்பா, என்னோட பாப்பா" என்றவளுக்கு உதடுகளில் வார்த்தை வராமல் தடுமாற கதறி அழுதாள். 


கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து அடுத்த நிமிடம் சென்ற இடம் டாக்டர். லட்சுமியின் வீடு. 



டாக்டர் லட்சுமியின் வீட்டில் நுழைந்த மிருதுளா வீடே அதிரும்படி, "ஆன்ட்டி" என்று கத்த... அவள் வருவதை ஏற்கனவே தனு ஃபோன் செய்து சொல்லி இருந்ததால், லட்சுமி மிருதுளாவை எதிர்கொள்ள தயாராக இருந்தவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.


"வா மா  மிருதுளா, என்ன திடீர்னு இந்த பக்கம்"  என்று அவர் சாதாரணமாக கேட்க,  அவரை கண் இமைக்காமல் பார்த்த மிருதுளா, அடுத்த நொடி மொத்தமாக உடைந்து அப்படியே முட்டி போட்டு கீழே அமர்ந்தாள்‌.


கலங்கி விழியோடு, "ஏன் ஆன்ட்டி? ஏன் இப்படி பண்ணீங்க? உங்களை என் அம்மா மாதிரி நெனச்சிட்டு இருந்தேன் ஆன்ட்டி, எனக்கு துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்தது?" என்று கண்ணீரில் கரைந்தாள்.


 "இன்னைக்கு என் பொண்ணு, என்னோட பொண்ணு. பத்து மாசம் நான் சுமந்து பெத்த என் முக்தா. மூணு வருஷம் கழிச்சு இந்த கையால... இந்த ரெண்டு கையால தொட்டு தூக்கினேன். அவளுக்கு ஆசைய முத்தம் கூட குடுத்தேன் ஆண்ட்டி. அவளா தூக்கின நிமிஷம் என்னோட மொத்த கவலையும் என்ன விட்டு விலகி தூரப்போன மாதிரி எனக்கு அப்படி ஒரு நிம்மதி. 


"ஆனா…" 


"ஆனா…" 


"அந்த நிம்மதி கொஞ்ச நேரம் கூட நினைக்கலியே ஆண்ட்டி, ஷரவன் வந்து அவ அவரோட பொண்ணுன்னு சொல்லி என்கிட்ட இருந்து பிரிச்சு தூக்கிட்டு போன  அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? என் அடி வயிறு  கலங்கி போச்சு. ஏன் ஆன்ட்டி, ஏன் இப்படி பண்ணீங்க? ஏன் என்கிட்ட உண்மையை மறச்சீங்க? என்னை அடைஞ்சே தீரனும்னு வெறியோட சுத்திட்டு இருந்த ஷரவன் கிட்ட, என்னோட முக்தா. ஏன் ஆன்ட்டி? எப்படி நடந்தது இது? ஏன் இப்படி செஞ்சீங்க. முக்தாவை வச்சு என்ன அடைய திட்டம் போட்டு இருக்கானா அவன்? ஆனா, நீங்க எப்படி ஆன்ட்டி இந்த மாதிரி ஒரு தப்புக்கு உடந்தையா இருந்தீங்க? ஓஓஓ …?? ஒரு வேள அந்த ஷரவன் பணத்தை பார்த்து அவன் பக்கம் போய்ட்டீங்களா? என் வாழ்க்கையோட விளையாட எவ்வளவு பணம் வாங்கினீங்க?" என்றவள் கன்னம் அடுத்த நிமிடம் சிவந்து இருந்தது.


"யாரை பார்த்துடி பணத்துக்கு விலை போனாங்கன்னு சொன்ன? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் அம்மாவை பார்த்து நீ இப்படி பேசி இருப்ப..." என்ற சிந்துவின் வார்த்தையில் மிருதுளா நிலைகுலைந்து நின்றாள்.


 "லட்ச்… லட்சுமி ஆண்ட்டி உன்... உன்னோட அம்மாவா?" என்று கேட்ட மிருதுளாவுக்கு அன்றைய நாளின் இரண்டாவது அதிர்ச்சி இது.


"ஆமாடி அவங்க தான் என்னையும், நிலவனையும் பெத்த அம்மா. பிரியாம்மா அம்மாவோட தங்கச்சி. அப்பா இறந்த அப்புறம் குழந்தை இல்லாத பிரியாம்மாகிட்ட எங்களை விட்டுட்டு அம்மா தன்னை முழுசா ஏழை ஜனங்களுக்கு ஃப்ரீ ட்ரீட்மென்ட் பாக்கவே தன்னை அர்ப்பணிச்சவங்க டி அவங்க. அவங்களை பார்த்து பணத்துக்கு பின்னாடி போனவங்க ன்னு சொல்ற நீ?" என்று அவளை தீயாய் முறைத்தவள், "அப்புறம் என்ன சொன்ன நீ... ஷரவன் மாம்ஸ் உன்னை அடைய திட்டம் போட்டாங்களா... வாய் அழுகி போய்டும் டி உனக்கு. எப்படி டி உன்னால அந்த வார்த்தைய சொல்ல முடியுது. அத சொல்ல உன் வாய் கூசல,  ச்சீ. அவரு மட்டும் உன் அடையனும்னு நெனச்சிருந்தா அன்னைக்கு ஃபார்ம் ஹவுஸ்ல உன்னை மறந்து மயக்கத்துல இருந்தியே அப்பவே உன்ன அவரு கொடுத்திருக்க முடியாத டி? அறிவு கெட்டவளே… ஆனா, அவரு அப்படி செய்யல. அவரு உன்னோட உடம்ப விரும்பல, உன்னோட மனச தான் விரும்பினாரு. அதான்  உன்ன உயிரா நேசிச்சவரு, நீதான் வாழ்க்கைனு  இருந்தவரு, உனக்காக அவர் காதலையே விட்டு குடுத்தாரு. அவரை போய் எப்படி டி? ச்சே… ஷரவன் மாம்ஸ் சொன்ன மாதிரி நீ இன்னும் எத்தனை வருஷமானாலும் அவரையும் சரி,  உன்ன நேசிக்கிறவங்களையும் சரி புரிஞ்சுக்கவே மாட்ட, யாருடி உன் வாழ்க்கையில விளையாடின? ம்ம்ம்? யாரு விளையாடின... உன் லைஃப்ல எல்லாமே முடிவும் நீ எடுத்த முடிவு தான். அதோட லாப, நஷ்டத்தை நீ தான் அனுபவிக்கணும். அதவிட்டு நீ நல்ல இருக்கணுன்னு நெனச்சு எல்லாரையும் குற்றவாளி ஆக்குறியா நீ? ச்சே... என்ன பிறவிடி நீ? உன்கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட்" என்று கோபமாக சென்று அமர்ந்த சிந்துவின் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது.


லட்சுமி ஆன்ட்டி நிலவன், சிந்து அம்மா என்று தெரிந்த மிருதுளா என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்க, லட்சுமி அவள் தலையை மெதுவாக வருடினார்.


 "எனக்கு உன் நிலைமை புரியுது மிருதுளா. முக்தா வை பத்தி நீ தெரிஞ்சுக்கிறதுக்கு முந்தி நீ தெரிஞ்சுக்க வேண்டிய சில முக்கியமான உண்மைகள்   இருக்கு. அத முதல்ல நீ தெரிஞ்சுக்கணும்" என்றவர் தனுவை பார்க்க அவள் சரி என்று தலையாட்டி, "ப்ளீஸ் எல்லாரும் வெளிய வாங்க" என்று கத்தி கூப்பிட அடுத்த நிமிடம் அந்த வீட்டு ஹால் நிறைந்தது. 


நிலவன், பிரேம், தனுவின் அம்மா, அப்பா, ரஷ்மி அவள் குழந்தை தருண், விஷ்வா கையில் தன் ஒரு வயது மகள் சிவிகாவுடன் அனைவரும் வந்து ஆஜராகினர். 


அனைவரையும் மொத்தமாக பார்த்த மிருதுளா தன்னந்தனி காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட குழந்தை போல் முழித்துக் கொண்டிருந்தாள்.


தனு ரஷ்மிக்கு கண் ஜாடை காட்ட, ரஷ்மி, மிருது அருகில் வந்தாள்.


"நீ நினைக்கிற மாதிரி ஷரவனுக்கும் எனக்கு நடுவுல ஒன்னு இல்ல மிருது. நீ எங்கள பத்தி நெனச்சிட்டு இருக்கிறது எல்லாம் தப்பு. நாலு வருஷத்துக்கு முந்தி எங்க மேல உனக்கு சந்தேகம் வந்தப்பவே நீ ஒரு வார்த்தை எங்க கிட்ட கேட்டு இருந்தா இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது மிருது" என்க, மிருதுளா அவளை கோபமாக பார்த்தாள்.


"அப்போ நீ கன்சிவ்வா இருந்தது பொய்யா ரஷ்மி? சொல்லு ரஷ்மி பொய்யா" என்று அவளை முறைக்க,


"அதுக்கு பதில் நான் சொல்றேன் அமுல் பேபி" என்ற பிரேமை, மிருது புரியாமல் பார்த்தாள்.


"ரஷ்மி கன்சிவ்வா இருந்தது உண்மை தான். ஆனா, அந்த குழந்தைக்கு அப்பா ஷரவன் இல்ல நான். ரஷ்மி என்னோட வைஃப், தருண் என்னோட பையன்" என்று சொல்ல, மிருதுளா தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.


 மிருதுளா பிரேம் சொல்வதை நம்ப முடியாமல் பார்க்க, "ஆமா அமுல்பேபி ரஷ்மியும் நானும் ரொம்ப வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தோம். ரஷ்மி வீட்டுல எங்க காதலை ஒத்துக்கல. ஒரு தவிர்க்கமுடியாத சூழ்நிலைல நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கிட்டோம். ஷரவன் கெஸ்ட் ஹவுஸில் தான் நாங்க தங்கி இருந்தோம். எங்க கல்யாண மேட்டர் ஷரவன், நிலவன், பரத், விஷ்வா தவிர வேற யாருக்கும் தெரியாது. சிந்துக்கு கூட தெரியாது. அன்னைக்கு ரஷ்மி கூட ஹாஸ்பிடலுக்கு நான் தான் போக வேண்டியது. எனக்கு முக்கியமான மீட்டிங் இருந்துச்சுன்னு தான் ஷரவன் ரஷ்மிய ஹாஸ்பிடல் கூட்டி போனான். ஆனா, அதுவே உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் இப்படி புரட்டி போடுன்னு நாங்க கொஞ்சம் கூட நினைக்கல, எங்களுக்கே தெரியாம நீங்க பிரிய நாங்க காரணமாகிட்டோம்" என்று பிரேம் வருத்தத்தோடு சொல்ல, மிருதுளாவுக்கு காலுக்கடியில் பூமியே நழுவுவது போல் இருந்தது அவளுக்கு. நடப்பது அனைத்தும் உண்மையா, பொய்யா என்று பிரித்து பார்க்கும் சக்தி கூட மிருதுளாவிடம் அப்போது இல்லை. நடப்பது அனைத்தும் கனவு போல் இருந்தது.


 "அப்…"


" அப்ப…" 


"அப்போ அன்னைக்கு அந்த நர்ஸ்ங்க பேசினது" என்று மிருதுளா வாய் குளறி வார்த்தை தடுமாறி வெளியே வர,


"அதுக்கு பதில் நாங்க சொன்ன சரிய இருக்காது மிருது. சொல்ல வேண்டியவங்க சொன்னா தான் கரெக்டா இருக்கும்" என்ற தனு அங்கிருந்த அறையை நோக்கி, "அசோக் சார் வெளிய வாங்க" என்று குரல் கொடுக்க திரும்பி அங்கு பார்த்த மிருதுவுக்கும் அங்கு வந்தவளை பார்த்து அவள் இருந்த கோலத்தை பார்த்து பேரதிர்ச்சி.


 மிருதுளா வாய் அவளையும் அறியாமல், "அர்ச்சனா" என்று முனுமுனுக்க, வீல் சேரில் வந்த அர்ச்சனா, மிருதுளாவை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.


"என்ன மன்னிச்சிடு மிருதுளா, நான் உனக்கு பெரிய பாவம் பண்ணிட்டேன் மிருதுளா என்ன மன்னிச்சிடு" என்று கண்ணீர் விட்டு கதற, அவள் கணவன் அசோக் அவளை தன்னோடு அணைத்து சமாதானப்படுத்தினான். 


அதில் கொஞ்சம் ஆறுதல் கண்ட அர்ச்சனா, மிருதுளா காலேஜ் சேர்ந்தது முதல், கடைசியாக ஹாஸ்பிடலில் அந்த ரெண்டு நர்ஸ் மூலம் ஷரவன், மிருதுளாவை பிரிக்க அவள் செய்த அத்தனை சூழ்ச்சிகளையும் சொன்னவள், யாரும் எதிர்பார்க்காத போது திடீரென மிருதுளா காலில் விழுந்தாள்.


 "என்ன மன்னிச்சிடு மிருதுளா. உனக்கும் ஷரவனுக்கும் நா செஞ்ச பாவத்துக்கு தான் ஒரு ஆக்ஸிடென்ட் ல என்னோட ஒரு கால் போயிடுச்சு. அதுக்கு அப்புறம் இங்க இருக்க புடிக்காம நா லண்டன் போய்டேன். அங்க தான் அசோக்கை பார்த்தேன். என்னோட குறையை பத்தி கவலைப்படாம உண்மையா என்ன  காதலிச்சாரு, அவரோட காதலை நா உணர்ந்தப்போ தான், உன்னையும் ஷரவனையும் பிரிச்சது எவ்வளவு பெரிய பாவம்னு எனக்கு புரிஞ்சுது. அதுக்கு பிறகு நான் உங்கள பத்தி விசாரிச்சேன். நீ ஷரவனை வேணாம்னு சொல்லிட்டு யூ.எஸ் போய்ட்டாத கேள்ளி பட்டேன். என்னால தான் நீங்க பிரிஞ்சிங்கன்ற குற்றவுணர்ச்சி என்ன தினமும் குத்தி கிழிச்சுது மிருதுளா. ஆனா, நான் செஞ்ச தப்ப எப்படி சரி செய்றதுன்னு எனக்கு புரியல. ஷரவன்கிட்ட மன்னிப்பு கேக்க நெனச்சேன். ஆனா, அவன் முகத்தை பாக்குற தைரியம் எனக்கு வர்ல" என்று அவள் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் மிருதுளாவிடம் பாவமன்னிப்பு கேட்க,  மிருதுளாவுக்கு நாலு பக்கம் இருள் சூழ்ந்த அறை தனியாக இருப்பது போல்  இருந்தது. 


அவள் மொத்தமாக தன்னிலை மறந்திருந்தாள். இதற்கு மேல் தன்னிடம் பேச ஒன்னும் இல்லை என்பது போல் மற்றவர் சொல்வதை கேட்க காதையும், மனதையும் திறந்து வைத்து, வாயையும், அறிவையும் மூடிக்கொண்டாள். மனதால் யோசிக்காமல் இதுவரை தவறான முடிவெடுத்தது போதும் என்று நினைத்தவள், அமைதியாக அமர்ந்து விட்டாள்.